Saturday, April 30, 2022

திருக்குறள் - அடங்கியான் தோற்றம்

திருக்குறள் - அடங்கியான் தோற்றம் 


பொதுவாக அற நூல்கள் அதைச் செய், இதைச் செய்யாதே என்று உபதேசம் செய்யும். பெரும்பாலான உபதேசங்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராவிட்டால் "...கேக்க நல்லா இருக்கு...பாக்கலாம் ..." என்று தள்ளி வைத்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்.


படித்து ஒரு புண்ணியமும் இல்லை. 


நேரம் விரயம் ஆனதுதான் மிச்சம். 


ஆனால், திருக்குறள் அப்படி இல்லை. எது முடியுமோ அதைதான் சொல்லும். ஆண் பெண் இன்பமாகட்டும், பொருள் சேர்ப்பது ஆகட்டும், சண்டை பிடிப்பது, வேலை செய்வது என்று எதை எடுத்தாலும் எது முடியுமோ அதைத்தான் சொல்லுவார். .


அதனால்தான் முதலில் இல்லறத்தை வைத்து, பின் துறவறத்தை வைத்தார். 


இல்லறத்தையும் வைத்து அது கூடவே அடக்கமுடைமை, புலன் அடக்கம் என்று சொன்னால் எப்படி ?


கல்யாணம் பண்ணிவிட்டு, புலன் அடக்கம் என்றால், அதற்கு கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாமே? 


வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல் என்று சொல்லிவிட்டு பின் அடக்கமுடைமை என்று சொல்கிறாரே என்று நாம் நினைப்போம். 


அப்படி அல்ல என்று சொல்கிறார். 



பாடல் 


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_30.html


(Pl click the above link to continue reading)



நிலையின் திரியாது = தன் நிலையில் இருந்து மாறாமல் 


அடங்கியான் = அடங்கியவனின் 


தோற்றம் = தோற்றம் 


மலையினும் = மலையை விட 


மாணப் பெரிது = மிகப் பெரியது 


அடக்கம் உடமை பற்றித் தானே சொல்கிறார். எங்கே வேறுபடுகிறார் என்று நாம் தேடுவோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் நமக்குப் புரியவே புரியாது. 


"நிலையின் திரியாது அடங்கியான்" என்றால் என்ன? 


நிலை என்றால் இல்லறம் என்ற நிலை. பிரமச்சரியம், துறவு என்பது மற்ற நிலைகள். இங்கே இல்லறம் என்ற பால் என்பதால், நிலை என்பது இல்லறம் என்பதைக் குறிக்கும் என்று உரை எழுதுகிறார். 


இல்லறம் என்ற நிலையில் இருந்து திரியாமல். இல்லறத்துக்கு என்று சில இன்பங்கள் அனுமதிக்கபட்டு இருக்கிறது. கணவன் மனைவி இன்பம் துயித்தல், விருந்தோடு இருந்து உண்டல், என்பன அனுமதிக்கப் பட்டது. அதை அனுபவிக்கலாம். அதைத் தாண்டி போகக் கூடாது. "திரியாது".  என்றால் பிறழாது. 


அடுத்தது, "அடங்கியான்". இல்லறத்துக்கு இன்பம் அனுமதிக்கப்பட்டது என்பதற்காக  அதில் போய்க் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு அளவுக்கு மேல் போகாமல், போதும் என்ற திருப்தி வர வேண்டும்.  விருந்து அனுமதிகப்பட்டது என்பதற்காக அறுபது வயதில், என்பது வயதில் லட்டைக் கொண்டு வா, பாயசம் கொண்டு வா, முறுக்கைக் கொண்டு வா என்று சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. வயது ஆக ஆக, இன்பத்தின் மேல் உள்ள பற்று குறைய வேண்டும். அடங்க வேண்டும். .


"மலையின் மாணப் பெரிது". மலையை விட மிகப் பெரியது. இது என்ன பெரிய உதாரணமா? மலையை விடப் பெரியது என்று யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்தானே?


மலை எப்படி அவ்வளவு பெரிதாக ஆனது ? யாரும் செய்தார்களா? இல்லை. அது தானே உயர்ந்தது. அது போல,  புலன்களை அடக்கியவன் தானே உயர்வான். 


மலை எவ்வளவு உயர்ந்தாலும், அது தான் உயர்ந்து விட்டேன் என்று காட்டிக் கொள்ளாது. அடக்கமாக இருக்கும். அதுதான்  அதன்  கம்பீரம். 


இல்லற இன்பங்களை அனுபவித்து, அதன் மூலம் புலன் அடக்கத்தைப் பெற்றவன் அது போல உயர்ந்து கம்பீரமாக இருப்பான் என்பது இன்னொரு செய்தி. 


வள்ளுவர் இன்பங்களை மறுக்கவில்லை. மாறாக, ஆண்டு அனுபவிக்கச் சொல்கிறார். 


இன்பம் துயிக்கும் போது இரண்டு விடயங்களை மனதில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார். 


ஒன்று, ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும். 


இன்னொன்று, ஒரு அளவுக்கு மேல் போகக் கூடாது. 


இதைவிட ஒரு நடைமுறைக்கு உகந்த உபதேசம் வேறு என்ன இருக்க முடியும். 


இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  இல்லறத்தின் ஊடாக நம்மை துறவறத்துக்கு தயார் செய்கிறார். 


அனுபவித்து விட்டாய் அல்லவா? திருப்தி தானே...வா அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று கை பிடித்து அழைத்துச் செல்கிறார். 


நேரே துறவறம் என்று ஆரம்பித்து இருந்தால், "ஐயோ, இல்லறத்தில் என்னெனவோ இன்பங்கள் இருக்கிறதே...அதை எல்லாம் விட்டு விட்டு வந்து விட்டோமே" என்று அந்த நினைப்பாகவே இருக்கும். துறவு பாழ்படும். 


ஒண்ணே முக்கால் அடியில் என்ன ஒரு ஆழமான சிந்தனை. 










Friday, April 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?


இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. நாம் கேட்டவற்றை அவன் தருவான். நம்மிடம் இருந்து அவனுக்கு வேண்டியது ஒன்றும் இல்லை. நம்மை காப்பது அவன் கடமை. நம்மை என்றால் நம் உயிரை, பொருளை, சந்தோஷத்தை எல்லாம் சேர்த்ததுதான். 


அப்படி என்று நான் நினைத்துக் கொண்டு இருந்த போது, என் மகள் விடயத்தில் ஒரு தலைவனுக்கு பொருத்தமில்லாத ஒரு காரியத்தை நீ செய்யலாமா என்று நம்மாழ்வார் கேட்கிறார். .


அப்படி என்ன திருமால் செய்து விட்டார்?


பாடல் 


தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா

கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்

வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்

கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_29.html



(pl click the above link to continue reading)



தொண்டெல்லாம்  = தொண்டர்கள் எல்லோரும் 


நின்னடி யேதொழு து  = உன் திருவடிகளையே தொழுது 


உய்யுமா கண்டு = உயிவதைக் கண்டு, ஈடேறுவதைக் கண்டு 


தான் = அவள் 


கணபுரம் = திருக்கண்ணபுரம் 


கைதொழப் போயினாள் = (சென்று அல்லது நோக்கி) கைதொழப் போனாள் 


வண்டுலாம் = வண்டு உலவும் கூந்தலைக் கொண்ட 


கோதையென் பேதை = சூதுவாது அறியாத பேதைப் பெண்ணான என் கோதை (மகள்) 



மணிநிறம் = அழகிய மணி போல் ஒளி விடும் நிறத்தை 


கொண்டுதான் = நீ கொண்டு போய்விட்டாய் 


கோயின்மை = கோ + இன்மை = கோ என்றால் அரசன், தலைவன் 


செய்வது தக்கதே? = செய்வதுசரிதானா?


எல்லா பக்தர்களும் உன்னை வழிபட்டு நன்மை அடைகிறார்கள். அதைப் பார்த்து என் மகளும் உன்னை வழிபட்டாள். நீ என்னடா என்றால் அவளுக்கு வரம் தருவதை விட்டுவிட்டு அவள் மேனியின் நிறத்தை எடுத்துக் கொண்டாய். ஒரு தலைவன் செய்யும் செயலா இது ?


அதாவது, அவனையே நினைத்து உண்ணாமல், ,உறங்காமல் மெலிந்து, மேனி நிறம் குன்றிப் போய் விட்டதாம். திருமால் அருள் செய்யாததால் வந்த வினை என்கிறார். 


அருள் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை, இருக்கிறதையும் எடுத்துக் கொண்டு போவது சரியா என்று வினவுகிறார். .


பிரபந்தம் என்பது மிக மிக நெருக்கமான இறை அனுபவம். 


இறைவனுடன் சண்டை பிடிப்பது, கேள்வி கேட்பது, உருகுவது, அழுவது, கூத்தாடுவது என்று உணர்ச்சிகளின் மொத்த வெளிப்பாடு. 


ஆழமான அன்பின் அனுபவம் இருந்தால் அன்றி இவை புரியா. 




Wednesday, April 27, 2022

திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து

 திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து 


அடக்கம் என்றால் புலனடக்கம் என்று பார்த்தோம். 


நாம் சிந்தித்துக் கொண்டு இருப்பதோ இல்லறம் பற்றி. இல்லறத்தில் இருந்து கொண்டு, புலன்களை அடக்குகிறேன் என்றால் எப்படி முடியும்? புலனடக்கம் என்பது துறவரதுக்குச் சரி. இல்லறத்துக்கு? 


மனைவியுடன் அன்பாக இருக்க மாட்டேன், நாள் கிழமை என்றால் ஒரு பலகாரம் எதுவும் சாப்பிடமாட்டேன், நல்ல உடை உடுத்த மாட்டேன், எல்லா புலன்களையும் அடக்கப் போகிறேன் என்று புறப்பட்டால், அவனை விட்டு மனைவி புறப்பட்டு விடுவாள். இவனோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று தெரியாமல். 


பின் ஏன் வள்ளுவர் அடக்கமுடைமையை கொண்டு வந்து இல்லறத்தில் வைத்தார்? இதைக் கொண்டு போய் துறவறத்தில் வைத்து இருக்கலாமே? 


பரிமேலழகர் இல்லை என்றால் இதற்கு எல்லாம் அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். 


பாடல் 


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


செறிவறிந்து = அடக்கத்தினை அறிந்து 


சீர்மை பயக்கும் = நல்லதைத் தரும், சிறப்பைத் தரும் 


அறிவறிந்து = அறிய வேண்டியவற்றை அறிந்து 


ஆற்றின்  = வழியாக, நெறியாக, 


-அடங்கப் பெறின். = அடக்கம் உண்டானால் 


இதற்கு பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


முதலாவது, "அடங்கப் பெறின்" என்பதற்கு புலன்கள் தன் வயத்ததாதல் என்கிறார். அதாவது புலன் இன்பங்களை விட்டு ஒழிக்கச் சொல்லவில்லை. புலன்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்கிறார். இன்று ஒரு விசேடம். வடை, பாயாசம், இனிப்பு பலகாரம் எல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு பிடி பிடிக்கக் கூடாது. இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கணக்கு வைத்துக் கொண்டு அவ்வளவு மட்டுமே சாப்பிட் வேண்டும். 


மனைவியை தவிர இன்னொரு பெண் பின்னால் மனம் போகக் கூடாது. 


புலன்கள் நாம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது தன் பாட்டுக்குப் போகக் கூடாது. சாரதி வண்டியை ஓட்ட வேண்டும். குதிரை அது பாட்டுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடாது. 


இரண்டாவது, "ஆற்றின்". புலன்களை தன் வயப்படுதுகிறேன் பேர்வழி என்று முரட்டுத் தனமாக எதைக் செய்யக் கூடாது. எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து அந்த முறையில் செய்ய வேண்டும். ஆறு என்றால் வழி என்று பொருள். 


மூன்றாவது, "அறிவறிந்து". எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிய வேண்டும். இன்று நாம் என்ன செய்கிறோம்? தேவை இல்லாதவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். புலன்கள் தன் வசம் ஆகாமல் போவதற்கு காரணம் அறிவு கண்ட இடத்தில் செல்வதால். "அட, இப்படி ஒன்று இருக்கிறதா? நாமும் இதை முயன்றால் என்ன" என்று மனம் இழுத்துக் கொண்ண்டு ஓடும். தேவை இல்லாதவற்றில் அறிவை செலுத்தக் கூடாது. எத்தனை whatsapp செய்திகள்? நம்மை அறியாமலேயே நம் புலன்கள் அவற்றின் பின்னால் போய் விடும். .



நான்காவது, பரிமேலழகர் ஒரு படி மேலே போகிறார். 'அறிவறிந்து' என்பதற்கு, அடங்குதலே அறிவு என்று அறிந்து என்கிறார். படித்து வருவது அல்ல அறிவு. புலனடக்கமே அறிவு என்கிறார் அவர். 


"அடங்குதலே அறிவு என்று அறிந்து நெறிப்படி அடங்குதல்" என்று பொருள் சொல்கிறார். .


ஐந்தாவது, சும்மா இப்படி புலனடக்கம், புலனடக்கம் என்று இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? நல்லா அனுபவிப்பதை விட்டு விட்டு, புலன்களை கட்டுக்குள் கொண்டு வருவதால் என்ன பலன் என்று கேட்டால், 


"செறிவு அறிந்து சீர்மை பயக்கும்" என்கிறார். 


செறிவு அறிந்து என்பதற்கு பரிமேலழகர் "செறிந்த அறிவை உடையவர்", சான்றோர், நல்லோர் என்று உரை செய்கிறார். அதாவது நாம் புலன்களை நம் வயப் படுத்தி அடங்கி இருந்தால் அது நல்லவர்களுக்கு நம் மேல் ஒரு நன்மதிப்பை உண்டாக்கும். அவர்களின் மதிப்பைப் பெற்றால், அது நமக்கு பல நன்மைகளைத் தரும் என்கிறார். 


உதாரணமாக, "எனக்கு அதிகம் தெரியாது. நான் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்" என்ற அடக்கம் இருந்தால், திருவள்ளுவரைப் படிப்போம்.  அதைப் படித்ததால் நமக்கு பலன் இருக்குமா இல்லையா? மாறாக, "எல்லாம் எனக்குத் தெரியும்" என்று இருந்தால் பலன் கிடைக்குமா? 


அடக்கமாய் இருப்பவர்கள் மேல் நல்லோருக்கு ஒரு அன்பு பிறக்கும். அந்த அன்பும் மதிப்பும் பல நன்மைகளைக் கொண்டு வந்து தரும் என்கிறார். .


அடங்குதலே அறிவு என்று அறிந்து, நெறிப்படி புலன்களை தன் வசத்தில் கொண்டு வந்தால், அது நல்லவர்களின் மதிப்பை பெற்று தருவதோடு அதன் மூலம் கிடைக்கும் பல நன்மைகைகளை நமக்குத் தரும் என்பது சாரம். 


ஒண்ணே முக்கால் அடிக்குள் ஒரு மாயாஜாலம். 


Sunday, April 24, 2022

சிவ ஞான போதம் - மாயை

 சிவ ஞான போதம் - மாயை 


சைவ சித்தாந்ததின் அடிப்படை தத்துவம் என்பது பதி, பசு, பாசம் என்ற மூன்றில் தொடங்குகிறது என்று சிந்தித்தோம். 


இந்த மூன்றும் என்றும் உள்ளது. 


இதில் பசு என்ற உயிர், தோன்றும் பொழுதே ஆணவம் என்ற மலத்தில் சிக்கி இருக்கும் (தாயின் வயிற்றில் கருவைப் போல). ஆணவ மலத்தில் கட்டுண்டு செய்வது அறியாமல் திகைக்கும் உயிர்கள் அந்த இருளில் இருந்து வெளிப்பட நினைக்கும். குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வர நினைப்பது இல்ல. 


அந்த ஆசை தான் மூல கன்மம் என்று சொல்லப் படுகிறது. அனைத்து கர்மங்களுக்கும், வினைகளுக்கும் ஆதி காரணம் அந்த மூல கன்மம் (கர்மம் அல்லது வினை). 


அப்படி வெளிப்படத் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இறைவன் கன்மம், மாயை என்ற இரண்டை தோற்றுவிக்கிறான். 


இந்த மூன்றும் சேர்ந்து மும்மலம் என்று அறியப் படுகிறது. 


வினை செய்ய உடல் வேண்டும், உடலில் உறுப்புகள் வேண்டும்,  இருந்து செய்ய இடம் வேண்டும், செய்கின்ற அனுபவம் வேண்டும். இவற்றை தனு, கரண, புவன, போகம் என்று கூறுவார்கள் 


இவற்றையெல்லாம் இறைவன் மாயையில் இருந்து தோற்றுவிக்கிறான். 


என்ன இது மாயை, மாயை என்று எதற்கெடுத்தாலும் மாயை என்று சொன்னால் என்ன அர்த்தம். மாயை என்றால் என்ன? 


ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறோம். பார்க்க அழகாக இருக்கிறது. பிரமாண்டமாக இருக்கிறது. 


அந்தக் கட்டிடம் செங்கல், சிமெண்ட், கம்பி, மரம்,கண்ணாடி, போன்ற  வற்றால் செய்யப்பட்டது என்று தெரியும். 


ஒரு காரைப் பார்க்கிறோம். அது டையர், streering, பிரேக், என்ஜின், பெட்ரோல் tank, என்ற பல உதிரிப் பாங்களை சேர்த்து செய்யப்பட்டது என்று தெரியும் நமக்கு.


நம் உடம்பு கூட கை, கால், கண், என்ற உறுப்புகளின் தொகுதிதானே. 


உடம்பு ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அது ஒரு வசதி. அவ்வளவுதான். உடம்பு என்று ஒன்று கிடையாது. உறுப்புகள் என்றுதான் இருக்கிறது. "உடம்பில்" எதை தொட்டுக் காட்டினாலும், அந்தப் பகுதிக்கு பேர் இருக்கும் - நகம், முடி, தோல், விரல் என்று. உடம்பு என்று தனியே கிடையாது. 


சரி, இந்த உறுப்புகள் என்று தனியே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு உறுப்பும் திசுக்களின் தொகுதி. 


திசுக்குள் தனியாக இருர்க்கிறதா என்றால் இல்லை, அவை செல்களின் தொகுதி. 


சரி செல்களாவது தனியாக இருக்கிறதா என்றால் அது ஜீன், dna (மரபணு), சைட்டோ பிளாசம், செல் membrane என்ற தொகுதிகளால் ஆனது. 


இன்னும் உள்ளே போகலாம். 


என்ன புரிகிறது?


எந்த பெரிய உருவமும் பல சிறிய பாகங்களை உடையது.


எந்த சிறிய பாகமும் அதனினும் சிறிய கூறுகளை உடையது. 


இப்படியே சொல்லிக் கொண்டே போனால், மிக அடிப்படையானது என்பது மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது அல்லவா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_24.html


(click the above link to continue reading)



இன்று நமக்கு இருக்கும் அறிவியல் உபகரணங்கள் கொண்டு நாம் ஒரு நிலையை அடைந்து இருக்கிறோம். உபகரணங்கள் மேலும் சக்தி பெறும் போது இன்னும் உள்ளே போக முடியும். 


எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான ஒன்று மிக மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?


இந்த உலகம், பிரபஞ்சம், என்பதை இறைவன் மாயையில் இருந்து உருவாக்கினான் என்று பார்த்தோம். 


அப்படி என்றால் மாயை என்பது மிக மிக மிக நுண்ணிய என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? 


மாயைகாட்டு, அது எப்படி இருக்கும் என்று கேட்டால் அணுவுக்குள் இருக்கும் துகளை காட்டுவது மாதிரித்தான். காட்ட முடியாது. பார்க்க முடியாது. முழுவதுமாக உணரக் கூட முடியாது.


உள்ளே போகப் போக  அது போய்க் கொண்டே இருக்கும். 


அறிவுக்குள் அகப்படாத ஒன்று. 


இது ஒரு பக்கம். 


இதன் இன்னொரு பக்கம் என்ன என்றால்.....





Saturday, April 23, 2022

திருக்குறள் - பெரிய செல்வம்

 திருக்குறள் - பெரிய செல்வம் 


நம்மிடம் ஒரு பெரிய சொத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை நாம் எவ்வாறு காவல் செய்வோம்?


பெரிய வைரக் கல், தங்க நகை, விலை அதிகம் உள்ள கைக் கடிகாரம் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கவனக் குறைவாக எங்காவது போட்டு வைப்போமா? 


எப்போதும் பத்திரமாக வைத்து இருப்பேன், ஆனால் அப்பப்ப அந்த வைர நெக்கலசை பழைய காகிதங்களோடு போட்டு வைப்பேன் என்று சொல்வோமா? 


எது எல்லாம் உயர்ந்ததோ, அவற்றை அதிக கவனத்தோடு பாதுகாக்க வேண்டும்.


அடக்கம் உடைமை என்பது ஒரு உயர்ந்த குணம். அதையும் மிக கவனமாக விலை மதிப்பற்ற பொருளை பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)



காக்க பொருளா = பொருளாக காக்க. உயர்ந்த பொருளைப் போல காக்க. 


அடக்கத்தை = எதை காக்க வேண்டும்? அடக்கத்தை காக்க வேண்டும். 


ஆக்கம் = செல்வம் 


அதனினூங்கு இல்லை உயிர்க்கு = அதைவிட வேறு ஒன்று இல்லை உயிர்க்கு 


ஒருவனுக்கு பல மதிப்புள்ள செல்வங்கள் இருக்கலாம். பெரிய வீடு, நிலம், நீச்சு, நகை, நட்டு, பங்குகள், வங்கியின் இருப்புகள் என்று.


இவை எல்லாவற்றிலும் மிக உயர்ந்த செல்வம் அடக்கம் உடைமை என்ற செல்வமாகும். 


மற்ற எல்லா பொருள்களையும் எந்த அளவு ஒருவன் காப்பானோ  அதைவிட பொறுப்பாக அடக்கத்தை காக்க வேண்டும் 









Friday, April 22, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாங்க முடிந்தால் தாங்கு

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  தாங்க முடிந்தால் தாங்கு 


ஆழமாக காதலிப்பவர்களுக்கு, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க முடியாது. கொஞ்ச நேரம் பிரிவது என்றால் கூட பெரிய துன்பமாக இருக்கும். எப்பாட மீண்டும் பிரிந்த காதலரை பார்ப்போம், பேசுவோம் என்று இருக்கும். 


பிரிவின் தவிப்பு, காதலின் ஆழத்தைப் பொறுத்தது. 


இறைவன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டு விட்டாலும் அப்படித்தான் என்கிறார் நம்மாழ்வார். 


அவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார்...


"எப்படித்தான் அவனை விட்டு உன்னால் பிரிந்து இருக்க முடிகிறதோ. அவனைப் பார்க்காமல், அவன் திருவடியில் பூ தூவாமல், தலை தாழ்த்தி வணங்காமல், கை கூப்பித் தொழாமல் எப்படித்தான் நீ இருக்கிறாயோ என் நெஞ்சே. அவன் அவன் எங்கே என்று தேடாமல் உன்னால் இருக்க முடியும் என்றால் இரு. என்னால் முடியாது" 


என்கிறார். 


வசீகரமான பாசுரம். 


பாடல் 


வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_22.html



(Pl click the above link to continue reading)





வாழ்த்தி = வாயால் அவனை வாழ்த்தி 


அவனடியைய்ப் = அவன் திருவடிகளை 


பூப்பு னைந்து = பூக்களால் நிறைத்து 


நிந்தலையைத் = உன்னுடைய தலையை 


தாழ்த்தி = தாழ்த்தி 


இருகை = இரண்டு கைகளையும் 


கூப்பென்றால் கூப்பாது = கூப்பு என்றால் கூப்பாது 


பாழ்த்தவிதி, = பாழாய் போன விதி 


எங்குற்றாய் = எங்கு சென்றாய் 


என்றவனை  = என்று அவனை 


ஏத்தாதென் னெஞ்சமே, = போற்றாத என் நெஞ்சே 


தங்கத்தா னாம்  = தங்கத் தான் ஆம். தங்க முடியும் என்றால் 


மேலும் தங்கு. = மேலும் தாங்கிக் கொள் 


இதுவரை எப்படியோ இறைவனை தேடாமல் இங்கே தங்கி விட்டாய். இனிமேலும் அப்படியே தங்க முடியும் என்றால் நீ தங்கிக் கொள். என்னால் ஆகாது என்கிறார். 


பூ போட்டு, கை கூப்பி, தலை வணங்குவது என்ன பெரிய கடினமான செயலா? அது என்ன நெருப்புக்கு நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல கடினமான செயலா? 


இல்லை. இருந்தும் செய்வது இல்லை. ஏன் என்று ஆழ்வார் யோசிக்கிறார். 


காரணம் கண்டு பிடித்துவிட்டார். 


எல்லாம் விதி. 


விதி நல்லதின் பக்கம் போகாமல் தீயதின் பக்கம் நம்மைத் தள்ளுகிறது. 


அதாவது போகட்டும். இறைவனைத் தொழவில்லை. 


இறைவன் நமக்கு எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை எங்கே எங்கே என்று தேட வேண்டாமா? அந்த ஆர்வம் கூடவா இல்லாமல் போய் விடும்? 


இப்படியே எத்தனை காலம் போவது? இறைவன் யார், அவன் எங்கே இருக்கிறான், எப்படி அவனை அடைவது என்ற ஒரு தேடல் கூட இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ என்று வியக்கிறார். ஆழ்வார். 


".இப்படியே இருக்கிறதுனா இருந்திட்டுப் போ ..." என்று மனதை கடிந்து கொள்கிறார். 


அருமையான பாசுரம். 


ஏறத்தாழ நாலாயிரம் பாசுரம்.  என்று அனைத்தையும் படித்து முடிப்பது? 


Thursday, April 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


கீழே உள்ள பாசுரத்தின் முதல் பாகத்தை நேற்று சிந்தித்தோம். அதன் link இந்த ப்ளாகின் இறுதியில் உள்ளது. ஒருவேளை படிக்க விருப்பம் இருந்தால் அதையும் படிக்கலாம். 


நம்மாழ்வார் சொல்கிறார், "எது சரி தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் பொன் மான் பின் போன அம்மானைத் தொழாமல் இதுவரை என் வாழ்நாளை எல்லாம் வீணே கழித்து விட்டேன் என்று வருந்துகிறார். 




 பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_21.html



(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 



ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 



தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 




வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 



 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 



கரந்துருவின் = உருவத்தை மறைத்து 



அம் மானை =அந்த பொன் மானை 



அந்நான்று = அந்த நாளில் 



 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 



 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 



அம்மானை = அம்மானை 



ஏத்தாது = போற்றாது 



அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)




இதற்கு வைணவ உரை ஆசிரியர்கள் எழுதி இருக்கும் உரை அற்புதமானது. 



"ஆழி அங்கை" - மோதிரம் உள்ள கை. ஆழி என்பது சக்கரம். ஆனால் இதுவோ இராமாவதாரம் பற்றியது. அடுத்த வரியில் பொன் மான் பின் போன அம்மான் என்கிறார். இங்கே எங்கே சக்ராயுதம் வந்தது? எனவே அது மோதிரத்தைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் செய்கிறார்கள். 


சரி, பொன் மான் பின் போவது என்றால் அது இராமன் காட்டுக்குப் போன பின் நிகழ்ந்த ஒன்று. அவன் தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தானே மர உரி உடுத்து கானகம் வந்தான். மோதிரம் எங்கிருந்து வந்தது ? திருமணம் ஆன புதிது. ஒரு மகிழ்ச்சி. இராமன் கொஞ்சம் எடை கூடி இருப்பான். அதனால் அவன் கையில் உள்ள மோதிரத்தை கழட்ட முடியாமல் போய் இருக்கும். எனவே, மோதிரத்தோடு கானகம் வந்திருப்பான் என்று உரை செய்கிறார்கள். 


எவ்வளவு ஆழமாக அனுபவித்து இருக்கிறார்கள். 


பின்னாளில் அனுமனிடம் மோதிரத்தை கொடுத்து அனுப்புகிறான். அப்ப மட்டும் எப்படி மோதிரம் கழட்ட முடிந்தது என்றால், காட்டில் சரியான உணவு இல்லை. அது மட்டுமல்லாமல் சீதையை பிரிந்த துயரம் வேறு. இராமன் இளைத்துப் போனான். எனவே மோதிரம் எளிதாக கழன்று வந்தது என்கிறார்கள். 


ஒரு சொல்லுக்குப் பின்னால் இவ்வளவு கதை. 



அடுத்து, 



"கரந்துருவின் அம் மானை". கரந்து என்றால் மறைந்து. தன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு பொன் மான் வடிவில் வந்த மாரீசன் பின் போன என்று அர்த்தம். 



இராமனுக்குத் தெரியாதா அது பொய் மான் என்று. பின் ஏன் போனான்?  



கணவன் மனைவி உறவின் அழகை, இரகசியத்தை இங்கே சொல்கிறார்கள். 



சீதை கேட்கிறாள். "இல்லை அது பொய் மான். பொன் மான் எங்காவது உண்டா...பேசாமல் இரு" என்று சொல்லி இருக்கலாம். சொன்னால் அவள் முகம் வாடிவிடும். மனைவியின் முகம் வாடக் கூடாது என்று இராமன் பொன்மான் பின் போனானாம். என்னை நம்பி, இந்தக் காட்டுக்குள் வந்து இருக்கிறாள். அவளுக்காக, தவறாகவே இருந்தாலும், அதை செய்து அவளை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று இராமன் நினைத்தானாம். 




சில சமயம் பெண்கள் இப்படித்தான் காரண காரியம் இல்லாமல் எதையாவது கேட்பார்கள். அவர்களோடு வாதம் பண்ணி புண்ணியம் இல்லை. கேட்டது கிடைக்கவில்லை என்றால் பெரிய துக்கம் அவர்களுக்கு. கேட்டது கிடைக்கவில்லையே என்ற துக்கம் இல்லை.   நான் கேட்டு வாங்கித் தரவில்லையே, எனக்கு அவ்வளவுதானா மரியாதை, என் மேல் அவ்வளவுதானா அன்பு, என்ற தன்னிரக்கம், சுய பச்சாதாபம். 


தான் கேட்டு கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் பெரிய சந்தோஷம். கேட்டது கிடைத்ததே என்று அல்ல. என் கணவன் எனக்காக, நான் கேட்டதை வாங்கித் தந்தான் என்ற அன்பின் அனுபவம், பெருமிதம், மனதுக்குள் ஒரு சந்தோஷம். 



அது பெண்மை. 



இராமனுக்கு அது தெரிந்து இருக்கிறது.  மனைவி கேட்கிறாள்.  அந்த மானை பிடித்துத் தந்துவிட வேண்டியதுதான் என்று கிளம்பி விட்டான். பின்னாளில் சீதை அதை நினைத்து வருந்தினாள். அது வேறு விடயம். 




அது மட்டும் அல்ல, இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 



இறைவன் நாம் என்ன கேட்டாலும் ஓடிப் போய் நமக்காக அவற்றை கொண்டு வந்து தருவானாம். பக்தர்கள் முகம் வாடுவதைக் காண சகிக்க மாட்டானாம். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன கேட்பது என்று. சீதை மாதிரி பொன் மான் கேட்டால் பின் வருந்த வேண்டி வரும். 




நாமும் கேட்கிறோமே....பணம், வீடு, வாசல், பதவி, வேலை, வரன், பரிட்சையில் தேர்வு அடைய வேண்டும், என்று என்னவெல்லாமோ கேட்கிறோம். 



அவனுக்குத் தெரியாதா, நமக்கு என்ன வேண்டும் என்று?



மணிவாசகர் சொல்லுவார், 



"வேண்டத் தக்கது அறிவோய் நீ"



எது நான் கேட்கத் தகுந்ததோ அது உனக்குத் தெரியும். .



"வேண்ட முழுதும் தருவோய் நீ"



எது கேட்டாலும் முழுசா அப்படியே தருவ. 




"வேண்டும் பரிசு என்று ஒன்று உண்டெங்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே"



எனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தால், உனக்கு எது விருப்பமோ, அதைக் கொடு.  எனக்கு என்ன தெரியும் எனக்கு எது நல்லது, கெட்டது என்று. நீ பார்த்து செய் என்கிறார்.




நாம் பேருந்துக்காக காத்து இருக்கிறோம். ஒரு பிச்சைக் காரன் நம்மிடம் வந்து, "ஐயா, ஒரு அஞ்சு பைசா பத்து பைசா தர்மம் பண்ணுங்க" என்கிறான். நாமும் அவன் கேட்டதுக்கு மேலேயே போட்டு ஒரு ரூபாய் கொடுக்கிறோம்.




மாறாக, "ஐயா ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு" என்று சொன்னால்,, நாம் ஒரு பத்து ரூபாயோ அல்லது அதற்கு மேலேயோ கொடுத்து இருப்போம். 




நம்ம நிலைக்கு நாம் பத்து ரூபாய் கொடுக்கலாம். அல்லது ஐம்பது ரூபாய் கொடுக்கலாம். 




இறைவனிடம் எவ்வளவு இருக்கிறது. அவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான்?



ஔவையார் அதியமானிடம் சென்று மருந்து குழைத்து சாப்பிட பால் வேண்டும். ஒரு ஆடு இருந்தால் நல்லா இருக்கும் என்று அவனிடம் ஆடு கேட்டாளாம். ஔவையாருக்கு அவ்வளவுதான் கேட்கத் தோன்றியது. அவன் அரசன். ஒரு ஆட்டை கொடுத்தால் அவன் பெருமை என்ன ஆவது? எனவே, பொன்னால் செய்த ஆடு ஒன்றைக் கொடுத்தானாம். அவன் பெருமைக்கு அப்படித்தான் கொடுக்க முடியும். 




இறைவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான். அவனிடம் கேட்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். 




ஒரு வரியை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் உள்ளே போகிறார்கள் என்று. 





அப்படி அனுபவித்து படிக்க வேண்டும். 




























-------------------------------------    பாகம் 1  ---------------------------------------------------------



இதன் முதல் பகுதியை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 




https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html