Monday, August 28, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - நோதக்க என்னுண்டாம் ?


நமக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் நமக்கு தீங்கு செய்வது இல்லையா? 


நாம் அவர்களை பார்த்து பழகி இருக்க மாட்டோம். அவர்களால் நமக்கு சில சமயம் தீமை வந்து சேரலாம். 


உதாரணமாக, தெருவில் நாம் சென்று கொண்டிருக்கும் போது, வேற வண்டியில் வரும் ஒருவர் நம் மீதோ, அல்லது நமக்கு வேண்டியவர்கள் மேலோ மோதி பெரும் பொருட் செலவும், மன வலியும் உண்டாக்கி விடலாம். நாம் அவர்களுக்கு என்ன தீமை செய்தோம். ஒன்றும் இல்லை. இருந்தும் அவர்களால் பெரும் தீமை நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 


யாருக்கோ, யார் மேலோ கோபம். தெருவை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் நமக்கு அவசரமாக போக வேண்டி இருக்கும். சங்கடம்தான். 


இதுக்கெல்லாம் என்ன காரணம் ?


ஊழ். விதி. வேறு என்ன சொல்லுவது. 


சம்பந்தம் இல்லாதவர்கள் மூலம் நமக்கு தீமை வந்தால் என்ன செய்ய முடியும். விதி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. 


அப்படி இருக்க, நண்பர்கள் தீமை செய்தால், அதை ஏன் பெரிது படுத்த வேண்டும். அதுவும் விதி என்று ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்கிறது நாலடியார். 


பாடல் 




ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்

நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்

கழுமியார் செய்த கறங்கருவி நாட!

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_28.html


(please click the above link to continue reading)


ஏதிலார் = அறிமுகம் இல்லாதவர்கள் 


செய்த = செய்தது 


திறப்பவே தீதெனினும் = மிகப் பெரிய தீமை என்றாலும் 


நோதக்க = அதில் நொந்து கொள்ள 


 தென்னுண்டாம் = என்ன இருக்கிறது ?


 நோக்குங்கால்! = ஆராய்ந்து பார்த்தால் 


காதல் = அன்பு 


கழுமியார் = உடையவர்கள் (நண்பர்கள்) 


செய்த = செய்த 


கறங்கருவி = கறங்கு + அருவி = ஒலி எழுப்பும் அருவிகளை கொண்ட 


நாட! = நாட்டின் தலைவனே 


விழுமிதாம் = சிறப்பு உள்ளது 


நெஞ்சத்துள் நின்று = மனதில் வைத்துப் பார்க்கும் போது 


ஏதோ விதியினால் அவர்கள் நமக்கு தீங்கு செய்யும்படி நேர்ந்து விட்டது என்று எடுத்துக் கொண்டு போனால், அந்த அன்பின், நட்பின் பலம் மேலும் பெருகும். சிறப்பு உடையதாக இருக்கும். 



இந்த ஏதிலார் என்ற சொல்லை நம் வள்ளுவ ஆசான் காமத்துப் பாலில் கையாண்டு இருக்கிறார். (அறத்துப் பாலிலும் உண்டு. ஏதிலார் குற்றம் போல்) 


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


அவர்கள் இருவரும் காதலர்கள். அது பிறருக்குத் தெரியாது. ஏதோ ஒரு பொது நண்பரின் வீட்டில் ஒரு நிகழ்வுக்குப் போய் இருக்கிறார்கள். 


அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பார்வையின் அர்த்தம் அவர்களுக்குப் புரியும். ஆனால், மற்றவர்கள் பார்த்கும் போது, ஏதோ முன்ன பின்ன தெரியாத இருவர் பார்த்துக் கொள்வது போல இருக்குமாம். 


ஏதிலார் போல பொது நோக்கு நூகுதல் காதலார் கண்ணே உள என்கிறார் வள்ளுவர். 


அவர்களால்தான் அது முடியும் என்கிறார். 


அவர்கள் பார்த்து இரசிப்பதை இவர் பார்த்து இரசித்து எழுதியதை நாம் இரசிக்கிறோம். 


தமிழ் இலக்கியம். 


 

No comments:

Post a Comment