Monday, January 8, 2024

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_35.html

நமக்கு ஏன் துன்பங்கள் வருகின்றது என்று கேட்டால், நாம் செய்த வினை. முன்பு செய்த வினை, இந்தப் பிறவி எடுத்த பின் செய்த வினைகள் என்று எல்லாம் சேர்ந்து கொண்டு நமக்கு துன்பம் தருகின்றன. 


அவற்றை எப்படி போக்குவது?  இனி துன்பங்கள் வராமல் எப்படி காத்துக் கொள்வது?


நம்மாழ்வார் கூறுகிறார் 


"கேசவா என்று சொல்லு. உன் எல்லா துன்பங்களும் ஓடிப் போய் விடும். அது மட்டும் அல்ல இனி ஒரு துன்பமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எமன் கூட உன் அருகில் வராத ஒரு தலம் இருக்கிறது. அங்கு போய் விட்டால் மரண பயம் கூட இருக்காது. அந்தத் தலம் "திருவனந்தபுரம்" என்ற தலம்"


பாடல்  


கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 

கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 

தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே 

(திருவாய் மொழி - 10-2-1, நம்மாழ்வார்) 


பொருள் 


கெடும் = முடிந்து போகும் 


இடர்ஆயஎல்லாம் = அனைத்துவிதமான துன்பங்களும் 


 கேசவா என்ன = 'கேசவா' என்று சொன்னால் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 

 

கொடுவினை செய்யும் = கொடிய செயல்களைச் செய்யும் 


கூற்றின் = எமனின் 


தமர்களும்  = கூட்டாளிகளும், கூட உள்ளவர்களும் 


குறுககில்லார் = கிட்ட கூட வர மாட்டார்கள் 


விடம்உடை = நஞ்சை உடைய 


அரவில் = பாம்பின் மேல் 


பள்ளி = அனந்த சயனம் 


விரும்பினான் = விரும்பி சயனிக்கும் 


சுரும்பலற்றும் = வண்டுகள் ரீங்காரம் செய்யும் 

 

தடம்உடை = அடையாளம் உள்ள 


வயல் = வயல்கள் நிறைந்த 


அனந்தபுரநகர் = திருவனந்தபுரம் என்ற தலம் 


புகுதும்இன்றே = இப்பவே போவோம் 


கேசவா என்ற சொல் வந்த வினைகளை தீர்க்கும். 


திருவனந்தபுரம் இனி வர இருக்கும் இன்னல்களை போக்கும். 


புகுதும் இன்றே....





 



திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம் 


நமக்கும் துறவறத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் என்ன துறவியாகப் போகிறோமா? அந்த எண்ணம் துளியும் நமக்கு இல்லை. பின் எதற்கு துறவறம் பற்றி நாம் படிக்க வேண்டும்?  துறவியாக போக விரும்புபவர்கள் படிக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். 


சற்று பொறுங்கள். 


ஏன் துறவறம் பற்றி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 


நாம் எல்லோருமே துறவிகள்தான். 


துறவு என்றால் என்ன? ஏதோ ஒன்றை துறப்பதுதானே ?


சிறு வயதில் பொம்மைகள் வைத்து விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் கோலி குண்டு, கிட்டிப் புள், பம்பரம், பட்டம் என்று விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் சைக்கிள், அதையும் துறந்தோம். 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை துறந்து கொண்டேதானே இருக்கிறோம். இல்லை, எதையுமே நான் துறக்க மாட்டேன் என்று இன்றும் சொப்பு சட்டி வைத்து விளையாடினால் எப்படி இருக்கும்?


ஏன் துறந்தோம்?  அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி அடைவதால் துறந்தோம். எனவே துறவு என்பது மன, அறிவு வளர்ச்சியின் அடையாளம். 


இரண்டாவது, சில விடயங்களை நாம் நன்மை நோக்கி துறக்கிறோம். உதாரணமாக, வயதானால், இனிப்பை துறக்கிறோம். உடம்பு ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை வியாதி வரும். இனிப்பு கிட்ட கூட போகக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சரி, இனிமேல் காப்பியில் சர்கரை போடாமல் குடிப்போம் என்று சர்க்கரையை துறந்து விடுகிறோம் அல்லவா. அது நன்மை நோக்கி வந்த துறவு. 


துறவு ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 


சர்க்கரை என்பது ஒரு உதாரணம். பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் மட்டுப் படும். இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று விட்டு விலகத் தோன்றும். அதுவும் ஒரு துறவு தான். 


ஒரு துறையில் நாம் முன்னேற வேண்டும், சிறப்பாக வேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்தத் துறையில் பெயர் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதைப் போல் செய்ய முயற்சி செய்வோம் அல்லவா. வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் சிறப்பாக வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களைப் போல வாழ முயற்சி செய்யலாம். அப்படி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் துறவிகள். அவர்கள் வழிகாட்டிகள். 


எப்படியும் நாம் கொஞ்ச கொஞ்சமாக துறவில் ஈடுபடுகிறோம். அதையே சிறப்பாகச் செய்து விட்டால் என்ன?  


துறவு என்பது தனி வாழ்க்கை முறை அல்ல. துறவு என்பது இல்லறத்தின் தொடர்ச்சி. அவ்வளவுதான். 


வயதாக வயதாக நாம் விரும்புகிறோமோ இல்லையோ, துறவு என்பது தானே நம் மீது திணிக்கப்படும்.  உறவுகள் நம்மைத் துறக்கும், ஆரோக்கியம் நம்மைத் துறக்கும், செல்வம் ஒரு பொருட்டாகத் தெரியாது...வலிந்து திணிக்கப்படும் துறவை விட நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவு சிறந்தது அல்லவா?  


துறவு என்றால் ஏதோ வாழ்வை உதறிவிட்டு ஓடிவிடுவது அல்ல. வாழ்வின் நீட்சி. அவ்வளவுதான். 


நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று அல்ல. வள்ளுவர் என்ன சொல்கிறார் சிந்திப்போம். நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். திறந்த மனத்துடன் இதை அணுகுவோம். 




 
















Saturday, January 6, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 6

  

 திருக்குறள் - இதுவரை - பாகம் 6

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/6.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை

16.  புறங்கூறாமை 

17. பயனில சொல்லாமை 

18. தீவினையச்சம் 


மேற்கண்ட 18 அதிகாரங்களின் தொகுப்புரை பற்றி சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


ஒப்புரவு அறிதல் - மன, மெய், மொழியால் வரும் குற்றங்களை நீக்கிய பின், ஒருவன் தான் பெற்ற செல்வத்தினை சமுதாய நலனுக்குக்காக செலவிடத் தலைப்படுவான். பொறாமை, பேராசை, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க நினைப்பது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது என்ற குற்றங்கள் எல்லாம் மறைந்த பின், ஒருவன் மகிழ்வான வாழ்வை நடத்துவான். அப்படி மகிழ்ந்து இருப்பவன், தான் மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதாது, தன்னைச் சார்ந்த சுமுதாயமும் மகிழ வேண்டும் என்று நினைத்து செய்வான். அது ஒப்புரவு எனப்பட்டது. அது தன் குற்றங்கள் மறைந்த பின்னால் தான் வரும் என்பதால், அவற்றின் பின்னே இந்த அதிகாரம் கூறினார். 


ஈகை - பொது நலம் குறித்து நல்லது செய்தாலும், அதில் கொஞ்சம் புகழ் வரும். நாலு பேர் புகழ்ந்து பேசுவார்கள். டிவி, செய்தித்தாள் இவற்றில் பேர் வரும். சுய இலாபம் இருக்கும். மாறாக, தனி ஒருவனுக்கு உதவி செய்தால், பெரிய விளம்பரம் இருக்காது. அதாவது, அதில் சுயநலம் கொஞ்சம் கூட இருக்காது. பொது நலத்துக்கு செய்வது போல், தனி மனிதனுக்கும் உதவி செய்வது ஈகை என்பது. கொஞ்சம் கூட விளம்பரம், சுய இலாபம் இல்லாமல் செய்யும் மனப் பக்குவம் வர வேண்டும் என்பதால், இதை ஒப்புரவின் பின் கூறினார். 


புகழ் - ஒருவன் இல்லறத்தை சிறந்த முறையில் நடத்தி, மன, மெய், மொழிக் குற்றங்களை நீக்கி, சமூகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் உதவி செய்து வாழ்ந்தால், அவனுக்கு நீடித்த புகழ் கிடைக்கும். புகழ் ஒன்றே ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்தினான் என்பதற்கு சான்று.  


புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் நிறைவு பெறுகிறது. 


இனி அடுத்து துறவறம் பற்றிப் பேசப் போகிறார். 


நாளை முதல் அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை நாம் சேர்ந்து பயணித்த அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 



Friday, January 5, 2024

நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச் சண்டை?

 நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச்  சண்டை?



புல் எவ்வளவு சிறியது. அதில் சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. புல்லறிவு என்றால் புல் போன்ற சிறிய அறிவு. சிற்றறிவு. கொசு மூளை என்று சொல்லுவார்களே அது. புல்லறிவாண்மை என்றால் அந்த சிறிய அறிவை பெரிய அறிவு என்று நினைத்துக் கொண்டு  பெருமிதம் கொண்டு அலைவது. 


சிலருக்கு படிப்பறிவு, பட்டறிவு எல்லாம் மிகக் கொஞ்சமாக இருக்கும். ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் ஏதோ எல்லாம் படித்த மேதாவிகள் மாதிரி பேசுவார்கள். 


அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களைப் பற்றி நாலடியார் பேசுகிறது. 


"இருக்கப் போகிற நாள் கொஞ்சம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதில் பலர் பேசும் பழிச் சொற்களை வேறு கேட்க வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நாளில், எல்லோரிடமும் சிரித்து பேசி மகழ்ந்து இருக்காமல், எல்லோரிடமும் எதற்கு சண்டை போட வேண்டும் ?"


அப்படி சண்டை போடுபவன், புல்லறிவாளன்.


பாடல் 

 


உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,

பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்

கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்

தண்டித் தனிப்பகை கோள்.


பொருள் 


உளநாள் = உயிரோடு இருக்கப் போகும் நாட்கள் 


சிலவால் = சில நாட்களே 


உயிர்க்கேமம் = உயிர்க்கு ஏமம் = உயிருக்கு துணை 


இன்றால் = யாரும் இல்லை 


பலர்மன்னுந் = பலரும் 


தூற்றும் பழியால் = பழிச் சொல்லை கேட்டு 


பலருள்ளும் = பலரிடத்தில், உள்ள பலரிடத்தில்   


கண்டரோ டெல்லாம் = காண்கின்ற பேர்களை எல்லாம் 


நகாஅ தெவனொருவன் = நகாது எவனொருவன் = சிரித்து மகிழாமல் எவன் ஒருவன் 


தண்டித் = வெறுத்து, ஒதுக்கி 


தனிப் = தனித்து 


பகை கோள் = பகை கொள்வது ஏன் ?


இருக்கிற கொஞ்ச நாளில் எல்லாரிடமும் சிரித்து பேசி மகிழாமல், எல்லாரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, பேச்சு வாங்கிக் கொண்டு, தனித்து இருப்பது புல்லறிவாண்மை என்கிறது நாலடியார். 


சண்டியர் மாதிரி எல்லாரிடமும் சண்டை போடுவதும் ஒரு சுகம் என்று நினைப்பது silly mind...













Thursday, January 4, 2024

Page View 26 Lakhs

 இன்று இந்த ப்ளாக் page view 26 இலட்சத்தை தொட்டு இருக்கிறது. 


வாசகர்களுக்கு நன்றி. 

Wednesday, January 3, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 5

 

 திருக்குறள் - இதுவரை - பாகம் 5

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/5.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை


இதுவரை மேலே உள்ள 15 அதிகாரங்களை சிந்தித்தோம். 


புறங்கூறாமை 


அழுக்காறாமை,  வெஃகாமை என்ற இரண்டும் மனதின் கண் நிகழும் குற்றங்கள். அதை அடுத்து மொழியின் கண் குற்றங்கள் பற்றி கூற இருக்கிறார். அதில் முதலாவதாக, புறங்கூறாமை பற்றி கூறுகிறார். அதாவது, ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறுவது. இது தேவையில்லாத ஒன்று. ஒருவர் தவறு செய்தால், அது தவறு என்று தெரிந்தால், அதை அவரிடமே நேரிடையாகவே கூறலாமே. அவர் இல்லாத போது கூறுவது என்பது நடந்ததை திரித்துக் கூறவே உதவும். அதனால் ஒரு பயனும் விளையாது. 


பயனில சொல்லாமை 


சொல்லில் ஏற்படும் குற்றங்கள் நான்கு. அவை பொய், குறளை, கடும் சொல், பயனில சொல் என்பவை. இதில் இல்லறத்தில் உள்ளவன் பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது. ஒன்றும் இல்லாவிட்டால் கூட மனைவியை "நீ இரதி மாதிரி இருக்கிறாய்' என்று பொய் சொல்லத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லறம் சிறக்காது. பொய்யை முற்றும் விலக்க துரவியால்தான் முடியும் என்பதால், அதை துறவறத்தில் வைத்தார். கடும் சொல்லை தவிர்க்க இனியவை கூறல் என்ற அதிகாரம் வைத்தார். மீதி இருக்கும் புறங்கூறாமை மேலே சொல்லிவிட்டபடியால், அடுத்து பயனில சொல்லாமை பற்றி கூறுகிறார். தனக்கும், பிறருக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை கூறாமல் இருப்பது. 


தீவினையச்சம் 


மனதின் கண் நிகழும் குற்றங்களும், வாக்கின் கண் நிகழும் குற்றங்களும் சொல்லிய பின், உடலின் கண் நிகழும் ஏனைய குற்றங்கள் பற்றி தொகுத்து ஒரே அதிகாரத்தில் கூறினார். தீய வினைகள் செய்ய அஞ்ச வேண்டும். அச்சம் வந்தால் தானே அதில் இருந்து விலகி விடுவோம். தவறான காரியம் செய்தால் மானம் போய்விடுமே என்ற அச்சம், தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தவறான காரியங்கள் செய்ய மாட்டோம். 


மேலும் சிந்திப்போம். 


 

Tuesday, January 2, 2024

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post.html


தான் பட்ட அவமானத்தால் வருந்தி தன் அண்ணனான இராவணனை அழைத்துப் புலம்புகிறாள் சூர்பனகை. 


இராவணா, நீ எதையெல்லாம் பார்த்து இருக்கிறாய்....


முன்பு ஒரு நாள் ஐராவதம் என்ற யானையின் மேல் ஏறி உன்னோடு போர் புரிய வந்தான் இந்திரன். அவனை போர்க் கோலத்தில் கண்டாய். பின் அவன் உன்னோடு போர் புரிந்து, உயிருக்குப் பயந்து தப்பி ஓடினான். அப்போது அவனுடைய முதுகைக் கண்டாய். அவன புற முதுகு காண ஓடச் செய்தாய். அப்பேற்பட்ட வலிமை உள்ளவன் நீ. உன் தங்கை இந்த நிலையில் இருந்து கவலைப் படுகிறேன். இதைக் காண வரமாட்டாயா என்று ஓலமிடுகிறாள். 


பாடல்  


'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்

     கணத்தொடும் அடர்ந்த

போர்த் தானை இந்திரனைப் பொருது,

     அவனைப் போர் தொலைத்து,

வேர்த்தானை, உயிர் கொண்டு

     மீண்டானை, வெரிந் பண்டு

பார்த்தானே! யான் பட்ட

     பழி வந்து பாராயோ?


பொருள் 


'ஆர்த்து = ஆரவராமாக சப்தம் எழுப்பிக் கொண்டு வந்த 


ஆனைக்கு-அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதம் 


உந்தி = அதன் மேல் ஏறி 


அமரர் = தேவ(ர்) 


கணத்தொடும் = படைகளோடு 


அடர்ந்த = போருக்கு வந்த 


போர்த் தானை = போர் தலைவனை 


இந்திரனைப் = இந்திரனை 


பொருது = சண்டையிட்டு 


அவனைப் = அந்த இந்திரனை 


போர் தொலைத்து = போரில் தோற்கடித்து 


வேர்த்தானை = உயிருக்கு பயந்து ஓடி உடல் எல்லாம் வேர்த்தானை  


உயிர் கொண்டு = உயிரை விடாமல் 


மீண்டானை = தாபியவனை 


வெரிந் = புற முதுகு 


பண்டு = பழைய நாளில், முன்பொரு நாள் 


பார்த்தானே!  = பார்த்த இராவணனே 


யான் பட்ட = நான் அடைந்த 


பழி வந்து பாராயோ? = பழியை பார்க்க வர மாட்டாயா ?


ஆனை என்ற சொல்லை எவ்வளவு அழகாக கையாள்கிறான் கம்பன். 


ஆனைக்கு அரசு - ஐராவதம் 

போர்த் தானை = போர்த் தலைவனை 

வேர்த்தானை = வேர்க்க விறுவிறுக்க ஓடியவனை 

மீண்டானை = உயிரை கையில் பற்றிக் கொண்டு மீண்டவனை 

பார்த்தானை = பார்த்தவனே 


கம்பனில் இரசிக்க ஆயிரம் இருக்கு. 


சூர்பனகையின் இந்த அவலம், பின்னாளில் எப்படி எல்லாம் வெடிக்கப் போகிறது என்று பார்க்க இருக்கிறோம். 


அசுர குலத்தை அடியோடு வேர் அறுத்தது அவள் பட்ட அவமானம். 


யாருடைய தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கக் கூடாது. 


கூனியின் தன் மானத்தை சீண்டியதால் கானகம் வர நேர்ந்தது. 


சூர்பனகையின் தன்மானத்தை சீண்டியதால் சீதையை இழந்து எவ்வளவு சோகம்!


இராவணன் சீதையை கவர்ந்தது தவறு. அந்த தவற்றின் வேர் எங்கே இருந்தது?


சிந்திப்போம்.