Tuesday, March 4, 2014

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு

நீத்தல் விண்ணப்பம் - இன்னும் காட்டு 


நம்மிடம் பல வேண்டாத கொள்கைகள், செயல்கள், பழக்கங்கள் இருக்கின்றன. வேண்டாத என்றால் நம் இன்பத்திற்கு இடையுரான, நம் முன்னேற்றத்திற்கு தடையானவை.

இவற்றை எப்படி விடுவது, எப்படி நலனவற்றை ஏற்பது ?

நல்லன அல்லாதவற்றை விட்டு நல்லவற்றை எப்படி கைக் கொள்வது ?


வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கல் இது.

மாணிக்க வாசகர் வழி காட்டுகிறார்.

முதலில் தவறுகள் செய்யும் இடத்தை விட்டு விலக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு சாராயத்தை எப்படி விடுவது என்று யோசித்தால் நடக்குமா ?

சரி, தவறான சூழ்நிலையை விட்டு விலகி ஆயிற்று....அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

நல்லவர்கள் மத்தியில் போய் இருக்க வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் செய்யும் செயல்களை, சொல்லுவதை கேட்க வேண்டும்.

நாள் ஆக நாள் ஆக நம்மை அறியாமலேயே கெட்டவை விலகி, நல்லன நிகழத் தொடங்கும்.


பாடல்

கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

பொருள் 

கொழு மணி = சிறந்த மணிகள் போன்ற 

ஏர் நகையார் = அழகிய சிரிப்பை கொண்ட பெண்கள் . ஏர் என்பதற்கு கூரிமையான, ஆழமாக மனதை உழும் என்று பொருள் கொள்ளலாமோ?


(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் 
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்)

கொங்கைக் = மார்புகள் என்ற 

குன்றிடைச் சென்று = இரண்டு குன்றுகள் இடையே சென்று

குன்றி = துவண்டு (பலம் குன்றி )

விழும் அடியேனை  = விழும் அடியவனாகிய என்னை

விடுதி கண்டாய்?  = விட்டு விடுவாயா

மெய்ம் முழுதும் கம்பித்து = உடல் முழுதும் நடுங்கி

அழும் = கண்ணில் நீர் ஆறாக பெருக்கெடுக்கும்

அடியாரிடை = அடியவர்கள் மத்தியில்

ஆர்த்து வைத்து = என்னை வைத்து

ஆட்கொண்டருளி என்னை = என்னை ஆட் கொண்டு அருளி

கழு மணியே = தூய்மையான மணி போன்றவனே 

இன்னும் காட்டு = மேலும் காட்டுவாய்

கண்டாய் நின் புலன் கழலே = நான் முன்பு கண்ட உன் திருவடிகளை

இறைவன், மாணிக்க வாசகருக்கு தன் திருவடிகளை முதலில் காட்டி அருளினார். அதை மீண்டும் காட்டு என்கிறார்.

பெண் சுகம் என்ற சிற்றின்பத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடியை அடைய  அடியார்கள் மத்தியில் இருக்க வேண்டும். 

நீங்கள் இறைவனை நம்புகிறீர்களோ இல்லையோ. 

நீங்கள் அடியவர்களை நம்புகிறீர்களோ இல்லையோ.

ஒரு புறம் பெண் சுகம் என்ற சிற்றின்பம். மறு புறம் இறைவன் திருவடி என்ற பேரின்பம். 

இரண்டையும் இணைப்பது நல்லவர்களின் கூட்டு.

அல்லனவற்றை தாண்டி நல்லனவற்றை அடைய நல்லவர்களின் கூட்டு உதவும்  என்ற வரையில் நீங்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளலாம். 

தவறு செய்து பின் தன் காலைப் பிடித்த சந்திரனை இறைவன் தன் தலை மேல் தூக்கி  வைத்தான். 

யார் அறிவார், நீங்கள் பற்றித் தொடரும் நல்லவர்கள் உங்களை , நீங்களே எண்ணிப் பார்க்காத  இடத்திற்கு உங்களை கொண்டு ஏற்றி விடக் கூடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்பார் வள்ளுவர். 


2 comments:

  1. தவறு செய்தால் எப்படி அழ வேண்டும்? "மெய்ம் முழுதும் கம்பித்து" அழவேண்டும். என்ன ஒரு அருமையான வரி!

    "ஏரார்ந்த" என்பதன் பொருளும் இனிமை.

    நன்றி.

    ReplyDelete
  2. சிற்றின்ப நாட்டத்தினைத் தவிர்த்து இறை
    பேரின்பம் அடைவதற்கு வழி காட்டும் அற்புதப் பாடல். விளக்கம் தந்துள்ள விதம் போற்றுதற்குரியது.
    முத்துராமன் கோவை.

    ReplyDelete