Wednesday, October 28, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை

 திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை 


மழையின் சிறப்பு பற்றி கூறிக் கொண்டு வருகிறார்  வள்ளுவர். அடுத்த குறளில் 


"கெடுப்பதுவும், அப்படி கெட்டவர்களை மழை பெய்து காப்பதுவும் எல்லாம் மழை " என்கிறார். 

அதாவது, நல்லதும் கெட்டதும் செய்வதும் மழை என்று கூறுகிறார். 


பாடல் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_28.html

click the above link to continue reading


கெடுப்பதூஉம்  = ஒருவரின் வாழ்வை கெடுப்பதும் 

கெட்டார்க்குச் = அப்படி வாழ்வு கெட்டவர்களுக்கு 

 சார்வாய் = உதவியாக 

மற்று ஆங்கே = அதே போல் 

எடுப்பதூஉம் = எடுத்து கொடுப்பதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இதை பார்க்க ஏதோ ஒரு சாதாரண குறள் போல் தெரிகிறது. குறளும் அதற்கு பரிமேல் அழகர் தரும் உரையும் பிரமிப்பு ஊட்டுபவை.


"கெடுப்பதூஉம் " - கெடுப்பதுவும் என்றால் என்ன? எப்படி கெடுப்பது? பெய்யாமல் கெடுப்பது என்கிறார் பரிமேல் அழகர். மழை பெய்யாவிட்டால் பயிர் பச்சை இருக்காது. உணவு உற்பத்தி இருக்காது. பசி பஞ்சம் என்று மக்கள் அவதிப் படுவார்கள். எனவே பெய்யாமல் கெடுப்பது என்று பொருள் சொல்கிறார். 

சரி, பெய்யாமல் கெடுக்கிறது. ஒத்துக் கொள்ளலாம். 

பெய்து கெடுப்பது இல்லையா? அளவுக்கு அதிகமாக பெய்து கார், பைக் எல்லாம் அடித்துக் கொண்டு போகிறது, வீடெல்லாம் சரிந்து விழுகிறது. அறுவடைக்கு வைத்த பயிர் எல்லாம்  அகாலத்தில் மழை பெய்தால் நாசமாகிப் போகாதா.  அது என்ன பெய்யாமல் கெடுப்பது? பெய்து கெடுப்பதை , வெள்ளப் பெருக்கால்  அழிவைத் தருவதை கெடுதல் என்று ஏன் சொல்லவில்லை?

மனித நாகரிகம் ஆற்றங்கரையில் தான் ஆரம்பிக்கிறது.  தண்ணீர் வேண்டும். குடிக்க, விவசாயம் செய்ய, குளிக்க, சுத்தம் செய்ய அனைத்துக்கும் நீர் வேண்டும்.  கரையை ஒட்டி உருவான நாகரீகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து  செல்கின்றன. ஆற்றை விட்டு வெகு தூரம் வரை பரவி  விடுகிறது.மக்கள் தொகை  பெருக்கத்தால் எல்லோரும் ஆற்றங்கரையில் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, காடுகள், அதில் உள்ள விலங்குகள், மரம் , செடி கொடிகள் எல்லாவற்றிற்கும் நீர் வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால் தான் , அது கரை தாண்டி ஓடினால் தான் எல்லா இடத்துக்கும்  நீர் போய்ச் சேரும். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் அந்த சில நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட வேண்டும். வெள்ளம் நமக்குக்குத்தான்.  ஆற்றை விட்டு மிகத் தொலைவில் இருப்பவர்களுக்கு அது வரம். 

பெய்யாமல் தான் கெடுக்கும். பெய்து  கெடுப்பதில்லை. 

கெடுப்பதுவும் அதே போல எடுப்பதுவும் என்கிறார். 


"மற்று ஆங்கே எடுப்பதுவும்" 


கெடுப்பது போலவே எப்படி உதவி செய்ய  முடியும்? 

ஒருவன் கொலை செய்வது போலவே உதவி  செய்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 


திட்டுவது போலவே வாழ்த்தினாள் என்பது சரியா? 

கெடுப்பது போலவே எடுப்பது என்றால் சரியான பிரயோகமா?


நாளை சந்திப்போமா?



Tuesday, October 27, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்


என்ன சொல்லியும் கேட்க மாட்டான் என்று அறிந்து, இராவவணனை விட்டு வீடணன் விலகினான் என்று நேற்றுப் பார்த்தோம். 

வீடணனோடு, அவனுடைய அமைச்சர்களும் உடன் வந்தார்கள். 

அவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்? 

அது கேள்வி.


அவர்கள் இராமனும் அவன் படையும் இருக்கும் இடமான கடற் கரைக்கு வந்தார்கள். 


நீங்கள் இரவில் ஒரு உயரமான இடத்தில் இருந்து ஒரு ஊரைப் பார்த்தால் எப்படித் தெரியும்?  தெருவெங்கும் விளக்குகள் எரியும். கை நிறைய வைரக் கற்களை எடுத்து விசிறி எறிந்த மாதிரி ஒளி விடும் அல்லவா? 


வீடணனும், அவன் அமைச்சர்களும் கடற்கரைக்கு வந்து பார்க்கிறார்கள்.


இரவு நேரம். தீ பந்தங்கள் எரிகின்றன. நிலவொளியில் அந்த மணற்பரப்பு பால் போல கிடக்கிறது. எரியும் தீப்பந்தங்கள் அந்த பாற்கடலில் முளைத்த தாமரை மலர்களைப் போல்  சிவந்த நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிகிறது. 


கம்பனின் கற்பனை வளம். 

 

பாடல் 

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,

விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்

வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,

களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_27.html

Pl click the above link to continue reading


அளக்கரைக் = கடற்கரை 

கடந்து = சென்று 

மேல் அறிந்து = மேல் நின்று பார்க்கும் போது 

நம்பியும் = வீடணனும் 

விளக்கு ஒளி பரத்தலின் = தீப்பந்தங்களின் ஒளி அங்கொன்றும் இங்கொன்றுமாக  தெரிவது 


பாலின் வெண் கடல் = பாற்கடலில் 


வளத் = வளமையான , செழிப்பான 

தடந் தாமரை மலர்ந்ததாம் என = குளிர்ந்த தாமரை மலர்கள் மலர்ந்து இருந்ததைப் போல 


களப் = போர் களத்தில் 

பெருந் தானையைக்  = பெரிய படையை 

கண்ணின் நோக்கினான். = கண்ணால் கண்டான் 


பயம், போட்டி, பொறாமை, போன்றவற்றால் நம் மனம் நாளும் குறுகிப் போகிறது. 

குறுகிய மனத்தை விரிவாக்க இலக்கியங்கள் உதவுகின்றன. 


இப்படி ஒரு காட்சியை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


கற்பனை விரியும்.மனமும்தான்.




Monday, October 26, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம் 


பக்தி என்றால் என்னவோ இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டு, கடவுளே கதி என்று போய் விடுவது அல்ல. எல்லாவற்றையும் துறந்து சாமியாராக போவது அல்ல பக்தி. 

இந்த உலகை, அதன் அழகை, அதன் உயிர்ப்பை இரசிப்பது தான் பக்தி. 

என் பிள்ளையை பாராட்டினால் எனக்கு சந்தோஷம்தானே. உலகை இரசித்துப் பாராட்டினால் அதைப் படைத்த இறைவனுக்கு சந்தோஷம் இருக்காதா? 

அதை விடுத்து, இறைவன் செய்த எல்லாம் தேவை இல்லாதது என்று ஒதுக்கி வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?


நமது பக்தி இலக்கியத்தில் பார்த்தால் தெரியும். உலகை, இயற்கையை, அதன் அழகை, உயிர்ப்பை மிக நுண்ணியமாக இரசித்து எழுதிய பாடல்களை காணலாம். 

உலகை வெறுத்த ஒருவரால் இவ்வளவு தூரம் இரசித்து இருக்க முடியாது. 


பேயாழ்வார் சொல்கிறார்....

திரு வேங்கட மலையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அவை , அங்குள்ள மரத்தில் உள்ள பழங்களை பறித்து உண்ணுகின்றன.  அப்படி சாப்பிடும் போது, நடுவில் தாகம் எடுத்தால் அங்குள்ள குளம் அல்லது நீர் நிலைகளை தேடிச் செல்லும். நீர் குடிக்க குனிந்தால், குனியும் அந்த குரங்கின் உருவம் அந்த நீரில் தெரியும். அடடா இன்னொரு குரங்கு உள்ளே இருக்கிறது என்று பயந்து ஓடும். பின், மெல்ல வந்து,  தான் கையில் வைத்து இருப்பது போலவே அந்த நிழல் குரங்கின் கையிலும் ஒரு பழம்   இருப்பதைக் கண்டு, "எனக்கு அதைத் தா"  என்று கை நீட்டி கேட்குமாம்"

அப்படிப் பட்ட குரங்குகள் நிறைந்த மலை திருவேங்கடம் என்று கூறுகிறார். 


பாடல்  


பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_86.html


click the above link to continue reading


பார்த்த கடுவன் = பார்த்த குரங்கு 

சுனைநீர் = சுனையில் உள்ள நீரில் 

நிழற்கண்டு = தன் நிழலைக் கண்டு 

பேர்த்தோர் = வேறு ஒரு 

கடுவனெனப் = குரங்கு என்று 

பேர்ந்து = விலகிச் சென்று 

கார்த்த 

களங்கனிக்குக் = கரிய களங் கனிக்கு 

கைநீட்டும் வேங்கடமே = கையை நீட்டும் வேங்கட மலையே 

மேனாள் = முன்பொரு நாள் 

விளங்கனிக்குக் = விளங்கனிக்கு 

கன்றெறிந்தான் = கன்றாக வந்த அசுரனை அதன் மேல் எறிந்த கண்ணனின் 

வெற்பு = மலை 


உலகை மறுத்து என்ன பக்தி? 

குரங்கு தன் நிழலைப் பார்த்து பயந்து பின் கனி கேட்டதை வேலை மெனக்கெட்டு  எழுதி இருக்கிறார். இதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? 

பக்தி என்பது வாழ்வை இரசிப்பது. இயற்கையோடு ஒன்றி வாழ்வது. குரங்கும், மலையும் , அது உண்ணும் கனியும், அதன் சேட்டைகளும் எல்லாம் இயற்கைதான். 

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்பதும் பிரபந்தம். 

வாழ்க்கையை கொண்டாட வேண்டும். 



கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்


வீடணன் கூறிய அற உரைகளை ஏற்க மறுத்து அவனையும் விரட்டி விடுகிறான் இராவணனின். 

போவதற்கு முன், கடைசியாக வீடணன் கூறுகிறான் 


"என் தந்தை போன்றவனே. உனக்கு நன்மை தரக்கூடிய நல்லவை பலவும் சொன்னேன். நீ கேட்கவில்லை. என் மேல் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்து அருள்வாய்" 


என்று கூறி விட்டு, அந்த ஊரை விட்டு விலகினான். 


பாடல் 

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,

ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;

அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,

உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_26.html

Pl click the above link to continue reading

'எத்துணை வகையினும் = பல வகைகளில் 

உறுதி எய்தின, = உனக்கு நல்லது தருவனவற்றை 

ஒத்தன, = அறத்துக்கு ஒத்தவற்றை 

உணர்த்தினேன் = சொன்னேன் 

உணரகிற்றிலை; = நீ உணரவில்லை 

அத்த ! = என் தந்தை போன்றவனே 

என் பிழை பொறுத்தருளுவாய்' என, = என் பிழை எதுவும் இருந்தால் பொறுத்து அருள்வாய் என்று கூறி விட்டு 


உத்தமன்  = உத்தமனான வீடணன் 

அந் நகர் ஒழியப் போயினான். = அந்த ஊரை விட்டு விலகிப் போனான் 


இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்ன என்றால், 


வீடணன் திட்டமிட்டு இராவணனை விட்டு விலகினான். இராவணனுக்கு துரோகம்  செய்தான் என்று ஒரு குற்றச்சாட்டு வீடணன் மேல் உண்டு. 

காப்பியத்தை ஊன்றி படித்தால் தெரியும், அவன் இராவணனை விட்டு போக திட்டம் தீட்ட வில்லை. 


அவனை இராவணன் விரட்டி விட்டான் என்பதே உண்மை. 

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது , நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்ன என்றால், நாம் நம் தகுதியை அந்த நூலின் உயரத்துக்கு  உயர்த்த முயற்சி செய்ய வேண்டுமே அல்லாமல், நம் நிலைக்கு நூலை கீழே கொண்டு வரக் கூடாது. 

அரை குறையாக படித்து விட்டு, வீடணன் திட்டம் போட்டே இராவணனை கவிழ்த்து விட்டான், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தான், செஞ்சோற்று கடனை மறந்தான்  என்றெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி  பேசிக் கொண்டு திரிகிறார்கள். 


வீடணனை தன்னை விட்டு  விலக்கியது இராவணனே.


வீடணன் செய்தது சரியா தவறா என்பதல்ல வாதம். வீடணன் திட்டமிட்டு இராவணனை வஞ்சனை செய்யவில்லை.  


"என் முன் நின்றால் கொன்று விடுவேன்..போய் விடு" என்று இராவணன் வீடணனை  விலக்கினான். 


அது தான் நடந்தது. 



Saturday, October 24, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

அறிவுரை கூறிய வீடணனை இராவணன் கொடும் சொல் கூறி விரட்டி விடுகிறான். வானில் நின்று வீடணன் மேலும் கூறுகிறான். 


"இராவணா, நீ வாழ்க. நான் சொல்வதைக் கேள். உன் வாழ்க்கை உயர நான் வழி சொல்கிறேன். நீண்ட நாள் வாழும் வரம் பெற்ற நீ புகழோடு வாழ வேண்டாமா?  தீயவர்கள் சொல் கேட்டு உனக்கு நீயே கெடுதல் தேடிக் கொள்ளாதே.  அறம் பிழைத்தவருக்கு வாழ்க்கை இருக்குமா? சிந்தித்துப் பார் "


பாடல் 


'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_24.html

pl click the above link to continue reading


'வாழியாய் ! = நீ வாழ்க 

கேட்டியால்: = நான் சொல்வதைக் கேள் 

வாழ்வு கைம்மிக = வாழ்வு உயர்வு அடைய 

ஊழி காண்குறு = ஊழிக் காலம் வரை நிலைத்து நிற்கும் 

நினது = உனது 

உயிரை  = உயிரை, வாழ் நாளை 

ஓர்கிலாய், = நீ நினைத்துப் பார்க்கவில்லை 

கீழ்மையோர் சொற்கொடு  = தீயவர்கள் சொல் கேட்டு 

கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கேட்டை தேடிக் கொள்ளப் போகிறாயா 

வாழ்மைதான் = வாழ்க்கைதான் 

அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழை விட்டவர்களுக்கு வாய்க்குமோ?

இராவணனுக்கு தெரியாத அறம் அல்ல. 


நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவை உடையவன் அவன். 


இருந்தும்  செய்வது தவறு என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை? 

அல்லது, தெரிந்தும் ஏன் செய்தான்?


இராவணனை விட்டு விடுவோம். அவன் கதை முடிந்த கதை. 

நம் கதையைப் பார்ப்போம்.


நமக்குத் தெரிந்தே நாம் பல தவறுகளைச் செய்கிறோம். அல்லது நல்லதை செய்யாமல் விடுகிறோம். 

ரொம்ப சாப்பிடக் கூடாது, புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு, சர்க்கரை விஷம், எல்லாம் தெரியும். இருந்தும் செய்கிறோம் அல்லவா?


உடற் பயிற்சி முக்கியம். உணவு கட்டுப்பாடு முக்கியம். நிறைய நீர் குடிக்க வேண்டும். நல்ல ஒய்வு வேண்டும். 


செய்கிறோமா? 


இல்லையே. 


பின், இராவணனை குறை சொல்லி என்ன பயன்?  தெரிந்தே தவறுகளை நாம் செய்வது போல  அவனும் செய்தான். 


இது எவ்வாறு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? 

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். செய்ய மாட்டேன் என்கிறோம். ஏன்?


அது தெரிந்து விட்டால், இராமாயணம் படித்த புண்ணியம் வந்து சேரும்.

ஏன் நாம் நம்மை வழி நடத்த முடியவில்லை? நாம் நினைப்பதை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

ஏன் தெரியுமா? ....


Thursday, October 22, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான் 


வீடணனின் அறிவுரைகள் இராவணன் அறிவில் ஏறவில்லை. வீடணனை பலவாறாக பழித்து "என் கண் முன் நில்லாதே...நின்றால் உன்னை கொன்று விடுவேன்" என்று சொல்லி துரத்துகிறான் இராவணன்.

வீடணனுக்கு வேறு வழி இல்லை. 

தன்னுடைய அமைச்சர்களோடு வானில் செல்கிறான். போவதற்கு முன்பும் பலப் பல அறங்களை எடுத்துச் சொல்கிறான். 


காமத்தின் முன் அறிவு எங்கே நிற்கும்? இராவணன் படித்த வேதங்களும், அவன் பெற்ற வரங்களும், அவன் வீரம் எல்லாம் காமத்தின் முன் மண்டியிட்டன . 


பாடல் 

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்

சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -

நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,

ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்;


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_98.html

pl click the above link to continue reading 

என்றலும் = என் கண் முன் நில்லாதே என்று இராவணன் சொன்னதும் 

இளவலும் = வீடணனும் 

எழுந்து, வானிடைச் சென்றனன்; = எழுந்து, வானத்தில் சென்றான் 

துணைவரும்  = அவனுடைய அமைச்சர்களும் 

தானும் = அவனும் (வீடணனும்) 

சிந்தியா நின்றனன் = சிந்தித்து நின்றான் 

பின்னரும் = அதன் பின்பும் 

நீதி சான்றன = நீதி சார்ந்த 

ஒன்று அல பலப்பல = ஒன்று அல்ல, பலப் பல 

உறுதி ஓதினான்; = உயர்ந்த விஷயங்களைச் சொன்னான் 


அது என்ன "சிந்தியா நின்றான் ". சிந்திக்காமல் நின்றான் என்று அர்த்தமா? இல்லை. 

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கணம் படித்தால், இந்தப் பாடல் மட்டும் அல்ல,  இலக்கியத்தில் எந்த இடத்தில் இது வந்தாலும், புரிந்து கொள்ள உதவும். 


தமிழில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 


ஒன்று பெயர்ச் சொல், இன்னொன்று வினைச் சொல். 


வினைச் சொல் காலம் காட்டும் என்பது விதி. 


எந்த வினைச் சொல்லையும் 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். 


1. பகுதி 

2. விகுதி 

3. இடை நிலை 

4. சாரியை 

5. சந்தம் 

6. விகாரம் 


என்பவை அந்த ஆறு. 


இதில் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றை மட்டும் இப்போது படிப்போம். 


ஒரு வினைச் சொல் எப்படி இருக்கும் என்றால் 


பகுதி + இடை நிலை + விகுதி 

என்று இருக்கும். 


தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களும் இந்த மூன்று பகுதிகளாகத்தான் இருக்கும். 


உதாரணமாக 

படித்தான் = படி + (த் என்பது ந் ஆனது விகாரம்) + த் + ஆன் 

இதில் 

"படி" என்பது பகுதி 

"த்" என்பது இடைநிலை 

"ஆன்"  என்பது விகுதி 


வந்தான் = வா + (த்) + த் + ஆன் 


ஓடினான் = ஓடு + இன் +ஆன் 


ஆடினாள் = ஆடு + இன் + ஆள் 


வணங்கினார் = வணங்கு + இன் + ஆர் 


மேய்ந்தது = மேய் + (த்) + த் + அது 


இப்படி எந்த வினைச் சொல்லை எடுத்துக் கொண்டாலும், இந்த மூன்று பிரிவில் அடக்கி விடலாம். 


இது வரை புரிகிறதா? 


புரிந்தால், நாளை மேலே தொடருவோம். 

சந்தேகம் இருந்தால்,  அதை தெளிவு படுத்தி விட்டு மேலே செல்வோம். 





திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி

திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி


வான் சிறப்பில் மூன்றாவது குறள்.


இந்த பூமி கடலால் சூழப் பட்டது. கடல் என்றால் நீர் தானே. மழை பெய்யாவிட்டால் என்ன, எவ்வளவு நீர் இருக்கிறது கடலில். சமாளித்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது. 


மழை பெய்யாவிட்டால், இந்த கடல் சூழ்ந்த உலகில் பசி எல்லோரையும் வருத்தும். 


பாடல் 


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_22.html


Pl click the above link to continue reading


விண்ணின்று = விண்ணில் இருந்து 

பொய்ப்பின் = மழை பெய்யாமல் பொய்த்து விட்டால் 

விரிநீர் = விரிந்த நீரை உடைய கடல் 

வியனுலகத்து = பரந்த உலகில் 

உண்ணின்று = உணவு இன்றி 

உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பசி என்றால் ஏதோ கொஞ்ச பொறுத்துக் கொண்டால், உணவு தயாராகி விடும்  என்றல்ல.  உணவே வராது. உணவே எங்கும் கிடையாது.


எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? வீட்டில் உணவுப் பொருள்கள் இல்லை. அரிசி, புளி , கோதுமை, காய் கறிகள், பழங்கள், எண்ணெய் என்று எதுவும் இல்லை. கடைகளிலும் இல்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும்  உணவுப் பொருள்கள் இல்லை.  

இன்று போய் விளைவித்தாலும், ஒரு வாரம் பத்து நாள் ஆகும். மழை இல்லாவிட்டால்  அதுவும் முடியாது. 


அப்படி ஒரு பசி வந்தால், அனைத்து உயிர்களும் பசியால் வாடி இறந்து போகும் அல்லவா? 

இந்த உலகில் உயிர்கள் இருக்கக் காரணம், மழை தான். 


மழை என்றால் ஏதோ நீர் ஆவியாகிறது, மழை வருகிறது என்று நாம் எளிதாக நினைத்துக் கொள்கிறோம். அப்படி அல்ல. 

மழை என்பது உயிர். 

நம் உறவுகள் அனைத்தையும் நம்மோடு சேர்த்து வைத்து இருப்பது, மழை.

இந்த உலகம் உயிர்களோடு, அழகாக இருக்கக் காரணம் மழை.

எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.