Monday, March 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை


ஒரு பெரிய கரிய யானை உங்களை நோக்கி வேகமாக வருகிறது. உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும் ?

என்ன செய்யுமோ ? ஏது செய்யுமோ என்று  பயத்தில் வெல வெலத்துப்  போவீர்கள் தானே ?

ஒன்று அல்ல ஐந்து மதம் கொண்ட யானைகள் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் ?

ஐந்து புலன்களும் ஐந்து யானைகள் போன்றவை.   அவற்றிற்கு கட்டாயம் பயப்பட வேண்டும். நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டவை அவை.

யாரால் அதை தடுத்து நிறுத்தி, அவற்றை  அடக்கி, அந்த யானைகளிடம் இருந்து வேலை வாங்க முடியும் ?

அப்படி செய்யும் தகுதி கொண்டவன் மிகப் பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

ஆலகால விஷத்தையே அமுதமாக்கியவனுக்கு, இந்த யானைகளிடம் இருந்து நம்மை காத்து அவற்றை நமக்கு அடிமை கொள்ளச் செய்வது ஒண்ணும் பெரிய காரியம்  இல்லை.

பாடல்


அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருள் 

அடல் =  வலிமையான  (அடலருணை திருக் கோபுரத்தே அந்த வாசலுக்கு - கந்தர் அலங்காரம் )

கரி போல் = யானையைப் போல  இருக்கும்

ஐம் புலன்களுக்கு = ஐந்து புலன்களுக்கு

அஞ்சி = அஞ்சி

அழிந்த என்னை = அழிந்த என்னை

விடற்கு அரியாய் =  விட  முடியாதவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே

விழுத் = பெருமை மிகுந்த

தொண்டர்க்கு அல்லால் = தொண்டர்கள் அல்லாதவர்களுக்கு

தொடற்கு அரியாய் = தொட முடியாதவனே

சுடர் மா மணியே = ஒளி  வீசும் மணி போன்றவனே

சுடு தீச் சுழல = சுழன்று எழும் தீ சுழல

கடல் கரிது ஆய் = கடலில் இருந்து

 எழு நஞ்சு  = எழுந்த நஞ்சை

அமுது ஆக்கும் = அமுது ஆக்கும்

கறைக்கண்டனே = கழுத்தில் கறை உள்ளவனே

விஷத்தை அமுது ஆக்கியவனுக்கு இது எல்லாம் ஜுஜுபி....



1 comment:

  1. "விடற்கு அரியாய்"- இது ஒரு சுவையான பிரயோகம். கடவுளால் அடியவனை விட முடியவில்லையா?!?

    ReplyDelete