Wednesday, March 9, 2016

அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு

 அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு 


பாடல்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = குயில் போல இருப்பாள் கடம்பா அடவியில் (அடவி என்றால் காடு)


கோல வியன்  = அழகிய

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = மயில் போல இருப்பாள் இமய மலையில்

வந்து உதித்த  = வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் = மலையின் மேல் வெயில் போல இருப்பாள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரின் மேல் தோன்றும் அன்னப் பறவை போல இருப்பாள்

கயிலாயருக்கு = கயிலை மலையில் இருக்கும் சிவனுக்கு

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று ஒரு நாள் இமவான் அளித்த

பாடல் இவ்வளவுதான். 

இதில் என்ன இருக்கிறது ? 

மயில் போல, குயில் போல, அன்னம் போல , வெயில் போல, அன்னம் போல இருக்கிறாள்  அபிராமி என்று கூறுகிறார். இதில் புதுமையான விஷயம் ஒன்று இல்லை என்றே தோன்றும்.

பொறுங்கள். 

மிக மிக ஆழமான, நுண்ணியமான செய்தியை கூறுகிறார் பட்டர்.

நாம் பேசும் போது , அந்த சப்தம் நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கிறது  அல்லவா ?

நாம் மனதுக்குள் பேச முடியும் அல்லவா ? மாணவர்களை மனதுக்குள் படியுங்கள் என்று சொன்னால் அவர்கள் படிப்பார்கள். ஒவ்வொரு எழுத்தாய் , ஒவ்வொரு வார்த்தையாய் வாசிப்பார்கள்.  அந்த வார்த்தைகளின் சப்தம் அவர்களுக்கு கேட்க்கும் , அருகில் இருப்பவர்களுக்கு கேட்க்காது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம்.  அக்ஷரம் இல்லாமல் வார்த்தைகள் இல்லாமல்  சொல்ல வேண்டியதை நினைக்க முடியும். ஒலி வடிவம் இல்லை ஆனால்  அந்த வார்த்தைகள் தரும் அர்த்தம் மொத்தமும் உள்ளே ஓடும். 

அதற்கும் முந்தைய நிலை இருக்கிறது. அந்த நிலையில் சப்தம் தோன்றும்.  சொல்பவருக்கே கூட  தெரியாது. 

இதை  சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நாலு விதமான நிலை என்று சொல்லுவார்கள். 

சூக்குமை...சூட்சுமமானது. நமக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. மூலாதாரத்தில்  இது தோன்றும். 

அடுத்த நிலை பைசந்தி, வார்த்தை முழுதுமாக உருவாவிட்டாலும் அது தோன்றுவது  தெரியும். நாபிக் கமலத்தில் இருக்கும் இது. 

அடுத்த நிலை மத்திமை - தொண்டையில் இருப்பது. மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ஒலி வடிவம் இருக்கும். நமக்கு கேட்கும். மற்றவர்களுக்கு கேட்காது. ஆரூடம் சொல்பவர்கள் இந்த ஒலியை கேட்க்கும் சக்தி படைத்தவர்கள். நாம் வாய் விட்டு சொல்லாமலே மனதுக்குள் ஒலிக்கும் அந்த ஒலியை அவர்களால் கேட்க முடியும். நாம் நம்மைப் பற்றி நினைப்பதை, கேட்க நினைப்பதை அவர்கள் நம்மிடம் இருந்தே கேட்டுக் கொள்ளவார்கள். நாம் நினைப்போம், இது எப்படி  அவர்களுக்குத் தெரிந்தது , நாம் சொல்லவே இல்லையே என்று.  
மந்திரங்களை இந்த இடத்தில் சொல்ல முடியும். அதற்கு அசபா மந்திரம் என்று பெயர். 

இதைத்தான் ஔவையார் 

குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

என்பார் 

வைகரி - இறுதியாக வெளிப்படுவது. நமக்கும் மற்றவர்களுக்கும் கேட்கும். 

சூக்குமையில் இருக்கும் போது , வாக்கு ஒளி வடிவில் இருக்கும்.    மேலே எழுந்து வரும் போது அது ஒலி வடிவம் பெறும்.


குயிலாய் இருக்கும் = குயில் கூவுவது கேட்கும். இது வெளிப்பட்ட சப்தம். குயில் இருக்கும் இடம் தெரியாது. ஒளி வடிவம் இல்லை.


மயிலாய் இருக்கும் = மயில் பார்பதற்கு உகந்தது.  அழகாய் இருக்கும். ஒளி வடிவமானது.


வந்து உதித்த = உதித்தல் என்றால், இருப்பது வெளிப்படுவது. சூரியன் உதிப்பான். சூரியன் தோன்றினான் என்று சொல்லக் கூடாது.

வெயிலாய் இருக்கும் = மயில் சற்று மயக்கமான உருவைத் தரும். நீளமும், பசுமையும், இடை இடை வெளியும் விட்டு, அசையும் போது அதன் அழகு தெரியும், ஆனால் முழுவதும் தெரியாது. ;ஆனால், வெயில் தெளிவாகத் தெரியும்.

கமலத்தின்மீது அன்னமாம் = ஞான முக்தி அடைந்தவர்களை அன்னம் என்று குறிப்பிடுவார்கள். அன்னத்திற்கு வட மொழியில் ஹம்சம் என்று பெயர்.

இராம கிருஷ்ண பரம ஹம்சர்.

ஞானம் என்பது உண்மையையும் , உண்மை அல்லாததையும் கண்டு தெளிவது. எனவே ஞானிகளை ஹம்சர் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த உண்மைகளை அறியும் போது ஞானம் பிறக்கும் என்று பட்டர் கூறுகிறார்.


இந்த மயில் , குயில் எல்லாம் உண்மையா ? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

வானத்தில் மயில் ஆடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய், மயில் குயில் ஆச்சுதடி  


என்பார் குதம்பைச் சித்தர்.

அபிராமி அந்தாதி ஒரு ஞானப் பெட்டகம்.

ஆழ்ந்து படிக்க வேண்டும்.


For other entries: http://interestingtamilpoems.blogspot.com/2016/03/blog-post_9.html

No comments:

Post a Comment