Tuesday, September 14, 2021

திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம்

 திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம் 


நமக்கு நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின் தான் அதன் அருமை தெரிகிறது. 


அப்பா, அம்மா, கணவன், மனைவி, ஆரோக்கியம், இளமை,  ஞாபகம், என்று பல விடயங்கள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின், அடடா என்று ஏங்குகிறோம். 


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, எவ்வளவு பெரிய நீ, மானிட வடிவம் கொண்டு எனக்காக வந்தாய். குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போல, உன் அருமை தெரியாமல் உன்னை விட்டு விட்டேன். பொய்கள் நிறைந்த இந்த உலகில் என்னை உழல விட்டு விட்டு நீ போய் விட்டாய். உனக்கு இது சரிதானா" 


என்று உருகுகிறார். 


சின்ன பிள்ளையின் கையில் ஒரு விலை உயர்ந்த பொற்கிண்ணத்தைக் கொடுத்தால், அந்த பிள்ளைக்கு அதன் அருமை தெரியுமா? ஏதோ விளையாட்டுச் சாமான் என்று விளையாடிவிட்டு தூர போட்டுவிட்டுப் போய் விடும். 


பாடல் 


மையி லங்குநற் கண்ணி பங்கனே

வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்

கையி லங்குபொற் கிண்ண மென்றலால்

அரியை என்றுனைக் கருது கின்றிலேன்

மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்

மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்

பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ

போவ தோசொலாய் பொருத்த மாவதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_14.html


(Please click the above link to continue reading)



மையி லங்கு  = மை படர்ந்த 

நற் கண்ணி = அழகிய கண்களை கொண்ட உமா தேவியை 

பங்கனே = ஒரு பாகத்தில் கொண்டவனே 

வந்தெ னைப் = வந்து என்னை 

பணி கொண்ட = ஆட்கொள்ள வந்த 

பின் = பிறகு 

மழக் = மழலையின் (குழந்தையின்) 

கையி லங்கு = கையில் விளங்கும் 

பொற் கிண்ண மென்றலால் = பொன் கிண்ணம் போல 

அரியை = அருமையானவன், கிடைத்தற்கு அரியவன் 

என்றுனைக் = என்று உன்னை 

கருது கின்றிலேன் = நினைக்காமல் 

மெய்யி லங்கு = உடல் முழுவதும் 

வெண் ணீற்று மேனியாய் = திரு வெண்ணீறு பூசியவனே 

மெய்ம்மை அன்பர் = மெய்யான உன் அடியார்கள் 

உன் = உன்னுடைய 

மெய்ம்மை மேவினார் = உண்மையை அறிந்து, உன்னை அடைந்தார்கள் 

பொய்யி லங்கெனைப் = பொய்மை மிகுந்த இந்த உலகில் என்னை 

புகுத விட்டுநீ = செல்லும் படி விட்டு விட்டு 

போவ தோ = நீ போகலாமா ?

சொலாய் = நீயே சொல் 

பொருத்த மாவதே. = இது உனக்கு பொருந்திய செயலா? 


நான் தான் சிறு பிள்ளை போல உன்னை விட்டு விட்டேன் என்றால், நீயும் அப்படி இருக்கலாமா? என்று கேட்கிறார். 


கடவுளை நேரில் பார்த்து பேசுவது போல இருக்கும் பாடல்கள். 


இவ்வளவு இனிமையான பாடல், எவ்வளவு எளிமையாக இருக்கிறது. 


என்ன தாமதம்? உடனே திருவாசகத்தை முழுவதும் படித்து விடுங்கள். எவ்வளவு பெரிய பொக்கிஷம். 



Monday, September 13, 2021

கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு

 கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு 


அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை புலம்புகிறாள். அவளுடைய துயருக்கு எல்லை இல்லை. 



என் உயிர் இருக்கும் வரை இந்தத் துன்பம் இருக்கும் இருக்கும் போல் இருக்கிறது. என் உயிர் போகும் போதுதான் இந்தத் துயர் விலகி, "சீதை உயிரை விட்டாள்" என்ற புகழ் வரும் போல் இருக்கிறது என்று புலம்புகிறாள். 



பாடல் 


என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;

'ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்

பொன்றும்பொழுதே, புகழ் பூணும்' எனா,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_13.html



(Please click the above link to continue reading)



என்று என்று = எப்போது எப்போது என்று 


உயிர் விம்மி = உயிர் விம்மி 


இருந்து அழிவாள் = நினைந்து வருந்துவாள் 


மின் துன்னும் = மின்னலைப் போன்ற 


மருங்குல் = இடையை 


விளங்கு = கொண்ட 


இழையாள் = சீதை 


'ஒன்று என் உயிர் = என்னுடைய உயிர் 


உண்டு எனின் = உண்டு என்றால் 


உண்டு இடர் = துன்பம் உண்டு 


யான் = நான் 


பொன்றும்பொழுதே = இறக்கும் பொழுதே 


புகழ் பூணும் = புகழ் அடையும் 


எனா = என்று 


உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவளின் துயரம் அவளை வருத்துகிறது. 



Sunday, September 12, 2021

திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது

 திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது 


சில சமயம் பெரிய துன்பம் வந்து விடும். நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் மனதால் கூட நினைத்து இருக்க மாட்டோம். இருந்தும், நமக்கு ஒரு பெரிய துன்பம் வந்து சேர்ந்து விடும். 


இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? 


அறிவியல் பூர்வமாக சிந்தித்தால், "காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை. அது பாட்டுக்கு நிகழ்கிறது. ஒரு random event" என்று சொல்லி விடலாம். 


இலக்கியமும், சமயமும் அப்படிச் சொல்வதில்லை. உனக்கு ஒரு பெரிய துன்பம் வருகிறதா, அதற்குக் காரணம், நீ முன்பு செய்த தீ வினை காரணம் என்று சொல்கின்றன. 


சொல்வது மட்டும் அல்ல, அவற்றில் இருந்து எப்படி தப்புவது என்றும் சொல்கின்றன. 


இராமன் என்ன பாவம் செய்தான்? ஏன் கானகம் போய் படாத பாடு பட்டான்?


இராமனே சொல்கிறான் 


"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த, விதியின் பிழை" 


என்று. 


பட்டினத்தார் போன்ற பெரும் துறவியை திருட்டுப் பட்டம் கட்டி கழுவேற்று என்று தண்டனை கொடுத்து விட்டான் அரசன். 


அப்போது பாடுகிறார் 


"என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே

உன்செய லெயென்றுணரப் பெற்றேன் இந்தஊனெடுத்த

பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்குமுன்செய்த 

தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே"


பிறந்த பின் செய்த தீவினை என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை பிறப்பதற்கு முன் செய்த தீவினை இங்கு வந்து மூண்டதுவோ 


என்கிறார். 


அப்படி ஒருவன் முன் செய்த தீவினைகள், நல்ல புதல்வர்களை பெறுவதன் மூலம் தீரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_12.html


(Please click the above link to continue reading)



எழுபிறப்பும் = ஏழு பிறப்பும் 


தீயவை = தீயவை 


தீண்டா  = அணுகாது 


பழிபிறங்காப் = பழிக்கு ஆளாகாத


பண்புடை  = பண்புள்ள 


மக்கட் பெறின் = மக்களைப் பெற்றால் 


"எழு பிறப்பு" என்ற சொல்லுக்கு பல உரைகள் சொல்கிறார்கள். 


பொதுவாக உரை சொல்லும் போது, மூல நூல் ஆசிரியரின் மனக் கருத்தை அறிந்து அதன் போக்கில் சொல்ல வேண்டும். 


நம் கருத்தை நூலின் மேல் ஏற்றக் கூடாது. 


மறு பிறவிக் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் "எழு பிறப்பு" என்பதற்கு "எழுந்த பிறப்பு"  என்று உரை சொல்வது சரியா?


வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை, நல் வினை, தீ வினை, மறு பிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது. எனவே, குறள் உரையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் சரியாக இருக்கும். 


ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது என்று எப்படிச் சொல்லலாம்?  


நல்ல பிள்ளைகள், தங்கள் பெற்றோரை நினைத்து பல நல்ல காரியங்களை செய்வார்கள். அவர்கள் பெயரில் தானம் தர்மம் செய்வார்கள். அறக் கட்டளைகள் நிறுவுவார்கள். நாலு ஏழை பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள். இப்படி, அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியங்கள், அந்தப் பெற்றோர் இப்போது எங்கு எப்படி பிறந்து இருந்தாலும் அங்கு போய் நன்மை செய்யும் அல்லது தீமையில் இருந்து காக்கும். 


எப்போதாவது, மயிரிழையில் தப்பித்தேன், அந்த விபத்துக்குள்ளான வண்டியில் நான் போயிருக்க வேண்டியது, என்று சில சமயம் அது எப்படி நிகழ்ந்தது என்று வியப்போம் அல்லவா? அப்படி நம்மை தீயவற்றில் இருந்து காப்பது, நம் முற்பிறவி பிள்ளைகள் நம்மை நினைத்து செய்யும் நல்ல காரியத்தின் பலன் என்கிறது வள்ளுவம்.



அப்படி எங்கே குறளில் இருக்கிறது? 


"பண்புடை மக்கட் பெறின்"


இங்கே பண்பு என்பது அவர்கள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியகளை குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பண்பு என்பது அந்த செயலினால் வரும் நன்மையை குறிக்கும். 


"பண்பு என்ற காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது"


பண்பு என்பது காரணம். அந்தப் பண்பினால் விளையும் காரியம் நன்மை. இங்கே காரணத்தை , காரியத்தின் மேல் ஏற்றிக் கூறினார் என்கிறார். 


வாழ்வில் முன்னேற வேண்டுமா, நல்லா படி 


என்று கூறினால்,  படித்தால் எப்படி முன்னேற முடியும்?


படித்தால் நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நிறைய பொருள் சம்பாதிக்கலாம், வீடு வாசல் என்று வாங்கலாம், படிப்படியாக முன்னேற்றம் வருகிறது அல்லவா? 


படித்தல் காரணம். 


முன்னேற்றம் காரியம் 


சரி, இந்த பிள்ளைகள் எப்படி "பழி பிறங்கா நன் மக்களாக" இருப்பார்கள்?


அது ரொம்பக் கடினம் என்பதால் "பெறின்" என்று கூறினார். 


அப்படி அமைந்தால், உனக்கு ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது.


கடின முயற்சி செய்தால், இமய மலை மேல் ஏறி விடலாம் என்று கூறினால், அவ்வளவு முயற்சி செய்வது கடினம் என்று புரிகிறது அல்லவா?  


பிள்ளைகள் அப்படி இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும். 


எப்படி, பெற்றோர், அவர்களது முன்னோர்களை நினைந்து நல்ல காரியம் செய்தால், பிள்ளைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். 


உங்களுக்கு, பின் வரும் பிறவியில் தீயவை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை நல்ல விதமாக வளருங்கள் என்கிறார் வள்ளுவர். 


நீங்கள் மறு பிறவியை நம்புகிறீர்களோ இல்லையோ, பாவ புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, 


உங்கள் பெற்றோரை, முன்னோரை நினைத்து நாலு நல்ல காரியம் செய்வது அவர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்று நினைத்துக் கூட செய்யலாமே. 


என்ன குறைந்து விடப் போகிறது ?



Saturday, September 11, 2021

நாலடியார் - அப்புறம் செய்யலாம்

நாலடியார் - அப்புறம் செய்யலாம் 


ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று நினைக்கும் போது அதற்கு முன் செய்ய வேண்டிய பல காரியங்கள் மனதில் தோன்றும். அந்த மற்ற காரியங்களை எல்லாம் செய்து விட்டு பின் நல்ல காரியத்தை தொடங்கலாம் என்று நினைப்போம். 


காசிக்குப் போகணும், அம்பது திவ்ய தேசமாவது சேவித்து வர வேண்டும், ஒரு தர்ம நிலையத்துக்கு நன்கொடை கொடுக்க வேண்டும், துன்பத்தில் இருக்கும் ஒரு உறவினருக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல அறக் காரியங்கள் தோன்றும்...


ஆனால்,


அதற்கு முன்னால்....


பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா அப்புறம் எல்லாம் நிதானமா செய்யலாம்...


பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்...அது மட்டும் அமைஞ்சுருச்சுனா அப்புறம், பத்தாயிரம் என்ன பெருசு, ஒரு இலட்சம் கூட நன்கொடை கொடுக்கலாம் 


என்று நினைப்போம். 


இல்லத்துக்கு வேண்டிய கடமைகளை எல்லாம் முடித்து விட்டு நல்ல காரியங்களை செய்யலாம் என்று நினைப்பது, அலை நின்ற பின் கடலில் குளிப்பது மாதிரி என்கிறது நாலடியார். 


அலை எப்ப ஓய தலை எப்ப முழுக....


பாடல் 


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_11.html


(Please click the above link to continue reading)


பெருங் = பெரிய 


கட லாடிய = கடலில் நீராடச் 


சென்றார் = சென்றவர்கள் 


ஒருங்குடன் = ஒட்டு மொத்தமாக 


ஓசை அவிந்தபின் = அலை ஓசை எல்லாம் நின்ற பின் 


ஆடுது மென்றற்றால் = நீராடுவோம் என்று நினைத்தல் 


இற்செய்  = இல்லத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை 


குறைவினை நீக்கி  = குறை ஒன்றும் இல்லாமல் நீக்கிய பின் 


அறவினை = அறம் சார்ந்த வினைகளை 


மற்றறிவாம்  = மற்றபடி அறிவோம், (செய்வோம்) 


என்றிருப்பார் மாண்பு. = என்று இருப்பவர்களின் பண்பு 


அலை ஓயப் போவதும் இல்லை. தலை முழுகப் போவதும் இல்லை. 


இல்லறக் கடமைகள் முடியப் போவதும் இல்லை. நல்ல வினைகளை செய்யப் போவதும் இல்லை. 


அற வினைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால், செய்து விட வேண்டும். அதுக்கு அப்புறம் இதைச் செய்யலாம் என்றால் செய்யவே மாட்டோம். 




Thursday, September 9, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை இந்த ப்ளாகின் கடைசியில் உள்ள இணைய தளத்தில் காணலாம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 




(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள்.



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை "அறிவார்ந்த"
மக்கட்பேறு அல்ல பிற


என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.


"அறிவறிந்த மக்கட்பேறு" என்று கூறுகிறார்.


அது என்ன அறிவறிந்த?


பிறக்கும் போதே எல்லாவற்றையும் யாரும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. அறிவான பிள்ளைகளை பெறுவது என்றால் என்ன அர்த்தம்? அது சரி வராது அல்லவா? பிறந்த உடனேயே தெரியுமா ஒரு பிள்ளை அறிவுள்ளதா அல்லது அறிவு இல்லாதாத என்று. பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொன்னார்?


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரியாது. 


"அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை"


அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்கள் என்கிறார்.


பெரும்பாலும் என்ன நடக்கிறது?  எது எல்லாம் அறியத் தேவை இல்லையோ, அவற்றை அறிந்து கொண்டு இருக்கிறோம்.  


யோசித்துப் பாருங்கள், கடந்த ஒரு ஆண்டில் நீங்கள் புதிதாக அறிந்தவற்றில் எத்தனை அறிய வேண்டியவை, எத்தனை வெறும் குப்பைகள் என்று? 


எது எதையோ படித்துக் கொண்டு இருக்கிறோம். 


அவை எல்லாம் அறிவு என்று மண்டைக்குள் திணித்துக் கொண்டு இருக்கிறோம். 

வள்ளுவர் சொல்கிறார் - இரண்டு விடயங்கள்.


ஒன்று எதை அறிய வேண்டும் என்ற அறிவு. 


இரண்டாவது, எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் அறிவு.


இந்த இரண்டும் வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளை பெறுவதை விட பெரிய சிறப்பான ஒன்று இல்லை என்று கூறுகிறார். 


பரிமேலழகர் ஒரு படி மேலே [போகிறார். 


" 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது"


அறிவறிந்த என்று கூறியதால் அது ஆண்களையே குறிக்கிறது. பெண்களை அல்ல என்றும் எனவே மக்கட்பேறு என்பது புதல்வர்களைப் பெறுவது என்றும் கூறுகிறார். 


பெண் பிள்ளைகள் தேவை இல்லையா? வள்ளுவரும், பரிமேலழகரும் இப்படி ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்களே என்று கொடி பிடிக்கலாம்.


சிந்திப்போம். 



மனிதர்களுக்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. 


ஒன்று அறிவு, இன்னொன்று உணர்ச்சி. 


இன்றைய அறிவியல் Intelligent quotient (IQ) and Emotional Quotient (EQ) என்று குறிப்பிடுகிறது.  மேலும், வாழ்வில் வெற்றி பெற EQ தான் மிக முக்கியம் என்கிறது. 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். (அது பற்றி மேலும் அளவலாவ ஆர்வம் இருந்தால், பின் தனியே சிந்திப்போம்).


பொதுவாக, ஆண்கள் எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் இயல்பு உடையவர்கள். பெண்கள் எதையும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள். இதில் சில  விதி விலக்குகள் இருக்கலாம். 


அப்படி அறிவும், உணர்வும் தனித்து இருப்பதால்தான் இல்லறம் இனிமையாக இருக்கிறது. 


இருவரும் தர்க்க ரீதியாக பேசுவோம் என்றாலோ, அல்லது இருவரும் உணர்ச்சி வசப் பட்டு பேசுவோம் என்றாலோ சிக்கல்தான். 


அப்படி என்றால் ஆண்களுக்கு உணர்சிகள் கிடையாதா, பெண்களுக்கு அறிவு கிடையாதா என்று கேட்க்கக் கூடாது. 


பெண்களுக்கு உணர்சிகள் அதிகமாக இருக்கும். சட்டென்று அழ முடியும், உடனுக்குடன்  மன நிலை மாறும், உள்ளுணர்வு அதிகமாக இருக்கும், காரணம் சொல்லத் தெரியாது, ஆனால் முடிவு மட்டும் வரும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், விளக்கத் தெரியாது. 


ஆண்கள் அப்படி அல்ல. அறிவின் தாக்கம் அதிகம் இருக்கும். உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு, நீண்ட தொலை நோக்கோடு சிந்திக்க  முடியும் அவர்களால். 


இரண்டும் வேண்டும் வாழ்வில். ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இல்லை. 


"அறிவறிந்த" என்றதனால், அது ஆண் பிள்ளைகளையே குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பெண் பிள்ளைகளை அல்ல என்பது அவர் முடிவு. 


ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.


சரி இல்லை என்று தோன்றினால், பரிமேலழகர் உரையை தள்ளி விட்டு, புது உரை எழுதலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டால், பின் அதுவே நிலைக்கும்.  முயற்சி செய்வதில் தவறில்லை. 






இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு 


நம்மை அறியாமலேயே நாம் நமக்கு செய்து கொள்ளும் நன்மையும் தீமையும் நம்மை சுற்றி உள்ளவர்களை  தேர்ந்து எடுப்பதுதான். 


நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி உள்ளவர்களின் குணம், அறிவு, பழக்க வழக்கங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும்.. 


படிக்கிற கூட்டத்தோடு இருந்தால், என்ன படிக்கலாம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, இதில் எப்படி சொல்லி இருக்கிறது என்றே எண்ணம் போகும்.


இசை அறிந்தவர்கள் கூட்டத்தில் இருந்தால் பாடல்களின் நயம், இசையின் நுணுக்கம் எல்லாம் தெரிய வரும்.


பக்தி வர வேண்டும் என்றால்?


எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டும்?  அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்தால் பக்தி, இறை உணர்வு, ஆன்ம முன்னேற்றம் எல்லாம் வரும். 


குலசேகராழ்வார் சொல்கிறார் 


"பண்புகளில் சிறந்த திருமாலை, நான்முகன் தன்னுடைய நான்கு நாவினாலும், நான்கு முகத்தில் உள்ள எட்டு கண்களோடும் தொழுது, போற்றி நிற்கின்றான். திருமாலின் நாபிக் கமலம் தோன்ற, திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை, மலர்கள் இட்டு பக்தி செய்யும் அடிவர்களோடு என்று சேர்ந்து இருப்பேன்"


என்று. 


பாடல் 


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு


எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்


அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/2.html


(Please click the above link to continue reading)


எம்மாண்பின் அயன் = மாண்புமிகு பிரமன் 


நான்கு நாவி னாலும் = நான்கு நாவினாலும் 


எடுத்தேத்தி = போற்றிப் பாடி 


ஈரிரண்டு  = இரண்டு இரண்டு , நான்கு 


முகமுங் கொண்டு = முகத்தில் 


எம்மாடு மெழிற்  = அனைத்துப் பக்கங்களிலும் 


கண்க ளெட்டி னோடும் = க் கண்கள் எட்டினோடும் 


தொழுதேத்தி = தொழுது போற்றி 


யினிதிறைஞ்ச = இனிமையாக வேண்ட 


நின்ற = நின்ற 


செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற 


அம்மான்றன் = அம்மான் தன் 


மலர்க்கமலக் = தாமரை மலர் போன்ற 


கொப்பூழ் தோன்ற = நாபிக் கமலம் தோன்ற 


அணியரங்கத் தரவணையில் = பாம்பை (ஆதி சேஷன் ) படுக்கையாகக் கொண்டு 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டுள்ள 


அம்மான்றன் =அம்மான் தன்


அடியிணைக்கீழ் = திருவடிகழுக்கு கீழே 


அலர்கள்  = மலர்கள் 


இட்டு = தூவி 


அங்கு = அங்கே 


அடியவரோ டென்று = அடியவரோடு என்று 


கொலோ = அசை நிலை 


அணுகும் நாளே = சேரும் நாளே 


நம்ம whatsapp contact லிஸ்டில் பார்த்தால் தெரியும் எத்தனை பேர் உண்மையான ஆன்மீக தாகம் கொண்டவர்கள் என்று. 


நாம் எத்தனை whatsapp குழுவில் உறுப்பினராக இருக்கிறோம் என்று பார்த்தால் தெரியும், நாம் யாருடைய தொடர்பில் இருக்கிறோம் என்று. 


யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் குணம் தானே நமக்கும் வரும். 


தெரிந்தெடுத்து பழகுங்கள். நல்லதே நடக்கட்டும். 


Wednesday, September 8, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1 



அது என்ன புதல்வரைப் பெறுதல் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்? அப்படி என்றால் புதல்விகளை பெறுதல் இல்லறத்தில் வராதா? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்லவா? வள்ளுவர் காலத்தில் அப்படி ஒரு சமுதாயம் இருந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்று பெண்ணுரிமை, சம உரிமை, என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். இப்ப வந்து, இந்த மாதிரி ஆணாதிக்க சிந்தனை உள்ள நூல்களை பற்றிச் சொல்லி கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று சிலர் கொடி பிடிக்கலாம். 


இந்தத் தலைப்பு பல உரை ஆசிரியர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எப்படியாவது வள்ளுவரை இந்த குற்றச் சாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள். 


புதல்வர் என்பது தவறு "மக்கட் பேறு" என்று தான் முதல் குறள் ஆரம்பிக்கிறது. அதே போல் முந்தைய அதிகாரத்தில் "நன் கலம் நன் மக்கட் பேறு " என்று தான் முடிந்தது. அங்கு, நன் புதல்வர் பேறு என்று முடியவில்லை. 


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



எனவே, இந்த அதிகாரத்தின் தலைப்பை "மக்களைப் பெறுதல்" என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் படித்த அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள். 


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 


வள்ளுவரை நாம் காப்பாற்ற வேண்டியது இல்லை. நம்மால் முடியவும் முடியாது. 



ஒரு மரம் இருக்கிறது என்றால், அதன் வேர், கிளை, இலை, காய், கனி என்று எல்லாம் இருக்கும். "நாங்கள் மட்டும் ஏன் நிலத்துக்கு அடியிலேயே கிடந்து துன்பப் பட வேண்டும். நாங்களும் இந்த பூ மாதிரி மேலே வருவோம்" என்று வேர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்தால், மரம் பட்டுப் போகும். 


ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் மண்ணுள் புதைந்து தான் கிடக்கும். அது யார் கண்ணுக்கும் தெரியாது.  " முடியாது,  நாங்களும் மேலே வருவோம்" என்று அஸ்திவாரங்கள் தொடங்கினால் ?


ஒரு சமுதாயத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. 


நான் அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்களை அந்த வேலையை செய்யச் சொல் முடியாது. உன்னால் முடியாது என்றால், சரி. வேறு வேலையைப் பார். அல்லது வேறு வேலை ஒன்றும் தெரியாது என்றால் என்ன செய்வது என்று அவரவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். 



இல்லறம் நடத்தும் பொறுப்பை ஆணிடம் கொடுத்தது நம் சமுதாயம். அவனுக்கு துணை செய்ய மனைவி என்று அமைத்தது. 


அந்த முறை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் அதை மாற்றி "இல்லறப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லலாம். அது வரை சரி.  அப்படி ஒரு சமுதாயத்தை அவர்கள் படைத்துக் காட்டிவிட்டு பின் வள்ளுவர் தவறு என்று சொல்லலாம். அது வரை, வள்ளுவர் காட்டியதுதான் வழி. 



மேலும், பெண் என்பவள் திருமணம் ஆன பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறாள். ஒரு ஆணின் இல்லறக் கடமைகளில் ஒன்று "தென் புலத்தார்" பேணுதல். அதாவது, முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்வது. 


ஏன் பெண்கள் செய்யக் கூடாதா ? ஆண்கள் தான் சிரார்த்தம் செய்ய வேண்டுமா? நாங்களும் மொட்டை போட்டு,  ஈமக் கிரியைகள் செய்வோம், வருடா வருடம் சிரார்த்தம் செய்வோம் என்று ஒரு கூட்டம் கிளம்பலாம். 


சொல்வது எளிது. செய்வது கடினம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 



(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள். ஏற்கனவே ப்ளாக் நீண்டு விட்டதால், இதன் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் காண்போம்.