Thursday, April 22, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?


திருவரங்கத்துக்குப் போகணும், திருப்பதிக்குப் போகணும், காசிக்குப் போகணும் என்று எங்கும் நிறைந்த இறைவனை ஏதோ ஒரு இடத்தில் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கல்லாம். 


எங்கேயும் போக வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே, அவனை மனதில் நினைத்து வழிபட்டால் போதும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 


"விரிந்த இதழ்களை உடைய மலரில் வாசம் செய்யும் ததிருமகளின் தோள்களை அணைத்துக் கொண்டதும், அம்பால் ஏழு மரா மரங்களை துளைத்ததும், ஆடு மாடு மேய்த்ததும் , இவற்றையெல்லாம் நினைத்து, ஆடிப் பாடி, "அரங்கா" என்று அழைக்கும் தொண்டர்களின் பாதத்தில் இருந்து பறக்கும் பாதத் துளிகள் மேலே படும் பாக்கியம் பெற்றால், கங்கை சென்று நீராட வேண்டும் என்ற எண்ணம் என்னாவது?"


பாடல் 


தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_11.html

(click the above link to continue reading)



தோடுலாமலர் = இதழ் விரிந்த மலர்கள் 


மங்கை = அதில் வாசம் செய்யும் திருமகளின் 


தோளிணை = தோள்களை 


தோய்ந்ததும் = அணைத்துக் கொண்டதும் 


சுடர் வாளியால் = ஒளி வீசும் அம்புகளால் 


நீடுமாமரம் = பெரிய மரா மரங்களை 


செற்றதும் = துளைத்ததுவும் 


நிரை மேய்த்தும் = பசுக்களை மேய்த்ததும் 


இவையே நினைந்து = இவற்றை மட்டுமே நினைத்து 


ஆடிப்பாடி = ஆடிப் பாடி 


அரங்கவோ = அரங்காவோ 


என்ற ழைக்கும் = என்று அழைக்கும் 


தொண்ட ரடிப்பொடி = தொண்டர்களின் பாதம் பட்டு தெறிக்கும் தூசு 


ஆடனாம்பெறில் = அதில் ஆடப் பெற்றால் 


கங்கை நீர் = கங்கை ஆற்றிலே 


குடைந் தாடும் = குதித்து விளையாடும் 


வேட்கை = ஆசை 


யென் னாவதே = என்னாகும் ?


அடியவர்களின் பாதத் துளிகள் கங்கை ஆற்றை விட புனிதமானது என்பது பொருள்.


எங்கேயும் போகத் தேவையில்லை. அவனை மனதால் நினைத்தால் போதும் என்பதும் பெற்றாம். 


ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், கவிதை நடை. 


"அப்படி எல்லாம் இருந்தால், அந்த கங்கை போற எண்ணம் என்னாகும்?" என்று நம்மை பார்த்து நேரில் கேட்பது போன்ற ஒரு நடை, பாவனை. 


"இதெல்லாம் இருக்கும் போது, அங்க எதுக்கு போக நினைக்கிற" என்று நம்மைப் பார்த்து கேட்பது போன்ற நடை சற்று வித்தியாசமானது. 


திருமகள் மேல் காதல் 

மரம் துளைத்த வீரம் 

பசுக்களுக்கும் இரங்கும் கருணை 


வேறென்ன வேண்டும்?


நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல, நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது என்பது ஒரு அனுபவம்.  உங்களுக்கும், அந்த பாசுரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்புதான் அந்த அனுபவம். 


வார்த்தைகள், இலக்கணம், போன்றவற்றை விட்டு விட்டு நேரடியான அனுபவம் இருந்தால், அதன் சுகமே தனி. 


அதை என்னென்று சொல்லி விளங்க வைப்பது ? 



திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர்

 திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர் 


அறம் நிலைக்க வேண்டும் என்றால் உயிர்கள் நிலைக்க வேண்டும். அதுவும் பசி இன்றி இருக்க வேண்டும். அதற்கு மழை வேண்டும். 


மழை வளம் குன்றினால் உழவர்கள் உழவுத் தொழிலை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.  


அதாவது, உலகில் உணவு உற்பத்தி நின்று போய் விடும் என்கிறார்.  இருக்கின்ற உணவை சிறிது காலம் உண்ணலாம். அதன் பின், பட்டினிதான். 


மழை இல்லாவிட்டால், உழவு இல்லை. உழவு இல்லாவிட்டால் உணவு இல்லை. 


பாடல் 


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_22.html


(click the above link to continue reading)



ஏரின் = ஏரினால் 


உழாஅர் = நிலத்தை உழ மாட்டார்கள் 


உழவர் = உழவர்கள் 


புயலென்னும் = மழை என்ற 


வாரி = வருவாய் 


வளங்குன்றிக் கால் = வளம் குன்றிய பொழுது 


உழவர்கள் நிலத்தை உழலாம், அதை பண்  படுத்தலாம். விதை விதைக்கலாம். ஆனால், மழை இல்லாவிட்டால் இவை ஒன்றினாலும் பயன் இல்லை. பயிர் விளையாது. 


ஏன், மழை இல்லாவிட்டால், ஆற்றுப் பாசனம், ஊற்றுப் பாசனம், கண்மாய் பாசனம் போன்றவை இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் நம்பி உழவு செய்ய முடியாது. ஆற்றுக்கு நீர் எங்கிருந்து வரும்? ஊற்று நீர் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ஆற்றில் நீர் இல்லாவிட்டால் எரி , குளம் , குட்டை, கண்மாய் எல்லாம் எப்படி நிறையும். 


நீர் மேலாண்மைக்கு (water management) மழைதான் அடிப்படை. அது இல்லாவிட்டால், உழவர்கள் சோர்ந்து போவார்கள். 


ஏதோ ஓரிரண்டு தூறல் போட்டது என்று உழவர்கள் உழவு செய்யத் தொடங்க மாட்டார்கள். "புயல் எனும் வாரி". நல்லா அடிச்சுப் பெய்ய வேண்டும். காத்தும் மழையுமாக இருக்க வேண்டும். நீர் நிலைகள் எல்லாம் நிறைய வேண்டும். 


உழவுக்கு அடிப்படை மழை. 


ஒரு நாடு எவ்வளவுதான் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், பணத்தை உண்ண முடியாது. உணவுப் பொருள் வேண்டும். அதற்கு மழை அவசியம் என்று மழையின் பெருமை கூறுகிறார். 

Wednesday, April 21, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி 


அன்பு அதிகமாகிக் கொண்டே போகும் போது ஒரு இடத்தில் வார்த்தைகள் பயனற்றுப் போய், கண்ணீர் ஒன்றே அந்த அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக மாறி விடுகிறது. 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. 


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பார் திரு ஞானசம்பந்தர். 


அன்பின் உச்சம் கண்ணீராகத்தான் இருக்கிறது. 


கிணறு வெட்ட நிலத்தை தூர்த்துக் கொண்டே போவோம். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மேலே வந்து விடும். பெருமாள் மேல் பக்தர்கள் கொண்ட காதல் இருக்கிறதே அது எவ்வளவு தூரம் ஆழமாகப் போகும் என்று யாருக்கும் தெரியாது. தூராத மனக் காதல் அது. 


தாய்ப் பசுவைக் கண்டதும் கன்றுக் குட்டி துள்ளி குதித்துக் கொண்டு ஓடும். அதுக்கு ஆனந்தம் தாங்காது. சரியாக குதிக்கிரோமா என்று கூடத் தெரியாது. கண் மண் தெரியாமல் குதிக்கும். கீழே விழும். புரண்டு எழும். மீண்டும் துள்ளும். அப்படி ஒரு பாசம். அன்பு. துடிப்பு. 


ஆண்டவனைக் கண்டதும் பக்தர்களுக்கும் அப்படி ஒரு பரவசம் வருமாம். கண்ணில் நீர் தாரை தாரையாக வழியும். அவனை கண்டு கொண்டேன் என்று ஒரே ஆனந்தம். துள்ளிக் கொண்டு ஒடுவார்களாம். தரையில் விழுந்து புரள்வார்களாம். 


அப்படி ஒரு பரவச நிலை எனக்கு வரவில்லையே.  அவர்களோடு சேர்ந்து தானும் அவ்வாறு பரவசம் அடையும் நாள் அது என்று வருமோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி


ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்


சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_34.html


(click the above link to continue reading)


தூராத மனக்காதல்  = ஆழம் காண முடியாத காதல் 


தொண்டர் தங்கள் = தொண்டர்கள் 


குழாம் = குழு 


குழுமித் = ஒன்றாகச் சேர்ந்து 


திருப்புகழ்கள் பலவும் பாடி = இறைவனுடைய திருப்புகழ்கள் பலவும் பாடி 


ஆராத  = தீராத 


மனக்களிப்போ டழுத  கண்ணீர் = தீராத மனக் களிப்போடு அழுது கண்ணீர் 


மழைசோர = மழை போல வடிய 


நினைந்துருகி யேத்தி = நினைந்து உருகி போற்றி 


நாளும்= ஒவ்வொரு நாளும் 


சீரார்ந்த முழவோசை = சிறந்த வாத்தியங்களின் முழவு ஓசை 


பரவை காட்டும் = கடல் போல் ஒலிக்க 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும் 


போராழி யம்மானைக் = பெரிய சக்கரத்தை உடைய அம்மானை 


கண்டு = கண்டு 


துள்ளிப் = பரவசத்தில் துள்ளி 


பூதலத்தி லென்றுகொலோ  = இந்த பூமியில் என்றோ 


புரளும் நாளே = புரளும் நாளே 


உலகியல் இன்பங்கள் கொஞ்ச நேரத்தில் ஆறி விடும். திருப்தி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால் ஆசை மாறி வெறுப்பே வந்து விடும். 


லட்டு நன்றாக சுவையாக இருக்கும். ஒன்றிரண்டு உண்ணலாம். அதற்கு மேல் முடியாது. அந்த ஆசை ஆறி விடும். 


ஆனால், இறைவனை கண்டு மகிழும் ஆசை ஆறவே ஆறாது. மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் என்கிறார். 


"ஆறாத  மனக் களிப்பு " 


அதே போல், "தூராத மனக் காதல்" ஆழம் காண முடியாத காதல். 


பிரபந்தத்தை வார்த்தைகளால் உணர முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய அனுபவம் அது.  


வாய்த்தால் நல்லது. 


திருக்குறள் - உடற்றும் பசி

 திருக்குறள் - உடற்றும் பசி 


மழை பெய்யாவிட்டால், இந்த உலகில் நிலைத்து வாழும் உயிர்களை பசி வருத்தும். 


பாடல் 

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_21.html


(please click the above link to continue reading)



விண்ணின்று = வின் + இன்று = இன்று என்றால் இல்லாமல். 


பொய்ப்பின் = பொய்த்து விட்டால் 


விரிநீர் வியனுலகத்து = விரிந்த நீரை கொண்ட (கடல்) இந்த பெரிய உலகில் 


உண்ணின்று  = உள் + நின்று = உள்ளே இருந்து 


உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பொய்ப்பின் என்றால் ஒரு பருவ மழை பொய்ப்பித்து போவது அல்ல. நீண்ட நாட்களாய் பெய்யாமல் விட்டால். 


விரிநீர் வியனுலகு என்று ஏன் கூறினார் என்றால், உலகில் கடல் நீர் தான் அவ்வளவு இருக்கிறதே. மழை பெய்யாவிட்டால் என்ன என்று சிலர் நினைக்கக் கூடும். கடல் நீர் எவ்வளாவு இருந்தாலும், அதை குடிக்க முடியாது, அதை வைத்து உழவு செய்து பயிர் வளர்க்க முடியாது. 


இன்று அறிவியலில் கடல் நீரை குடி நீராக்க முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், அவை ஏதோ ஒரு சிறிதளவு பயன் தரலாம். உலகம் அனைத்துக்கும் தேவையான நீரை கடலில் இருந்து நம்மால் தர முடியாது. 


மழை வந்தால் தான் உண்டு. 


பசி வருத்தும் என்கிறார்.  பசி என்பதை அனுபவித்தால் தான் தெரியும். நமக்கெல்லாம் வரும் பசி என்பது ஒரு சில மணி நேர தாமதம்தான். உணவு கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதி வேறு உண்டு. 


அடுத்த வேளை உணவு இல்லை. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இருக்கிறானே, அவன் உணர்வதுதான் பசி. 


"அழிபசி" என்பார் திருவள்ளுவர்.  அழிக்கின்ற பசி. எதையெல்லாம் அது அழிக்கும் என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். 


பசி நின்று வருத்தும் என்கிறார். ஏதோ கொஞ்ச நேரம் வருத்தி விட்டு பின் போய்விடும் என்று அல்ல. விடாமல், நின்று வருத்தும் என்கிறார். 


மழை எவ்வளவு பெரிய விஷயம்.





Tuesday, April 20, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?


நாம் ஒருவரிடம் ஒரு உதவியை எதிர் பார்த்துப் போகிறோம். அவர் எவ்வளவு செய்வார், எப்படி செய்வார் என்று தெரியாது. நம் எதிர்பார்ப்பு என்னவோ கொஞ்சம் தான். அதுவும் சந்தேகத்தோடுதான்.


அவரைப் பார்த்தவுடன், அவர் நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உதவியை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரின் அன்பு நினைத்து நம் மனம் எப்படி இளகும். அடடா, அந்த மனிதனுகுத்தான் என் மேல் எவ்வளவு அன்பு, கரிசனம். அவர் செய்த மாதிரி யார் செய்வார் என்று நினைந்து நினைத்து உருகுவோம் அல்லவா?


அது போல உருகுகிறார் குலசேகர ஆழ்வார். 


"நம் மனமோ எப்போதும் ஏதாவது தீய எண்ணங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறது. அதை விட்டுவிட்டு, மனதில் உள்ள வஞ்சனை எண்ணங்களை துடைத்து எறிந்து விட்டு , ஐந்து புலன்களை அடக்கி, சாகும் வரை அவனையே நினைத்துக் கொண்டிருக்கும், முடிவு இல்லாத பழைய நெறிகளை பின் பற்றி அதில் நிலைத்து நிற்கும் அடியவர்களுக்கான கதியான திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் மாயோனை கண்ணில் நீர் மல்க நின்று காணும் நாள் எதுவோ"


என்று உருகுகிறார்.


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்


துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான


அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_70.html


(click the above link to continue reading)


மறந்திகழு  = மறம் + திகழும் = எப்போதும் சண்டை சச்சரவு என்றே அலைந்து கொண்டிருக்கும் 


மனமொழித்து = மனதை ஒழித்து. அதாவது, அந்த எண்ணங்களை ஒழித்து 


வஞ்ச மாற்றி  = வஞ்சக எண்ணங்களை மாற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


இடர்ப் பாரத் துன்பம் = பெரிய பாரமான துன்பம். அதாவது பழைய வினைகள். 


துறந்து  = அறுத்து 


இருமுப் பொழுதேத்தி = இருமும் பொழுதில் போற்றி. அதாவது, இறக்கும் தருவாயில் போற்றி 


 எல்லை யில்லாத் = முடிவு இல்லாத. இங்கே, ஆரம்பம் இல்லாத 


தொன்னெறிக்கண் = தொன்மையான நெறியின் கண் 


நிலைநின்ற = நிலைத்து நின்ற, அதாவது, அதை இடைவிடாமல் கடை பிடித்து 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம்திகழும் = அறம் எப்போதும் மனதில் இருக்கும் 


மனத்தவர்தம் = மனதை உடையவர்களுடைய 


கதியைப் = கதியை, வழியை, செல்லும் பாதையை 


பொன்னி = பொன்னி நதி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம்திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென் = கண்டு என் 


கண்கள் = கண்கள் 


நீர்மல்க = நீர் நிறைந்து நிற்க 


என்றுகொலோ நிற்கும் நாளே = எப்போது அப்படி நிற்கப் போகிறேன் 



"இருமுப் பொழுதேத்தி" அது என்ன இருமும் பொழுது போற்றி. அப்படி என்றால் மற்ற நேரங்களில் போற்றக் கூடாதா? சாகும் போதுதான் போற்ற வேண்டுமா?


எப்போதும் போற்றிக் கொண்டே இருந்தால் தான், சாகும் தருவாயில் அது வரும். 


"சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே." என்பார் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் 


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.



புலவர் கீரன் இது பற்றி ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். 


சாகும் போது எதை நினைத்துக் கொண்டே சாகிறோமா, அதை நாம் மறு பிறவியில் அடைவோம் என்பது நம்பிக்கை. அப்படி என்றால், பெரும் பணக்காரனாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இறந்தால், மறு பிறவியில் பெரும் பணக்காரனாகி விடலாமே என்றால், சாகும் போது அந்த நினைப்பு வர வேண்டுமே? அந்த நேரத்தில் தொண்டை அடைக்கும், மல சலம் துடைக்காமல் உறுத்திக் கொண்டு இருக்கும். இருமி இருமி நெஞ்சு வலிக்கும். பணம் எங்கே நினைவு வரும்?


கீரன் சொல்வார்,


ஒரு கிழவி சாகக் கிடந்தாளாம்.  அருகில் இருந்தவர்கள் எல்லோரும், "கிழவி நல்லதா நாலு வார்த்தை சொல்லு " என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம். 


அந்தக் கிழவியும், மிக முயற்சி செய்து "மு" என்று சொன்னாளாம். 


உடன் இருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ந்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு" என்றார்களாம். 


கிழவியும் "முரு" என்று இரண்டு எழுத்தை சொன்னாளாம். எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா முருகன் பெயரைச் சொல்லப் போகிறாள். அவளுக்கு முக்தி தான் என்று நினைத்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு " என்றார்களாம்...


கிழவியும், தன் சக்தியெல்லாம் கூட்டி "முருக முருக இரண்டு தோசை கொண்டு வாருங்கள் என்றாளாம்" 


அவளுடைய பசி அவளுக்குத் தான் தெரியும். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


இறைவனை அடைய வழி சொல்கிறார் ஆழ்வார். ஏதோ பாசுரம் படித்தோம், இரசித்தோம், என்று இருக்காமல், அவை என்ன என்று சிந்திப்போம். முடிந்தவரை அவற்றை செயல் படுத்த முனைவோம். 


முதலாவது, மனதில் உள்ள "மற" எண்ணங்களை மாற்ற வேண்டும். துவேஷம்,  போட்டி, பொறாமை போன்றவை. 


இரண்டாவது, வஞ்சக எண்ணங்களை போக்க வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வஞ்சக மனதை விட்டு ஒழிக்க வேண்டும். 


மூன்றாவது, ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 


நான்காவது, எப்போதும் இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். 


ஐந்தாவது, வேத நெறிகளில் நின்று ஒழுக வேண்டும். 


ஆறாவது, மனதில் அறச் சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும். 


இதில் ஆழ்வார் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். இது வரை கேள்விப் பட்டிராத ஒன்று. வியாக்கியானங்களை புரட்டிப் பார்த்தேன், தெளிவாகவில்லை. 


அன்பர்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 


"அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப்"


கதி என்றால் வழி.  அதோகதி, பிரகதி என்று சொல்கிறோம் அல்லவா.  இங்கே கதி என்றால் விதி என்றும் கொள்ளலாம். 


இறைவன் என்பவன் சென்று அடையும் ஒரு இடமோ, பொருளோ, ஆளோ அல்ல. அவன் தான் வாழ்கை நெறி  என்கிறார். இங்கே "அவன் தான்" என்று சொல்லே சரி இல்லை. 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.  இப்போதைக்கு விடை கிடைக்கவில்லை.  என்றேனும் கிடைக்கலாம்.



  திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை 


வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 


அடுத்த குறள். 


சரியான tongue twister 


பாடல் 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 


அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 


மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 


செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 


பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 


ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 


உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 


துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.


உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 


அது எப்படி?


என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  


உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?


என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 


நீரும் ஒரு உணவு போன்றது.


நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 


உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 


துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை


துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 


துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 


உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 


துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 


துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 


என்று வாசித்தால் எளிதாக புரியும். 


துப்பார்க்கு என்று உயர் திணையில் கூறினாலும் அது சிறப்பு கருதி கூறப் பட்டது. அது மற்றைய விலங்குகள், பறவைகள், தாவரங்களுக்கும் பொருந்தும் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். 


நல்லா இருக்குல ?






Monday, April 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !


Rembrandt போன்ற மேலை நாட்டு ஓவியர்கள் ஆகட்டும், இரவி வர்மா போன்ற இந்திய ஓவியர்கள் ஆகட்டும், அவர்களின் ஓவியங்கள் தத்ரூபமாக இருக்கும். படகு கவிழ்வது போன்ற ஒரு  Rembrandt வரைந்த படம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், ஏதோ நாம் அந்த படகில் இருப்பது போல இருக்கும். 


அதை எல்லாம் விட குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். அதன் பிரமாண்டம், மெய் சிலிர்க்கும் வர்ணனை தெரியும். பாடிய பின் குலசேகர ஆழ்வாரே சொல்கிறார், இது எனக்கே மயக்கம் தருகிறது. தூணை கொஞ்சம் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார். 


கம்பன், நரசிம்மத்தை காட்டிய மாதிரி ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


நேரடியாக படித்தால் புரியாது. அந்தக் காலத்து தமிழ். 


முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். அப்புறம், சொல்லுக்குச் சொல் அர்த்தம் பார்ப்போம். 


"ஒரு இருண்ட கர்ப்ப கிரகம். ஓரத்தில் ஒரு சின்ன விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. வெளியில் இருந்து வந்த நம் கண்கள் சற்று சிரமப் படுகின்றன என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இருப்பது தெரிய வருகிறது. 


ஒரு பெரிய பாம்பு. ஆயிரம் தலை. அதன் வாயில் இருந்து நெருப்பு பறக்கிறது. சில வாய்கள் மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அந்த நெருப்பு பொறி பட்டுத் தெறித்து கீழே விழுகிறது. அது ஏதோ சிவந்த மலர் கொண்டு அர்சிப்பதைப் போல இருக்கிறது.  


நெளியும் தலைகள். நெருப்பு உமிழும் வாய்கள். மந்திரம் சொல்லும் வாய்கள். அந்த மந்திர உச்சாடன சப்த்தம் நம்மை வேறு ஒரு உலகுக்கு கொண்டு செல்கிறது. 


கீழே, இதைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் கண் மூடி மோன தவம் இருக்கும் ஒரு உருவம். 


பார்க்கவே ஏதோ பெரிய அமானுஷ்யமான , பயம் தரும் தோற்றம். பார்த்துக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வாருக்கு உலகமே சுத்துவது போல இருக்கிறது.  எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அருகில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார். 


அந்த உருவத்தின் மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு வசீகரம். பயம் கலந்த வசீகரம். 


இப்படி ஒரு நிலையில், அந்த தரிசனத்தை வாயார வாழ்த்தும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார். 


இப்போது அர்த்தத்தை பார்ப்போம் 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_19.html


(click the above link to continue reading)

 

வாயோரீ ரைஞ்ஞூறு  = வாயோ + ஈரைந்து நூறு = அதாவது 500 x 2 = 1000 வாய். 


துதங்க ளார்ந்த = துதம் என்றால் ஸ்தோத்திரம். மந்திரங்கள் ஆர்பரிக்க 


வளையுடம்பி னழல்நாகம் = வளை + உடம்பின் + அழல் + நாகம் = வெளுத்த உடம்பைக் கொண்ட அனல் கக்கும் நாகம் 


உமிழ்ந்த செந்தீ = வாயில் இருந்து புறப்பட்ட சிவந்த நெருப்பு 


வீயாத மலர்ச்  = அழிவில்லாத, வாடாத மலர் 


சென்னி = தலை மேல் உள்ள 

விதான மேபோல் = கூரை போல.  அதாவது, அந்த ஆயிரம் தலைகளும் கூரை போல இருக்கிறதாம். 


மேன்மேலும் = மேலும் மேலும் 


மிகவெங்கும் = எல்லா இடத்திலும் 


பரந்த தன்கீழ் = விரிந்து, பரந்து இருக்க 



காயாம்பூ = காயம் பூ 


மலர்ப்பிறங்கல்  = மலரால் செய்த மாலை 


அன்ன = போல 


 மாலைக் = பெருமை மிக்க 


கடியரங்கத் தரவணையில் = கடி அரங்கத்து அரவவனையில் = காவலை உடைய திருவரங்கத்தில் நாக சயனத்தில்  


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும்



மாயோனை = மாயோனை 


மணத்தூணே பற்றி = மணத் தூணே பற்றி 


நின்றென் வாயார = நின்று என் வாயார 


என்றுகொலோ = என்று 


வாழ்த்தும் நாளே! = வாழ்த்தும் நாளே 


(குறிப்பு: மணத் தூண் பற்றி வைணவ பெரியவர்கள் பல வியாக்யானங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கண்டு தெளிக). 


கண் மூடி அந்த காட்சியை ஒரு முறை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


ஆழ்வார் எந்த அளவுக்கு பெருமாளை அனுபவித்து இருக்கிறார் என்று தெரியும்.