கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்
எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு.
இராம அவதாரத்தின் நோக்கம் என்ன? இராவணனை அழிப்பது.
இராவணனை ஏன் அழிக்க வேண்டும் ? ஏன் என்றால் அவன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். தேவர்களை சிறை பிடித்தான். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தான்.
இராவணன் தேவர்களை துன்பம் செய்ததாக நேரடி தகவல் இல்லை. அவ்வப்போது தேவர்கள் இராமனுக்கு உதவி செய்கிறார்கள். முடிந்த வரை மலர் மாரி பொழிகிறார்கள்.
சரி, இராவணன் தேவர்களை துன்பம் செய்தான் என்றே இருக்கட்டும். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்றே இருக்கட்டும்.
அவன், அதற்காக தண்டிக்கப் பட்டானா?
இல்லை. ...
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_10.html
(please click the above link to continue reading)
இராவணன் தண்டிக்கப்பட்டது பிறன் மனைவியை நயந்த குற்றதுக்குகாக. தேவர்களை துன்பம் செய்ததற்காக அல்ல.
கடைசிவரையில், வீடணனும், கும்பகர்ணனும் சொல்கிறார்கள் ..."சீதையை விட்டுவிடு...இராமன் மன்னித்து விடுவான்" என்று. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இராமன் கருணை உள்ளவன். அடைக்கலம் என்று வந்தால் ஏற்றுக் கொள்வான் என்றுதான் சொல்கிறார்கள்.
ஒரு வேளை இராவணன் மனம் மாறி சீதையை விட்டு இருந்தால், இராமன் மன்னித்து இருப்பான். எல்லோரும் நிம்மதியாக் இருந்து இருப்பார்கள்.
தேவர்கள் கதி?
மற்ற அரக்கர்கள் கதையை பார்ப்போம். அவர்கள் எல்லோரும் தேவர்களுக்கு துன்பம் செய்தார்கள். அவதாரம் நிகழ்ந்தது. அவர்கள் கொல்லப் பட்டார்கள்.
சூரபத்மன் தேவர்களை படாதபாடு படுத்தினான். முருகன் அவதாரம் நிகழ்ந்தது. போர் நடந்தது. அவன் கொல்லப் பட்டான்.
இரணியன் கதி அதே. தூணில் இருந்து நரசிம்மம் வெளிப்பட்டு அவனை கொன்றது.
கம்சன் கதியும் அதே.
முப்புரம் எரி செய்த சிவன் செய்ததும் அதே.
ஆனால் இராமயணத்தில் மட்டும், இராவணன் கொல்லப் பட்டது பிறன் மனை நோக்கிய அறப் பிழையினால். தேவர்களை கொடுமை படுத்திய பிழையினால் அல்ல.
அப்படி இருக்க, அவதார நோக்கம் என்பது பிறன் நோக்கும் கயவர்களை தண்டிப்பது என்றுதான் இருக்க வேண்டும்.
வாலி, சுக்ரீவனின் மனைவியை நயந்தான். கொல்லப் பட்டான். பின், சுக்ரீவன் வாலியின் மனைவியை நயந்தான் என்று வான்மீகம் சொல்வதாகச் சொல்கிறார்கள். கம்பனில் அப்படி இல்லை.
இராவணன், இராமனின் மனைவியை நயந்தான், கொல்லப் பட்டான்.
இதில் தேவர்கள் எங்கே வந்தார்கள் ?
கைகேயிக்கு தெரியுமா, இராவணன், சீதை மேல் காமம் கொள்வான் என்று? தெரிந்தே செய்திருந்தால், அவள் முதலில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் கற்பை வைத்து சூதாடுவதா?
இராவணனை கொல்வதற்கு இராமனுக்கு ஒரு காரணமும் இல்லை. ஒரு வேளை இராமனுக்கு பட்டம் கட்டி இருந்தால், அவன் பாட்டுக்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்திருப்பான்.
திருமாலாலும், சிவனாலும், பிரம்மனாலும் முடியாத காரியத்தை முடிக்க உன்னிடம் வருவோம் என்று தசரதனைப் பார்த்து கௌசிகன் கூறுகிறான். அந்த தசரதன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை.
ஜனகன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை.
இராமனுக்கு இராவணன் இருக்கும் இடம் கூடத் தெரியாது. சீதையை தேடும் போது இராவணன் இருக்கும் இடத்தில் இருந்ததை கண்டு பிடித்தார்கள். ஜடாயு சொன்னான்.
அவதார நோக்கம் இராவண வதை என்றால் எப்படி இருந்திருக்க வேண்டும்?
இராமன், இராவணனுக்கு தூது அனுப்பி, "நீ தேவர்களை விட வில்லை என்றால் உன்னை யுத்தத்தில் சந்திப்பேன்" என்று சொல்லி இருக்க வேண்டும். சண்டை போட்டு, இராவணனை கொன்று தேவர்களை சிறை மீட்டு இருக்க வேண்டும்.
அப்படி எல்லாம் ஒன்றும் நிகழவில்லை.
அவதார நோக்கம் என்ன என்று சரியாக எனக்கு விளங்கவில்லை.
உங்கள் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவல்.