Thursday, May 12, 2022

திருக்குறள் - அடக்கமுடைமை - தொகுப்புரை

 திருக்குறள் - அடக்கமுடைமை - தொகுப்புரை 


இதுவரை நாம் சிந்தித்த அதிகாரங்கள் 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 

இல்வாழ்க்கை 

வாழ்க்கைத் துணை நலம் 

புதல்வரைப் பெறுதல் 

அன்புடைமை 

விருந்தோம்பல் 

இனியவை கூறல் 

செய் நன்றி அறிதல் 

நடுவு நிலைமை 


அடுத்ததாக அடக்கமுடைமை பற்றி கடந்த சில நாட்களாக சிந்தித்தோம்.


அடக்கம் என்றால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போவது அல்ல. செல்வம் உள்ளவர்களைக் கண்டால், பதவியில், அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டால் பயந்து அடங்கிப் போவது அல்ல அடக்கம் உடைமை. புலன்களை அடக்குவதே அடக்கம் உடைமை. 


மேலும், இல்லறத்தில் உள்ளவன் புலன்களை அடக்குதல் என்பது முடியாத ஒன்று மட்டும் அல்ல தேவை இல்லாததும் கூட. திருமணம் செய்து விட்டு நான் புலன் அடக்கம் செய்கிறேன் என்று கூறினால் அது சரி வராது. எனவே, இல்லறத்தில் உள்ளவனுக்கு அடக்கம் உடைமை என்பது புலன்கள் அவன் கட்டுக்குள் இருப்பது என்று பரிமேலழகர்   உரைப் பாயிரத்தில் குறிப்பிடுகிறார். ஒரு ஒழுங்கு வரைமுறையோடு இன்பம் துயித்தல் பற்றி கூறுகிறார். 


இனி அடக்கமுடைமை அதிகாரத்தின் தொகுப்புரையை காணலாம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_12.html


(pl click the above link to continue reading)


முதல் குறள் 


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.


அடக்கம் தேவர்களில் ஒருவனாகச் செய்யும். அடங்காமை இருண்ட நரகத்தில் தள்ளிவிடும். 


இரண்டாவது, 


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு.



எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்து மறந்தாலும் புலன்கள் இழுத்துக் கொண்டு ஓடிவிடும். உயர்ந்த, ,விலை மதிப்புள்ள பொருளை எப்படி காவல் செய்வோமோ அது போல இருபத்தி நான்கு மணி நேரமும் அடக்கத்தை காவல் செய்ய வேண்டும். 



மூன்றாவது, 


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


அடங்குதலே அறிவான செயல் என்று அறிந்து அடங்கி இருப்பவனின் பெருமை நல்லோர்களால் அறியப்பட்டு அது அவனுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கும். 


நான்காவது, 



நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.


தன்னுடைய நிலையில் இருந்து பிறழாமல் இன்பங்களை அனுபவித்து, பின் அவை போதும் என்று அடங்கியவனின் பெருமை மலையை விடப் பெரியது என்றார். .


இங்கே ஒரு செய்தி சொல்ல மறந்து விட்டேன். 


உயர் வேண்டும் என்றால் அடங்கு என்கிறார். இது கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறது அல்லவா.  அடங்கினால் உன் பெருமை மலை போல் உயரும் என்கிறார். நாம் இதற்கு எதிர் மறையாக சிந்திப்போம், செய்வோம். நாமே நம் பெருமை சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி அறிவார்கள், சொல்வார்கள் என்று முடிந்தவரை சுய விளம்பரம் செய்ய முயற்சி செய்வோம். அது தவறு. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிலைத்து நிற்காது. 


அடங்கினால் உயரலாம் என்பது ஆழமான கருத்து. 


அடங்கினால் எப்படி உயர முடியும்? 


இராமாயணத்தில், அனுமன் தன்னைப் பற்றி இராமனிடம் கூறும் போது, "எங்கள் அரசன் சுக்ரீவனுக்கு ஏவல் கூவல் பணி செய்வேன்" என்கிறான். அவன் வகிப்பதோ மந்திரி பதவி. அவன் அறிவும், ஆற்றலும் அளவிட முடியாதது. இருந்தும், ஏதோ எடுபிடி வேலை செய்கிறவன் என்று தன்னைத் தாழ்த்திச் சொல்கிறான். 


பதினாலாயிரம் பாடல் எழுதிய கம்பன், தன் இலக்கியத்தை ஏதோ சிறு பிள்ளை கிறுக்கியது மாதிரி என்கிறான். 


ஞான மார்கத்தில் உச்சம் தொட்ட மணிவாசகர் "நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு" என்று தன்னை நாயினும் கீழாக சொல்லிக் கொள்வார். 


இவர்கள் உயரவில்லையா? அவர்கள் அவ்வளவு பணிவோடு இருக்கிறார்கள் என்றால் நாம் எவ்வளவு இருக்க வேண்டும் ?

 

ஐந்தாவது, 


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.


கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றில் கல்வியும் குலமும் அடக்கத்தை தானே போதிக்கும். செல்வம் அவ்வாறு போதிக்காது. செல்வம் இருப்பவன் தானே அறிந்து அடங்காவிட்டால் தன் செல்வ மமதையால் தவறான வழிகளில் செல்வத்தை விரயம் செய்து அழிந்து போவான். அடக்கமாக இருந்தால், அவன் செல்வம் அவனிடமே இருப்பது மட்டும் அல்ல, அது மேலும் பெருகும். இன்னொரு செல்வம் வந்த மாதிரி. 


சிலப்பதிகாரத்தில் கோவலனிடம் கோடி கோடியாக செல்வம் இருந்தது. புலனடக்கம் இல்லை. அது அவனை எந்த அளவு துன்பத்தில் ஆழ்த்தியது?


சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் வடிவேலுக்கு அவன் பாட்டி இறந்த காப்பீட்டு தொகையாக மூன்று இலட்சம் கிடைக்கும். அவனிடம் இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி  அவன் கூட இருப்பவர்கள் அவனைப் புகழ்வார்கள். அவனும் அதில் மயங்கி, இருக்கின்ற பணத்தையெல்லாம் வட்டிக்கு விட்டு அனைத்தையும் இழப்பதாக கதை.  செல்வம் வரும் போது அடக்கம் வராவிட்டால் எல்லாம் போய் விடும். சில சமயம் கடனில் கூட தள்ளிவிடும். 


மேற் சொன்ன ஐந்து குறள்களில் அடக்கத்தின் சிறப்பு கூறினார். ஏன் அடக்கமாக இருக்க வேண்டும், அதனால் வரும் நன்மை என்ன என்று கூறினார். 


ஆறாவது, 


ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.


ஆபத்து வரும் போது ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொல்வதைப் போல, புலன்கள் தவறான வழியில் செல்லத் தலைப்பட்டால், அவற்றை நம் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர வேண்டும்.  சாரதி கையில் வண்டி இருக்க வேண்டும். குதிரை இழுக்கும் பக்கம் எல்லாம் போகக் கூடாது. 


இங்கே மெய் அடக்கம் பற்றி கூறினார். 


ஏழாவது, 




யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


எல்லா புலன்களையும் கட்டுப் படுத்துவது நல்லது. அப்படி முடியாவிட்டால், நாக்கு ஒன்றையாவது கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். இல்லை என்றால் துன்பத்திற்கு துணையாக போக வேண்டி வரும். 


எட்டாவது, 


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.


எவ்வளவு தான் நல்லவை சொன்னாலும், ஒரே ஒரு தீயச் சொல் முன் செய்த அத்தனை நன்மைகளையும் அழித்து விடும். தீய சொல் என்பது சொல்லும், பொருளும் சேர்ந்த ஒன்று. சில சமயம் சொல் இனிதாக இருக்கும், பொருள் தீமையாக முடியும். மற்ற சில சமயங்களில் பொருள் இனிதாக இருக்கும், சொல் தீச் சொல்லாகப் போய் விடும். இரண்டுமே சரியாக இருக்க வேண்டும். 


ஒன்பதாவது, 


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.


தவறான ஒரு சொல்லினால் ஒருவர் மனம் வருந்தினால், அந்த வருத்தம் வடு போல மாறாது என்றும் நிற்கும். எனவே, கோபம், எரிச்சல் என்று வரும் போது அவசரத்தில், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும். 


ஏழு, எட்டு, ஒன்பது என்ற மூன்று குறள்களில் நாவடக்கம் பற்றி கூறி இருக்கிறார். 


மெய் அடக்கத்திற்கு ஒரு குறள் சொன்ன வள்ளுவர், நாவட்டக்கதுக்கு மூன்று குறள்கள்  சொல்லி இருக்கிறார்.  அதில் இருந்தே தெரிகிறது அல்லவா, நாவடக்கம் எவ்வளவு முக்கியம் என்று. 


இறுதியாக பத்தாவது குறளில், மன அடக்கம் பற்றிக் கூறுகிறார். 


கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


கோபத்தை அடக்கி, கற்று, அடங்கியவனின் இனிய முகம் பார்க்கும் காலத்தை எண்ணி அறக் கடவுள் அவன் வரும் பாதை பார்த்து நிற்கும் என்கிறார். 


கோபத்தை காப்பது, கற்பது, அடங்குவது என்பதெல்லாம் மனதின் வேலைகள். எனவே அது மன அடக்கம் ஆயிற்று. 


இனி அடுத்த அதிகாரத்துக்குள் செல்லலாம். 


வழக்கம் போல் கேட்பது தான். 


தொடர்ந்து மேல் செல்வோமா அல்லது கொஞ்சம் இடை வெளி விடுவோமா ? தொடர்ந்து படிப்பது என்றாலும் சற்று சலிப்பாகவும், ஆயாசமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. .






Wednesday, May 11, 2022

திருக்குறள் - கற்றடங்கல்

 திருக்குறள் - கற்றடங்கல் 


முதலில் மெய் அடக்கம் சொன்னார். 


பின், நாவடக்கம் சொன்னார்.


இறுதியாக, மனவடக்கம் பற்றி கூறுகிறார். 


கோபத்தை காத்து, கற்று, அடங்கியவனை சென்று சேர அறக் கடவுள் எந்த வழியில் செல்லலாம் என்று காத்துக் கிடக்கும் என்கிறார். 


பாடல் 



கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_11.html


(Please click the above link to continue reading)


கதம்காத்துக் = கோபத்தை அடக்கி 


கற்றடங்கல் = கற்று, பின் அடங்கி 


ஆற்றுவான் = வழியில் 


செவ்வி = காலம் 


அறம்பார்க்கும் = அறக் கடவுள் பார்த்துக் கொண்டே இருப்பார் 


ஆற்றின் நுழைந்து = எந்த வழியில் சென்று அவனை அடையலாம் என்று 


அவன் போய் அறக் கடவுளை அடைய வேண்டாம். அறக் கடவுள் இவன் வரும் வழி பார்த்து நிற்பாராம். அறத்தின் உச்சம் இது. அடக்கத்தின் உச்சபட்ச பலன். 


கதம் என்றால் சூடு, கோபம். கத கதப்பாக இருக்கிறது என்கிறோம் அல்லவா? கோபத்தை காக்க வேண்டும். காவல் செய்யாவிட்டால் அது ஓடிவிடும். 


'கற்றடங்கல்' - கற்கவும் வேண்டும், ஆனால் நிறைய படித்து விட்டோம் என்ற திமிர் இல்லாமல் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பல பேருக்கு கல்வி அறிவு இல்லாமலேயே நிறைய கற்று விட்டதைப் போல ஒரு திமிர் வந்து விடுகிறது. 


செவ்வி - இதற்கு பரிமேலழகர் செய்யும் உரை அற்புதம். இந்தக் குறளில் மன அடக்கம் எங்கே சொல்லப் பட்டிருகிறது? சரியான காலத்தில் அறக் கடவுள் அவனை சென்று சேர்வார் என்றுதானே இருக்கிறது.  பரிமேலழகர் தன் உரையில்  சொல்கிறார் 


ஒருவன் அடக்கம் இல்லாதவனாக இருந்தால் அது ஏதோ ஒரு வழியில் வெளிப்படும். உடலால், வாக்கால், மனதால் எப்படியாவது அது வெளிப்படும். அப்படி இந்த மூன்றாலும் வெளிப்படாமல் இனிய முகம் உடையாவனாக இருக்கும் "காலம்" என்று செவ்வி என்ற வார்த்தைக்கு பொருள் சொல்கிறார். 


அடக்கம் மட்டும் இருந்தால் போதாது. அடக்கமாக இருக்கிறேன் என்று முகத்தை எப்போதும் 'உர்' என்று வைத்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? என்ன படித்து என்ன பலன், யாரிடமும் வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் இப்படி அடக்கமாக இருக்க வேண்டி இருக்கிறதே என்று வருந்திய முகத்தோடு இருந்தால் அறக் கடவுள் வரமாட்டார். அடக்கமும் இருக்க வேண்டும், முகமும் இனிமையாக இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும் 'காலத்தில்' அறக் கடவுள் வருவார் என்று சொல்வதன் மூலம் 'மன அடக்கத்தை' இந்த குறளுக்குள் கொண்டு வருகிறார். 


அப்படி இருப்பவன் வழி பார்த்து அறக் கடவுள் காத்து இருப்பாராம்.


இது இந்த அதிகாரத்தில் பத்தாவது குறள். இறுதிக் குறள். 


அடக்கம் உடைமை பற்றி படித்து விட்டோம். 


அடுத்து என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு இருங்கள். 


நாளை, இந்த அதிகாரத்தின் தொகுப்புரை பார்த்துவிட்டு பின் அடுத்த அதிகாரத்துக்குள் செல்வோம். 


எப்படி போகிறது? நன்றாக இருக்கிறதா? எளிமையாக இருக்கிறதா?  தெளிவாக இருக்கிறதா.  நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. இருப்பதை கொஞ்சம் எளிமை படுத்திச் சொல்கிறேன். அவ்வளவுதான். 


இந்த வேகத்தில் போனால், முழுவதும் படிக்க நிறைய நாள் ஆகும். மூல நூலை தேடித் பிடித்து வேகமாக வாசித்து விடுங்கள். இணைய தளத்தில் ஆயிரம் உரைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் என்று படித்தால் கூட மூன்று நான்கு மாதங்களில் முழு நூலையும் வாசித்து விடலாம். 


ஏன் காத்திருக்க வேண்டும்?





Tuesday, May 10, 2022

திருக்குறள் - நாவினால் சுட்ட வடு

திருக்குறள் -  நாவினால்  சுட்ட வடு 


பாடல் 


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு


நாம் அறிந்த தெரிந்த பாடல் தான். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


தீயினால் = தீயால் 


சுட்டபுண் = சுடப்பட்டதால் உண்டான புண் 


உள்ளாறும் = ஆறிவிடும் 


ஆறாதே = ஆனால், ஆறாதது ஒன்று இருக்கிறது 


நாவினால் சுட்ட வடு = அது நாவினால் சுட்ட வடு 


இதற்கு பரிமேலழகர் செய்யும் உரை நுட்பம் மிக உயர்ந்தது. 


தீயும் சுடும், சுடு சொற்களும் சுடும். ஆனால் தீயால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்டது ஆறாமல் வடுப் போல இருக்கும் என்று தான் பெரும்பாலானோர் பொருள் சொல்லுவார்கள். 


தீயினால் சுட்டால் வடு இருக்காதா? தீக்காயம் பட்டால் சுவடே இல்லாமல் மறைந்து விடுமா?  சின்ன தீக்காயம் பட்டால் கூட அது எளிதில் போவது இல்லை. பெரிய தீக் காயம் என்றால் போகவே போகாது. வடுப் போல இருந்து கொண்டே தானே இருக்கும். அப்படி இருக்க வள்ளுவர் ஏன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்றால்...


"தீயினால் சுட்ட புண் உள்ளாறும்" என்று சொல்கிறார். அதாவது தீயால் சுட்டால் அது உடலில் இருக்கும் ஆனால் உள்ளத்தில் இருக்காது.  போய் விடும். 


வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு இது புரியும். கையில் சில சமயம் சூடான எண்ணெய் தெறித்து தழும்பு வந்து விடும். என்ன ஆச்சு என்று கேட்டால் சமையல் செய்யும் போது எண்ணெய் தெறித்து விட்டது என்பார்கள். 


எப்ப தெறித்தது, என்ன செய்யும் போது நிகழ்ந்தது, என்ன எண்ணெய் என்றெல்லாம் கேட்டால் நினைவு இருக்காது. காரணம், அது உடலில் இருக்கிறது, மனதில் இல்லை. மறந்து போய் விட்டது. 


ஆனால், யாரவது ஒரு வார்த்தை தவறாகச் சொல்லி விட்டால், அது கணவனே ஆனாலும், ஆயுள் முழுவதும் மனதில் இருக்கும். மன்னிக்கக் கூட மன்னித்து விடுவார்கள். ஆனால், மறக்கவே மாட்டார்கள். 


அது ஒரு உதாரணம். அவ்வளவுதான். இந்த மாதிரி யாருக்கும் நிகழ்ந்து இருக்கும். 


பட்டாசு வெடிக்கும் போது நெருப்பு பட்டிருக்கலாம், பைக் silencer சுட்டிருக்கலாம், iron பண்ணும் போது தெரியாமல் கை பட்டு சுட்டு இருக்கலாம். வடு இருக்கும், தழும்பு உடலில் இருக்கும். ஆனால், மனதில் சுத்தாமாக இருக்காது. 


எனவேதான், சொற்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஒரு முறை சுட்டுவிட்டால் ஆயுள் வரை அந்த வடு மனதில் இருந்து போகாது. 


சொல் உடலைச் சுடாது. மனதைச் சுடும். 


இது பரிமேலழகர் செய்த நுட்பமான உரை. 


அவர் மேலும் ஒன்று சொல்கிறார். அது இலக்கண உரை. 


இந்தக் குறளில் இரண்டு செய்தி இருக்கிறது. 


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் - இது ஒரு செய்தி

நாவினால் சுட்ட வடு ஆறாது - இது மற்றொரு செய்தி. 


இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. இரண்டும் தனித் தனியாக நிற்கிறது.  தீயினால் சுட்ட புண்ணுக்கும், நாவினால் சுட்ட வடுவுக்கும் என்ன சம்பந்தம்? 


அது "குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்" என்பார் அவர். 


அதாவது இரண்டு வெவ்வேறு அர்த்தம் உள்ள செய்திகள் என்றாலும், அவற்றிற்கு உள்ள தொடர்பை குறிப்பால் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 


இராமன் நன்றாகப் படித்து தேர்வு எழுதினான். 


அதிக மதிப்பெண்கள் பெற்றான்.


என்று கூறினால், யார் அதிக மதிப்பெண் பெற்றது ? இராமன் என்று கூறவில்லை. 


சரி, படித்ததால் அதிக மதிப்பெண் பெற்றானா என்றால் அதுவும் கூறவில்லை. 


இருந்தும் நமக்கு புரிகிறது அல்லவா. இராமன் நன்றாகப் படித்து தேர்வு எழுதியதால் இராமன் அந்த முயற்சி காரணமாக நல்ல மதிப்பெண் பெற்றான் நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா? 


அது தான் வேற்றுமை அலங்காரம். 


வேற்றுமை அணி பற்றி பின்னொருநாளில் விரிவாக காண்போம். வேற்றுமை அணியில் பல வகைகள் உண்டு.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் காண்க. 


இந்த கடைசி மூன்று பாட்டால் நாவடக்கம் பற்றிக் கூறுகிறார். 


அப்படி என்றால் இன்னும் ஒரு குறள் இருக்கிறது. அதில் வேறு ஏதோ ஒரு விடயம் சொல்லப் போகிறார் என்று அர்த்தம். 


அது என்னவாக இருக்கும்?




அது போல என்று எதுவும் இல்லை. 




Monday, May 9, 2022

தேவாரம் - சிறு விறகால் தீமூட்டி

தேவாரம் - சிறு விறகால் தீமூட்டி 


ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் இந்த வாழ்க்கை நமக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, எதற்கு இந்த வாழக்கை என்று யார் நினைக்கிறார்கள். 


அப்படி என்ன பிடிப்பு இந்த வாழ்வில்?


நெருங்கிய உறவுகள் - அப்பா, அம்மா, கணவன், ,மனைவி, பிள்ளைகள். ஐயோ, இவர்களை விட்டு விட்டு எங்கே போவது. அவர்கள் தான் எனக்கு உயிர். பிள்ளையை விட உலகில் உயர்ந்த ஒன்று உண்டா? பத்து மாதம் சுமந்து பெற்று, மார் மேலும், தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளை அல்லவா? அதை பிரிய மனம் வருமா? 


நாவுக்கரசர் சொல்கிறார்....அப்படித்தானே பாசம் வைக்கிறாய். நாளை நீ இறந்த பின், நீ உயிருக்கு உயிராய் நினைத்த அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள். அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு என்று எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கிறாய்?


சரி, உறவு இல்லாவிட்டால் போகிறது. சேர்த்த செல்வம் இருக்கிறதே? பெரிய வீடு, தோட்டம், குளிர் சாதன வசதி, பெரிய கார், பெரிய தொலைக் காட்சி, நினைத்த போது எங்கும் செல்ல விமான வசதி, அதில் பயணச் சீட்டு வாங்க வசதி, வீட்டு வேலைக்கு ஆள்...இந்த சுகத்தை எல்லாம் விட்டு விட்டு எப்படி போவது?


நாவுக்கரசர் சொல்கிறார், "நீ எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள். நீ தளர்ந்த போது ஒரு செல்வமும் உன்னை தாங்கிப் பிடிக்காது. ஒரு செல்வமும் உன் கூனை நேராக்காது. ஒரு செல்வமும் உன் தலை முடி உதிர்வதை தடுத்து நிறுத்தாது. படுக்கையில் கிடக்கும் போது, மருத்துவர் சொல்லி விடுவார் "சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி விடுங்கள்" என்று. கட்டு கட்டாக பணம் இருந்து என்ன செய்ய. ஒரு மருந்தும் நம்மைக் காக்காது. இப்படி உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு உதவி செய்யாத பணத்தின் மேலா இவ்வளவு பிடிப்பு ? என்று கேட்கிறார். .


பாடல்  


எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்  எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_75.html


( pl click the above link to continue reading)


எத்தாயர் = எத்தனை தாயார் 


எத்தந்தை = எத்தனை தந்தைமார் 


எச்சுற்றத்தார் = எவ்வளவு சுற்றத்தார்கள் 


எம்மாடு = மாடு என்றால் செல்வம் என்று பொருள். எவ்வளவு செல்வம். 


சும்மாடாம் = சுமை தூக்கும்? எந்தச் செல்வம் உன்னைத் தாங்கும். 


ஏவர் நல்லார் = இதில் யார் நல்லவர்கள்?


செத்தால் = இறந்து போனால் 


வந்துதவுவார் ஒருவ ரில்லை  = உதவிக்கு ஒருவரும் வர மாட்டார்கள் 


சிறுவிறகால் தீமூட்டிச் = சிறு விறகால் தீமூட்டி 


செல்லா நிற்பர் = சென்று கொண்டே இருப்பார்கள். 


சித்தாய = சித்து, சித்தம், அறிவு 


வேடத்தாய் = உருவாய். ஞானமே உருவாக நின்றவனே என்று பொருள் 


நீடு பொன்னித் = சிறந்த பொன்னி நதிக்கரையில் உள்ள 


திருவானைக் காவுடைய செல்வா = திருவானைக்காவல் என்ற திருத் தலத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


என்றன் அத்தாவுன்  = எந்தன் தலைவனே,உன் 


பொற்பாதம் அடையப் பெற்றால் = பொன் போன்ற திருவடிகளை அடையப் பெற்றால் 


அல்லல் = துன்பம் 


கண்டங் = கண்டு அங்கு 


கொண்டடியேன் = கொண்டு அடியேன் 


என்செய் கேனே. = என்ன செய்வேன் 


அதாவது, உன் திருவடிகளை சரண் அடைந்தால்  துன்பமான வாழ்வை நான் அடைவேனா? அடைய மாட்டேன் என்பது பொருள் 


இங்கே, 'செல்லா நிற்பர்' என்றால் செல்வர் என்று பொருள். 


நிகழ் கால இடை நிலையாக் மூன்று சொற்கள் வரும். 


கிரு, கின்று, ஆநின்று.


இந்த மூன்றும் நிகழ் கால வினையை குறிப்பவை. 


இதில் நம் முதல் இரண்டை பழக்கத்தில் வைத்து இருக்கிறோம். .மூன்றாவதை விட்டு விட்டோம். 


உதாரணமாக, 


வருகிறான் (கிரு)


வருகின்றான் (கின்று)


வாராநின்றான் (ஆநின்று)


அதே போல் இங்கே

சிறு விறகால் தீ மூட்டி 


- செல்கிறார் (கிரு)

- செல்கின்றார் (கின்று)

- செல்லா நின்றார் (ஆநின்று)


அது இடையில் கொஞ்சம்   இலக்கணம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


'சிறு விறகால்'.   பெரிய விறகுகளை வைத்தால் அது பற்றி எரிய நேரம் ஆகும். சின்ன சின்ன விறகுகளை வைத்தால் சீக்கிரம் முடிந்து விடும். 


'செல்லா நிற்பர்'. அந்த சின்ன விறகு கூட முழுவதும் எரிந்து முடியும் வரை கூட நிற்க மாட்டார்களாம். அது பாட்டுக்கு எரியட்டும் , நாம கிளம்புவோம் என்று கிளம்பி விடுவார்கள் என்று உலக இயற்கையை சொல்கிறார் நாவுக்கரசர். 


இது தான் உலகம். 


அன்பு வைக்க வேண்டியதுதான். பாசம் வேண்டியதுதான். ஆனால், அதெல்லாம் அப்படியே உண்மை என்று நம்பி விடக் கூடாது. 


இந்த உலகில் யாருக்கும், யார் மேலும் பெரிய அன்பு கிடையாது. 


நம்புவது கடினம் தான். அதெல்லாம் இல்லை, என் பிள்ளை என் மேல் உயிரையே வைத்து இருக்கிறான் என்று நினைத்தால் ஒரு முறை மயானம் சென்று பார்க்க வேண்டும். 


இந்த உண்மை தெரிந்தால், உலகப் பற்று விடும். மனம் வேறு ஒன்றைப் பற்றும். 


பற்றட்டும். 



இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து

 இராமானுசர் நூற்றந்தாதி - ஒன்றத் திரித்து 


ஒரு விளக்கை ஏற்ற வேண்டும் என்றால் எண்ணெய் விட்டு, திரி போட்டு அதை ஏற்ற வேண்டும். 


திரி என்றால் திரிப்பது. ஒரு பருமனான நூலைப் போட்டால் அது சீக்கிரம் எரிந்து கருகி விடும். இரண்டு அல்லது மூன்று நூலை சேர்த்துத் திரித்து போட்டால் அந்த தீபம் நின்று எரியும். அதற்கு அறிவியல் கோட்பாடு இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று நூல்களை சேர்த்துத் திரித்தால், அதற்கு இடையே உள்ள இடைவெளி ஒரு குழாய் போல் செயல் பட்டு எண்ணெயை மேலே கொண்டு வரும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இருள் போக்க விளக்கை ஏற்றுகிறோம். விளக்குக்குத் திரி வேண்டும். 

ஆழ்வார்கள் பாசுரங்கள் நம் அறியாமை இருளை போக்க வந்தவை. அந்த பாசுரங்கள் அறிவு ஒளி தரும் விளக்கு என்றால் அதன் திரியாக எதாவது இரண்டு நூல் வேண்டுமே? அவை என்னென்ன?


வேதங்கள் ஒரு நூல், தமிழ் ஒரு நூல். இந்த இரண்டு நூலையும் திரித்து, ஞான விளக்கு ஏற்றினார்களாம். 


வேதம் யாருக்குப் புரியப் போகிறது? அதை படித்து உணர்வது கடினம். எனவே அதன் சாரத்தை எடுத்து, அதை இனிய தமிழில் நமக்குத் தந்தார் பொய்கை ஆழ்வார். அப்படி அவர் ஏற்றிய திருவிளக்கை தன் மனத்துள் இருத்திய இராமானுசன் எம் இறைவன் என்கிறார் ஆரவமுதனார். 


பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 

குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 

திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 

இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_91.html


(Please click the above link to continue reading)



வருத்தும் = வருத்தம் தரும், துன்பம் தரும் 


புறவிருள் மாற்ற = புற இருளைப் போக்க 


எம் = எம்முடைய 


பொய்கைப்பிரான் = பொய்கை ஆழ்வார் 


மறையின் = வேதங்களின் 


குருத்தின் பொருளையும் = ஆழமான பொருளையும் 


செந்தமிழ் தன்னையும் = செந்தமிழையும் 


கூட்டி =சேர்த்து 


ஒன்றத் = ஒன்றாக 


திரித்தன்று = திரித்து அன்று 


எரித்த = ஏற்றிய 


 திருவிளக்கைத்  = ஒளி பொருந்திய விளக்கை 


தன் திருவுள்ள‌த்தே = தன்னுடைய உள்ளத்தில் 


இருத்தும் பரமன் = கொண்ட பரமன் 


இராமானுசன் = இராமானுசன் 


எம் இறையவனே = எங்களுக்கு இறைவன் 


வேதம் படிக்க முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். பிரபந்தம் என்பது வேதத்தின் சாரம். நமக்குத் தெரிந்த மொழியில், இனிமையாக அதன் சாரத்தை நமக்கு அருளிச் செய்து இருக்கிறார்கள். 


பழச் சாறு போல. 


அள்ளி அள்ளி பருக வேண்டியதுதான் பாக்கி. 




திருக்குறள் - ஒன்றானும் தீச்சொல்

 திருக்குறள் - ஒன்றானும் தீச்சொல் 


ஆச்சாரியா வினோபா பாவே அவர்கள் ஒரு நாள் தான் பெற்ற அனைத்து கல்வி சான்றிதழ்கள், பட்டங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி, தீயிட்டு கொளுத்தி விட்டாராம். 


கேட்டதற்கு, "இதெல்லாம் இருபதால் தானே நான் படித்தவன் என்ற ஆணவம் வருகிறது? இப்போது , நான் படித்தவன் என்று சொல்லிக் கொள்ள ஒரு ஆவணமும் இல்லை. வித்யா கர்வத்தை தீயிட்டு கொளுத்தி விட்டேன்" என்றாராம். அது மட்டும் அல்ல, இந்த உலகில் நான் அறியாதவை எவ்வளவோ இருக்கிறது. ஒரு துளி படித்துவிட்டு, நானும் படித்தவன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்றும் கூறினாராம். 


அது தான் உண்மை நிலை. நாம் பெற்ற பட்டங்களுக்கு என்ன அர்த்தம்? என்றோ, ஏதோ ஒரு சில நூல்களை வாசித்து, தேர்வு எழுதினோம். அதற்கு ஒரு சான்றிதழ். அறிவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம். 


சில குறள்களை படிக்கும் போது, நாம் இதுவரை படித்தது ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். நாம் ஒன்றும் பெரிதாக தெரிந்து கொள்ளவில்ல என்ற அடக்கம் வரும். 


அப்படிப்பட்ட குறள்களில் இன்று நாம் காண இருக்கும் குறளும் ஒன்று. 


பாடல் 


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஒன்றானும் = ஒரு சொல்லாக இருந்தாலும் 


தீச்சொல் =தீய சொல்லின் 


பொருட்பயன் = பொருள் பயன் 


உண்டாயின் = உண்டாகுமானால் 


நன்றாகா தாகி விடும் = நன்று + ஆகாதாகி + விடும். நன்மை இல்லாமல் போய் விடும். 


சாரம் என்ன என்றால், ஒரு தீய சொல் கூறினால் கூட, அது  மற்ற நல்ல சொற்களின் பயனையும் இல்லாதாக்கி விடும். 


இந்த குறளுக்கு இவ்வளவு பில்ட் up தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். 


சொல்கிறேன்.


நாம் நம் நண்பர்களிடம், உறவினர்களிடம் எவ்வளவோ பேசுவோம். பேச்சு வாக்கில் ஒரு சொல், ஒரே ஒரு சொல் தவறுதலாக வந்து விழுந்து விட்டாலும், அது இதுவரை நாம் சொன்ன மற்றும் செய்த அத்தனை நன்மைகளையும் பயனற்றதாகச் செய்து விடும்.  இது ஒரு விளக்கம். 


யோசித்துப் பாருங்கள், ஒரு சொல் உங்களை சுட்டு இருக்கிறதா இல்லையா? 'சே, என்னைப் பற்றி அவன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்து இருக்கிறது. அதனால் தானே அப்படி ஒரு சொல் வந்து விழுந்தது..." என்று நீங்கள் வருத்தப் பட்டு இருக்கிறீர்களா இல்லையா? நீங்கள் சொன்னது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் சொல்லி நீங்கள் வருத்தப் பட்டு இருக்கிறீர்களா இல்லையா? அது மட்டும் அல்ல, அந்த ஒரு சொல் சொல்லிய பின், உங்கள் உறவு அந்த சொல்லிய நபரிடம் எப்படி இருக்கிறது? எவ்வளவு பெரிய உறவாக இருந்தாலும், ஒரு தீச் சொல் அதை முறித்து போட்டு விடும். 


சரி, 


சில பேர் தீமையை மனதில் வைத்துக் கொண்டே இனிமையாக பேசுவார்கள். பேச்சைக் கேட்டால் அவ்வளவு இனிமையாக இருக்கும். நாமும், அவர்கள் பேச்சில் மயங்கி ஏதோ சொல்லி விடுவோம் அல்லது செய்து விடுவோம். அது நமக்கு பின்னாளில் துன்பம் தரலாம். 


"பொருட் பயன்" என்றார். பொருள் , அதாவது அர்த்தம் நன்றாக இருக்கும். பயன் தீமையாக முடியும். கேட்க இனிமையாக இருக்கும் ஆனால் பயன் தீமையாக இருக்கும். 


இன்றும், பல அரசியல் வாதிகள் பேசுவதை கேட்கிறோம். மிக அழகாகப் பேசுவார்கள். அவர்கள் சொல்வதை நம்பி நாம் ஓட்டுப் போடுவோம்.  விளைவு என்ன என்று பின்னால் தெரியும். 


மேலும்,


பேசும் போது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கிறது, சொல்லின் பயன் இருக்கிறது.  "உடம்பு எப்படி இருக்கிறது?" என்ற சொற்களின் அர்த்தம் நமக்குத் தெரியும். ஆனால், யாரை, யார், எப்படி கேட்டார்கள் என்பதில் இருக்கிறது அதன் பயன்.  


"நான் அப்படி நினைத்து சொல்லவே இல்லை. அவன் தவறாக எடுத்துக் கொண்டால் அதுக்கு நான் என்ன செய்யமுடியும்" என்று நாமே சொல்லி இருப்போம், அல்லது பிறர் சொல்லக் கேட்டு இருப்போம். 


தீமை நினைத்து சொன்னது அல்ல. நாம் நினைத்த பயன் தீமை அல்ல. ஆனால், சொல்லின் பொருள் தீயதாக அமைந்து விட்டது. அதற்கு யார் பொறுப்பு? நாம் தான் பொறுப்பு. 


ஒவ்வொரு சொல்லையும், மிக கவனமாக கையாள வேண்டும். 


"படிக்கலேனா எருமை மாடு மேய்க்கத் தான் போற" என்று ஒரு தந்தை மகனிடம் சொன்னால், அவர் நினைத்த பயன் என்னவோ பையன் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால், சொன்ன சொல் தீய சொல். கடும் சொல் என்பார் வள்ளுவர். சொல்லில் வரும் குற்றங்களுள் ஒன்று கடும் சொல் சொல்லுவது. 


நல்லதைச் சொல்ல வேண்டும். 


நல்லதை நினைத்து நல்லதைச் சொல்ல வேண்டும். 


நல்லது சொல்லும் போதும் தீய சொற்கள் கலந்து விடாமல் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும். 


சரி, நிறைய பேசும் போது ஏதோ ஓரிரு சொல் வந்தால் குற்றமா என்றால், "ஒன்றானும்"  என்கிறார். ஒரு சொல், ஒரே ஒரு சொல் தவறாக வந்து விடக் கூடாது என்கிறார். 


ஒரு சொல் நல்ல சொல்லா தீய சொல்லா என்று எப்படி கண்டு பிடிப்பது. நான் நல்லது நினைத்துதான் சொன்னேன். தீய சொல் சொல்ல வேண்டும் என்று நினைக்கவே இல்லை என்று கூறினாலும், வள்ளுவர் சொல்கிறார், நீ சொன்ன சொல் நல்லதா அல்லது தீயதா என்பது அந்த சொல்லின் பயனைப் பொறுத்தது என்கிறார். 


"தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்" தீய சொல் சொன்னால் அதனால் விளையும் பயன் எதுவோ அந்தப் பயனை உன் நல்ல சொற்கள் தந்தால், உன் நல்ல சொல்லும் தீச் சொல் தான். 


சரி, சொல்லியாச்சு, அதனால் என்ன என்று கேட்டால், 


"நன்றாகா தாகி விடும்" - நன்மை இல்லாததாகி விடும். இதுவரை செய்த நன்மை எல்லாவறையும் அந்த ஒரு சொல் போக்கி விடும். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போல. 


ஒரு சொல்லால் உறவுகள் பிரிந்து இருக்கின்றன, குடும்பங்கள் சீரழிந்து இருக்கின்றன. 


சொற்களை மிக கவனமாக கையாள வேண்டும். 


அதற்கு பயிற்சி வேண்டும். 


பயிற்சி எப்படி செய்வது, உயர்ந்த நூல்களை படிப்பது, உயர்ந்தவர்கக்ளிடம் பேசுவதின் மூலமும், அவர்கள் பேசுவதைக் கேட்பதன் மூலமும். 



Sunday, May 8, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - முன்னுரை 


நாம் பல ஆங்கிலப் படங்கள் பார்க்கிறோம். James Bond, Spider Man, Iron Man என்று பெரிய பலமான கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள். அவற்றில் வரும் கதாநாயகர்கள் நம்ப முடியாத செயல்களைச் செய்வார்கள். பறப்பார்கள், வலை பின்னுவார்கள், கப்பல், ஆகாய விமானம் என்று அனைத்து வித வண்டிகளையும் சர்வ சாதரணாமாக ஓட்டுவார்கள். 


நமக்குத் தெரியும் அது எல்லாம்சும்மா வெறும் கற்பனை என்று. அவர்கள் செய்வது போல நம்மால் செய்ய முடியாது. நம்மால் ஒரு கையை உயர்த்தி பறக்க முடியுமா? 


எனவே, அது ஒரு பொழுது போக்கு என்று நாம் தள்ளி விடுகிறோம். அந்தக் கதாநாயகர்கள் செய்யும் நல்ல காரியத்தை கூட நாம் அதுவும் ஒரு கற்பனை என்று தள்ளி விடுகிறோம். 


இராமன் ஒரு கதாநயாகன். அவன் நம்ப முடியாத, மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை மட்டுமே காப்பியம் முழுவதும் செய்து கொண்டிருந்தால், நாம் இராமன் வழியில் நடக்க முடியாது என்று முடிவு செய்து விடுவோம். 


இராமன் அப்படி அல்ல. அவன் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


(pl click the above link to continue reading)


மனிதன் என்று கூறினால், மனிதர்களுக்கு உள்ள அத்தனை குறை நிறைகளோடும் இருக்கிறான். 


அவனும் நம்மை மாதிரித்தான் என்று நமக்கு அவன் மேல் ஒரு பிடிப்பு வருகிறது. ஒரு தோழமை வருகிறது. அவன் செய்தது போல நாமும் செய்தால் என்ற எண்ணம் வருகிறது. 


நம்மைப் போல அவன் அழுகிறான், மனைவியின் அழகில் மயங்குகிறான், காதல் வயப்படுகிறான், நல்லது கெட்டது அறியாமல் குழம்புகிறான், நட்பில் குழைகிறான், பிரிவில் தவிக்கிறான்,  தம்பி மேல் பிள்ளை போல் பாசத்தைப் பொழிகிறான், அப்பா மேல் அவ்வளவு பாசம் காண்பிக்கிறான், அம்மாவுக்கு ஒரு தனி இடம் தருகிறான்,  அறிவும் அனுபவமும் கலந்து அறிவுரைகள் வழங்குகிறான்...இப்படி இராமனை நம்மில் ஒருவனாக, அதே சமயம் பால் உயர்ந்த குணங்களை அவனுள் ஏற்றி கம்பன் காட்டுகிறான். 


நம்மாலும் இராமன் போல வாழ முடியும், அவன் போன பாதையில் போக முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறான். 


இராமனை மகனாக, மாணவனாக, காதலனாக, கணவனாக, அண்ணனாக, அறிவு புகட்டும் ஆசானாக, மனைவியை பிரிந்து புலம்பும் சாதாரண மனிதனாக, தம்பியை இழந்து தற்கொலைக்கு முயலும் ஒரு பாசமிகு அண்ணனாக, அண்டியவரை காப்பாற்றும் ஒரு சத்ரியனாக நாம் காண இருக்கிறோம். 


இனி வரும் நாட்களில் இராமனின் பலவித ஆளுமைகளை நாம் கம்பன் ஊடாக இரசிக்கலாம். 


மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


இராமன் என்ற மானுடனை நாம் சிந்திக்க இருக்கிறோம்.