Monday, October 9, 2023

கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன்

 கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன் 



உணர்சிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம்தான். இருந்தாலும், நாம் சில உணர்ச்சிகளை பெண்களுக்கு உள்ளது என்றும், சிலவற்றை ஆண்களுக்கு உள்ளது என்றும் சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்.


உதாரணமாக, ஆண் பிள்ளை அழக் கூடாது. சிறு வயதில் அழுதால் கூட "..சீ, என்ன இது பொம்பள பிள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்வார்கள். நாளடைவில் அழுவது அசிங்கம் என்று அந்தப் பையன் புரிந்து கொள்கிறான். அழுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்கிறான். அது மட்டும் அல்ல, தான் அழுதால் பலவீனம் என்று நினைத்தால் பரவாயில்லை. அழுகை என்பதே பலவீனம் என்று நினைக்கிறான். நாளை அவன் மனைவி அழுதாலும், அவள் பலவீனமானவள் என்று எடை போடும் அவன் மனது. 


அது மட்டும் அல்ல, ஒரு துக்கம், கவலை என்றால் வெளியே சொல்லக் கூடாது, தைரியமாக இரு என்று சொல்லி வளர்க்கப் படுகிறான். சிறு வயதில் சரி. வயதாகும் போது பெரிய பிரச்சனைகள் வரும் போது, தனக்குத் தானே மனதில் வைத்துக் கொண்டு புளுங்குவான். மனைவி கேட்டால் கூட, "சும்மா இரு, ஒண்ணும் இல்ல" என்று எரிந்து விழுவான். 


இராமன் தனித்து நிற்கிறான். வானர படையை கொண்டு வந்தாகி விட்டது. இலங்கைக்குப் போக வேண்டும். 


கடலைப் பார்க்கிறான். சீதையை பிரிந்த துயர் அவனை வாட்டுகிறது. 


எவ்வளவு பெரிய, வலிமையான ஆளாக இருந்தாலும், மனைவியைப் பிரிந்த துயர் அவனுக்கும் இருக்கும் தானே. 


இரவெல்லாம் தூக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்து விட்டான். இன்னும் சூரியன் வெளி வரவில்லை. இராமன் வெளியே வந்து பார்க்கிறான். தாமரை மலர்கள் இன்னும் விரிய வில்லை...பொழுது இன்னும் சரியாக புலரவில்லை ....



பாடல் 




பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்

கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்

கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_9.html


(pl click the above link to continue reading)



பொங்கிப் பரந்த = பொங்கி, பெரிதாக உள்ள 


பெருஞ்சேனை  = பெரிய சேனை, பெரிய படை


புறத்தும் அகத்தும் = உள்ளும் வெளியும், எங்க பார்த்தாலும் 


புடைசுற்றச் = சுற்றி நிற்க 


சங்கின் = சங்கைப் போல 


பொலிந்த = பொலிவான, அழகான 


கையாளைப் = கைகளை உடைய சீதையைப்  


 பிரிந்த பின்பு= பிரிந்த பின்பு 


தமக்கு இனமாம் = தனக்கு நிகரனா (எது எதற்கு நிகர் என்று பின்னால் பார்ப்போம்)


கொங்கின் பொலிந்த = தேன் நிறைந்து விளங்கும் 


தாமரையின்  = தாமரைப் பூக்கள் 


குழுவும் = கூட்டம் அத்தனையும் 


துயில்வு உற்று = தூங்கி 


இதழ் குவிக்கும் = இதழ் மூடி இருக்கும் 


கங்குல் பொழுதும்= இரவு நேரத்திலும் 


துயிலாத கண்ணன் = தூக்கம் வராத கண்களை உள்ள இராமன் 


கடலைக் கண்ணுற்றான் = கடலை பார்த்தான் 


கண்களுக்கு தாமரையை உவமையாக சொல்வார்கள்.  அதிகாலையில் குவிந்து இருக்கும் தாமரை மலர். தாமரை கூட தூங்குகிறது. இராமனின் கண்கள் தூக்கம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. 


எந்த ஒரு மன நிலையில் இருந்து யுத்தம் செய்யப் போகிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


இராமனின் சோகத்தை பாட்டில் வழிய விட இருக்கிறான் கம்பன். 


அவற்றையும் காண்போம். 




Sunday, October 8, 2023

திருக்குறள் - வறுமை என்றால் என்ன?

 திருக்குறள் - வறுமை என்றால் என்ன?


வறுமை என்றால் என்ன?  


சொந்த விமானத்தில் போக முடியாத அளவுக்கு ஏழையாக இருக்கிறேனே என்று யாராவது கவலைப் படுவார்களா? அது வறுமை இல்லை. 


சரி, பத்து படுக்கை அறை உள்ள ஒரு வீடு இல்லையே என்ற வறுமையில் யாராவது வருந்துகிரார்களா?


இல்லை.


வறுமை என்றால் நமக்கு ஒன்று வேண்டும் ஆனால் அதை அடைய முடியவில்லை என்றால் வருவது. 


ஒரு கார் வேண்டும், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும், மூணு வேளை நல்ல உணவு வேண்டும், இதெல்லாம் இல்லை என்றால் வறுமை என்று சொல்லலாம். 


ஒரு பிச்சைகாரன் ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் வறுமை என்பான். 


எனவே, தான் அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாமல் போனால் அது வறுமை. 


இப்படி பார்ப்போம். 


ஒருவனுக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. ஊர் பக்கம் பத்து பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. வருடா வருடம் நெல் வருகிறது. வீட்டின் பின் புறம் பத்து பசு நிற்கிறது. பாலும், தயிரும் செழிப்பாக இருக்கிறது. 


ஆனால், மருத்துவர் சொல்லி இருக்கிறார் "அரிசியை கையில் எடுத்தால், சர்க்கரை கூடும், அப்புறம் அந்த கையையே எடுக்க வேண்டி வரும்" என்று. 


வீட்டு வேலைகாரர்கள் சோறு, குழம்பு என்று உண்டு மகிழ்வார்கள். முதலாளிக்கு கேப்பை களி தான் உணவு. அதுவும் ஒரு உருண்டைதான். 


யார் வறுமையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். 


அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாவிட்டால் அது வறுமை. 


வள்ளுவர் சொல்கிறார், 


ஒரு ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை எது என்றால், அவன் ஒப்புரவு செய்ய முடியாமல் போவதுதான். 


ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் தான் அவனுக்கு வறுமை என்று. 


பாடல் 


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_8.html


(please click the above link to continue reading)


நயனுடையான் = நயன் + உடையான் = நல்லது உள்ளவன், நல்லவன், ஒப்புரவு செய்பவன் 


நல்கூர்ந்தான் ஆதல் = ஏழையாக ஆகி விடுதல் 


செயும்நீர = செய்யும் தன்மை, அதாவது ஒப்புரவு செய்யும் தன்மை 


செய்யாது = செய்ய முடியாமல் 


அமைகலா வாறு = அமைந்து விட்டால் 


இரண்டு விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒன்று, இவ்வளவு பணம் இருந்து என்ன பலன்? யாருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஊருக்கு நல்லது செய்து அதனால் வரும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துவானம். இந்த பணம் இருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். இல்லை என்றால் வறுமை. இருந்தும் ஒன்றும் பலன் இல்லை என்றால், அதுவும் வருமைதானே. 


இரண்டாவாது, ஒப்புரவு செய்தால் வறுமை வந்துவிடுமே என்ற பயந்து, பணத்தை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டால், அந்த பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடியாததும் ஒரு விதத்தில் வறுமைதான் என்கிறார்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள். 


பொது நலம் என்பதின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 


ஏதோ கம்யூனிசம் , சோசியலிசம் என்பதெல்லாம் மேலை நாடுகளின் கண்டு பிடிப்புகள் என்று நாம் நினைக்கிறோம். அல்ல. வள்ளுவப் பெருந்தகை அவற்றைப் பற்றி எல்லாம் என்றோ சிந்தித்து இருக்கிறார். 


இதில் ஆச்சரியம் என்ன என்றால், இந்த பொது நல சிந்தனையை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டும், சட்டம் போட்டு கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல், அதை இல்லற தர்மமாக நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 


கார்ல் மார்க்ஸ், angels எல்லாம் சிந்திக்காத பகுதி. 


தனி  மனித சொத்துரிமை கூடாது என்று சோசியலிசம் கூறுகிறது. அபப்டி என்றால் எதற்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி வரும். உழைப்ப கட்டாயமாக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும். அதெல்லாம் நடக்காது. 


வள்ளுவர் வழி தனி வழி. நீ நன்றாக உழை. பொருள் சேர். அதை அனுபவி. அதே சமயம் அந்த பொருளால் சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய் என்கிறார். 


இதை அறமாக நம்மவர்கள் கருதினார்கள். 


அப்படி ஒரு பரம்பரை நம்முடையது. பெருமை கொள்வோம். 





Saturday, October 7, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2 


இராமன் வானர சேனைகளோடு இந்தியாவின் தென் கோடிக்கு வந்து விட்டான். இனி கடல்தான் இருக்கிறது. கடலைத் தாண்ட வேண்டும். ஒரு ஆள் தாண்டினால் போதாது. எழுபது வெள்ளம் வானர சேனையை அந்தக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். 


சாதரணமான காரியமா? 


மிகப் பெரிய வேலை. சிக்கலானதும் கூட. 


இராமனின் மனநிலை என்ன. அவன் நாடு பிடிக்க புறப்பட்டவன் அல்ல. மனைவியை பறி கொடுத்து, அந்தக் கவலையில் இருக்கிறான். 


நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். 


தளர்ந்து போய் இருப்போம். ஒரு சின்ன விடயம் கொஞ்சம் மாறிப் போனால் கூட சோர்ந்து விடுகிறோம். "ஆமா, அது கிடக்குது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ...இப்ப அது ரொம்ப முக்கியமா" என்று அலுத்துக் கொள்வோம். 


கவலை ஒரு புறம் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலை மிகப் பெரியதாக இருந்தாலும், மனம் தளராமல் இராமன் அதை செய்து முடிக்கிறான். 


இராமன் செய்து முடித்தான் என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டு மேலே போய் விடுகிறோம். அவன் எந்த அளவு மனத் துயரத்தில் இருந்தான் என்று கம்பன் பின்னால் காட்டுவான். பார்ப்போம்.  


சீதை போன்ற அன்பான மனைவியை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு துயரம். அந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும், எடுத்துக் கொண்ட வேலையை இராமன் சரியாக செய்து முடிக்கிறான். 


அது ஒரு பாடம். 


பாடல் 


ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,

வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,

பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த

ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/2.html


(pl click the above link to continue reading)



ஊழி திரியும் காலத்தும் = ஊழித் தீ பிடித்து எரியும் காலத்திலும் 


 உலையா = மாறாத, சிதையாத 


நிலைய = நிலையான 


உயர் கிரியும் = உயர்ந்த மலையும் (இமய மலை) 


வாழி வற்றா மறி கடலும்= என்றும் வாழும் வற்றாத பெரிய கடலும் (இந்தியப் பெருங் கடல்) 


மண்ணும் = அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மண், இந்திய நிலப் பரப்பு 


வட பால் வான் தோய = வடக்குப் பக்கம் உயர்ந்து வானத்தைத் தொட 


பாழித் = பெருமை உள்ள 


தெற்கு உள்ளன கிரியும் = தெற்குப் புறம் உள்ள மலை (விந்திய மலை) 


நிலனும் தாழ = தென் இந்தியாவும் தாழ 


பரந்து எழுந்த = புறப்பட்டு எழுந்த 


ஏழு-பத்தின் = எழுபது 


பெரு வெள்ளம் = வெள்ளம் என்பது இங்கே பெரிய கணக்கில் அடங்காத என்று பொருளில் வந்தது. பெரு வெள்ளம் என்றால் எண்ணில் அடங்கா 


மகர வெள்ளத்து இறுத்ததால் = மீன்கள் நிறைந்த தென் கடற்கரையை அடைந்தது. 


கொஞ்சம் குழப்பமாக இருக்கும். 


பெரிய படை வந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். மற்ற புலவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் - கடல் போன்ற பெரிய படை, இதுவரை யாரும் காணாத பெரிய படை, அந்த படை நடந்து வந்த தூசி வானைத் தொட்டது என்றெல்லாம் எழுதி இருப்பார்கள். 


கம்பன் அவ்வளவு சாதாரண புலவன் இல்லை. 


அவன் சொல்கிறான் 


"இவ்வளவு பெரிய படை வடக்கில் இருந்து தெற்கில் வந்து விட்டது. எனவே, தெற்கில் பாரம் அதிகம் ஆகி தென் புறம் தாழ்ந்து விட்டது. அதனால் வட புறம் உயர்ந்து விட்டது. இமய மலையும் அது சார்ந்த இடங்களும் மேலே ஏறி வானைத் தொட்டது, விந்திய மலையும் அது சார்ந்த தென் பகுதியும் தாழுந்து விட்டது"


என்று. 


கற்பனை பண்ணிப் பாருங்கள். முழு இந்தியாவை ஒரு சீசா பலகை போல ஆக்கிக் காட்டுகிறான். இந்த பிரமாண்டத்தை நம்மால் சிந்திக்க முடியுமா?  


மனம் விரிய வேண்டும். சின்ன சின்ன விடயங்களை விட்டு விட்டு மனம் இப்படி ஒரு பிரமாண்டத்தை யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்க யோசிக்க மனம் விரியும். இப்படி பழக பழக எல்லாவற்றிலும் பெரிய இறைவனை உணர முடியும். 


மேலும் சிந்திப்போம். 



Thursday, October 5, 2023

திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்

 திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்


ஒப்புரவு, அதாவது பொதுநலம் என்பது கட்டாயமா? எல்லோரும் செய்ய வேண்டுமா? செல்வம் இருப்பவர்கள், அரசியல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களால் செய்ய முடியும். 


சாதாரண மக்களால் செய்ய முடியுமா? நம் வீட்டை பார்க்கவே நமக்கு செல்வம் இல்லை. இதில் எங்கிருந்து ஊருக்கு நல்லது செய்வது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். 


இந்த வாதம் சரி என்று எடுத்துக் கொண்டால், உலகில் யாருமே செய்ய மாட்டார்கள். ஆயிரம் உரூபாய் உள்ளவன், பத்தாயிரம் இருப்பவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான் பத்தாயிரம் உள்ளவன், இலட்சம் உள்ளவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான். இப்படி போய்க் கொண்டே இருந்தால், உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனிடம் கேட்டால், நான் எவ்வளவு வரி கொடுக்கிறேன். அந்த வரி எல்லாம் அரசாங்கம் பொது நன்மைக்குத்தானே செலவழிக்கிறது. அதற்கு மேலும் வேறு நான் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேட்பான். 


இதை அறிந்த வள்ளுவர் சொல்கிறார், 


ஒப்புரவு என்பது கடமை இல்லை. சட்டம் இல்லை. யாரும் ஒருவர் மீது திணிக்க முடியாது.. ஆனால், நீயே சுற்றிமுற்றிப் பார். நீ சார்ந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார். அதை உயர்த்துவது அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவர் கடமை என்று உனக்கே புரியும். நீ செய், நான் செய் என்பதிற்கு பதில், எல்லோரும் செய்ய வேண்டும் என்ற இயற்கை அறிவு தானே வரும் உனக்கு. அந்த அறிவில் இருந்து நீ செய்வாய் என்கிறார். 


பாடல் 



இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_5.html

(pl click the above link to continue reading)



இடனில் = இடம் + இல் = இடம் இல்லாத. அதாவது ஒப்புரவு செய்ய இடம் இல்லமால், செல்வம் இல்லாமல் 


பருவத்தும் = இருக்கின்ற காலத்திலும் 


 ஒப்புரவிற்கு = ஒப்புரவு செய்ய 


 ஒல்கார் = தயங்க மாட்டார்கள் 


கடனறி = கடன் (கடமை) + அறி = அது கடமை என்று 


காட்சி யவர் = கண்டு கொண்டவர்கள், அறிந்தவர்கள்


அதாவது, ஒப்புரவு என்பது ஒவ்வொருவரது கடமை. 


பணம் இல்லை என்றால் என்ன? மனம் இருந்தால் போதும். அருகில் உள்ள பள்ளியில் சென்று பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம், வருடம் இரண்டு முறையாவது இரத்த தானம் செய்யலாம், தெருவில் நடந்து செல்லும் போது, பெரிய கல் சாலையில் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிப் விட்டுப் போகலாம், குப்பையை கண்ட இடத்தில் போடாமல், சுத்தமாக வைத்து இருக்கலாம், முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கலாம்...இதெல்லாம் சமுதாய நன்மை கருதித்தான்.


என்னிடம் பணம் இருக்கிறது என்று 24 மணி நேரமும் குளிர் சாதனத்தை ஓடவிடாமல், குறைத்து செலவழிக்கலாம். 


வீட்டில் ஏதோ விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்துக்கு ஒரு வேளை உணவை இலவசமாகத் தரலாம். ஒரு இடத்தில் எல்லோரும் இதைச் செய்தால், வருடம் முழுவதும் அந்த பிள்ளைகள் பசியால் வாடாமல் இருக்கும். 


இப்படி ஆயிரம் வழியில் ஒப்புரவு செய்யலாம்.. 



சமுதாய அக்கறை என்பது பணம் மூலம் தானம் செய்வது மட்டும் அல்ல. எவ்வளவோ வழியில் செய்யலாம். செய்ய வேண்டும். அது கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 




Wednesday, October 4, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி 


யுத்த காண்டத்தில் என்ன இருக்கப் போகிறது. இவன் அவனை வெட்டினான், அவன் இவனைக் கொன்றான் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். "இன்று போய் நாளை வா" போன்ற பஞ்ச் டயலாக் ஓரிரண்டு இருக்கலாம் என்பதுதான் பொதுவான அப்பிராயம். 


அது ஒரு புறம் இருக்க....


கணவன் மனைவி உறவு, அதில் எழும் சிக்கல்கள், அண்ணன் தம்பி பாசம், அப்பா மகன் வாஞ்சை, பாகப் பிரிவு, நட்பு இதெல்லாம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். அதைப் பற்றி எல்லாம் எல்லோருக்கும் அனுபவம் இருக்கும். கம்பன் அவற்றை மிக நுணுக்கமாக, அழகாக, ஆழமாக சொல்லி இருக்கிறான்.  அவை நித்தமும் நம்மை சுற்றி நிகழ்பவை. 


கம்பன் வாழ்விலும், அவன் வாழ்ந்த சூழ் நிலையிலும் இவை எல்லாம் இருந்து இருக்கும். 


யுத்தம் என்பதை எத்தனை பேர் நேரில் பார்த்து இருக்கிறோம். அது பற்றி நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது. ஏதோ கதையில், சினிமாவில் பார்த்து இருக்கலாம். யுத்தம் என்றால் ஏதோ கத்தி, துப்பாக்கி கொண்டு சண்டை போடுவது மாத்திரம் அல்ல. யுத்தம் பற்றி சிந்திப்பது, எப்படி ஆலோசனை செய்வது, யாரை எப்படி அனுப்புவது, இழப்புகளை எப்படி சமாளிப்பது, எதிரியை எப்படி எடை போடுவது, இப்படி பல விடயங்கள் இருக்கின்றன. சண்டை போடும் வீரனுக்குக் கூட இது எல்லாம் தெரியாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_4.html


(click the above link to continue reading)


கம்பன் விவரிக்கும் யுத்த காண்டம் மிக விரிவானது, ஆழமானது, அதிசயிக்கும் படி இருக்கிறது. எப்படி இந்த மனிதனால் இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஏதோ நேரில் பார்த்த மாதிரி எழுதி இருக்கிறாரே என்று நமக்கு வியப்பாக இருக்கும். கம்பன் போர் களத்துக்குப் போய் இருக்க மாட்டான். கத்தி எடுத்து சண்டை போட்டிருக்க மாட்டான். பின் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடிந்தது. அவன் ஒரு தெய்வப் புலவன் என்பதற்கு இந்த யுத்த காண்டம் இன்னொரு சாட்சி. 


ஆடு மட்டும் அல்ல, சண்டையை எப்படி அழகாகச் சொல்ல முடியும்? தலையை வெட்டினான், இரத்தம் பீரிட்டு வந்தது, கை உடைந்தது, கால் முறிந்தது என்பதை அழகாக எப்படி சொல்வது? 


சொல்கிறானே. படு பாவி, அதையும் இவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறானே. 


உதரணத்துக்கு, இந்திர சித்து இறந்து போகிறான். இராவணன் அவன் மேல் விழுந்து அழுகிறான். ஒரு பத்துப் பாடல் இருக்கிறது. அதைப் படித்து விட்டு இரசிகமணி டி கே சி கூறினார் "இப்படி பத்துப் பாடல் கிடைக்கும் என்றால் இன்னும் இரண்டு மூணு பிள்ளைகளை போரில் இழக்கலாமே" என்று. அவ்வளவு  அருமையான பாடல்கள். உலகையே புரட்டிப் போட்ட இராவணனை புரட்டிப் போட்ட சோகம் அது. 


அவன் சோகத்தை கண்டு வருந்துவதா, அதை இப்படி அழகாகச் சொல்லி இருக்கிறானே என்று வியப்பதா என்று நாம் செயலற்று நிற்கும் இடங்கள் அவை.  


யுத்தத்தில், வீரம், சந்தேகம், பாசம், கண்ணீர், இறுமாப்பு, உறுதி என்ற உணர்சிக் கொந்தளிப்புகள் உண்டு. 


கம்பன் அத்தனையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். 


ஒரு புறம் மனைவியை இழந்து, வருந்தி, கோபம் கொண்டு, சண்டை போட வந்திருக்கும் இராமன். 


மறுபுறம் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை, குரங்கு வந்து நாட்டை எரித்து விட்டுப் போய் விட்டது, மனிதர்களை எதிர்த்து சண்டை செய்ய வேண்டும், நம் பலம் என்ன, வரம் என்ன, பராகிரமம் என்ன என்று தோள் தட்டி நிற்கும் இராவணன் மறு புறம். 


காய் நகர்த்த வேண்டும். 


ஒரு தேர்ந்த டைரக்டர் மாதிரி, காமெராவை அங்கும் இங்கும் நகர்த்துகிறான் கம்பன். 


யுத்த காண்டத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து போவீர்கள் என்பதில் அணுவளவும் எனக்கு சந்தேகம் இல்லை. 


வாருங்கள், கம்பன் காட்டும் யுத்தத்தை காண்போம். 


இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை போர் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுவாரசியமாக கம்பன் அதைக் காட்டுகிறான். 


கம்ப இராமாயணத்தின் கிளைமாக்ஸ் அது. 


அதற்குப் பின், அக்னிப் பரீட்சை, முடி சூட்டு விழா, என்று படம் முடிந்து விடும். யுத்த காண்டம் தான் கம்ப இராமாயணத்தின் மகுடம் என்பேன். 



Tuesday, October 3, 2023

நாலடியார் - பீடிலார் செல்வம்

 நாலடியார் - பீடிலார் செல்வம்


நமக்கு  அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. யாரிடமாவது கைமாற்று வாங்க வேண்டிய சூழ்நிலை. ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்து விட முடியு. யாரிடம் கேட்கலாம்?


நாம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு ரௌடி இருக்கிறான். கொலை, கொள்ளை, என்று பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் கேட்போமா? 


அவ்வளவு ஏன், நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்லவர்தான். ஆனாலும், யாருக்கும் ஒரு உதவியும் செய்ய மாட்டார். யார் என்ன கேட்டாலும், ஏதாவது சொல்லி தட்டிக் கழித்து விடுவார். நாம் போய் கேட்டாலும், தரமால் வெறும் கையோடு அனுப்பி விடலாம்.


அவரிடம் கேட்போமா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


விழாம்பழம் பார்த்து இருக்கிறீர்களா?  வெளியே கடினமான ஓடு இருக்கும். கொஞ்சம் முள் இருக்கும். உள்ளே மெதுவான, இனிப்பான பழம் இருக்கும். அந்த பழத்தை வௌவால் நாடி வராது. காரணம், வௌவாலால் அந்த பழத்தை உண்ண முடியாது. 


தகுதி, சிறப்பு இல்லாதவரிடம் உள்ள செல்வம் அது போன்றது. யாருக்கும் பயன்படாது. 


பாடல்  


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா;

பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்

கருதுங் கடப்பாட்ட தன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_3.html


(please click the above link to continue reading)



அருகல தாகிப் = அருக முடியாமல், அருகில் செல்ல முடியாமல் 


பலபழுத்தக் கண்ணும் = பல பழங்களை பழுத்த பின்னும் 


பொரிதாள் = பெரிய பட்டையை உடைய 


விளவினை = விளா மரத்தை (விளாம் பழம் உள்ள மரத்தை) 


வாவல் =வௌவால் 


குறுகா = அணுகாது, அதனிடம் செல்லாது 


பெரிதணிய ராயினும் = பெரிய செல்வம் உடையவர் ஆயினும் 


 பீடிலார் = பெருமை இல்லாதவர் 


செல்வம் = செல்வம் 


கருதுங் = பிறருக்கு பயன் படும் என்று நினைக்கும் 


கடப்பாட்ட தன்று = தன்மை உடையது அல்ல .


விளாம் பழத்தை சுவைக்க வேண்டும் என்றால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து சுத்தியலால் அதன் தலையில் இரண்டு போட வேண்டும். போட்டால்,ஓடு உடையும். பின் உள்ளே உள்ளதை எடுத்து உண்ண முடியும். 


சில பேரிடம் உள்ள செல்வம் அப்படித்தான் இருக்கும். 


மாம்பழமா, கொய்யா பழம் போன்ற பழங்களை வௌவால் வந்து கொஞ்சம் உண்டு விட்டு போய் விடும். நம்மிடம் எவ்வளவோ இருக்கிறது. இந்த வௌவாலுக்கு, அணிலுக்கு கொஞ்சம் தந்தால் என்ன என்று அந்த மரங்கள் பெருந்தன்மையாக கொடுக்கும். ஒரு சில பழங்களை கொடுப்பதன் மூலம் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவது இல்லை என்று நினைக்கும். 


மேலும், அந்த பழங்களை கொத்தி தூக்கிச் செல்லும் வௌவால் , அதை உண்டு விட்டு, விதையை வேறு எங்கோ போட்டு விடும். அந்த மரம் அங்கே முளைக்கும். 


எளிய உவமை. சிறந்த கருத்து. 




Monday, October 2, 2023

திருக்குறள் - மருந்து மரம்

 திருக்குறள் - மருந்து மரம் 


ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இருக்கிற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டால், பின் நமக்கு ஒரு தேவை என்றால் யார் தருவார்கள்? நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கு ஒரு அவசரம், அவசியம் என்றால் யார் வந்து உதவுவார்கள்?  


அதெல்லாம் இந்த வள்ளுவர் யோசித்து இருக்க மாட்டாரா?


ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம், நல்ல மருந்து தரும் மரம் போன்றது என்கிறார். 


பாடல் 


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post.html


(please click the above link to continue reading)



மருந்தாகித் = நோய் தீர்க்கும் மருந்தாகி 


தப்பா  = தவறாமல் உதவி செய்யும் 


மரத்தற்றால் = மரம் போன்றது 


செல்வம் = செல்வம் 


பெருந்தகை  யான்கண்  = பெரிய தகைமை உடையவன் இடத்தில்  


படின் = இருக்குமானால் 


அது என்ன தவறாத மரம்?


பரிமேலழகர் சொல்கிறார்...


"சில மரங்கள் பலன் தரும், ஆனால், எங்கோ காட்டில் இருக்கும். அதை தேடி கண்டு பிடிக்கவே முடியாது அல்லது நாள் ஆகும். அவசரத்துக்கு உதவாது. 


சில மரங்கள், கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். ஆனால், அதன் பழமோ, பூவோ எப்போதும் இருக்காது. ஒரு சில பருவத்தில் மட்டும் தான் பூக்கும், காய்க்கும். நம்ம அவசரத்துக்கு உதவாது.


சில மரங்கள், ஊரின் நடுவில் இருக்கும், எப்போதும் பூக்கும், காய்க்கும் ஆனால் பலன் ஒன்றும் இருக்காது."


இப்படி எவ்வளவோ விதங்களில் பலன் தர தவறி விடலாம். 


அப்படி இல்லாமல், தன்னுடைய எல்லா பாகங்களையும் மருந்தாக பயன்படும்படி, எப்போதும் தந்து நிற்கும் மரம் போன்றது, ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம். 


மீண்டும் அந்த கேள்விக்கு வருவோம். 


ஒப்புரவு செய்து கொண்டே போனால் நம் கதி என்ன ஆவது?


ஒரு காலத்தில் மக்கள், அதிலும் பணம் படைத்தவர்கள், சமுதாயத்துக்கு உதவுவதை கடமையாக கொண்டு இருந்தார்கள். 


நாளடைவில் சுயநலம் பெருகி, கொடுப்பது குறைந்து விட்டது. 


இப்போது, அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பொது சேவைக்கு பணம் செலவழிக்க வேண்டும் என்பது சட்டம். 


Corporate Social Responsibility 


என்று அதற்குப் பெயர். 


நிறுவனங்கள்தானே செலவழிக்கிறார்கள். நான் இல்லையே என்று நினைக்கலாம். 


அப்படி செலவு செய்யும் நிறுவனங்கள் அந்த செலவை அவர்கள் விற்கும் பொருள்கள் மேல் ஏற்றி விடுவார்கள். அந்தப் பொருள்களை வாங்கும் நீங்களும் நானும் மறைமுகமாக ஒப்புரவு செய்து கொண்டுதான் இருக்கிறோம்.