Saturday, October 11, 2014

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற   


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்



------------------------------------//பாகம் 3 //----------------------------------------------------------------------

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற


ஆற்றில் நீர் வரும்போது இரண்டு கரைகளுக்கு உட்பட்டுத் தான் வரும். அதுவே  கரையை உடைக்கும் போது வெள்ளமாகி வரும். 

புலன்கள் மூலம் கிடைக்கும் இன்பம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. சில நாள் இருக்கலாம், சில மணி நேரம் இருக்கலாம், சில நிமிடம் நிலைக்கலாம். எப்படியாயினும்  அதற்கு ஒரு முடிவு, எல்லை உண்டு. 

இறைவனை அறிந்து அதன் மூலம் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. 

இதையே அபிராமி பட்டரும் , களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை  என்றார்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


வெள்ளம் உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் நோக்கிப் பாயும். நாம்  மனதை  ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்றவற்றை இட்டு நிரப்பி வைக்காமல்  காலியாக வைத்து இருந்தால் இறை அருள் என்ற வெள்ளம் தானாகவே  ஓடி வந்து நம் உள்ளத்தை நிரப்பும். 

இதையே அடிகள் பின்னொரு இடத்தில் கூறுவார் 

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

அவன் தலையில் ஆகாய கங்கை இருக்கிறது. அது மேலிருந்து கீழே விழுந்து ஓடி வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த அருள் புனல் நம்மை நோக்கி ஓடி வரும். 

அவன் தலையில் கங்கையை வைத்து இருக்கிறான் என்றால் ஏதோ ஆற்றை தலையில் வைத்து இருக்கிறான் என்று கொள்ளக் கூடாது. அது ஒரு குறியீடு. 

வெள்ளம் சரி. ஆனால் வெள்ளம் வந்தால் அது எப்போதும் நாசத்தையே விளைவிக்கும். வீடு வாசல்களை அடித்துக் கொண்டு போய் விடும். பயிர் பச்சைகளை  அழிக்கும். இறைவனின் அருள் வெள்ளமும் அப்படித்தானோ என்று  கேட்டால் , இல்லை. இது வேறு விதமான வெள்ளம். 

"இன்ப வெள்ளம்" என்றார் மணிவாசகர். 

இன்பத்தை மட்டுமே தரும் வெள்ளம். 


அடுத்த சொல் "அத்தா". 

அத்தா என்ற சொல்லுக்கு அப்பா, தந்தை என்று பொருள். 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

என்பார் சுந்தரர்.

அடுத்த சொல் "மிக்காய்"

மிகுதியாய்.

அனைத்திலும் அவன் இருக்கிறான். அவற்றைத் தாண்டி மிகுதியாகவும் இருக்கிறான். 



 


No comments:

Post a Comment