Tuesday, August 31, 2021

திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல் 


இந்த ப்ளாகை படிக்கும் சிலர், சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். 


அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எப்படி திருக்குறள் வழி நடந்து நம்மை முன்னேற்றுவது என்பது பற்றி அல்ல. 


திருக்குறளில் குறை கண்டு பிடிப்பது, வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க நினைப்பது, தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவது என்று போகிறது. 


விமர்சினங்கள், ஆராய்சிகள், கேள்விகள் எல்லாம் தேவை தான். அப்படித்தான் அறிவு வளரும். அது கூடவே கூடாது என்று சொல்ல முடியாது. 


ஆனால், அந்த கேள்விகள் அறிவை வளர்க்க பயன் பட வேண்டும். அறியாமையை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. 


பெரும்பாலான கேள்விகள் வரக் காரணம் திருக்குறளை முழுமையாக ஒரு வரிசையாக படிகாதாதல் வரும் கேள்விகள். 


ஒரு ஐந்து வயது மாணவனை பன்னிரெண்டாம் வகுப்பில் கொண்டு போய் அமர்த்தினால் எப்படி இருக்கும்? அவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வரும், கேள்வி வரும், குழப்பம் வரும். 


ஒவ்வொரு வகுப்பாக படித்துக் கொண்டு வந்தால் தெளிவு பிறக்கும். 


அது போல குறளை வரிசையாக படிக்க வேண்டும். முதலில் படித்ததை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 


முதல் வகுப்பில் படித்த அ ஆ மறந்து விட்டது என்று பத்தாம் வகுப்பில் வந்து உட்கார்ந்தால், எப்படி மேலே படிப்பது? 


திருக்குறளை ஒரு கோர்வையாக, ஆதி முதல் அந்தம் வரை படிக்க வேண்டும். அதுவும் வரிசையாக படிக்க வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_31.html


(Please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு நீதி நூல் அல்ல. அது வாழ்கை நெறிமுறை நூல். 


வாழ்க்கை என்பது ஒரு ஒழுங்கில் இருப்பது. 


பிறப்பு - பின் வளவர்து - பின் கல்வி கற்பது - பின் திருமணம் - பிள்ளைகள் - வயதாவது - மரணம் என்று போகிறது அல்லவா. 


இல்லை, நான் அப்படி வாழ மாட்டேன். முதலில் பிள்ளை பெற்றுக் கொள்வேன், அப்புறம் கல்வி கற்பேன், பின் திருமணம் செய்து கொள்வேன் என்று மனம் போனபடி வாழ முடியுமா? ஐந்து வயதில் திருமணம், எட்டு வயதில் பிள்ளை பெற்றுக் கொள்வேன் என்றெல்லாம் ஆரம்பிக்க முடியாது. 


அதே போல் ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும், அல்லது அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் அல்லது அது சரி இல்லை என்றால் விட்டு விட்டு வேறு வேலை செய்யப் போய் விட வேண்டும். 


மாறாக, பிள்ளை வளர்ப்பது இப்படி என்று சொன்னால், அப்படி என்றால் வீட்டுக்கு வரும் விருந்தினரையும் அப்படித்ததான் நடத்த வேண்டுமா என்று கேட்கக் கூடாது. 


ஆணின் வேலை இது, பெண்ணின் வேலை இது என்று சொன்னால், அப்படி என்றால் ஆண்கள் அந்த வேலை செய்யக் கூடாதா, பெண்கள் இந்த வேலை செய்யக் கூடாதா என்று குதர்க்கம் பேசித் திரியக் கூடாது. 


பேசலாம். எப்போது என்றால், அப்படி மாறிச் செய்வது பற்றி முழுமையாக ஆராய்ந்து, ஒரு வாழ்கை முறையை கூறி, அந்த வாழ்க்கை முறை முன்னதை விட சிறப்பானது என்று நிறுவும் திறம் இருந்தால். 


திருக்குறள் எதையும் புதிதாக கண்டு சொல்லும் நூல் அல்ல. எங்கும், எப்போதும் நிறைந்து இருக்கும் அறத்தை தொகுத்துச் சொன்ன நூல். அவ்வளவுதான். 


நெருப்பில் கை வைக்காதே. சுடும் என்று அம்மா சொல்கிறாள். பிள்ளை "அது எப்படி சுடும் " என்று கை வைக்கிறான். சுடுகிறது. அம்மா சொன்னதால் சுடவில்லை. அம்மா சொல்லாவிட்டாலும் சுட்டிருக்கும். 


அது போல வள்ளுவர் செய்திருப்பது "சுடும்" என்ற செய்தியை சொல்வது. வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் இரகசியங்களை அறிந்து தொகுத்துச் சொன்னது.   


பொருளை போட்டால் அது புவி ஈர்ப்பு காரணமாக கீழே விழும் என்று சொன்னது நியூட்டன். அவர் சொல்லாவிட்டாலும் புவி ஈர்ப்பு இழுக்கத்தான் செய்யும்.  அது ஒரு அறிவியல் உண்மை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தே தீரும். 


எனக்கு நியூட்டனின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. நான் பத்தாவது மாடியில் இருந்து குதிக்கப் போகிறேன் என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம். அவ்வளவுதான். 


பெண் ஒழுங்காக இருந்தால் ஆணுக்குச் சிறப்பு என்றால், அப்படி என்றால் ஆண் ஒழுங்காக இருந்தால் பெண்ணுக்கு சிறப்பு இல்லையா என்று கேட்டால், சிறப்புத்தான். பின் ஏன் அதை வள்ளுவர் சொல்லவில்லை. பெண் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்று கேட்டால், ஆணுக்கு பதினொரு கடமைகள் சொல்லி இருக்கிறார். அவற்றை ஊன்றிப் படித்தால், அவர் ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று புரியும். 


உடனே, அந்த வேலையெல்லாம் ஏன் பெண்கள் செய்யக் கூடாது என்று ஆரம்பிக்கக் கூடாது. 


சிரார்த்தம் ஆண்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஏன் பெண்கள் செய்யக் கூடாது? 


துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் உணவு, உடை, மருந்து இவற்றை தந்து உதவ வேண்டும் என்று ஆணுக்குச் சொல்லி இருக்கிறது. அதை ஏன் பெண்கள் செய்யக் கூடாது? செய்யலாம். ஒரு பெண் தினம் நாலு ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து போட்டு அனுப்பலாம். அந்தப் பெண்ணை உலகம் என்ன சொல்லும்? 


சரி, ஒரு ஆண் மட்டும் நாலு பெண்களை அழைத்து வந்து விருந்து போடலாமா என்றால், வள்ளுவர் அதற்கும் சம்மதம் சொல்லவில்லை. அந்த உபசரிப்பை ஆண் தனித்து செய்ய முடியாது. பெண்ணின் துணை வேண்டும் என்று வைத்து இருக்கிறார். 


அதனால், வள்ளுவரின் ஒவ்வொரு குறளும், அந்த குறளின் அர்த்தம் மட்டும் அல்ல, அது வைத்திருக்கும் இடமும் மிக முக்கியமானது. 


ஏன் முதலில் இன்பத்துப் பாலை வைக்கக் கூடாது?  துறவு கடைசியில் வருவது தானே. அதை கடைசியில் வைத்து முதலில் இன்பத்துப் பாலை வைத்து இருக்க வேண்டியது தானே. 


சரி, அது கூட வேண்டாம், முதலில் பொருள் பாலையாவது வைத்து இருக்கலாமே? பொருள் சேர்த்து, இல்லறத்தில் இன்பம் அனுபவித்து பின் தானே துறவு, வீடு பேறு எல்லாம். 


பின் ஏன் நீத்தார் பெருமையை முன்னால் சொல்லி பின் இன்பத்துப் பாலை வைக்கிறார்? வள்ளுவருக்கோ தெரியாதோ? நமக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட அவருக்குத் தெரியவில்லை போலும் என்று நினைக்கக் கூடாது. 


திருக்குறள் வைப்பு முறையே மிக மிக நுட்பமான விஷயம்.


திருக்குறள் படித்து நம்மை மேலேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது நம் நிலைக்கு அந்த நூலை கீழே இரக்கக் கூடாது. 


இனி அடுத்த குறளுக்குள் போவோம்.



Sunday, August 29, 2021

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான்

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான் 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் என்ற வைணவ இலக்கிய வல்லுநர் அருளிச் செய்த நூல் திருவரங்கக் கலம்பகம். 


அதில் இருந்து ஒரு பாடல்.


ஒரு அரசன், தன்னுடைய மகனுக்கு மறவர் குடியில் பிறந்த ஒரு பெண்ணை மணம் பேசி முடிக்க ஓலை அனுப்புகிறான். அந்தப் பெண்ணுக்கோ திருவரங்கத்து பெருமாள் மேல் தீராக் காதல். அந்தப் பெண்ணின் தகப்பன், ஓலை கொண்டு வந்தவனைப் பார்த்துக் கேட்கிறான் 


"அரசனின் திருமுகத்தை (ஓலையை. ஓலைக்கு இன்னொரு பேர் திருமுகம்) கொண்டு வந்த தூதனே, எங்களை யார் என்று நினைத்தாய்? பற்று அனைத்தையும் விட்டவர்கள் சேரும் திருவரங்கனின் தோழர் (குகன்) பரம்பரையில் வந்தவர்கள். 


சரி திருமுகம் கொண்டு வந்ததுதான் வந்தாய், மூக்கு, செவி, கண் எல்லாம் எங்கே? 


இளவரசனுக்கு (இள + அரசு) பெண் வேண்டும் என்றால் அரசுக்கு ஏற்ற ஏதாவது ஒரு ஆல மரத்தை கட்டி வைக்க வேண்டியது தானே"


என்று ஏளனம் செய்து திருப்பி அனுப்புவதாக அமைந்த கவிதை. 


பாடல்  


கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!

குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!

அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்

அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!

மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த

வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்

பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்

பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


கொற்றவன் தன் = அரசனுடைய 


திருமுகத்தைக் = ஓலையை 


கொணர்ந்த தூதா! = கொண்டு வந்த தூதா 


குறை உடலுக்கோ = குறை உள்ள உடலுக்கோ (முகம் மட்டும் தானே இருக்கிறது) 


மறவர் = மறவர் குடியில் பிறந்த 


கொம்பைக் கேட்டாய்! = பெண்ணைக் கேட்டாய் 


அற்றவர்சேர் = பற்று அற்றவர்கள் சேரும் 


 திருஅரங்கப் பெருமாள் = திரு அரங்கப் பெருமாளின் 


 தோழன் = தோழன் (குகன்) 


அவதரித்த = பிறந்த 


திருக்குலம் = குலம் 


என்றறியாய் போலும்! = என்று நீ அறியவில்லை போலும் 


மற்றதுதான் திருமுகமே ஆனால் = அது திருமுகம் என்றே வைத்துக் கொண்டாலும் 


அந்த = அதன் 


வாய், செவி, கண், மூக்கு எங்கே?  = வாய், செவி, கண், மூக்கு எங்கே 


மன்னர்மன்னன் = மாமன்னர் 


பெற்ற இளவரசு = பெற்ற பிள்ளையாகிய இளவரசன்


ஆனால் = என்றால் 


ஆவின் கொம்பைப் = ஆலமரத்தின் கொம்பை  அல்லவா 


பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே! = பிறந்த குலத்துக்கு ஏற்ப பேசி முடிக்க வேண்டியது தானே 


என்பது கவிதை. 


(உலகிலேயே மிகக் கடினமான காரியம் எது என்றால் கேட்டால் இது போன்ற மிக எளிமையான பாடலுக்கு உரை எழுதுவதுதான் போலும்....:))


எங்கோ ஒரு குகன், இராமன் மேல் அன்பு வைத்ததால், அவன் பின் வந்த எல்லோரும் இராமன் மேல் அன்பு பாராட்டுகிறார்கள். 


நல்லது என்றால் பின்பற்ற வேண்டியது தானே. 


பழைமை எல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கும் ஒரு நிலை வந்து விட்டது. 


இது போன்ற இலக்கியங்கள் நாம் எப்படி வாழ்ந்தோம், நம் கலாசாரம் எப்படி இருந்தது என்று நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 

Saturday, August 28, 2021

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்


நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும் இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது. 


தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வருந்துகிறாள்.


எப்படியோ, இரவு போய் விட்டது. பகல் வந்து விட்டது. எல்லோரும் விழித்து விடுவார்கள். வேலை தொடங்கி விடும். தலைவனின் பிரிவை கொஞ்சம் மறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த இரவும் நிலவும் மீண்டும் வேகமாக் வந்து விட்டது. 


இப்ப தான் விடிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பியும் நிலவு வந்து அவளை வருத்தத் தொடங்கி விட்டது. 


நிலவு வேகமாக வந்ததற்கு ஒரு உதாரணம் கூறுகிறாள் தலைவி. 


ஒரு ஊரில் பெண்களே இல்லை என்றால் அந்த ஊர் எப்படி இருக்கும்? 


அந்த ஊரில் அன்பு இருக்காது. கருணை இருக்காது. அரவணைப்பு இருக்காது. ஈரம் இருக்காது. அருள் இருக்காது. 


அம்மா இல்லை, அக்காள் தங்கை இல்லை, மகள் இல்லை, காதலி இல்லை, மனைவி இல்லை...அது என்ன ஊர்? 


அங்குள்ள மக்கள் ஈவு இரக்கம் அற்று கொடியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


அப்படிப் பட்ட கொடியவர்களைப் போல நீ வேகம் வேகமாக வந்து என்னைத் துன்பப் படுத்துகிறாய் என்கிறாள். 



பாடல் 


 மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

 தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_28.html


(Please click the above link to continue reading)


மண்ணெலாம் = இந்த மண் உலகம் எல்லாம் 


உய்ய = பிழைக்க 


மழைபோல் = மழையைப் போல 


வழங்குகரத் = வழங்கும் கைகளைக் கொண்ட 


தண்ணுலாமாலைத் = குளிர்ச்சி நிலவும் மாலையை அணிந்த 


தமிழ் நந்தி நன்னாட்டில் = நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ் நாட்டில் 


பெண்ணிலா = பெண்களே இல்லாத 


ஊரில் = ஊரில் 


பிறந்தாரைப் போலவரும் = பிறந்தாரைப் போல வரும் 


வெண்ணிலாவே = வெண்ணிலாவே 


இந்த வேகம் உனக்காகாதே. = இத்தனை வேகம் உனக்கு ஆகாதே 


என்ன ஒரு கவிதை!


சமயம் இருப்பின் மூல நூலை தேடித் பிடித்து படியுங்கள். அத்தனையும் தேன்.


Friday, August 27, 2021

திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை

 திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை 


ஒருவனிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. 


பெரிய வீடு, வீட்டில் உள்ளேயே நீச்சல் குளம், நாலைந்து கார், வீட்டைச் சுற்றி தோட்டம், பெரிய பதவி, ஊருக்குள் பெரிய மனிதன் என்ற பேர், படிப்பறிவு எல்லாம் இருக்கிறது. 


ஆனால், அவன் மனைவி மட்டும் கொஞ்சம் சரி இல்லை. 


பொழுது விடிந்தால் போதும் சண்டை ஆரம்பித்து விடும், வேலைகாரர்கள், அக்கம் பக்கம் என்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஆடம்பரச் செலவு. வீட்டுக்கு யாராவது வந்தால் ஏண்டா வந்தோம் என்று வருத்தித்தான் திரும்பிப் போவார்கள். மரியாதை கிடையாது. அன்பு கிடையாது. 


அப்படி ஒரு மனைவி இருந்தால், அவன் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா ?


"அதோ போறாரே, அவர் மனைவி...ஒரு பெரிய இராட்சஷி..." என்று அவர் காது பட பேசினால், அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?


மாறாக, இன்னொருவன் இருக்கிறான். பெரிய படிப்பு, செல்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மனைவி பத்தரை மாத்துத் தங்கம். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு உபசரிப்பு, யார்க்கு ஒரு துன்பம் என்றாலும் முதலில் போய் நிற்பாள், கணவன் மேல் அளவற்ற அன்பு,  எல்லா உறவையும் அணைத்துக் கொண்டு செல்லும் பாங்கு, யார் என்ன சொன்னாலும் புன்னகையோடு பேசும் பாங்கு,  சிக்கனமான செலவு...


அவன் ஊருக்குள் போகும் போது என்ன சொல்வார்கள் ?


"அதோ போறாரே...அவர் படிப்பு, பணம் காசு இல்லைனாலும், குடுத்து வச்ச மனுஷன்...இலட்சுமி மாதிரி ஒரு பொண்டாட்டி...வேற என்ன வேணும் " என்று சொன்னால், நெஞ்சு நிமிர்த்தி ஒரு பெருமிதத்துடன் நடக்க முடியும் அல்லவா அவனால்...


ஒரு மனிதன் ஏறு போல் கம்பீரமாக நடப்பதற்கும், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவதற்கும் அவன் கையில் ஒன்றும் இல்லை. அவன் மனைவி கையில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறது அடுத்த குறள். 


பாடல் 


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_27.html


(Please click the above link to continue reading)


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு = புகழை விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு 


இல்லை = கிடைக்காது 


இகழ்வார்முன் = அவனை இகழ்பவர் முன்னால் 


ஏறுபோல் = ஏறு போல 


பீடு நடை = பெருமிதமான நடை 



ஒரு மனிதனின் பெருமையும், சிறுமையும் அவன் மனைவியின் கையில் இருக்கிறது. 


அப்படி என்றால் என்ன அர்த்தம்? 


மனைவியிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இவர் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. 


அவள் கையில்தான் எல்லாம் இருக்கிறது என்றால், அவளை போற்றி பாதுகாக்க வேண்டும், அவளை அன்போடு நடத்த வேண்டும், அவளுக்குத் துணை செய்ய வேண்டும். அவளை மதிக்க வேண்டும். 


இது இல்லறம். 


இதில் யார் பெரியவர், யார் சிறியவர்  என்ற போட்டி இல்லை. 


யாருக்கு பலம் அதிகம் என்று நிர்ணயம் செய்யும் மல்யுத்த களம் அல்ல. 


இருவரும் சேர்ந்து நடத்தும் அறம் இது. 



Wednesday, August 25, 2021

கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ

 கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ 


அசோகவனத்தில் இருக்கும் சீதை இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"இராமா !, நீ காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்ன போது நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். நீ வர வேண்டாம், இங்கே நகரத்திலேயே இரு என்று சொன்னாய். நான்தான் கேட்கவில்லை. அதனால், இப்போது இந்த நகரத்தில் (இலங்கையில்) இருக்கட்டும் என்று என்னை விட்டுவிட்டாயா?  உன் அருளின் அளவு இவ்வளவுதானா? என் உயிரை வாங்குகிறாய் நீ" 


என்று புலம்புகிறாள். 


பாடல் 


தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;

வருவென சில நாளினில்; மா நகர்வாய்

இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ?

ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_25.html


(Please click the above link to continue reading)


தரு ஒன்றிய = மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அடர்ந்த 


கான் = கானகத்தை 


அடைவாய், = நீ அடைவாய் 


"தவிர் நீ; = நீ (சீதையாகிய நீ) அதை தவிர்ப்பாய் 


வருவென = நான் (இராமன்) வருவேன் 


சில நாளினில் = கொஞ்ச நாளில் 


மா நகர்வாய் = பெரிய நகரத்தில் 


இரு " = இரு 


என்றனை = என்னைச் (சீதையை) சொன்னாய் 


இன் அருள்தான் இதுவோ ? = நீ காட்டும் அருள் இது தானா? 


ஒருவென் தனி = தனி ஆளாக இருக்கும் 


ஆவியை உண்ணுதியோ ? = உயிரை எடுக்கிறாய் 


நான் காட்டில் கிடந்து துன்பப் படக் கூடாது என்று என்னை இந்த நாட்டில் தனியாக இருக்க வைத்து விட்டாயா? இவ்வளவுதானா  உன் அருள். உன் பிரிவு என் உயிரை உருக்குகிறது என்கிறாள். 


உயிரை, உணர்வைத் தொடும் கவிதை. 

Tuesday, August 24, 2021

ஏலாதி - நூல் வேண்டா விடும்

ஏலாதி - நூல் வேண்டா விடும் 


தமிழில் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன? அவற்றை எல்லாம் படித்து, தெளிவாக அறிந்து, அதன் படி நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


திருக்குறள் ஒன்று படிக்கவே ஒரு வாழ்நாள் போதாது போல் இருக்கிறது. இதில் மற்றவற்றை எப்போது படிப்பது. 


தமிழ் மட்டுமா? சமஸ்க்ரிதம், ஆங்கிலம் என்று எத்தனை மொழிகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை நல்ல புத்தகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் என்று படித்து தீர்வது?


பக்தி நூல்களைப் படித்தால் பாதிக்கு மேல் இறைவன் பற்றிய வர்ணனையாக இருக்கிறது. நீ அதைச் செய்தாய், நீ இதைச் செய்தாய், நீ அப்படி இருப்பாய், இப்படி இருப்பாய். அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். 


சரி, சங்க இலக்கியம் படிக்கலாம் என்றால், அந்தக் கால வாழ்க்கை வரலாறு தெரியும். தெரிந்து என்ன செய்ய? காலம் எவ்வளவோ மாறி விட்டது. கைப் பேசியும், கணணியும் உள்ள காலத்தில் வளையல் நெகிழ்ந்த கதைகள் பெரிதாக ஒரு தாக்கத்தை உண்டு பண்ணப் போவதில்லை. 


சரி, அதுவும் வேண்டாம், அற நூல்களைப் படிக்கலாம் என்றால், அவை நடை முறைக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. படிக்க நன்றாக இருக்கும். ஆனால் கடை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. 


பின் எதைத்தான் படிப்பது?


எப்படி நம்மை முன்னேற்றுவது?


எதை ஒன்றை அறிந்து கொண்டால், மற்றவை எல்லாம் தேவை இல்லையோ, அதை மட்டும் படித்தால் போதும் அல்லவா?


ஏலாதி அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


இதை மட்டும் தெரிந்து அதன் படி நடந்தால் வேறு எந்த நூலும் படிக்க வேண்டாம் என்கிறது. 


பாடல் 


இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்

கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)


இடர்தீர்த்தல் = பிறர்க்கு வந்த துன்பங்களைப் போக்குதல் 


எள்ளாமை = பிறரை பரிகாசம் செய்யாமல் இருத்தல். மற்றவர்களை கேலி பேசக் கூடாது 


கீழினஞ்சே ராமை = கயவர்களோடு சேராமல் இருத்தல் 


படர்தீர்த்தல் = பிறர் பசியைத் தீர்த்தல் 


யார்க்கும் = யாராய் இருந்தாலும் (இதை முந்தைய பசி தீர்த்தலோடு சேர்த்து, 

பசி என்று யார் வந்தாலும் அந்தப் பசியைப் போக்குதல்) 


பழிப்பின்  நடை  = பழி வரக் கூடிய செயல்களை 


தீர்த்தல் = செய்யாமல் இருத்தல் 


கண்டவர் = எதிரில் நம்மைக் கண்டவர்கள் 


காமுறுஞ்சொற் = விரும்பும் சொல்லைச் கூறுதல், 


காணிற் = ஒருவன் செய்வானானால் 


கலவியின்கண் = உலகப் பற்றில் இருந்து (இங்கே கலவி என்பது உலகத்தோடு கலந்து இருப்பது) 


விண்டவர் = விடுபட்டவர்கள் , துறவிகள், முனிவர்கள், சான்றோர் 


நூல் வேண்டா விடும். = அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலும் வேண்டாம் (படிக்க வேண்டாம்).



இது கடினமே இல்லை. 


துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பசித்தவர்களுக்கு உணவு தர வேண்டும். 


தீயவர்களோடு பழகக் கூடாது 


எல்லோரிடத்தும் இனிமையாக பேச வேண்டும். 


உலகம் பழிக்கும் செயலகளைச் செய்யக் கூடாது.


அவ்வளவுதான். 


இவற்றை ஒருவன் செய்தால், அவன் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டாம். 


அனைத்து நூல்களும் சொல்வது இதைத் தான். 


இதை செய்து பழகுவது கஷ்டமா? 


Monday, August 23, 2021

திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர்

 திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர் 



பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்


புத்தேளிர் வாழும் உலகு


இது ஒரு குழப்பமான குறள். இந்தக் குறளுக்கு பல பேர் பல விதங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். எதுவுமே முழுவதும் சரி என்று படவில்லை. ஏதோ குறை இருப்பது போலவே படுகிறது. 


ஏன் என்று பார்ப்போம்.


பாடல் 


பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)


பெற்றார்ப்  = அடையப்  பெற்றவர்கள் 

பெறின் = பெற்றால் 

பெறுவர் = அடைவர் 

பெண்டிர் = பெண்கள் 

பெருஞ்சிறப்புப் = பெரிய சிறப்பு 

புத்தேளிர் = தேவர்கள் 

வாழும் உலகு = வாழும் உலகு 


பெற்றார் என்றால் யார் பெற்றார், எதைப் பெற்றார் என்ற கேள்வி வரும். 


பெறுவர் என்றால் யார் பெறுவார்கள்? 


அதிகாரம் "வாழ்க்கைத் துணை நலம்". எனவே இது மனைவியைப் பற்றியது என்று கொள்ளலாம். 


மனைவியைப் கணவன்  பெற்றால் என்று கொண்டால், "பெறுவர் பெண்டிர்" என்று மீண்டும் வருகிறது.  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 

"பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்."


அதாவது,  தன்னைத் தொழுது எழும் மனைவியை ஒரு கணவன் பெற்றால், அவன் சொர்கத்திலும் பெரிய சிறப்பைப் பெறுவான் என்று பொருள் சொல்கிறார். 


இது ஒரு பெண்ணடிமைத் தனம் இல்லையா என்று கேள்வி கேட்கலாம். 


இதற்கு வேறு விதத்திலும் பொருள் சொல்கிறார்கள். 


ஒரு மனைவி, தன்னை மட்டுமே நேசிக்கும் கணவனைப் பெறுவாள் என்றால், அவள் சொர்கத்திலும் சிறந்த பேறு பெறுவாள் என்றும் பொருள் சொல்கிறார்கள். 


கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயற்கைக்கு முரண்பாடாகத் தெரிகிறது. 


இந்த ஒரு பெண் (ஆண்)  மேல் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும். வேறு யார் மேலும் அன்பு செலுத்தக் கூடாது என்று ஒருவரைக் கட்டுப் படுத்த முடியுமா? 


சட்டம் போடலாம். ஆனால், அதை அமல் படுத்துவது கடினம். 


"இது ஒரு சிறந்த உணவு. உடம்புக்கு நல்லது. எனவே, வாழ் நாள் பூராவும் இதை மட்டும் தான் மூன்றும் வேளையும் சாப்பிட வேண்டும்" என்று சொன்னால் நடக்குமா? 


சரி, அப்படியே ஒரு நெறிப் படுத்தினாலும், அதில் இன்பம் இருக்குமா? இங்கே இன்பம் இல்லை என்றால் பின் சொர்க்கத்தில் போய் என்ன இன்பம் வரப் போகிறது? 


மனைவி கற்புள்ளவளாக இருப்பது மாதிரி கணவனும் கற்புள்ளவனாக இருந்து விட்டால் இருவருக்கும் சொர்கத்திலும் சிறந்த பெருமை கிடைக்கும் என்று பொருள் கொள்ளலாம். அதில் எதிர் கருத்து ஒன்றும் இருக்காது. 


ஆனால், அதுதான் குறளின் கருத்தா என்று தெரியவில்லை. 


மேலும் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்கள் தேடிக் கண்டைவார்களாக.