Tuesday, February 4, 2014

இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்

இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்


இறைவனைத் தேடி அலையாதீர்கள். 

உங்களுக்கு அவனைத் தெரியாது. அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்ற விவரங்கள் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் எப்படி போவது என்ற வழி தெரியாது.

ஆனால், உங்களை அவனுக்குத்  தெரியும்.நீங்கள் யார், எங்கே இருகிறீர்கள், எப்படி இருகிறீர்கள் என்று அவன் அறிவான்.

அவனை உங்கள் இருப்பிடத்திற்கு வரவழைக்க ஒரு வழி இருக்கிறது.

நல்வினை.

நல்லது செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி வருவான்.

சுக்ரீவன் இருந்த இடத்திற்கு இராமன் வந்தான். சுக்ரீவன் இராமனைத் தேடித் போகவில்லை. அவன் வேண்டும் என்று கூட விரும்பவில்லை. இராமனை அடைய எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், இராமன் அவன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

அதற்கு காரணம் என்ன ?

தீவினைகளை தவிர்த்து நல்லது செய்ததனால் என்று அவனே சொல்கிறான்.

பாடல்


ஆயது ஒர் அவதியின் கண்,
     அருக்கன் சேய், அரசை நோக்கி,
'தீவினை தீய நோற்றார் என்னின்
     யார்? செல்வ! நின்னை,
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல்
     ஆம் நலம் மிக்கோயை,
மேயினென்; விதியே நல்கின், மேவல்
     ஆகாது ஏன்'? என்றான்.

பொருள்

ஆயது = அந்த நேரத்தில்

ஒர் அவதியின் கண் = அந்த கூட்டத்தில்

அருக்கன் சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )

அரசை நோக்கி = அரசனாகிய இராமனை நோக்கி

'தீவினை  = தீய வினைகளை

தீய = தீய்ந்து போகும்படி

நோற்றார் = செய்தவர்கள்

என்னின் யார்?  = என்னை விட யார் இருக்கிறார்கள் நின்னை,

செல்வ! = செல்வனாகிய இராமனே

நாயகம் உலகுக்கு எல்லாம் = இந்த உலகுக்கே நாயகனாக. உலக நாயகன். இன்று யார் யாருக்கோ இந்த பட்டத்தை தருகிறார்கள். இராமனுக்கு கம்பன் தந்த பட்டம் "உலக நாயகன்"

என்னல் ஆம் = உன்னை நினைக்கலாம்

 நலம் மிக்கோயை = நலம் மிகுந்த உன்னை

மேயினென் = அடைந்தேன்

விதியே நல்கின் = இதை எனக்கு தந்தது விதியே

மேவல் ஆகாது ஏன்'? என்றான். = அடைய முடியாதது என்ன இருக்கிறது.

தீவினைகளை தவிர்த்தால் நல்லது நடக்கும் என்பது விதி. 

அதை மாற்ற முடியாது. 

இறைவன் நம்மைத் தேடி வருவதாவது ? இராமனுக்கு குடும்பச் சிக்கல். அதனால் வந்தான். வேறு எந்த கடவுளாவது அப்படி வந்து இருக்கிறார்களா ?


நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

என்பார் அருணகிரி.

நீலச் சிகண்டியில் (மயில்) ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன்  வருவான் என்கிறார்.

அவன் மட்டும் அல்ல , கூடவே மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவானாம். 

எப்ப வருவான் ?

எந்த நேரத்திலும் வருவான். எல்லா நேரத்திலும் வருவான். 

அதனால், இறைவனை நீங்கள் தேடி அலையாதீர்கள். நல்லதே செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி  நீங்கள் இருக்கும் இடம் வருவான். 


1 comment:

  1. அட, இது என்ன ஆச்சரியம்! திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் வருவான் என்று நினைத்தேனே? தினம் குளித்துவிட்டுப் பூசை செய்தால் வருவான் என்று நினைத்தேனே? சம்ஸ்கிருத மந்திரங்களை நூற்றி எட்டு முறை சொன்னால் வருவான் என்று எண்ணினேனே? அதெல்லாம் தவறா?!?!?

    ReplyDelete