Tuesday, August 29, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான் 


ஒருவனை பணம் இல்லாதவன், ஏழை என்று திட்டலாம். பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


அறிவில்லாதவன் என்றால் கொஞ்சம் கோபம் வரும். இருந்தாலும், அறிவு என்பது கடல் போன்றது என்பதால், ரொம்ப பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


உயிரில்லாத பிணமே என்று திட்டினால் யாருக்கும் பெரும் கோபம் வரத்தான் செய்யும். 


வள்ளுவர், அப்படி திட்டுகிறார். 


யாரைத் தெரியுமா?


ஒப்புரவு அறியாத மக்களை, உயிரற்ற பிணம் என்று சாடுகிறார். 


பாடல் 


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


ஒத்தது = உலகுக்கு ஏற்றது எது என்பதை  


அறிவான் = அறிந்து செய்பவன்


உயிர்வாழ்வான் = உயிரோடு வாழ்பவன் என்று ஏற்றுக் கொள்ளப்படுவான் 


மற்றையான் = மற்றவர்கள் எல்லாரும் 



செத்தாருள் வைக்கப் படும் = இறந்தவர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். 


அது எப்படி, ஒத்தது அறியாவிட்டால் பிணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?


உயிர் என்பது என்ன?


உயிர் மூன்று வகையான செயல்களை செய்விக்கும். 


ஆசையைத் தூண்டும். 


அறிவைத் தூண்டும். 


செயலைத் தூண்டும். 


இந்த மூன்றும் இல்லாவிட்டால், உயிரில்லை என்று பொருள். 


எறும்பில் இருந்து, புல் , பூண்டு, மரம், செடி, கொடி என்று உயிர் உள்ள அனைத்தும் இந்த மூன்றையும் வெளிப்படுத்தும். 


இதை நம் சமயத்தில் இச்சா சக்தி (ஆசை), கிரியா சக்தி (செயல்), ஞானா சக்தி என்று கூறுவார்கள். 


நமக்கு ஆசை இருக்கிறது. அதை அடைய அறிவு இருக்கிறது. அதை செயல்படுத்த உடல் இருக்கிறது. 


எங்கோ இருக்கும் நீரைத் தேடி ஆசை ஆசையாக மரம் தன் வேரை அனுப்புகிறது. வெளிச்சம் தேடி மேலும் மேலும் வளர்கிறது. 


இங்கே ஒப்புரவு இல்லாதவன் அறிவும், செயலும் இல்லாமல் இருப்பதால் அவனை உயிரற்ற பிணம் என்றார் என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார்"


ஒப்புரவு செய்யாதவன் வெறும் ஆசை மட்டும் உள்ளவன். எல்லாம் எனக்கு என்ற ஆசை உள்ளவன். 




Monday, August 28, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?


நமக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் நமக்கு தீங்கு செய்வது இல்லையா? 


நாம் அவர்களை பார்த்து பழகி இருக்க மாட்டோம். அவர்களால் நமக்கு சில சமயம் தீமை வந்து சேரலாம். 


உதாரணமாக, தெருவில் நாம் சென்று கொண்டிருக்கும் போது, வேற வண்டியில் வரும் ஒருவர் நம் மீதோ, அல்லது நமக்கு வேண்டியவர்கள் மேலோ மோதி பெரும் பொருட் செலவும், மன வலியும் உண்டாக்கி விடலாம். நாம் அவர்களுக்கு என்ன தீமை செய்தோம். ஒன்றும் இல்லை. இருந்தும் அவர்களால் பெரும் தீமை நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 


யாருக்கோ, யார் மேலோ கோபம். தெருவை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் நமக்கு அவசரமாக போக வேண்டி இருக்கும். சங்கடம்தான். 


இதுக்கெல்லாம் என்ன காரணம் ?


ஊழ். விதி. வேறு என்ன சொல்லுவது. 


சம்பந்தம் இல்லாதவர்கள் மூலம் நமக்கு தீமை வந்தால் என்ன செய்ய முடியும். விதி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. 


அப்படி இருக்க, நண்பர்கள் தீமை செய்தால், அதை ஏன் பெரிது படுத்த வேண்டும். அதுவும் விதி என்று ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்கிறது நாலடியார். 


பாடல் 




ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்

நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்

கழுமியார் செய்த கறங்கருவி நாட!

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_28.html


(please click the above link to continue reading)


ஏதிலார் = அறிமுகம் இல்லாதவர்கள் 


செய்த = செய்தது 


திறப்பவே தீதெனினும் = மிகப் பெரிய தீமை என்றாலும் 


நோதக்க = அதில் நொந்து கொள்ள 


 தென்னுண்டாம் = என்ன இருக்கிறது ?


 நோக்குங்கால்! = ஆராய்ந்து பார்த்தால் 


காதல் = அன்பு 


கழுமியார் = உடையவர்கள் (நண்பர்கள்) 


செய்த = செய்த 


கறங்கருவி = கறங்கு + அருவி = ஒலி எழுப்பும் அருவிகளை கொண்ட 


நாட! = நாட்டின் தலைவனே 


விழுமிதாம் = சிறப்பு உள்ளது 


நெஞ்சத்துள் நின்று = மனதில் வைத்துப் பார்க்கும் போது 


ஏதோ விதியினால் அவர்கள் நமக்கு தீங்கு செய்யும்படி நேர்ந்து விட்டது என்று எடுத்துக் கொண்டு போனால், அந்த அன்பின், நட்பின் பலம் மேலும் பெருகும். சிறப்பு உடையதாக இருக்கும். 



இந்த ஏதிலார் என்ற சொல்லை நம் வள்ளுவ ஆசான் காமத்துப் பாலில் கையாண்டு இருக்கிறார். (அறத்துப் பாலிலும் உண்டு. ஏதிலார் குற்றம் போல்) 


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


அவர்கள் இருவரும் காதலர்கள். அது பிறருக்குத் தெரியாது. ஏதோ ஒரு பொது நண்பரின் வீட்டில் ஒரு நிகழ்வுக்குப் போய் இருக்கிறார்கள். 


அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையின் அர்த்தம் அவர்களுக்குப் புரியும். ஆனால், மற்றவர்கள் பார்த்கும் போது, ஏதோ முன்ன பின்ன தெரியாத இருவர் பார்த்துக் கொள்வது போல இருக்குமாம். 


ஏதிலார் போல பொது நோக்கு நூகுதல் காதலார் கண்ணே உள என்கிறார் வள்ளுவர். 


அவர்களால்தான் அது முடியும் என்கிறார். 


அவர்கள் பார்த்து இரசிப்பதை இவர் பார்த்து இரசித்து எழுதியதை நாம் இரசிக்கிறோம். 


தமிழ் இலக்கியம். 


 

Saturday, August 26, 2023

திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும்

 திருவாசகம் - அச்சோ - எங்கே போக வேண்டும் 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் யாரைப் போய் பார்ப்போம்? மருத்துவரை அணுகுவோம்.


படிக்க வேண்டும் என்றால்? ஆசிரியரை அணுகுவோம். 


இப்படி ஒவ்வொன்றுக்கும் அந்தத் துறையில் திறமை உள்ளவர்களை அணுகுவோம் அல்லவா?


முக்தி அடைய?


முக்தி அடைய யாரை அணுக வேண்டும்?


யாரை அணுக வேண்டும் என்பது கூட இரண்டாவது பட்சம். யாரை அணுகக் கூடாது என்று தெரிய வேண்டும் அல்லவா?  


பல் வலிக்கு கண் மருத்துவரை பார்த்தால் என்ன ஆகும்?


மணிவாசகர் சொல்கிறார் 


"எனக்கு முக்தி அடைய ஆசை. ஆனால், முக்தி அடையும் வழி எது என்றே தெரியாத முட்டாள்களோடு நான் சேர்ந்து திரிந்து கொண்டிருந்தேன். நான் எந்தக் காலத்தில் முக்தி அடைவது? நல்ல வேளை நீ (சிவ பெருமான்) வந்து எனக்கு பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகளை அறுத்து, என் புத்தியில் உள்ள குற்றங்களை எல்லாம் போக்கி, என்னையும் உன் போல் ஆக்கினாயே , உன்னைப் போல கருணை செய்யக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் " 


என்று ஆச்சரியப் படுகிறார். 


நாம என்ன செய்து விட்டோம், இந்த சிவன் நமக்கு இவ்வளவு உதவி செய்கிறானே என்று ஒரு ஆச்சரியம். 


பாடல் 



முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,

பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,

சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_26.html


(please click the above link to continue reading)


முத்தி = முக்தி 

நெறி = வழி. முக்தி அடையும் வழி 


அறியாத = எது என்று அறியாத 


மூர்க்கரொடும் = முரடர்களோடு 


முயல்வேனை = முயற்சி செய்யும் என்னை 


பத்தி நெறி = பக்தி என்ற நெறியைக் 


அறிவித்து = அறியத் தந்து 


பழ வினைகள் = என்னுடைய பழைய வினைகள் யாவும் 


பாறும்வண்ணம் = பாறுதல் என்றால் அழித்தல், சிதற அடித்தல் 


சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தில் உள்ள மலங்களை (குற்றங்களை) நீக்கி 


சிவம் ஆக்கி =சிவத் தன்மையை தந்து 


எனை ஆண்ட - என்னை ஆட்கொண்ட 


அத்தன் = அத்தன் 


எனக்கு = எனக்கு 


அருளிய ஆறு = அருள் செய்த மாதிரி 


ஆர் பெறுவார்? அச்சோவே! = வேறு யாரு செய்வார்கள், அச்சச்சோ ...


முதலில், முக்தி அடைய வேண்டும் என்றால் அது அடையும் வழி தெரிந்தோரை அணுக வேண்டும். அல்லாமல், அது தெரியாத ஆட்கள் பின்னால் போகக் கூடாது. 


அடுத்து, பக்தி நெறியில் போனால் முக்தி கிடைக்கும். இறைவன் மணிவாசகருக்கு பக்தி நெறியை காட்டினான். சைவ சமயத்தில் மணிவாசகரை ஞான மார்கத்தின் தலைவர் என்று கொண்டாடுவார்கள். ஞானத்தில் பக்தி. 


அடுத்து, பக்தி நெறியில் சென்றால், பழைய வினைகள் அறுபடும். தொடராது. 


அடுத்து, மிக முக்கியமானது, சித்தத்தில் உள்ள குற்றங்கள் (மலம்) தெளிந்தால், சீவன் சிவமாகி விடும். தெளிவித்து என்றார். நீக்கி என்று சொல்லவில்லை. சித்தம் சலனப்பட்டு கிடக்கிறது. அது சலனம் இல்லாமல் இருந்தால், தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்துவிட்டால், சீவன், சிவமாம் தன்மை பெறும் என்கிறார். 


அடுத்து, அத்தன் எனக்கு அருளியவாறு என்கிறார். நானே படித்துத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. அவன் அருளாலே கிடைத்தது என்கிறார். 


அதாவது, மூடர்கள் தொடர்பை விட்டு, நல்லோர் தொடர்பைப் பற்றி, இறைவனை நாடினால், அவன் பக்தி நெறியில் நம்மை செலுத்தி, நம் பழைய வினைகளை மாற்றி, சித்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சிவமாம் தன்மை தருவான் என்பது தெளிவு. 






Wednesday, August 23, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே 


கொல்லாமை, பொய் சொல்லாமை என்று பல அறங்கள் இருக்கின்றன. இதில் எது சிறந்தது? இந்த ஒப்புரவு என்பது கொஞ்சம் கடினமான விடயம் போல இருக்கிறதே. கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எல்லாம் மற்றவர்களுக்கு கொடு என்றால் எளிதான காரியமாகத் தெரியவில்லை. 


பெற்ற பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு கொடுப்பதே கடினமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சமுதாயத்துக்கு கொடுப்பது? 


நன்றாக உடற் பயிற்சி செய்பவர்களை கேளுங்கள். ஒரு நாள் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு குறை போல இருக்கும். உடற் பயிற்சி என்பது கடினம்தான். இருந்தும், அதை செய்யாவிட்டால் ஏதோ இழந்த மாதிரி இருக்கும் அவர்களுக்கு. 


நன்றாக உணவு கட்டுப்பாடு உள்ளவர்களை பாருங்கள். ஒரு நாள் ஏதோ ஒரு இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டால், மிகப் பெரிய தவறு போல சொல்லிக் கொண்டு இருப்பார்கள். 


அவர்களைப் பொறுத்தவரை அந்த பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவ்வளவு நல்லது. அது இல்லாமல் இருக்க முடியாது. 


காரணம், அவர்கள் அதன் நன்மையை உணர்ந்து இருக்கிறார்கள். மேலும், அதை செய்து செய்து பழகி இருக்கிறார்கள். முதலில் அவர்களும் சங்கடப்பட்டுத்தான் இருப்பார்கள். 


பழகிய பின் அதன் சுகம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. 


அது போல, ஒப்புரவும், முதலில் சங்கடமாக இருக்கும். பழகினால் அதன் சுகம் தெரிய ஆரம்பிக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், "ஒப்புரவுக்கு இணையான ஒன்றை தேவர் உலகிலும், இந்த பூமியிலும் காண முடியாது" என்று. அவ்வளவு உயர்ந்தது என்று கூறுகிறார். 


பாடல் 


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)



புத்தேள் = சொர்கம், தேவர் உலகம்  


உலகத்தும் = உலகிலும் 


ஈண்டும் = இங்கும், அதாவது இந்த பூமியிலும் 


பெறல்அரிதே = பெற முடியாதே 


ஒப்புரவின் = ஒப்புரவைப் போல 


நல்ல பிற = பிற நல்ல ஒன்றை 


தேவர் உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதால் அங்கே போய் ஒப்புரவு செய்ய முடியாது. யாருக்கும் ஒன்றும் வேண்டாம். 


இந்த உலகில், மக்கள் ஒப்புரவின் நன்மைகளை புரிந்து கொள்வதில்லை. அதனால் செய்வது இல்லை. எனவே இங்கும் ஒப்புரவை செய்வது அரிது. 


அங்கே செய்வது அரிது. இங்கே காண்பது அரிது. 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பார் வள்ளுவ ஆசான். 


எலும்பைக் கூட கொடுத்து விடுவார்களாம். 


சமுதாயத்துக்கு கொடுப்பது என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். பொருள் சொன்ன பெரியவர்கள் எல்லோரும் பொருள் உதவி என்றுதான் உரை செய்து இருக்கிறார்கள். 


சற்று வித்தியாசமாக சிந்தித்தால் என்ன?


பொருள் உதவி மட்டும்தானா உதவி?


நம்மிடம் அறிவு இருக்கிறது. அதை சமுதாயத்துக்கு என்று செலவழித்தால் என்ன?  புத்தகம் எழுதலாம், ப்ளாக் எழுதலாம், நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம் (பணம் வாங்காமல்)...


நம்மிடம் அன்பு இருக்கிறது, அந்த அன்பை சமுதாயத்துக்குத் தரலாம். எப்படி?  இலவச சேவை, பொது நல சேவை,  தொண்டு நிறுவனங்களுக்கு சென்று நம்மால் முடிந்த உதவி. மாதத்தில் ஒரு நாள் சென்று பலன் எதுவும் எதிர்பார்க்காமல் சேவை செய்து விட்டு வருவது, இரத்த தானம் செய்வது, அன்ன தானம் செய்வது...செய்யலாம் தானே. 


தெருவில் நடந்து போகிற போது, பாதையில் கல் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிவிட்டுப் போவது கூட ஒரு ஒப்புரவுதான். 


இன்றைய சூழ்நிலையில், முடிந்த வரை நடந்து போவது, காரில் போனால் புகை, சுற்றுச் சூழல் மாசுபடும். அது மாசுபடாமல் காப்பது கூட சமுதாயத்துக்கு நாம் செய்யும் உதவிதான். 


ஒரு மணி நேரம் குறைவாக Air Condition ஐ உபயோகம் செய்தால், அதுவும் ஒப்புரவுதான். 


வாரத்தில் ஒரு நாள் ஒரு பொழுது விரதம் இருந்தால் எவ்வளவு பெரிய நன்மை இந்த சமுதாயத்துக்கு. 




வீட்டில் ஒரு விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்கு ஒரு வேளை இலவச உணவு கொடுங்கள். 


எவ்வளவோ செய்யலாம். மனம்தான் வேண்டும். 


சிறிதாக ஒன்றில் ஆரம்பியுங்கள்.  பழக பழக பிடித்துப் போய் விடும். 

Monday, August 21, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை 


நட்பு கொண்ட ஒருவர் ஏதோ தவறு செய்து விட்டார் என்ற காரணத்துக்காக அவரை விட்டு விலக நினைக்கலாம். 


அப்படி நண்பரை விட்டு விலகுவதும் ஒரு தவறு தானே? அவர் தவறு செய்தார் என்று நாம் விலக நினைப்பது, நாம் தவறு செய்வதாக முடியும் அல்லவா?


அவர் செய்தது ஒரு தவறு. 


நாம் செய்ய இருப்பதோ பல தவறுகள். 


ஒன்று, பழகிய நண்பரை விட்டு விலக நினைப்பது. 


இரண்டாவது, பொறுமை இல்லாமை. தவறு செய்தவரை பொறுக்கும் தன்மை இல்லாதது ஒரு சிறுமைதான். 


மூன்றாவது, நாம் தவறு செய்கிறோம் என்று அறியாமல் அது சரி என்று நினைப்பது. 


அவர் செய்தது ஒன்று. நாம் செய்ய இருப்பது மூன்று. 


எனவே, அவரைவிட நாம் அதிகம் குறை பட்டாவர்கள் அல்லவா?


பாடல் 




இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,

கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,

தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-

தாமும், அவரின் கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_21.html



(pl click the above link to continue reading)



இலங்கு = விளங்கும், இருக்கும், 


நீர்த் = நீர் 


தண் = குளிர்ந்த 


சேர்ப்ப! = கரையை உடையவனே. குளிர்ந்த நீர் இருக்கும் கடற்கரைக்கு தலைவனே. 


இன்னா செயினும் = தவறானவற்றை செய்தாலும் 


கலந்து = நண்பரிடம் 


பழி காணார் = பழி காண மாட்டார்கள் 


சான்றோர் = பெரியோர் 


கலந்தபின் = நட்பு ஆன பின் 


தீமை = அவர் செய்த தீமைகளை 


எடுத்து உரைக்கும் = பிறரிடம் எடுத்து சொல்லும் 


திண் அறிவு இல்லாதார் = திடமான அறிவு இல்லாதவர்கள் 


தாமும் = அவர்களும் (தவறு கண்டு பிடிப்பவர்களும்)  


அவரின் கடை. = தவறு செய்தவர்களை விட குறை நிறைந்தவர்கள். கீழானவர்கள் 


நட்பு, உறவு என்றால் அப்படித்தான் இருக்கும். அதற்காக ஊரெல்லாம் போய் "அவன் எனக்கு இப்படி செய்து விட்டான்" என்று சொல்லிக் கொண்டு திரிவது அழகா? 




Sunday, August 20, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை 


ஊருக்கு நல்லது செய்வது என்பதுதான் ஒப்புரவு. 


எவ்வளவு செய்வது? யாருக்குச் செய்வது என்றெல்லாம் கேள்வி வரும். ஊருக்கு செய்வது என்றால் செய்து கொண்டே இருக்கலாம். எவ்வளவு செய்தாலும், மேலும், மேலும் வேண்டும் என்று தோன்றும். நம்மிடம் அவ்வளவு செல்வம் இருக்க வேண்டுமே. 


அது முதல் சிக்கல். 


இரண்டாவது, ஊருக்குள் பல பேர் வேலை வெட்டி இல்லாமல், சோம்பேறியாக திரிந்து கொண்டிருப்பான். நல்லது செய்கிறேன் என்று அவர்களை எல்லாம் கூட்டி வந்து சாப்பாடு போட்டு பராமரிக்க முடியுமா?


மூன்றாவது, ஒருவனிடம் உள்ள செல்வம் அவன் மூதாதையர் தந்த செல்வமாக இருக்கலாம். பரம்பரை சொத்து என்று சொல்வார்கள். அதை தானம் செய்ய அவனுக்கு அதிகாரம் கிடையாது. பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அதற்கு வாரிசு. பணம் இருக்கும், ஆனால், கொடுக்க முடியாது. 


நான்காவது, தவறான முறையில் சேர்த்த பணத்தில் அன்ன தானம் செய்கிறேன், தண்ணீர் பந்தல் வைக்கிறேன் என்று ஊருக்கு நல்லது செய்தால் அது சரியா? ஊரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, இலஞ்சம் வாங்கி சேர்த்த பணத்தில் ஊருக்கு நல்லது செய்யலாமா?


இப்படி பல நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கொண்டு, ஒரே குறளில் அனைத்திற்கும் பதில் தருகிறார் வள்ளுவ ஆசான். 


பாடல் 


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_20.html


(please click the above link to continue reading)



தாளாற்றித் = முயற்சி செய்து 


தந்த = பெற்ற 


பொருளெல்லாந் = பொருள் எல்லாம், செல்வம் எல்லாம் 


தக்கார்க்கு = தகுதியானவர்களுக்கு 


வேளாண்மை = உதவி 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


முயற்சியால் பெற்ற செல்வம் , மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக. 


இதில் எங்கே மேலே சொன்ன கேள்விகளுக்கு விடை இருக்கிறது?  


தாளாற்றி = முயற்சியால். 


அதாவது ஒருவனின் சொந்த சம்பாத்தியம். பரம்பரை சொத்து இல்லை.  

மேலும், திருடி, கொள்ளை அடித்து அல்ல. வேலை செய்து, முயற்சியால் ஈட்டிய செல்வத்தைப் பற்றி இங்கே கூறுகிறார். 


தக்கார்க்கு = தகுதி உள்ளவர்களுக்கு. அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுப்பதைப் பற்றி இங்கே கூறவில்லை. நாம் உதவி செய்ய, அதை பெற்றுக் கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்று அறிந்து செய்ய வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லுவார்கள். 


வேளாண்மை செய்தல் = வேளாண்மை என்றால் உதவி. உதவி செய்யச் சொல்கிறார். இந்த அதிகாரம் ஒப்புரவு. எனவே, இது தனி மனித உதவி அல்ல. சமுதாய உதவி. சமுதாயத்தில் எந்தப் பிரிவினருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பொருள் எல்லாம் = இது ஒரு சிக்கலான இடம். தன்னிடம் உள்ள பொருள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் சொல்கிறார். அது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. எல்லாவற்றையும் எப்படி கொடுக்க முடியும். இதற்கு சரியான பொருள் எனக்குத் தெரியவில்லை. எப்படி வலிந்து பொருள் சொன்னாலும், அது மனதுக்கு சரி என்று படவில்லை. சிந்திக்க வேண்டிய இடம். அறிவும், அனுபவமும் வளர்ந்தால், ஒரு வேளை இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வரலாம். பொறுத்து இருக்க வேண்டும். 


இந்தப் குறளில் பரிமேலழகர் ஒரு பெரிய நுணுக்கம் செய்கிறார். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த குறளை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


தாளாற்றி தந்த பொருள் எல்லாம்

தக்கார்க்கு 

வேளாண்மை செய்தல் பொருட்டு 


என்று பிரித்தால், நாம் மேலே சொன்ன பொருள் வரும். 


மாறாக, பரிமேலழகர் இதை,


தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு 

வேளாண்மை செய்தற் பொருட்டு 


என்று பிரிக்கிறார். 


அதாவது, முயற்சியால் வரும் பொருள் எல்லாம் நல்லவர்கள் கையில் போய் சேர்ந்தால், அது பிறருக்கு உதவியாகப் பயன்படும் என்று பொருள் கொள்கிறார். 


தாளாற்றி வந்த செல்வம் எல்லாம் தக்கார்க்கு ஆயின், அவர்களுக்கு கிடைக்கும் என்றால், அது வேளாண்மை செய்தல் பொருட்டு, அது ஊருக்கு உதவி செய்ய கிடைத்த மாதிரி என்று பொருள் கொள்கிறார். 


நல்லவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு நன்மை உண்டு; கெட்டவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்று வைத்துக் கொள்வான் என்று பொருள் சொல்கிறார். 


கொஞ்சம் நீட்டித்து பொருள் சொல்வதாகப் படுகிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 


 



Tuesday, August 15, 2023

கந்தரனுபூதி - பாழ் வாழ்வு

 கந்தரனுபூதி - பாழ் வாழ்வு 


நமக்கு கிடைத்த இந்த வாழ்வு எவ்வளவு உயர்ந்தது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்.


ஆரோக்கியமான உடல், படிப்பு, செல்வம், குழந்தைகள், அமைதியான நாடு, ஒரு சில துன்பங்கள், சிக்கல்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. 


எத்தனையோ குறைகள், துன்பங்கள் வந்து இருக்கலாம். உடல் ஊனத்தோடு பிறந்து இருக்கலாம். சண்டை சச்சரவு நிறைந்த ஒரு நாட்டில் பிறந்து அகதியாக ஓட வேண்டி இருந்திருக்கலாம். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு இருக்கலாம், வாழ தகுதியில்லாத தட்ப வெப்பம் உள்ள நாட்டில் பிறந்து அவதிப் பட்டு இருக்கலாம். 


இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு கிடைத்து இருக்கிறது. 


நாம் அவ்வளவு நல்லவர்களா?  இதற்கு முன்னால் நாம் நல்லவர்களாக இருந்து இருப்போமா? வாய்ப்பு குறைவு. 


இருந்தும் நமக்கு இவ்வளவு நல்லது கிடைத்து இருக்கிறது. 


இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தப் பிறவியை பயன்படுத்தி, நல்லது செய்து இனி வரும் பிறவிகளில் துன்பம் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் அல்லவா?


இவ்வளவு இருந்தும், இந்த மாயை என்பது பிடிபட மாட்டேன் என்கிறது. எது சரி, எது தவறு, எது நிரந்தரம், எது அநித்தியம் என்று புரிவதில்லை.


இந்த அருமையான வாழ்வை சரி தவறு தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். காரணம் - அறியாமை. 


அதற்கு காரணம் முன் வினை. விதி. 


நாம் முன்பு செய்த பாவங்கள். 


அருணகிரி புலம்புகிறார் 


"இந்த பாழான வாழ்வை உண்மை என்று நம்பி மாயையில் கிடந்து உழலும் படி என்னை செய்து விட்டாயே. காரணம், நான் முன் செய்த வினைகளோ ? மாயையில் கிடந்து உழலும்படி செய்தாலும், இந்த அறிவைக் கொடுத்தாயே, நீ வாழ்க"  என்று. 


பாடல் 


பாழ் வாழ்வெனு மிப்படு மாயையிலே 

வீழ் வாயென என்னை விதித்தனையே 

தாழ் வானவை செய்தன தாமுளவோ 

வாழ் வாயினி நீ மயில் வாகனனே . 


சீர் பிரித்த பின் 


பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே 

வீழ்வாய் என  என்னை விதித்தனையே 

தாழ்வானவை செய்தன தாம் உளவோ 

வாழ்வாய் இனி  நீ மயில் வாகனனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)


பாழ் வாழ்வு = பாழான வாழக்கை 


எனும் = என்று சொல்லப்படும் 


இப் = இந்த 


படு மாயையிலே = பெரிய மாயையில் 


வீழ்வாய் என = நீ விழுந்து கிடப்பாய் என்று 


என்னை = என்னை 


விதித்தனையே  = விதியின் பலனாய் விட்டாய் 

 

தாழ்வானவை = தவறானவற்றை 


செய்தன தாம் = நான் செய்தது 


 உளவோ = இருக்குமோ 

 

வாழ்வாய் = வாழ்வாயாக 


இனி  நீ மயில் வாகனனே = இனி மயில் மேல் வருபவனே 


நான் பல வினைகள் செய்து இருக்கலாம். அதனால் இந்த பாழான வாழ்வை இனிமையானது என்று நம்பி அதில் விழுந்து கிடக்கிறேன். இருந்தும், இது பாழானது என்று அறியும் அறிவை நீ கொடுத்தாய். எனவே, இதில் இருந்து வெளிவர நான் முயற்சி செய்வேன். அந்த ஞானத்தை கொடுத்த முருகா, மயில் வாகனனே, நீ வாழ்க என்கிறார். 


அநுபூதி பெற்ற பின் பாடிய பாடல். அவருக்கு அந்த ஞானம் கிட்டியது. 


நமக்கும் கிட்டட்டும்.