Saturday, February 1, 2014

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும்

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும் 


பையனுக்கு அம்மா பெண் பார்த்து விட்டு வந்திருக்கிறாள். பையனுக்கு ஒரே ஆர்வம். தனக்கு பார்த்திருக்கும் பெண் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள.

பொண்ணு எப்படிமா இருக்கா ?

ம்ம்ம்...நல்லாத்தான் மூக்கும் முழியுமா அழகா இருக்கா....

என்ன நிறம்மா ?

ம்ம்ம்...நல்ல சிவப்புன்னு சொல்ல முடியாது...அதுக்குனு கருப்பும் இல்ல. ஒரு மாதிரி மாநிறமா இருக்கா...

உயரமா, குட்டையா ?

சராசரியா இருப்பா....

சரிம்மா...பாக்க யாரு மாதிரி இருப்பா ?

நம்ம வீட்டுல யாரு மாதிரியும் இல்லடா...அவ ஒரு புது மாதிரியா இருக்கா....

ஒரு சாதாரண பெண்ணை பற்றி சொல்ல்வது என்றாலே இவ்வளவு குழப்பம். ஒன்றும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

அபிராமியைப் பற்றி சொல்வதாக இருந்தால் ?

அவளைப் பற்றி எது சொன்னாலும் அது ஒரு முழுமையான வர்ணனையாக இருக்காது. பாதி உண்மை. மீதி பாதி உண்மை இல்லாதது. அவளை முழுமையாக சொல்லி முடியாது.

திணறுகிறார் பட்டர். என்ன சொல்லி விளக்கினாலும் அவளை முழுமையாக சொல்ல முடியவில்லையே என்று தவிக்கிறார்.

பாடல்

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே


பொருள்

ஐயன் அளந்த படி =  ஐயன் ஆகிய சிவன் அளந்து தந்த படி 

இரு நாழி கொண்டு = இரண்டு நாழி உணவைக் கொண்டு

அண்டம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

உய்ய = வாழும்படி

அறம் செயும் = தர்மத்தைச் செய்யும்

உன்னையும் போற்றி = உன்னையும் போற்றி

ஒருவர் தம் பால் = மற்றவர்களிடம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு = தமிழால் செய்த பாடல்களைக் கொண்டு

சென்று = அவர்களிடம் சென்று 

பொய்யும் = உண்மை அல்லாதவற்றையும்

மெய்யும் = உண்மையையும்

இயம்ப வைத்தாய் = சொல்ல வைத்தாய்

இதுவோ உந்தன் மெய்யருளே = இதுவா உந்தன் உண்மையான அருள் ?

எப்படி நான் உன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல முடியும் ? என்ன சொன்னாலும் சரியாக வர மாட்டேன் என்கிறதே என்கிறார் பட்டர்.



1 comment:

  1. "பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்!"

    இலக்கியம் என்பதே பொய்யும் மெய்யும் நிறைந்ததுதானே! என்ன அழகான சொற்பதம். நன்றி.

    ReplyDelete