Friday, February 23, 2024

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?


இலக்குவனால் உறுப்புகள் சேதிக்கப்பட்ட சூர்பனகை, தன் தமையான கரனை நினைத்து புலம்புகிறாள். 


"இந்த மானிடர்கள் என்னை இந்த மாதிரி தண்டித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?  இந்தக் காட்டில் மறைந்து, தவம் செய்யும் முனிவர்களின் தவ வலிமையா? அரக்கர்களின் வலிமை குறைந்து போனதோ? எதிரில் நிற்கும் இவர்கள் பிரமனா, திருமாலா, சிவனா ? அவர்களுக்கு இணையான வலிமை படைத்த கரனே, என் நிலைமை காணாயோ?"


பாடல் 


 'மரன் ஏயும் நெடுங் கானில்

     மறைந்து உறையும் தாபதர்கள்

உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ?

     உற்று எதிர்ந்தார்,

"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?"

     எனும் ஆற்றல்

கரனேயோ! யான் பட்ட

     கையறவு காணாயோ?


பொருள் 


 'மரன் ஏயும் = மரங்கள் அடர்ந்த 


 நெடுங் கானில் = இந்தப் பெரிய கானகத்தில் 


 மறைந்து = மறைந்து 


உறையும் = வாழும் 


தாபதர்கள் = தவம் செய்யும் முனிவர்களின் 


உரனேயோ? = தவ வலிமையா? 


அடல் = சண்டை செய்யும் 


 அரக்கர் = அரக்கர்களின் 


 ஓய்வேயோ? = வலிமை குன்றியதோ ?


உற்று எதிர்ந்தார் = எதிர்த்து நிற்பவர்  


"அரனேயோ? = சிவனோ ?


அரியேயோ?  = திருமாலோ?


அயனேயோ?" = பிரமனோ?


எனும் ஆற்றல் = என்று சொல்லும்படி ஆற்றல் கொண்ட 


கரனேயோ! = கரனே 


யான் பட்ட = நான் பட்ட 


 கையறவு காணாயோ? = துன்பத்தைக் காண மாட்டாயா?




Thursday, February 22, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.html


மாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. 


வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை. 


வாழ்வின் நோக்கம் என்ன?  


வீடு பேறு அடைவது. 


அதற்கு வழி என்ன?


இல்லறம் - துறவறம். 


துறவறத்துக்கு இன்றியையாத ஒன்று - அருள். 


பிற உயிர்களை கொன்று தின்றால், மனதில் அருள் இல்லாமல் போகும். அருள் இல்லை என்றால் துறவு இல்லை. துறவு இல்லை என்றால் வீடுபேறு இல்லை. 


எனவே, புலாலை மறுக்கச் சொல்கிறார். 


புலால் உண்பவர்கள் சொல்லும் ஒரு தர்க்கம் இருக்கிறது. 


"...நான் அந்த ஆட்டை மாட்டை கொல்லவில்லை. யாரோ, ஏற்கனவே கொன்று அதன் மாமிசத்தை கடையில் வைத்து இருக்கிறான். நான் வாங்கவிட்டாலும், யாராவது அதை வாங்கி உண்ணத்தான் போகிறார்கள். இல்லை என்றால் குப்பையில் போடப்படும். எனவே, நான் கொல்லவில்லை. எனக்கு எந்த பாவமும் இல்லை..." என்று ஒரு சாரார் வாதம் செய்கிறார்கள். 


மற்றவன் 


"..நான் புலால் உண்பது இல்லை. விலங்குகளை வெட்டி வைக்கிறேன். வேண்டுபவர்கள் வாங்கி உண்கிறார்கள். அவர்கள் உண்பதால்தானே நான் வெட்டி வைக்கிறேன்?  யாருமே வாங்கவில்லை என்றால் நான் ஏன் விலங்குகளை வெட்டப் போகிறான் " 


இரண்டு பக்கமும் இப்படி கூறுவார்கள் என்று அறிந்து பரிமேலழகர் அதை மறுக்கிறார். 


"கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது"


அதாவது உண்பதால், கொலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே புலால் உண்பது கொலைக்கு காரணமாகிறது. 


கொலை செய்யப்பட்டதால், உண்கிறார்கள். எனவே புலால் உணவு காரியமாகிறது. 


அவ்வாறு காரணம், மற்றும் காரியம் இரண்டுக்கும் எதுவாக இருப்பதால், புலால் உண்பது துறவிகளுக்கு மறுக்கப்பட்டது. 


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 



Sunday, February 18, 2024

திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம்

 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.html

அருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?


அருள் வராத இடங்கள் எவை ?


வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், புகழில், பெருமையில் குறைந்தவர்களிடம் நமக்கு ஒரு ஆணவம், அவர்கள்மேல் ஒரு இளக்காரம், திட்டினால் பதிலுக்கு திட்டமாட்டார்கள் என்று ஒரு தைரியம். சிலர் அது போன்ற எளியவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது கிடையாது. அவர்கள் ஏதாவது கேட்டால் முகம் பார்த்து கூட பதில் சொல்ல மாட்டார்கள். 


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி மாற்றுவது?


வள்ளுவர் சொல்கிறார்,


"உன்னை விட மெலிந்த ஒருவன் மேல் நீ உன் வலிமையை காட்டுவதற்கு முன், உன்னை விட வலிமையான ஒருவன் முன் நீ நிற்பதாய் ஒருமுறை எண்ணிப் பார். உனக்கு எவ்வளவு பயம் இருக்கும், நடுக்கம் இருக்கும். அது உனக்கு பிடித்து இருக்கிறதா?  அது ஒரு வலிதானே ? அந்த வலிதானே உன் முன்னால் இருப்பவனுக்கும் இருக்கும் என்று நினைத்துப் பார். தானாகவே அருள் பிறக்கும் "


என்கிறார். 


பாடல்  


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


வலியார்முன் = தன்னை விட வலியவர்கள் முன் 


தன்னை நினைக்க = ஒருவன் தன்னை நினைத்துக் கொள்க 


தான் தன்னின் = ஒருவன் தன்னை விட 


மெலியார்மேல் = மெலிந்தவர்கள் மேல் 


செல்லும் இடத்து = செல்லும் பொழுது 


இந்தக் குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுணுக்கம் மிக அழகானது.


மெலியார் என்று உயர்திணையில் கூறினாலும், அது விலங்குகளையும், ஏனைய உயிர்களையும் சேர்த்தது என்கிறார். 


ஆட்டையும், மாட்டையும், வெட்டும் போது, என்னை விட  பலமான ஒருவன் என்னை இப்படி வெட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க வேண்டும் என்கிறார். 


மேலும்,


"செல்லும் இடத்து" என்றால் என்ன?  


ஒரு போக்குவரத்து துறை அதிகாரி உங்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு உண்டான certificate களை கேட்கிறார். ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாம் சரியா இருக்குமோ, இருக்காதோ என்று சந்தேகம் வரும். எவ்வளவு அபராதம் வருமோ என்ற பயம் வரும். ஆனால், அதே அதிகாரியின் முன் நாம் வண்டியில் இல்லாமல் நடந்து செல்லும் போது அந்தப் பயம் வருமா?  வராது. 


பயம் எப்போது வரும் என்றால், நம்மை விட வலியவன் நமக்கு துன்பம் தருவதற்கு வருகிறான் என்றால், பயம் வரும். அதைத்தான் 'செல்லும் இடத்து" என்றார். நாம் அவனிடம் போகிறோம். அவனால் நமக்கு துன்பம் வரலாம் என்றால் பயப்படுவோம் அல்லவா?  அது போல உன்னிடம் வருபவனை நினைத்துப் பார். என்கிறார். 


தானே அருள் வரும் என்கிறார். 


அப்படியாக அருளுடைமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது. 


அடுத்தது புலால் மறுத்தல் என்ற அதிகாரம். 







Saturday, February 17, 2024

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_17.html

பட்டருக்கு அபிராமியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. 


அவளைத் தவிர வேறு யாரையும் அவருக்குத் தெரியாது. 

மற்றவர்கள் எல்லாம் துச்சம் அவருக்கு. 


அபிராமி, அவளுடைய பக்தர்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் அவருக்கு வேண்டாம். 


அவர் சொல்கிறார், 


அபிராமி, நீ தான் எனக்குத் தெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் உனது பரிவாரங்கள் ஆனபடியால், அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன். அவர்களை எல்லாம் போற்றவும் மாட்டேன். மனதில் வஞ்சகம் உள்ளவர்களோடு சேர மாட்டேன். தன்னுடையது எல்லாம் நீ கொடுத்தது என்று இருக்கும் உன் பக்தர்களோடு வேறு பாடு கொள்ள மாட்டேன். எனக்கு என்ன தெரியும் உன்னைத் தவிர, உன் அருளைத் தவிர"


என்று. 


பாடல் 


 அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.


பொருள் 


அணங்கே! = தெய்வப் பெண்ணே


அணங்குகள் = மற்ற தேவ லோகப் பெண்கள் எல்லாம் (சரஸ்வதி, இலக்குமி) 


 நின் பரிவாரங்கள் = உன்னுடைய பரிவாரங்கள், உன் பின்னால் வரும் கூடத்தில் ஒருவர்கள் 


ஆகையினால் = ஆனபடியால் 


வணங்கேன் = அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன் 


ஒருவரை வாழ்த்துகிலேன் = அவர்களில் ஒருவரைக் கூட வாழ்த்தவும் மாட்டேன் 


நெஞ்சில் = மனதில் 


வஞ்சகரோடு = வஞ்சக எண்ணம் உள்ள ஆட்களோடு 


இணங்கேன் = சேர்ந்து இருக்க மாட்டேன் 



 எனது = தன்னுடையது எல்லாம் 


 உனது  = உன்னுடையது 


என்றிருப்பார் = என்று நினைக்கும் 


சிலர் யாவரொடும் = சிலரோடு 


பிணங்கேன் = மாறுபாடு கொள்ள மாட்டேன் 


அறிவொன்றிலேன்  = எனக்கென்று தனியே ஒரு அறிவும் இல்லை 


எண்கண் = என் மேல் 


நீவைத்த = நீ வைத்த 


பேரளியே = பெருங்கருணையே, பெரிய அன்பே, பெரிய கருணையே 


மத்தவங்க எல்லாம் தேவை இல்லை. நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும். நான் ஒன்றும் சிந்திக்கப் போவது இல்லை. அறிவு என்று ஒன்று இருந்தால் அல்லவா சிந்திக்க. 


நீ என் மேல் அன்பு வைத்து இருக்கிறாய். நான் உன் மேல். இதில் அறிவுக்கு என்ன வேலை இடையில். 


அன்பு என்பது ஆராய்வது அல்ல. அனுபவிப்பது. 


எதோ ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு,  தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் சிலரோடு நான் சேர மாட்டேன். அவனுக எப்படியோ போகட்டும்.


எனக்கு நீ, உனக்கு நான். 


உலகில் மற்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உனக்கு பக்கத்தில் கூட வர முடியாது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு ஒரு கவலை இல்லை. 


இந்த அன்பை புரிந்து கொள்ள தனி மனம் வேண்டும். 




.


 

 

Wednesday, February 14, 2024

திரிகடுகம் - முன் செய்த வினை

 திரிகடுகம் - முன் செய்த வினை 


சில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று. 


அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்.


"எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் இல்லாத வேலையாள், பகைக் கொண்ட சுற்றம். இந்த மூன்றும் முன் செய்த வினையால் வந்து நின்று ஒருவனது இறுதிக் காலம் வரை வந்து துன்பம் தரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது"


பாடல் 


எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்

செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப

முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்

நொந்தார் செயக்கிடந்தது இல். . .


பொருள் 


எதிர்நிற்கும் பெண்ணும் = என்ன சொன்னாலும், எதிர் வாதம் செய்யும் மனைவியும். எதிர்த்துப் பேசும் மனைவியும். 



இயல்பில் தொழும்பும் = இயல்பு + இல் + தொழும்பும் = ஒழுக்கம் இல்லாத வேலையாட்களும் 


செயிர்நிற்கும் சுற்றமும்  ஆகி = எப்போதும் பகை கொண்டு இருக்கும் சுற்றத்தாரும் 



 மயிர்நரைப்ப = முடி நரைக்கும் வயதான காலம் வரை 



முந்தை = முன்பு செய்த 


பழவினையாய்த் = பழைய வினைகளாக வந்து 


தின்னும் = ஒருவனது இன்பத்தை தின்றுவிடும், கொன்று விடும் 


இவைமூன்றும் = இந்த மூன்றும் 


நொந்தார்  = நினைத்துத் துன்பப் படுபவர்கள் 


செயக்கிடந்தது இல் = செய்யக் கூடியது ஒன்றும் இல்லை 


இனி வரும் பிறவிகளில் நல்ல அன்பான மனைவி, ஒழுங்காக வேலை செய்யும் பணியாள், அன்பு பாராட்டும் சுற்றத்தார் இவை வேண்டுமானால், நல்ல வினைகளை இப்போதே செய்ய வேண்டும். 




Tuesday, February 13, 2024

திருக்குறள் - அருளற்றானின் அறம்

 திருக்குறள் - அருளற்றானின் அறம் 


பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். 


அந்த தர்ம காரியங்களுக்குப் பின்னால் இருப்பது உயிர்கள் மேல் உள்ள அருள் அல்ல. என்னிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்ட, அரசியல் செல்வாக்குப் பெற, தனக்குப் புகழ் சேர்க்க என்று பல காரணங்கள் இருக்கும். 


அவர்கள் செய்வதெல்லாம் அறத்தில் சேராது. அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது அறத்தில் சேராது.  


அது எப்படி என்றால், சில சமயம் சில மடையர்கள் வாயில் இருந்து அபூர்வமாக சில நல்ல தத்துவங்கள் வருவதைப் போல. போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள். "அட...இது இவனுக்கு எப்படித் தெரியும்" என்று ஆச்சரியப்படுவோம். அது அவன் இயற்கை அறிவு அல்ல. ஏதோ வந்து விழுந்தது. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 


ஏறல் எழுத்துப் போல என்பார்கள். கடற்கரையில் நண்டு அங்கும் இங்கும் அலையும். சில சமயம் அதன் தடம் 'ட' மாதிரி இருக்கும், சில சமயம் 'ப' மாதிரி இருக்கும். உடனே, "ஆஹா, இந்த நண்டுக்கு தமிழ் தெரியும்" என்று யாராவது சொல்லுவார்களா? 


அது போல முட்டாள் சொல்லும் மெய்ப் பொருளும், அருள் இல்லாதவன் செய்யும் அறமும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்


பொருள் 


தெருளாதான் = தெளிவு இல்லாதவன் 


மெய்ப்பொருள் = உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்ட உண்மைப் பொருளை 


கண்டற்றால் = கண்டு சொன்னால் 


தேரின் = நினைத்துப் பார்த்தால் 


அருளாதான் = அருள் இல்லாதவன் 


செய்யும் அறம் = செய்யும் அறம் போன்றது 


ஓட்டு வேண்டும் என்று தலைக்கு இவ்வளவு பணம் என்று ஒரு அரசியல்வாதி கொடுக்கலாம். அது அறமா?  இல்லை. 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 


என்றார் வள்ளலார்.  அவர் ஒன்றும் செய்யவில்லை. வாடினார். அது அவர் அந்த பயிரின் மேல் கொண்ட அருள். 


அருள்தான் அடிப்படை. அதன் வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். செயலை வைத்து தீர்மானிக்க முடியாது. மனதை வைத்து தீர்மானிக்க வேண்டும். 




Monday, February 12, 2024

விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்

 விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்


உறவும் நட்பும் நல்லதா?


நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா?   தனி மரம் தோப்பாகுமா?  என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கிறோம்.


அது சரிதானா? 


நட்பினாலும், உறவினாலும் அழிவு வருவது இல்லையா? என்று விவேக சிந்தாமணி கேள்வி எழுப்புகிறது. 


பாடல் 



அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்

இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்

ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ


சீர் பிரித்த பின் 


அருமையும் பெருமைதானும்  அறிந்து உடன் படுவர் தம்மால்

இருமைம் ஒருமையாகி இன்புறற்கு  ஏதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் நட்பால்

ஒருமையில்  நரகம் எய்தும் ஏதுவே வேய் உயரு மன்னோ


பொருள் 


அருமையும் = அருமையான, சிறப்பான 

பெருமைதானும் = பெருமைகளும் 


அறிந்து = அறிந்து 


உடன் படுவர் தம்மால் = நட்பாக இருப்பவர்களால் 


இருமையும் = இந்தப் பிறவியும், மறு பிறவியும் 


ஒருமையாகி = ஒன்றாகி 


இன்புறற்கு  = இன்பம் அடைவதற்கு 


ஏதுவுண்டாம் = வழி உண்டு 


பரிவிலாச் = பரிவு, பாசம் இல்லாதா 


சகுனி போலப் = சகுனியைப் போல 


பண்பு கெட்டவர்கள் நட்பால் = பண்பு இல்லாதவர்கள் நட்பினால் 


ஒருமையில் = உறுதியாக 


 நரகம் எய்தும் ஏதுவே = நரகத்தை அடையும் வழி அதுவே 


 வேய் உயரு மன்னோ = மூங்கில்கள் உயர்ந்த காட்டினை உள்ள நாட்டினை ஆளும் அரசனே 


அறிவும், பெருமையும் உள்ள நண்பர்களால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகுனி போன்ற நண்பர்கள் வாய்த்தால் வாழ்க்கை நரகமாகி விடும். 


நாம் அந்த எல்லைகைளைத் தொட வேண்டாம். 


இன்றைய சகுனிகள் நம் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பவர்கள். கண்ட கண்ட whatsapp ஐ forward செய்பவர்களும் சகுனிகள்தான். நம் நேரத்தை வீணடிப்பவர்கள். நாம் அந்த நேரத்தை வேறு நல்ல வழியில் செலவிட்டு இருந்தால், நமக்கு நன்மைகள் கிடைத்து இருக்கும். அதை தடுப்பவர்கள் அந்த சகுனிகள். 


வெட்டிப் பேச்சு, அரட்டை, தவறான செய்திகளை பரப்புவது, பேசுவது இதெல்லாம் கூட சகுனித்தனம் தான். 


நாம் அப்படி ஏதாவது செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம்மால் நம் நண்பர்கள் பயன் அடைகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்வை நாம் இனிமையாக்குகிரோமா என்று சிந்திக்க வேண்டும்.