Thursday, October 30, 2014

திருக்குறள் - மலரினும் மெல்லிது காமம்

திருக்குறள் - மலரினும் மெல்லிது காமம் 


அவனுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் சொல்லி அவளோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று ஒரே பரபரப்பாக வருகிறான். வீட்டிற்கு வந்தால் மனைவிக்கு தலைவலி, உடம்பு சரியில்லை. அவன் முகம் வாடிப் போகிறது.

இன்னொரு நாள், மனைவியோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவளருகில் போகிறான். அல்லது கணவனோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவள் அவன் அருகில் போகிறாள். திடீரென்று குழந்தை அழுகிறது.

மனம் வாடிப் போகும் அல்லவா ?

இப்படி காமத்தை அனுபவிப்பதற்கு இடம், காலம், இருவரின் மன நிலை, உடல் நிலை , சுற்று சூழல் என்று எல்லாம் பொருந்தி வர வேண்டும். இதில் ஏதோ ஒன்று குறைவு பட்டாலும், அந்த காமம் சுவைக்காது.

பாடல்

மலரினும் மெல்லிது காமம்; சிலர், அதன்
செவ்வி தலைப்படுவார்.

பொருள்

மலரினும் = மலரை விட

மெல்லிது  = மென்மையானது

காமம்; = காமம்

சிலர், = வெகு சிலரே

அதன் = அதனை

செவ்வி = அறிந்து

தலைப்படுவார் = அனுபவிப்பார்கள்

சரி, இதுக்கும், முதலில் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?

மலர் மென்மையானது. சட்டென்று வாடிவிடும் தன்மை கொண்டது.

சூடு அதிகமானால் வாடும், சூடு குறைந்தாலும் கருகி விடும், நீர் இல்லை என்றால் வாடும், நீர் அதிகமானால் அழுகி விடும்.

காமம் அதை விட  மென்மையானது.

மலர் வாடுவதற்கு சில காரணங்கள் என்றால், காமம் வாடுவதற்கு பல காரணங்கள் உண்டு.  எனவே,காமம், மலரை விட மென்மையானது.

மலரின் வாழ்நாள் மிகக் குறைந்தது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள்  இருக்கும்.

காமம் அதைவிட குறைந்த வாழ் நாள் கொண்டது. ஒரு கணத்தில் மறைந்து விடும்.

கணவனோ மனைவியோ நல்ல மன நிலையில் என்றால் மற்றவரின் காமம் அந்த நொடியில்  மறைந்து விடும்.

இதில் முக்கியமானது என்னவென்றால், இதை வெகு சிலரே அறிவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பொதுவாக, கணவனோ மனைவியோ மற்றவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல்  தங்கள் உணர்சிகளுக்கு வடிகால் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்.

காலம், இடம், சூழ்நிலை, மற்றவரின் மனநிலை என்று அனைத்தையும் கருத்தில் கொண்டு  காமத்தை அனுபவிப்பவர்கள் வெகு சிலரே.

மற்றவர்கள், என் தேவை பூர்த்தியானால் போதும் என்று நினைப்பவர்களாகவே  இருக்கிறார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

சிந்திப்போம்


தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே

தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே 


திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை  கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்கள். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதினார். கல் தெப்பமாக மிதந்தது. அதில் மிதந்து வந்து, கரை ஏறினார்.

பாடல்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்

சொற்றுணை வேதியன் = சொல்லுக்கு துணையான வேத வடிவானவன்

சோதி வானவன் = ஜோதியானவன்

பொற்றுணைத் = பொன் போன்ற

திருந்தடி = உயர்ந்த திருவடிகளை

பொருந்தக் கைதொழக் = பொருந்துமாறு கை தொழ
 
கற்றுணைப் = கல்லோடு

பூட்டியோர்  = கட்டி, ஒரு

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கிப் போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே.= நமச்சியாவே

பாட்டின் மேலோட்டாமான பொருள் இது.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த பிறவி என்பது பெரிய கடல்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர்.

கடலை சும்மாவே நீந்தி கரை காண்பது என்பது கடினமான காரியம்.

இதில் கல்லை வேறு கட்டிக் கொண்டு நீந்துவது என்றால் ?

பாசம், காமம், கோபம், என்று ஆயிரம் கல்லைக் கட்டிக் கொண்டு நீந்த நினைக்கிறோம்.

"கற்றுணை பூட்டியோர் " கல்லை துணையாக பூட்டி  என்கிறார்.எப்படி பூட்டுவது, அல்லது கட்டுவது ?

நாம் செய்யும் நல்லதும் தீயதும் தான் நம்மை இந்த உலகோடு சேர்த்து கட்டும் கயறு.

அறம் பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

"பொருந்தக் கை தொழ " என்றால் என்ன அர்த்தம் ?

கை தொழும், மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். மனமும் கை தொழுதலும் ஒன்றோடு ஒன்று பொருந்த வேண்டும்.

 கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார்.

கை ஒன்று செய்கிறது.
விழி வேறு எதையோ நாடுகிறது
மனம் வேறொன்றை சிந்திக்கிறது
நாக்கு மற்றொன்றைப் பேசுகிறது
உடல் வேறு எதையோ சார்ந்து நிற்கிறது
காது இன்னொன்றை கேட்கிறது

இதுவா பூசை ?


இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வழியில் ஓடுகிறது.

அல்லாமல், அனைத்து புலன்களும் "பொருந்தக் கை தொழ " என்றார். 

"பொற்றுணை திருந்தடி " என்றால் என்ன ?

அடி,
திருவடி 
துணையான திருவடி 
பொன் போன்ற துணையான திருவடி 

வாழ்வில் எத்தனை சிக்கல்கள், நெருக்கடிகள், உணர்ச்சி கொந்தளிப்புகள்...இத்தனையும் சுமந்து கொண்டு  பிறவி என்ற பேருங்களை நீந்த  நினைக்கிறோம். 

ஒரே துணை , அதுவும் நல்ல துணை நமச்சிவாய என்ற மந்திரம்தான். 

"நற்றுணை ஆவது நமச்சிவாயவே "


நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்  


நான்மணிக் கடிகை என்ற நூல், ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகளை உள்ளடக்கியது.

அதில் இருந்து சில பாடல்கள்.


மணிகள் மலையில் பிறக்கும்
உயர்ந்த இன்பம் காதலியின் சொல்லில் பிறக்கும்
மென்மையான அருளில் இருந்து அறம் பிறக்கும்
அனைத்து இன்பங்களும் செல்வத்தில் இருந்து பிறக்கும்


பாடல்

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.

பொருள்

கல்லிற் = மலையில்

பிறக்குங் = தோன்றும்

கதிர்மணி = ஒளி வீசும் மணிகள்

காதலி = காதலியின்

சொல்லிற் பிறக்கும் = சொல்லில் பிறக்கும்

உயர்மதம் = சிறந்த களி கொள்ளும் இன்பம் (மதம் பிடிக்குமோ )

மெல்லென்று = மென்மையான

அருளிற் பிறக்கும்  = அருள் நெஞ்சத்தில் இருந்து பிறக்கும்

அறநெறி = அற நெறி

எல்லாம் = மற்றைய அனைத்து இன்பங்களும்

பொருளிற் பிறந்து விடும் = செல்வத்தில் இருந்து பிறக்கும்




Wednesday, October 29, 2014

தேவாரம் - கண்டறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டறியாதன கண்டேன் 


கண்டேன் என்ற சொல், ஒரு ஆச்சரியத்தோடு பார்பதை குறிப்பது.

கண்டேன் கற்பினுக்கு அணியினை என்றான் அனுமன் இராமாயணத்தில். சந்தோஷம், ஆச்சரியம், வியப்பு இவை எல்லாம் கலந்தது கண்டேன் என்ற அந்தச் சொல்.

நாவுக்கரசர் உலகைப் பார்க்கிறார். உலகம் எங்கும் இறைவனும் இறைவியும் ஒன்றாக இருப்பது போல தெரிகிறது அவருக்கு.

எதைக் கண்டாலும் இறைவனும் இறைவியும்தான் தெரிகிறது.

இளம் பிறையை தலையில் சூடியவரும்   , வளையல் அணிந்த உமா தேவியோடு ஒன்றாக இருப்பவருமான அவரை , அன்று பூத்த மலர்களைத் தூவி என் தோள்கள் குளிரும் வண்ணம் தொழுவேன். பூங்குயில் பாடும் திருவையாறில் சேவல் தன் துணையான கோழியோடு வருவதைக் கண்டேன். இதுவரை கண்டு அரியாதனவற்றையெல்லாம் கண்டேன். அவனுடைய திருப்பாதங்களை கண்டேன்.

பாடல்


பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொருள்

பிறையிளங் கண்ணியி னானைப் = இளம் பிறையை சூடிய அவனை

பெய்வளை யாளொடும் பாடித் = வளையல் அணிந்த உமா தேவியோடும் கூடி இருப்பதைப் பாடி

துறையிளம் பன்மலர் தூவித் = நீர்த் துறையில் மலர்ந்த மலர்களை தூவி

தோளைக் குளிரத் தொழுவேன் = என் தோள்கள் குளிரும் படி தொழுவேன்

அறையிளம் பூங்குயி லாலும் = இளம் குயில் பாடும் (ஆலும் = பாடும் )

 ஐயா றடைகின்ற போது = திருவையாறை அடைகின்ற போது

சிறையிளம் பேடையொ டாடிச் = இளமையான பெண் ஜோடியோடு

சேவல் வருவன கண்டேன் = சேவல் வருவதைக் கண்டேன்

கண்டே னவர் திருப்பாதங் = கண்டேன் அவர் திருப்பாதம் 

கண்டறி யாதன கண்டேன்.= கண்டறியாதன கண்டேன்

கோழியும் சேவலும் ஒன்றாக திரிவதை இதற்கு முன்னாலும் பார்த்து இருக்கிறார்.

ஆனால் அதன் அர்த்தத்தை அறிய வில்லை.

இப்போது, அதை அறிந்தார்.

"கண்டு அறியாதன கண்டேன்" என்றார்.

உலகம் அனைத்துமே அவளும் அவனுமாக இருப்பதை கண்டு அறிந்தேன் என்கிறார்.



இராமாயணம் - பெண்களின் மடியில்

இராமாயணம் - பெண்களின் மடியில் 


பதவி வந்தால் மனிதன் எப்படி மாறிவிடுகிறான் !

இராமனின் துணையோடு வாலியோடு சண்டை போட்டு, கிஷ்கிந்தையை பிடித்து விட்டான் சுக்ரீவன்.

சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்னவன் அதை அப்படியே மறந்து விட்டான்.

இராமன் இலக்குவனை தூது அனுப்புகிறான்.

இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

இலக்குவன் வரும் செய்தியை சுக்ரீவனிடம் சொல்ல அங்கதன் சுக்ரீவன் இருக்கும் மாளிகைக்குச் செல்கிறான்.

அங்கே சுக்ரீவன் இருந்த நிலை .....

பெரிய படுக்கை. அதில் மலர்கள் தூவப் பட்டிருகின்றன. படுக்கை எல்லாம் எல்லாம் இளம் பெண்கள். நீண்ட கூந்தல் உள்ளவர்கள். இளமையான மார்புகளை கொண்டவர்கள். அவர்கள் மடியில் கிடக்கிறான் சுக்ரீவன். தூக்கத்திற்கு விருந்தாக இருந்தான் என்கிறார்  கம்பர்.

பாடல்

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்,
தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குழல் 
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர,
விளை துயிற்கு விருந்து விரும்புவான்.


பொருள்

நளன் இயற்றிய = நளன் கட்டிய

நாயகக் கோயிலுள் = அரண்மனையில்

தள மலர்த் தகைப் = நிறைய மலர்கள் உள்ள

பள்ளியில் = படுக்கையில்

தாழ் குழல்  = நீண்ட கூந்தலை உடைய 

இள முலைச்சியர் = இளமையான பெண்கள்

ஏந்து அடி தைவர = மடியில் ஏந்த

விளை துயிற்கு = விளையும் துயிலுக்கு (தூக்கத்திற்கு) 

விருந்து விரும்புவான் = விருந்தாக விரும்புவான்


சொன்ன வாக்கை மறந்து இன்பத்தில் மிதக்கிறான். 

அப்புறம் என்ன ஆச்சு ?


Tuesday, October 28, 2014

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல 


வாழ்கை ஒரு விளையாட்டு.

இதை ரொம்ப serious ஆக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. என்ன ஆகப் போகிறது ? சந்தோஷமாக, விளையாட்டாக வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை மனம் கொண்டவர்கள் தான் என் இராஜியத்தை அடைய முடியும் என்றார் இயேசு பிரான்.

திருவிளையாடல் என்றால் ஆண்டவன் ஆடிய விளையாடல். உலகிலேயே இறைவனை இவ்வளவு எளிமையானவனாக காட்டியது இந்து மதம் ஒன்றுதான். மற்ற மதங்களில் உள்ள கடவுள்கள் மிகவும் serious ஆக இருப்பார்கள். கோபக்காரர்கள். பழி வாங்கும் குணம் உடையவர்கள்.

இந்துக் கடவுள்கள் விளையாட்டுக் குணம் மிக்கவர்கள்.

காரணம், நம் முன்னோர்கள் நமக்குச் சொன்ன பாடம் - வாழ்கை ஒரு விளையாட்டு மாதிரி. லீலை என்று கூறுவார்கள்.

நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும், இன்பமும் நடக்கும், துன்பமும் வரும்...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே இந்த திருவிளையாடல்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். எல்லாம் விளையாட்டுதான்.

வைகை ஆற்றின் கரையை உயர்த்தி, வெள்ளத்தை தடுக்க, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப வேண்டும் என்று பாண்டிய மன்னன் உத்தரவு போட்டு விட்டான்.

வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவிக்கு ஆள் யாரும் இல்லை. இறைவனை நினைத்து வருந்தி வேண்டினாள் .

அப்போது சிவ பெருமான் அழுக்கான துணியை அணிந்து கொண்டு புறப்பட்டார்.

எப்படி புறப்பட்டார் ?


அறவோர் வேள்வியில் தரும் அவிர் பாகம் என்று அமுதும், இடப் பாகம் குடி கொண்ட உமா தேவி தரும் இதழ் அமுதும் உண்ட பின் மேலும் பசி தாங்காமல், தாயின் பாலுக்கு ஆவலோடு செல்லும் குழந்தை போல அவ்வளவு ஆவலோடு புறப்பட்டுச்  சென்றார்.

பாடல்


திடம் காதல் கொண்ட அறவோர் திரு வேள்வி தரும் 
                                                      அமுதும் 
இடம் காவல் கொண்டு உறைவாள் அருத்த அமுதும் 
                                                      இனிது உண்டும் 
அடங்காத பசியினர் போல் அன்னை முலைப் பால் 
                                                      அருந்த 
அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார்.

பொருள்

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல

வாழ்கை ஒரு விளையாட்டு.

இதை ரொம்ப serious ஆக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. என்ன ஆகப் போகிறது ? சந்தோஷமாக, விளையாட்டாக வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை மனம் கொண்டவர்கள் தான் என் இராஜியத்தை அடைய முடியும் என்றார் இயேசு பிரான்.

திருவிளையாடல் என்றால் ஆண்டவன் ஆடிய விளையாடல். உலகிலேயே இறைவனை இவ்வளவு எளிமையானவனாக காட்டியது இந்து மதம் ஒன்றுதான். மற்ற மதங்களில் உள்ள கடவுள்கள் மிகவும் serious ஆக இருப்பார்கள். கோபக்காரர்கள். பழி வாங்கும் குணம் உடையவர்கள்.

இந்துக் கடவுள்கள் விளையாட்டுக் குணம் மிக்கவர்கள்.

காரணம், நம் முன்னோர்கள் நமக்குச் சொன்ன பாடம் - வாழ்கை ஒரு விளையாட்டு மாதிரி. லீலை என்று கூறுவார்கள்.

நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும், இன்பமும் நடக்கும், துன்பமும் வரும்...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே இந்த திருவிளையாடல்.

இடுக்கண் வருங்கால்



திடம் காதல் கொண்ட = உறுதியான காதல் கொண்ட

அறவோர் = அறவோர்

திரு வேள்வி = சிறந்த வேள்வி

 தரும் = தரும்

அமுதும் = அவிர் பாகம் என்ற அமுதும்

இடம் = இடப் பக்கம்

காவல் கொண்டு = காவல் கொண்டு

உறைவாள் = உறையும் பார்வதி

அருத்த அமுதும் = அருந்தத் தரும் அமுதும்

இனிது உண்டும் = இனிமையாக உண்டும்

அடங்காத பசியினர் போல் = பசி அடங்காதவர் போல

அன்னை முலைப் பால் = தாயின் முலைப் பாலை

அருந்த = அருந்த

அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார் = அடக்க முடியாத பெரிய ஆவலுடன்  செல்லும் குழந்தை போல புறப்பட்டார்.

ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு வேலைக்குப் போவது என்றால் ஆர்வத்தோடு செல்ல வேண்டும். கடனே என்று செல்லக்  கூடாது. பசி கொண்டவன் உணவைக் கண்டதும் எப்படி ஆர்வத்தோடு செல்வானோ அது போல வேலை செய்யக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் வேலையும் நன்றாக நடக்கும், வேலை செய்வதன் பலனும் நமக்கு கிடைக்கும்.

மனைவி தரும் சுகத்தை விட வேலை அதிகம் இன்பம் தரும் என்று சொல்லாமல்  சொல்லும் பாடல் இது.

நம் வேலையில் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது ?

பள்ளி செல்வதாக இருக்கட்டும், படிப்பதாக இருக்கட்டும், அலுவலகம் செல்வதாக இருக்கட்டும் , வீட்டு வேலை செய்வதாக இருக்கட்டும்...நமக்கு எவ்வளவு  ஆர்வம் இருக்கிறது ?

சிந்திப்போம்.

Monday, October 27, 2014

இராமாயணம் - மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன்

இராமாயணம் - மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் 



கார்காலம் முடிந்து  விட்டது. சீதையை தேட துணை செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்புகிறான் சுக்ரீவனிடம்.

மிக மிக கோபத்தோடு கிளம்புகிறான் இலக்குவன்.

இராமனும் இலக்குவனும் இருப்பது ஊருக்கு  வெளியே.சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு போகும் பாதை தெரியாது இலக்குவனுக்கு. குத்து மதிப்பாகத் இந்த திசையில் இருக்கும் என்று தெரியும்.

மிகுந்த கோபத்தோடு சுக்ரீவன் இருக்கும் திசை நோக்கிச் செல்கிறான்.

வழியில் எதிர்பட்ட மரங்களும், மலைகளும் தவிடு பொடியாகின. பொடி ஆனது மட்டும் அல்ல, அந்த பொடிகள் மிகுந்த தூரத்தில் சென்று சிதறி விழுந்தன.

இலக்குவன் எப்போதும் உண்மையின் வழியில் நடப்பவன். இன்று அண்ணனின் ஆணையை ஏற்று வரும் வழியில் உள்ள மலைகள் எல்லாம் தவிடு பொடியாகும் படி  செல்கிறான்.

பாடல்

மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான்.

பொருள்

மாறு நின்ற மரனும் = வழியில் நின்ற மரங்களும்

மலைகளும் = மலைகளும்

நீறு சென்று = தூள் தூளாகி

நெடு நெறி நீங்கிட = நீண்ட தூரம் சென்று நீங்கி விழ

வேறு சென்றனன் = வேறு வழியில் சென்றவன்

மெய்ம்மையின் ஓங்கிடும் = உண்மையில் சிறந்திடும்

ஆறு சென்றவன் = வழியில் சென்றவன்

ஆணையின் ஏகுவான்.= அண்ணனின் ஆணையில் செல்லுவான்




திருவருட்பா - மையிட்ட கண்ணியர்

திருவருட்பா - மையிட்ட கண்ணியர் 



நம் கண் எதில் இருக்கிறதோ, மனமும் அதிலேயே  இருக்கும்.

மனம் பூராவும், பெண்கள் பின்னே. மையிட்ட கண்களைக் கொண்ட பெண்களின் பின்னே போகிறது மனம். மனம் பெண்ணின் பின்னால் போனால் எங்கே அவன் அருளைக் காண்பது ? மனம் அதில் இருந்து விடு பட்டால் அல்லவா மற்றவற்றைப் பற்றி நினைக்க முடியும் ?

பாடல்

மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட 
          வாழ்வின் மதிமயங்கிக் 
     கையிட்ட நானும்உன் மெய்யிட்ட 
          சீரருள் காண்குவனோ 
     பையிட்ட பாம்பணி யையிட்ட 
          மேனியும் பத்தருள்ள 
     மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட 
          வேலுங்கொள் முன்னவனே. 

பொருள்

மையிட்ட = மை இட்ட

கண்ணியர் = கண்களை கொண்ட பெண்கள்

பொய்யிட்ட = பொய் நிறைந்த

வாழ்வின் = வாழ்வில்

மதி மயங்கிக் = மதி மயங்கி

கையிட்ட நானும் = அதைக் கையில் கொண்ட நானும்

உன் மெய்யிட்ட = உன் உண்மை நிறைந்த

சீரருள் = சிறப்பான அருளைக்

 காண்குவனோ = பார்ப்பேனா ?

பையிட்ட = படம் எடுக்கும்

பாம்பணி யையிட்ட = பாம்பை அணிகலனாகக் கொண்ட

மேனியும் = உடலும்

பத்தருள்ள = பக்தருள்ளதில்

மொய்யிட்ட = இடம் பெற்ற

காலுஞ் = திருவடிகளும்

செவ் வையிட்ட = சிறந்த கூர்மையான

வேலுங்கொள் முன்னவனே = திரிசூலத்தைக் கொண்ட முதல்வனே


Sunday, October 26, 2014

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம்

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம் 


விருந்து ஓம்புதலை அறமாகச் சொன்னவன் தமிழன்.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது அறத்தின் ஒரு கூறு என்று கூறியது தமிழ் கலாச்சாரம்.

விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்கிறது இந்த குறள்.

விருந்தினர்களை கண்டவுடன், கண்ணில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும். பின் அவர்கள் உள்ளே வந்த பின் அவர்களோடு இனிய சொற்களை கூற வேண்டும்.

பாடல்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.


சீர் பிரித்த பின்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன் சொல்லின் அதே அறம்.

எது அறம் என்று கேட்டால், கண்ட பொழுது முகத்தால் இனிமையாக நோக்கி, அகத்தால் இனிய சொற்களை கூறுவது அறம் .

அது என்ன முகத்தால் இனிமை, அகத்தால் இனிமை ?

இங்கே முகம் என்பதற்கு கண் என்பது சரியான அர்த்தமாக இருக்கும். விருந்தினர்களை  கண்டவுடன் நம் கண் மலர வேண்டும். கண் அந்த இனிமையைச் சென்று சொல்ல வேண்டும்.

சொல் பின்னால் வரும். மனதின் உணர்சிகளை முதலில் காட்டுவது கண்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பார் வள்ளுவர்.

விருந்தினர் வந்த பின், அவர்களோடு இனிய சொற்களை பேச வேண்டும். அதுவும்  உள்ளத்தில் இருந்து வர வேண்டும். ஏதோ உதட்டில் இருந்து வரக் கூடாது.

ஒரு விருந்தினர் வருகிறார் என்றால், அவருக்கு வேண்டிய உதவியை உடனே செய்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும்போதே அவருக்கு வேண்டிய பொருள் உதவியைச் செய்ய முடியுமா ?

முடியாது.

முதலில் முக மலர்ச்சியோடு அவரை வரவேற்று, அவரோடு இனிமையாகப் பேசி, பின் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம்.

இப்போதெல்லாம் பிள்ளைகள், விருந்தினர்களை வரவேற்க,  அவர்கள் இருக்கும் அறையை விட்டு கூட வெளியே வருவது இல்ல. வந்தாலும் கையில் ஒரு கைபேசி, அல்லது, வீடியோ கேம் (video game ) என்று ஏதாவது ஒன்றுடன் வருகிறார்கள்.

விருந்தினரை சரியாகக் கூட பார்ப்பது இல்லை.

நம் பாரம்பரியங்களை, கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

முன்னவர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நாம் தான் சொல்லித் தர தவறி விட்டோம்.

இடையில் சில தலைமுறைகள் நூலறுந்த பட்டம் போல திக்கு திசை இல்லாமல்  தவித்தது, தவிக்கிறது.

இனி வரும் தலை முறைக்காவது சொல்லி வைப்போம்.



Friday, October 24, 2014

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும்

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும் 


பொதுவாக பிள்ளைகளிடம் ஒரு காரியம் சொன்னால், சொன்னவுடன் செய்ய மாட்டார்கள். ஒன்றிற்கு மூணு தடம் சொன்ன பிறகு, அதுக்கு நாலு கேள்வி கேட்டு, தொண்டைத் தண்ணியை வாங்கி , பின் ஆடி அசைந்து செய்வார்கள்.

இராமனும் இலக்குவனும் எப்படி இருந்தார்கள் என்று இராமாயணம் காட்டுகிறது.

இளைய தலைமுறை படித்து உணர வேண்டும்.

கானகம் போ என்று கைகேயி சொன்னவுடன், "நான் எதுக்குப் போகணும், இப்பவே போகணுமா ? அடுத்த மாதம் போனால் போதாதா " என்றெல்லாம் இராமன் கேட்கவில்லை.

"மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்" என்று அந்த நொடியில் கிளம்பி விட்டான்.


 'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 


கிட்கிந்தா காண்டத்தில், கார்காலம் முடிந்து சீதையைத்  தேட ஆள் அனுப்புகிறேன்  என்று சொன்ன சுக்ரீவன் அனுப்பவில்லை.

இராமனுக்கு கோபம். "சுக்ரீவனை உடனே ஆள் அனுப்பச் சொல் இல்லையென்றால் அவனும் தண்டிக்கப் படுவான் " என்று இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்.

இராமன் சொன்னவுடன் , இலக்குவன், "சரிண்ணா , நாளைக்குப் போகிறேன்" என்று சொல்லவில்லை .

இராமன் சொன்னவுடன் புறப்பட்டு விட்டான். உடனே கிளம்பினான்.

பாடல்

ஆணை சூடி, அடி
     தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர்
      வெரிந் பாழ்படாத்
தூணிபூட்டி, தொடு
      சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் -
      சிந்தையின் நீங்கலான்.

பொருள்

ஆணை சூடி = இராமனின் ஆணையை தலைமேல் சூடி

அடி தொழுது = அவன் திருவடிகளைத் தொழுது

ஆண்டு = அங்கு

இறை பாணியாது = ஒரு நொடி கூட நிற்காமல்

படர் வெரிந் = பரந்த முதுகில்

பாழ்படாத் = குறையாத

தூணிபூட்டி = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை மாட்டிக் கொண்டு

தொடு சிலை தொட்டு = வில்லை கையில் பற்றிக் கொண்டு

அருஞ் சேணின் = நீண்ட பாதையில் 

நீங்கினன்  = செல்லத் தொடங்கினான்

சிந்தையின் நீங்கலான் = இராமனை தன் சிந்தையை விட்டு நீங்காமல் கொண்ட  இலக்குவன்


அண்ணன் சொன்னவுடன் இலக்குவன் உடனே கிளம்பினான். 


Wednesday, October 22, 2014

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை 


பெண் இன்பம் என்பது புரியாத புதிராய்தான் இருந்து இருக்கிறது. அருணகிரிநாதர் புலம்புகிறார்.



கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 


கற் கண்டுமொழி

கொம்பு கொங்கை

வஞ்சியிடை அம்பு

நஞ்சு கண்கள்

குழல் கொண்டல்

என்று

பலகாலும்

கண்டு உளம் வருந்தி நொந்து

மங்கையர் வசம் புரிந்து

கங்குல் பகல் என்று நின்று

விதியாலே

பண்டை வினை  கொண்டு உழன்று

வெந்து விழுகின்றல் கண்டு

பங்கய பதங்கள் தந்து

புகழ் ஓதும்

பண்புடைய சிந்தை அன்பர்  தங்களில் உடன் கலந்து

பண்பு பெற அஞ்சல்  அஞ்சல் என வாராய்

 வண்டு படுகின்ற தொங்கல்

கொண்டு அற நெருங்கி யிண்டு

வம்பினை அடைந்து

சந்தின் மிக மூழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை

செங்கை வந்த அழகுடன் கலந்த  மணிமார்பா

திண் திரல் புனைந்த அண்டர் தங்கள் பயங்கள் கண்டு

செஞ் அமர்  புனைந்து  துங்க  மயில்மீதே

சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம் புணர்ந்து

செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

Tuesday, October 21, 2014

சிவ புராணம் - மாற்றமாம் வையகத்தே 


பாடல்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே  என் சிந்தையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பொருள்

மாற்றமாம் = மாறுதலை உள்ள

வையகத்தின் = உலகில்

வெவ்வேறே = வேறு வேறானவற்றை

வந்தறிவாம் = வந்து அறிவாம்

தேற்றனே = தெளிவானவனே

தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

என் சிந்தையுள் = என் சிந்தனையுள்

ஊற்றான = ஊற்றான

வுண்ணா ரமுதே = உண்பதற்கு அருமையான அமுதம் போன்றவனே 

உடையானே  = எல்லாவற்றையும் உடையவனே

மிக மிக எளிமையாகத் தோன்றும் பாடல் வரிகள்...ஆழமான அர்த்தம் கொண்டவை 

இந்த உலகில் மாறாதது எது ? எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் கூட மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருகிறது.எதுவும் நிரந்தரம் இல்லை.

இது பிடிக்கும், இது பிடிக்கும்,
இவர் நல்லவர், இவர் கெட்டவர்,
அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர்

என்று நினைப்பது எல்லாம் மாறிக் கொண்டே வரும்.

இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் போகும்.

இன்று விரும்புவதை நாளை நாமே வெறுப்போம்.

"மாற்றமாம் வையகத்தே" என்றார்.

நாளும் மாறும் வையகம் இது.

"வெவ்வேறே வந்தறிவாம் "

வேறு வேறாக தெரிவது எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.


இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருந்தால், எப்படி இந்த உலகை நாம் எப்படித்தான்  புரிந்து கொள்வது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் தெளிவு அவன்.

"தேற்றேனே , தேற்றத் தெளிவே"

இந்தத் தெளிவு அவருக்கு சிந்தனயில் வந்தது . எப்படி வந்தது ?

படித்துத் தெரிந்து கொண்டாரா ? யாரும் சொல்லித் தந்தார்களா ? பின் எப்படி அறிந்தார் ?

அவரே சொல்கிறார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்



நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் குணம் தான் நமக்கும் வரும். நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மை போலவே சிற்றின்பங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு சேர்ந்தால் நாமும் அவர்களைப் போலத்தானே ஆவோம்

எனவேதான் பெரியவர்கள் எப்போதும் நல்லவர்கள் மற்றும் அடியார் கூட்டத்தோடு சேரும்படி மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்.

நல்லவர்கள் , அறிவுள்ளவர்கள் கிடைக்கவில்லையா, பரவாயில்லை. கெட்டவர்களோடு சேராமல் இருந்தாலே போதும்.

குலசேகர ஆழ்வார் சொல்கிறார், பெண் இன்பம் தேடி அலையும் இந்த உலகத்தினரோடு நான் சேர மாட்டேன். உலகில் உள்ள ஆட்களை விட்டு விட்டால் பின் யாரோடு தான் சேர்வது ? அரங்கா என்று அவன் மேல் அன்பு கொண்டேன்  என்கிறார்.


பாடல்

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

சீர் பிரித்த பின்

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் அழுந்து ஒழிந்தேன் என்றன் மாலுக்கே


பொருள்


நூலின் நேர் = நூல் போல

இடையார் =  இடையைக் கொண்ட  பெண்களின்

திறத்தே = பின்னே

நிற்கும் = நிற்கும்

ஞாலந் தன்னொடும் = உலகில் உள்ளவர்களோடு

கூடுவது இல்லை யான் = சேர மாட்டேன்

ஆலியா = ஆலியா

அழையா = என்று அழைத்து

அரங்கா என்று = அரங்கா என்று

மால் அழுந்து ஒழிந்தேன் = அன்பால், ஆசையால்  மூழ்கி ஒழிந்தேன்

என்றன் மாலுக்கே = என்றன் திருமாலுக்கே



Monday, October 20, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன் 


தவறு செய்யாதவர்கள் யார் இங்கே ?

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?

செய்த தவறுகளை ஞாயப்படுத்துகிறோமே தவிர அது தவறு என்று ஒப்புக் கொள்வதில்லை.

பெண்கள் பின்னால் அலைந்தேன் என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு பக்கம் வாழ்க்கையில் வருத்தம். துன்பம். இதற்கிடையில் பெண்களோடு சவகாசம். அந்த இளம் பெண்கள் தரும் இன்பமே பெரிதென்று அவர்கள் பின்னால் அலைவது. அப்படி அலையும் நாளில் ஒரு நாள் உண்மை புரிகிறது. இந்த பெண்கள் தரும் இன்பம் நிலையானது அல்ல என்று அறிந்து கொள்கிறார். வாழ்வின் பெரிய நிலையைத் தரக் கூடியது நாராயாணா என்ற நாமமே என்று அறிந்து கொண்டேன் என்கிறார்.

பாடல்

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.


பொருள்

வாடினேன் = வாடினேன். செடி நீர் இல்லாமல் வாடும். நீர் தெளித்தால் மீண்டும் தளிர்க்கும். அது போல, இறைவனின் அருள் இன்றி வான்டினேன். அவன் அருள் கிடைத்தால் வாட்டம் நீங்கும் என்ற பொருள் பட வாடினேன் என்றார். 

வாடி வருந்தினேன் = வாடி வருந்தினேன்

மனத்தால் = மனத்தால். உடல் வருத்தம் மட்டும் இல்லை, மன வருத்தமும் உண்டு.

பெருந்துயரிடும்பையில்  பிறந்து = பெரிய துன்பமான துக்கத்தில் பிறந்து

கூடினேன் = கூடினேன்

கூடி = கூடிய பின்

யிளையவர்த்தம்மோடு = இளமையான பெண்களோடு

அவர்த்தரும் கலவியேகருதி = அவர்கள் தரும் இன்பமே வேண்டும் என்று நினைத்து


ஓடினேன் = அவர்கள் பின்னால் ஓடினேன்

ஓடியுய்வதோர்ப் = ஓடியபின், பிழைக்கும் ஒரு

பொருளால்= பொருளால்

உணர்வெனும் = உணர்வு என்ற

பெரும் பதம் திரிந்து = பெரிய பதத்தை , அலைந்து திரிந்த பின்
,
நாடினேன் = நாடினேன்


நாடி நான் கண்டுகொண்டேன் = நாடி நான் கண்டு கொண்டேன்


நாராயணா வென்னும் நாமம் = நாராயணா என்ற நாமத்தை

.
சிற்றின்பம் சலிக்கும். அதில் சலித்த மனம், பேரின்பத்தை நோக்கி  . தானே நகரும்.

நாடினேன் என்றார். அவரே தேடித் போனார்.

பெண்கள் பின்னால் அலைந்தவர், தானே நாடி கண்டு கொண்டேன் என்கிறார்.

செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது.  வருத்தம்  விலகுகிறது.

மனம் இலேசாகிப் போகிறது.

எல்லோரும் அறிய சொல்லாவிட்டாலும்,  உங்கள் உயிர் நண்பர்களிடம் சொல்லலாம் தானே...

சிந்தித்துப் பாருங்கள்.


இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்


சாம்ராஜ்யம் உன்னது  என்ற போது இராமன் மகிழவில்லை.

சாம்ராஜ்யம் உனக்கு இல்லை, நீ கானகம் போக வேண்டும் என்று சொன்னபோதும்  கலங்கவில்லை.

கோபம் கொண்ட இலக்குவனைக் கூட "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை...விதியின் பிழை " என்று அமைதிப் படுத்தினான் இராமன்.

ஆனால், மனைவியை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் வர கால தாமதம் ஆனதால் கோபம் பொங்குகிறது இராமனிடம்.

இராஜ்ஜியம் பொருட்டு அல்ல, கானகத் துன்பம் பெரிதல்ல. மனைவியின் பிரிவு ரொம்பப் பெரியது . கோபம் இல்லாத இராமனையும் கோபம் கொள்ளச் செய்கிறது சீதையின் பிரிவு .

அமிழ்து உடலையும், உயிரையும் சேர்த்து வைக்கும்.

மனைவி அமிழ்து போன்றவள். போன உயிரையும் மீட்டு வருவாள். கணவனின் உயிரை காபாற்றுபவள்.

"ஆவியை, அமிழ்தின் வந்த தேவியை பிரிந்ததால் திகைத்தனை போலும் செய்கை " என்று வாலி, சீதையைப் பற்றி, இராமனிடம் கூறுவான்.


இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்

"நஞ்சு போன்றவர்களை தண்டித்தால் அது வஞ்சம் அல்ல, மனு நீதி ஆகும். ஆதலால், அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் நெஞ்சில் உரைக்கும் படி கூறுவாய் "  என்று.....

பாடல்


‘நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.


பொருள் 

‘நஞ்சம் = கொடுமையான

அன்னவரை = மக்களை

நலிந்தால் = தண்டித்தால்

அது = அது

வஞ்சம் அன்று = வஞ்சம் அன்று

மனுவழக்கு = மனு நீதி ஆகும்

ஆதலால் = ஆதலால்

அஞ்சில்  ஐம்பதில் = அஞ்சில் அம்பதில்

ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் = மனதில் 

நின்று = நிலைத்து 

நிலாவ = நிற்கும் படி 

நிறுத்துவாய் = செய்வாய்


அது என்ன அஞ்சில் அம்பதில் ஒன்றரியாதவன்  ?

ஒரு அர்த்தம்,

அஞ்சில் = ஐந்து வயதில்
அம்பதில் = ஐம்பது வயதில்
ஒன்றும் அறியாதவன். அஞ்சு வயதிலும் தெரியாது. ஐம்பது வயதிலும் தெரியாது.


இன்னொரு அர்த்தம்;

அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அச்சம் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய  மாட்டான்.

இன்னொரு அர்த்தம்;

இன்னொரு அர்த்தம்

அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

நான்காவது = அஞ்சு + அம்பது + ஒன்று = 56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம். இலக்குவன் தந்துபி என்ற அரக்கனின் எலும்பு கூட்டை கால் கட்டை விரலால் உந்தி தள்ளினான். அதை சுக்ரீவன் அறிந்தான் இல்லை. அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.

ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்கு தருவதற்கு ஒரு பதிலும் இல்லை, திரு திரு என்று முழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன்




Saturday, October 18, 2014

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல்

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல் 


எளியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இடுப்பில் ஒரு அழுக்கான துணி, தலையில் ஒரு சும்மாடு, தோளில் முனை மழுங்கிய ஒரு மண் வெட்டி.

இப்படி ஒரு ஆளைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும். ஏதோ ஒரு கூலி ஆள் என்று நினைப்போம். அதற்கு மேல் நினைக்க என்ன இருக்கிறது.

இறைவன் அப்படித் தான் வந்தான்.  

முன்பு ஒரு நாள் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

கரையை உயர்த்த வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப  வேண்டும் என்று பாண்டிய மன்னன் அறிவித்து விட்டான்.

மதுரையம்பதியில், பிட்டு விற்று வாழும் ஒரு வயதான கிழவி இருந்தாள் . அவளுக்கு யாரும் இல்லை. என்ன செய்வதென்று தவித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது....

அழுக்கான பழந்துணி உடுத்து, தலையில் ஒரு சும்மாடை சுமந்து கொண்டு, தோளில் ஒரு மண் வெட்டியோடு இறைவன் வந்தான்...


பாடல்

அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து 
                                விழுத்தொண்டர்
குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த்
தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த 
                                திருத்தோண்மேன்
மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி.

பொருள்

அழுக்கடைந்த = அழுக்கு ஏறிய

பழந்துணி = பழைய துணி

யொன் = ஒன்றை

றரைக்கசைத்து = அரைக்கு அசைத்து (இடுப்பில் கட்டி ) 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 

விழுத்தொண்டர் = சிறந்த தொண்டர்கள்

குழுக்கடந்த = குழுக்கள் தந்த

விண்டை நிகர் = இண்டை மாலை ஒத்த

சுமையடை = தலைச் சுமையின்

மேற் = மேல்


கூடை கவிழ்த் =  கூடை ஒன்றை கவிழ்த்து

தெழுக் கடந்து = எழு கடந்து (எழு என்றால் தூண் என்று சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை)


திசைகடந்திட் டிணைகடந்த = திசை கடந்து + இணை கடந்து = திசைகளை கடந்து, அதற்கு இணை என்று சொல்ல முடியாமல், அனைத்தையும் கடந்து நின்று 


திருத்தோண்மேன் = புனிதமான தோள்கள் மேல்

மழுக்கடைந்து விளங்கிய = மழுக்கென்று, முனை மழுங்கி 

வாய் = முனை

மண்டொடுதிண் படையேந்தி = மண் வெட்டும் திண்மையான கருவியை ஏந்தி


யாருக்குத் தெரியும், எந்த கூலித் தொழிலாளி வடிவில் அவன் இருக்கிறானோ. 


Wednesday, October 15, 2014

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே


வருகிறேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவள் மனம் ஏங்குகிறது. ஒரு வேளை வர மாட்டானோ என்று சந்தேகிக்கிறது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று பயப் படுகிறது.

அவளின் சோர்ந்த நிலை கண்டு, அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.

"கவலைப் பட்டு எதுக்கு நீ இப்படி மெலிஞ்சு போற. இந்த வானம் இப்படி இடி இடிக்கிறதே ஏன் தெரியுமா ? உன்னை விட்டு பிரிந்த உன் தலைவனைப் பார்த்து, "காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உன் தலைவியிடம் போ " என்று சொல்லத்தான்."

இடி இடிப்பது கூட, காதலுனுக்கு சேதி சொல்வது போல இருக்கிறது என்று தோழி ஆறுதல் சொல்லுகிறாள்.

பாடல்

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள்

தொடியிட = தொடி+ இட = தொடி என்றால் வளையல். வளையல் இட

வாற்றா = ஆற்றாமல், முடியாமல்

தொலைந்த = மெலிந்த (அழகு தொலைந்த)

தோ ணோக்கி = தோள் நோக்கி

வடு = மாவடுவை

விடைப் = இடையில், நடுவில் 

போழ்ந்த = பிழந்த

கன்ற = அகன்ற

கண்ணாய் = கண்ணைக் கொண்டவளே

வருந்தல் = வருத்தப் படாதே

கடி = பெரிய, வலிய

திடி = இடி முழக்கும்

வான = வானம்

முரறு = சப்தம் இடுவது

நெடுவிடைச் = நீண்ட தொலைவு

சென்றாரை = சென்றவரை

நீடன்மி னென்று = இன்னும் காலத்தை நீட்டாதே என்று சொல்ல


சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய்

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய் 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே


சொல்லாத நுண் உணர்வாய்

இறைவன் என்றால் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ? என்ற கேள்விகள்   ஒரு புறம்  இருக்கட்டும்.

இந்த உலகத்திற்கு வருவோம். 

லட்டு, ஜிலேபி போன்ற பல இனிப்புகளை நாம்  சுவைக்கிறோம். இனிப்பு என்றால் ? அந்த இனிப்பு எப்படி  இருக்கும் ? 

தாய் , தந்தை, அண்ணன் ,  தம்பி, அக்கா,தங்கை, கணவன் , மனைவி என்ற பல உறவுகளை  நாம் அனுபவிக்கிறோம். தாய்மை என்றால் என்ன ? மனைவியின் பாசம்  என்றால் என்ன? குழந்தையின் அன்பு என்றால் என்ன ? 

இவற்றை நம்மால் விளக்க முடியுமா ?

முடியாது.

உணர்வுகளை அனுபவிக்க  முடியும்.  உணர முடியும். ஆனால் விளக்க முடியாது. 

அன்றாடம் அனுபவிக்கும் உணர்வுகளுக்கே இந்த மாதிரி என்றால், இறை உணர்வை  என்ன என்று சொல்லுவது. 

அது இவற்றை எல்லாம் விட மிக நுண்மையானது. 

ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. 

எனவே 

"சொல்லாத நுண் உணர்வு "  என்றார்.

இது வரை யாரும் சொல்லாதது. சொல்லவும் முடியாது. 


உணர்வு அறிய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பார் பிறிதொரு இடத்தில் 

அது சிந்தனை அற்ற இடம். 

Monday, October 13, 2014

திருக்குறள் - சொற்புத்தி, சுயபுத்தி

திருக்குறள்  - சொற்புத்தி, சுயபுத்தி 


வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் எளிமையான வழியைச் சொல்கிறார்.

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் போவார்கள். அவர் ஒரு மருந்தைத் தருவார். அதை ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது. தனக்கும் தெரியாது, மருத்துவர் சொன்னாலும் கேட்பது இல்லை.

உயர்ந்த நூல்களை படிக்க வேண்டியது. ஆனால் அதில் சொல்லி உள்ளது போல நடப்பது கிடையாது. குதர்க்கம் செய்ய வேண்டியது.

அப்படிப் பட்டவர்களின் உயிர் அவர்களின் உடலுக்கு நோய் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் உடலை வருத்துமோ  அது போல அந்த மடையர்களுக்கு உயிர் இருக்கும் வரை  துன்பம்தான்.உயிரே துன்பம் தான்.

பாடல்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் 
போஒ மளவுமோர் நோய்.

சீர் பிரித்த பின்

வவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 
போகும் அளவும் ஓர் நோய் 


பொருள்

ஏவவும் செய்கலான் = சொன்னதைச் செய்ய மாட்டான் 

தான் தேரான்  = அவனாகவும் தேர்ந்து அறிய மாட்டன்

அவ் உயிர் = அவன் உயிர்

போகும் அளவும் = உடலை விட்டு போகும் அளவும்

ஓர் நோய் = ஒரு நோய் போன்றதாகும்

நோய் உடலை வருத்தும். அது போல அறிவற்றகளின் உயிர் அவர்களை வருத்தும்.

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள்.

இன்றும் இதை நாம் காண முடியும். முட்டாள்கள் எவ்வளவு துன்பத்தைத் தருகிறார்கள்.  தாங்கள் கெடுவது மட்டும் அல்ல. மற்றவர்களையும் கெடுத்து துன்பத்தை விதைக்கிறார்கள்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.





இராமாயணம் - அறம் மறந்தனன்

இராமாயணம் - அறம் மறந்தனன் 


வாலி வதைக்குப் பின், சுக்ரீவன்  அரச பதவி பெற்றான். கார் காலம் வந்தது. பின்  சென்றது.

சீதையை தேட உதவி செய்கிறேன் என்று தான் சொன்ன வாக்குறுதியை மறந்தான்.

அந்த நேரத்தில் இராமன் , இலக்குவனிடம் கூறுகிறான்.

"பெறுவதற்கு அரிய செல்வத்தைப் பெற்றான். நாம் உதவி செய்த, நம் திறமையை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஒழுக்கம் தவறி விட்டான். அறத்தை மறந்து விட்டான். நம் மேல் உள்ள அன்பையும் மறந்து விட்டான். அது தான் போகட்டும் என்றால் நம் வீரத்தையுமா மறந்து விட்டான் அந்த வாழ்வில் மயங்கியவன் " என்று

பாடல்


'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.


பொருள்

'பெறல் = பெறுவதற்கு

அருந் = அருமையான

திருப் பெற்று = செல்வத்தைப்

உதவிப் = நாம் செய்த உதவி

பெருந் திறம் நினைந்திலன் =என்ற பெரும் திறமையை நினைக்கவில்லை

சீர்மையின் தீர்ந்தனன் = ஒழுக்கம் குறைந்தவன்

அறம் மறந்தனன்; = அறத்தை மறந்தான்

அன்பு கிடக்க = அன்பு ஒரு புறம் கிடக்க, அதையும் மறந்து விட்டான்

நம் மறன் அறிந்திலன் = நம்முடைய வீரத்தைப்  அவன் சரியாக அறியவில்லை 

வாழ்வின் மயங்கினான் = வாழ்வியல் இன்பங்களில் மயங்கிக்   . கிடக்கிறான்

நன்றி மறப்பது அறம் அல்ல என்று நம் இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நன்றி மறந்ததால் அழிந்தவன் சூரபத்மன்.

எவ்வளவு எளிதாக பிறர் செய்த நன்றிகளை நாம் மறந்து விடுகிறோம்.

இனி மேல் ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள்....உங்களுக்கு யார் யார் என்ன என்ன உதவி செய்தார்கள் என்று. மறக்காமல் இருக்க  உதவும்.

நன்றி மறப்பது நன்றல்ல.

இராமணயம் படிப்பது கதை தெரிந்து கொள்வதற்கு அல்ல. வாழ்கையை தெரிந்து கொள்ள.

இனி என்ன நடந்தது ?

மேலும்  பார்ப்போம்.







பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை

பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை 


இராமனை மனிதன் மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

கண்ணனை இடையன் இடையன் என்று சொல்லி அழிந்தான் துரியோதனன்

இராமனுக்கும், கண்ணனுக்கும்  இந்த நிலை என்றால் நம் நிலை என்ன.

பழி சொல்லும் நாவுக்கு வறுமை என்று ஒன்று கிடையாது. எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.

"பசுக் கூட்டங்களை மழையில் இருந்து காப்பாற்றிய கண்ணனை இடையன் என்று இந்த உலகம் கூறிற்று. தீங்கு சொல்லும் நாவுக்கு தேவர்கள், மனிதர்கள் என்று பாகுபாட்டெல்லாம் கிடையாது. நாவுக்கு வறுமை இல்லை".

பாடல்

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

சீர் பிரித்த பின்

ஆவிற்கு அரும் பனி  தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்று உலகம்  கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

பொருள்


ஆவிற்கு = பசு கூட்டங்களுக்கு

அரும் பனி  = பெரிய மழையில் இருந்து

தாங்கிய = காப்பாற்றிய

மாலையும் = திருமாலையும்

கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்

என்று உலகம்  கூறுமால் = என்று உலகம் கூறியது

தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)

மக்கட்கு = மக்களுக்கு

எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்

தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும் 

நாவிற்கு = நாக்கிற்கு

நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.




Sunday, October 12, 2014

கார் நாற்பது - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து

கார் நாற்பது  - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து 


சங்க காலம்.

காற்றாடி (Fan ), குளிர்சாதன (air conditioner , fridge ) போன்றவை இல்லாத காலம்.

வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மரம் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வானம் நோக்கி கை ஏந்தி மழை வேண்டும் காலம்.

புல் எல்லாம் கருகி விட்டது. மூச்சில் அனல் பறக்கும் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

வெயில் காலம் போய் விட்டது.

கார் காலம் வந்து விட்டது.

வருகிறேன் என்று சொன்னவன் இன்னும் வரவில்லை.

வானம் மின்னல் வெட்டுகிறது. மழைக்கு கறுத்து இருக்கிறது. அது ஏதோ சேதி சொல்வது போல இருக்கிறது அவளுக்கு.

அவன் சொன்ன சேதியை அந்த மின்னல் அவளிடம்  ஏதோ சொல்கிறது  சொல்கிறது.

என்ன என்று அவளுக்குத்தான் தெரியும்....


பாடல்

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

பொருள்

கடுங்கதிர் = கடுமையான வெப்பத்தைத் தரும் வெயில் காலம் 

நல்கூரக் = மெலிவு அடைந்து, குறைந்து

கார் செல்வ மெய்த = செல்வத்தை தரும் கார் காலம் வந்தது

நெடுங்காடு = நீண்ட காடு

நேர்சினை யீனக் = அரும்பு விட

கொடுங்குழாய் = வளைந்த ஆபரணங்களை அணிந்தவளே

இன்னே வருவர் = இப்போதே வருவேன் 

நமரென் றெழில்வானம் = நமர் (நம்மவர்) , என்று  எழில் வானம்

மின்னு -= மின்னும்

மவர்தூ துரைத்து =அவர் தூது உரைத்து



Saturday, October 11, 2014

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற   


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்



------------------------------------//பாகம் 3 //----------------------------------------------------------------------

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற


ஆற்றில் நீர் வரும்போது இரண்டு கரைகளுக்கு உட்பட்டுத் தான் வரும். அதுவே  கரையை உடைக்கும் போது வெள்ளமாகி வரும். 

புலன்கள் மூலம் கிடைக்கும் இன்பம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. சில நாள் இருக்கலாம், சில மணி நேரம் இருக்கலாம், சில நிமிடம் நிலைக்கலாம். எப்படியாயினும்  அதற்கு ஒரு முடிவு, எல்லை உண்டு. 

இறைவனை அறிந்து அதன் மூலம் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. 

இதையே அபிராமி பட்டரும் , களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை  என்றார்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


வெள்ளம் உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் நோக்கிப் பாயும். நாம்  மனதை  ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்றவற்றை இட்டு நிரப்பி வைக்காமல்  காலியாக வைத்து இருந்தால் இறை அருள் என்ற வெள்ளம் தானாகவே  ஓடி வந்து நம் உள்ளத்தை நிரப்பும். 

இதையே அடிகள் பின்னொரு இடத்தில் கூறுவார் 

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

அவன் தலையில் ஆகாய கங்கை இருக்கிறது. அது மேலிருந்து கீழே விழுந்து ஓடி வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த அருள் புனல் நம்மை நோக்கி ஓடி வரும். 

அவன் தலையில் கங்கையை வைத்து இருக்கிறான் என்றால் ஏதோ ஆற்றை தலையில் வைத்து இருக்கிறான் என்று கொள்ளக் கூடாது. அது ஒரு குறியீடு. 

வெள்ளம் சரி. ஆனால் வெள்ளம் வந்தால் அது எப்போதும் நாசத்தையே விளைவிக்கும். வீடு வாசல்களை அடித்துக் கொண்டு போய் விடும். பயிர் பச்சைகளை  அழிக்கும். இறைவனின் அருள் வெள்ளமும் அப்படித்தானோ என்று  கேட்டால் , இல்லை. இது வேறு விதமான வெள்ளம். 

"இன்ப வெள்ளம்" என்றார் மணிவாசகர். 

இன்பத்தை மட்டுமே தரும் வெள்ளம். 


அடுத்த சொல் "அத்தா". 

அத்தா என்ற சொல்லுக்கு அப்பா, தந்தை என்று பொருள். 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

என்பார் சுந்தரர்.

அடுத்த சொல் "மிக்காய்"

மிகுதியாய்.

அனைத்திலும் அவன் இருக்கிறான். அவற்றைத் தாண்டி மிகுதியாகவும் இருக்கிறான். 



 


Friday, October 10, 2014

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?



துரியோதனன் மற்றும் துச்சாதனன் என்ற இருவரையும் போரில் வென்று, அவர்களின் குருதி வழிய , வெற்றி முரசு கொட்டும் நாளில் தான் என் விரித்த குழலை முடிவேன் என்று சபதம் செய்து விட்டால் பாஞ்சாலி


அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி, 
                 அளகம் தீண்டி, 
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர், 
                 தகாதனவே விளம்புவோரை, 
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங் 
                 குருதி பொழிய, 
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி 
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

ஆண்டு பதிமூன்று ஆகி விட்டது. தர்மன் சமாதன தூது விடுகிறான் துரியோதனனிடம்.

பாஞ்சாலி தவிக்கிறாள்.

விரித்த தன் கூந்தலை என்று  முடிவது,தான் ஏற்ற சபதம் என்ன ஆகுமோ என்று தவிக்கிறாள்.

கண்ணன் எல்லோரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்டு அறிந்த பின், கடைசியில்  திரௌபதியிடம் , அவளின் எண்ணத்தையும் கேட்க்கிறான்.

"என் குழலைப் பிடித்து , அந்த கண் இல்லாதவன் பெற்ற மகன் துச்சாதனன், என் உடையை களைய நின்ற போது , பஞ்ச பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள், வெற்றி கொள்ளும் சக்கரத்தை கொண்ட கோவிந்தா , அன்றும் என் மானத்தை வேறு யார் காத்தார்கள்  (உனையன்றி ) "

பாடல்

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

பாடல்

கற்றைக் = அடர்ந்த

குழல் = முடியையைப்

பிடித்து = பிடித்து

கண் இலான் = திருதராஷ்டிரன்

பெற்று எடுத்தோன் = பெற்ற பிள்ளை (துச்சாதனன்)

பற்றித் துகில் உரிய = என் சேலையை பற்றி இழுக்க

பாண்டவரும் பார்த்திருந்தார் = பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள்

கொற்றத் = வெற்றியடையும்

தனித் = தனித்துவமான

திகிரிக் = சக்ராயுதம்

கோவிந்தா! = கோவிந்தா

 நீ அன்றி,= நீ அன்றி
 
அற்றைக்கும் = அன்றும் ("ம்" )

என் மானம் ஆர் வேறு காத்தாரே? = என் மானத்தை யார் காத்தார்கள் ?

இன்றும் என் மானம் நீ காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.




Thursday, October 9, 2014

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம்

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம் 


மகா பாரத யுத்தம் நடந்தது. பல்லாயிரக்கானவர்கள் மாண்டார்கள்.

இந்த உயிர் இழப்புக்கு யார் காரணம் ?

பொறாமை குணம் கொண்ட துரியோதனனா ?

அவனைக் கண்டு எள்ளி நகையாடிய பாஞ்சாலியா ?

கோப குணம் கொண்ட அர்ஜுனன் மற்றும் பீமனா ?

சூதாடிய தர்மனா ?

வஞ்சனை செய்த சகுனியா ?

வாய் மூடி நின்ற பீஷ்மனா ? துரோணனா ?

வஞ்சத்தை வஞ்சத்தால் முறியடித்த கண்ணனா ?

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றாலும்...இவை அனைத்திற்கும் பின் நின்றது அறம். அறம் தப்பியவர்களை அறம் தண்டித்தது.

அதை அறம் என்று சொல்லுங்கள், இறை என்று சொல்லுங்கள், இயற்கை என்று சொல்லுங்கள்.

அந்த அறம் நின்று கொன்றது.

போருக்கு முன் கண்ணன் தூது போக நிற்கிறான்.

பாண்டவர்களிடம் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

தர்மன் சமாதனம் வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனும், பீமனும், நகுலனும் சண்டை வேண்டும் என்கிறார்கள்.

சகாதேவன், "கண்ணா என்னிடம் என்ன கேட்கிறாய். நீ நினைத்தை செய்" என்கிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம்வருகிறான் கண்ணன்.

பாஞ்சாலி கதறுகிறாள்....

"இரணியன் கோபம் கொண்டு தூணைப் பிளந்த போது அதில் இருந்து வந்து பிரகலாதனை காத்தாய். ஆதி மூலமே என்று அழைத்த ஒரு யானைக்குக் கூட அருள் புரிந்தாய் கண்ணா " எனக்கு அருள் புரிய மாட்டாயா என்று கதறுகிறாள்.

பாடல்

'சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

'சாலக் = அதிகமாக

கனகன் = பொன் நிறம் கொண்ட (கனகம் = பொன்) இரணியன்.

தனி மைந்தனை = சிறந்த மைந்தனை (பிரகலாதனை)

முனிந்த காலத்து = கோபித்த காலத்து

அவன் அறைந்த = அவன் பிளந்த

 கல்-தூணிடை வந்தாய்! = கல் தூணில் இருந்து வந்தாய் (வந்து அவனுக்கு அருள் புரிந்தாய் )


மூலப் பேர் = ஆதி மூலமே என்ற பெயரைக்  

இட்டு = கொண்டு

அழைத்த = கூப்பிட்ட

மும் மத மால் யானைக்கு = யானைக்கு

நீலக் = நீல நிறக்

கிரிபோல் = மலை போல்

முன் நின்ற நெடுமாலே! = முன்னால் வந்து நின்ற நெடிய திருமாலே

என்று ஆரம்பிக்கிறாள்...

அவள் என்ன கூறினாள் என்று மேலும் பார்ப்போம்.



Tuesday, October 7, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்




Monday, October 6, 2014

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?


திருவிளையாடற் புராணம் சாதாரண மனிதர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குக்கிறது.

இறைவன் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான் என்ற நம்பிக்கையைத் தரும் நூல்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்ந்தார்ப் போல மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்த இறைவனால் வந்தி என்ற வயதான பெண்ணும் அருள் பெற்றாள் .

ஒரு நாள் வைகை கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணை இட்டான்.

வந்தி என்ற ஒரு மூதாட்டி மதுரையில் வாழ்ந்து வந்தாள். கணவனும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பிட்டு விற்று வாழ்ந்து வந்தாள் .

அவளுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது.

சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன என்று இருப்பவள்.

வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவில்லை என்றால் பாண்டிய மன்னன் தண்டிப்பானே, நான் என்ன செய்வேன் என்று வருந்துகிறாள்.

பாடல்

பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை 
                                                            என்பது 
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் 
                                                            நாள் 
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து 
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே.

பொருள்

பிட்டு விற்று = பிட்டு விற்று

உண்டு வாழும் = அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கொண்டு வாழும்

பேதையேன் = பேதையேன்

இடும்பை = துன்பம்

என்பது = என்பது

எள் துணை யேனும் இன்றி = எள் அளவும் இன்றி

இரவி எங்கு எழுகென்று = சூரியன் எந்த பக்கம் எழுந்தால் என்ன என்று

இந்நாள் மட்டு  = இன்று வரை

 நின் அருளால்= இறைவா, உன் அருளால்

இங்கு வைகினேற்கு = இங்கு வாழ்ந்து வந்த எனக்கு

இன்று வந்து விட்டது = இன்று வந்து விட்டது 

ஓர் இடையூறு = ஒரு தடங்கல்

ஐய = ஐயா

மீனவன் ஆணை யாலே.= மீன் கொடி கொண்ட பாண்டிய மன்னவனின் ஆணையால்

துன்பம் வரும் போது துன்பம் வந்து விட்டதே என்று வருந்துகிறோம். வந்தி வருந்தியதைப்  போல. அவளுக்குத் தெரியாது, இந்தத் துன்பம் தான் மிகப் பெரிய, கிடைத்தற்கரிய இறைவனை அவள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வரப் போகிறது என்று.

துன்பம் வரும் போது துவண்டு  போகாதீர்கள்.

யாருக்குத் தெரியும் உங்கள் துன்பம் உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என்று.

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று இருங்கள்.

துன்பத்தில் கிடந்து வருந்துபவர்களுக்கு , "உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்" என்று மீண்டும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டுவது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு நன்மை.




Sunday, October 5, 2014

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும்

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும் 


நம் வீட்டில் எவ்வளவோ நல்ல காரியங்கள் நடை பெறுகிறது. பிறந்த நாள், திருமண நாள், பிள்ளைகள் பள்ளியில் சாதித்து வரும் நாட்கள், அலுவகலத்தில் பணி உயார்வு, ஊக்கத் தொகை (bonus ) கிடைக்கும் நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் பல நல்ல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

நாமும் அந்த நல்ல நிகழ்வுகளினால் மகிழ்கிறோம்.

அந்த மாதிரி நாட்களில், இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்தினால் நம் இன்பம் இரட்டிப்பாகும்.

ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு, காப்பாரற்ற முதியோர்களுக்கு, ஊனம் உற்றவர்களுக்கு என்று யாருக்காவது அந்த தினங்களில் உதவி செய்யலாம்.

நாம் மகிழும்போது, அந்த மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் இன்னொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும்.

இராமனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது.

புத்தாடை அணிந்து தேர் ஏறப் போகிறான்.

அதற்கு முன்னால் நிறைய தான தர்மங்கள் செய்கிறான் - நல்லவர்களுக்கு.

பாடல்

பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நால் மறைச்
செல்வர்கள் வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான்.


பொருள் 

பல் பதினாயிரம் = பல்லாயிரம்

பசுவும் = பசுவும்

பைம் பொனும் = பொன்னும்

எல்லை இல் நிலனொடு =  எல்லை இல்லாத நிலமும்

மணிகள் யாவையும் = நவரத்தினங்களும்

நல்லவர்க்கு உதவினான் = நல்லவர்களுக்கு தானம் செய்தான்

நவிலும் நால் மறைச் = நான்கு வேதங்களை ஓதும்

செல்வர்கள் = நல்லவர்கள்

வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான் = வாழ்த்துச் சொல்ல தேரில் ஏறினான்

சீதை போன்ற ஒரு அழகான பெண்ணை மணந்து கொள்ளப் போகிறோம் என்றால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருமா ?

இராமனுக்கு வந்தது.

அது இராமன்  காட்டிய வழி.

பாடம் படிப்போம்.