Friday, October 14, 2016

திருக்குறள் - குற்றமற்றவர் செயல்

திருக்குறள் - குற்றமற்றவர் செயல் 


எப்படி பேச வேண்டும் ? எப்படி கேட்க வேண்டும் ?

பேசத் தெரியாமல் பேசி, பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம், நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம், உறவுகளை துன்பப் படுத்தி விடுகிறோம்.

அதே போல, யார் சொல்வதை கேட்பது, எப்படி கேட்பது, என்று தெரியாமல் கண்டதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். டிவி இல் பேசுவதை, whatsapp ல் பலர் உளறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்படி பேச வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

பாடல்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற்பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்

வேட்பத்தாஞ் = விரும்பும்படி

சொல்லிப் = சொல்லி

பிறர் = மற்றவர்கள்

சொற் = சொல்லுவதில்

பயன் = பயன்களை

கோடன் = கண்டு பிடித்து கொள்வது 

மாட்சியின் = பெருமை உடையவர்களின்

மாசற்றார் = குற்றமற்ற

கோள் =  முடிவு , உறுதி

மற்றவர்கள் விரும்பும்படி  பேச வேண்டும். மற்றவர்கள் சொல்வதில் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்.

கொஞ்சம் ஆழ்ந்து பொருள் தேடுவோம்.

மற்றவர்கள் விரும்பும் படி என்றால்,

முதலாவது, அவர்கள் நாம் சொல்வதை , சொல்லும் போது விருமப வேண்டும்.

இரண்டாவது, மீண்டும் நம்மிடம் வந்து கேட்க விரும்ப வேண்டும். அவர் கிட்ட போய் பேசுனா ஏதாவது நல்லது சொல்லுவார், புதுமையான ஏதாவது சொல்லுவார் என்று விரும்பி கேட்க வர வேண்டும்.

அப்படி நிகழ வேண்டும் என்றால், யாரிடம் பேசுகிறோமோ, அவர்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை, அதற்கு என்ன தீர்வு,  அந்த தீர்வை செய்வதில் என்ன சிக்கல்கள் , அந்த சிக்கல்களை எப்படி  தாண்டுவது என்று சிந்தித்து, அதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி  எளிமையாக சொல்ல வேண்டும். அவர்கள் மனதை  உறுத்தாமல், அவர்கள் சங்கடப் படாமல் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். நல்லதைப் பேச வேண்டும். நம்பிக்கை ஊட்டும்  படி பேச வேண்டும்.

அப்படி பேசினால் அவர்கள் நாம் பேசுவதை விரும்புவார்கள்.

அதற்கு , ஆழ்ந்த படிப்பும், நல்ல  சிந்தனையும்,உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமும்   வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நலம்.

இரண்டாவது, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ நம்மிடம் சொல்கிறார்கள். சில சமயம் அது நமக்கு உபயோகமாக இருக்கும். சில சமயம் அபத்தமாக இருக்கும்.

அவர்கள் சொல்வதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாததை விட்டு விட வேண்டும். சொன்னவர்களை கோபிக்கக்  கூடாது.

அதே நேரத்தில், சொல்பவர் பெரியவர், வயதில் மூத்தவர் , ஒரு நிறுவனத்தின் தலைவர் என்பதால் அவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அவர்கள் சொல்வதில் நமக்கு என்ன பயன் என்று அறிந்து , அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசுவது உயர்ந்த கருத்துகளாக இருக்கலாம். அதனால் நமக்கு என்ன பயன் என்று அறிந்து அதை கேட்க வேண்டும்.


உண்மையா பொய்யா என்று ஆராய  வேண்டாம். பயன் உள்ளதா, பயன் அற்றதா என்று ஆராய வேண்டும். பயன் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள  வேண்டும். பயன் இல்லாதவற்றை விட்டு விட வேண்டும்.

காரண காரியம் இல்லாமல் பேசுவதும், கேட்பதும் கூடாது.

வெட்டிப் பேச்சு,  திண்ணைப் பேச்சு, வம்புப் பேச்சு இவற்றை தவிர்ப்பது நலம்.


பேசுவதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும். இப்படி பேசினால் கேட்பவர்களுக்கு பிடிக்குமா என்று.

கேட்பதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும், எதற்காக அந்த பேச்சை கேட்கப் போகிறோம் என்று.

நல்லதைப் பேசுவோம். பயனுள்ளவற்றை கேட்போம்.

வாழ்கை பயனுள்ளதாக இருக்கும். இருக்கட்டும். 

1 comment:

  1. சொல்வது, கேட்பது என்ற இரண்டு செயல்களும் அமைந்த குறளை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete