Tuesday, February 7, 2017

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று 


குமரகுருபரர் அருளிச் செய்தது நீதி நெறி விளக்கம். இவர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பிறந்து ஐந்து வருடம் வரையில் வாய் பேசாமல் இருந்ததாகவும், பின் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசினார் என்றும் இவரின் வரலாற்று குறிப்பு கூறுகிறது.

இவருடைய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் கேட்க மீனாட்சியே நேரில் வந்து அவள் கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட்டாள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

நீதிநெறி விளக்கம் என்ற இந்த நூல் 102 பாடல்களைக்  கொண்டது.அத்தனையும் வாழ்க்கைக்கு வழி காட்டும் அற்புதமான பாடல்கள். எளிய தமிழில் இனிமையான பாடல்கள்.

சில பாடல்களை இந்த பிளாகில் பார்ப்போம். முடிந்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள். தேனினும் இனிய தமிழ் பாடல்கள்.

மனிதன் மூன்று விஷயங்களை நிரந்தரமானது என்று பிடிவாதமாக  நினைக்கிறான்.  இல்லை,அவை நிரந்தரமானவை இல்லை என்று எவ்வளவு சாட்சிகள் தந்தாலும் அனைத்தையும் மறுதலிக்கிறான்.  ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

அவை - இளமை, செல்வம், வாழ்க்கை (உயிர்).

முடி நரைக்கிறது . பல்  விழுகிறது.தோலில் சுருக்கம்  வருகிறது. ஞாபக சக்தி குறைகிறது.  இருந்தும், ஏதோ இளமை நிலையானது என்று விடாப்பிடியாக  நினைக்கிறான். முடி கறுத்தால் அதற்கு சாயம் பூசி மறைக்கிறான். பல் விழுந்தால் அதற்கு பொய் பல் கட்டிக் கொள்கிறான். பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதைப் போல நாளும் ஆடி ஓடி சாகும் வரை சொத்து சேர்கிறான். அனுபவிக்காமலே இறந்தும்  போகிறான்.

இவை நிலையானவை என்று நினைக்காமல் இருந்தால், வாழ்வு எவ்வளவோ சுகமாக இருக்கும்.

பாடல்

நீரில் குமிழி இளமை நிறை செல்வம் 
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் 
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே 
வழுத்தாதது எம்பிரான் மன்று


பொருள் 

நீரில் குமிழி இளமை = நீரில் தோன்றும் குமிழி போன்றது இளமை

நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நிறைகின்ற செல்வம் நீரில் தோன்றும் அலை 

நீரில் எழுத்து ஆகும் யாக்கை = நீரில் மேல் எழுத்து ஆகும் இந்த உடல் 

நமரங்காள் = நம்மவர்களே

என்னே = ஏன்

வழுத்தாதது = வாழ்த்தாதது

எம்பிரான் மன்று = இறைவன் சந்நிதியில்

இளமையை நீரின் குமிழி என்றும், செல்வத்தை நீரில் தோன்றும் அலை என்றும்,  உடலை நீர் மேல் எழுத்து என்று கூறுகிறார்.

ஏன் ?

நீர் குமிழி முதலில் சாதாரணாமாகத் தோன்றும் பின் வான வில் நிறம் காட்டி பின் உடையும். அது போல, இளமை என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பலப் பல வண்ணம் காட்டி  மறையும்.

பெண்ணைப் பார்த்தால் அழகு. அவள் சிரித்தால் அழகு. நடந்தால் அழகு. வெட்கப் பட்டால் அழகு....என்று மயங்கும் போது தெரிய வேண்டும் இது நீர் குமிழி என்று.


செல்வம் நீர் மேல் தோன்றும் அலை. அலை மேலே எழும் பின் கீழே விழும். செல்வமும் அப்படித்தான்.  ஒரு கால கட்டத்தில் மேலே வரும், பின் சட்டென்று  மறையும். மேலே வரும்போது இப்படியே வந்து கொண்டே இருக்கும் என்று மகிழக் கூடாது.  குறையும் போதும் இப்படியே இருந்து விடும் என்றும் நினைத்து வருந்தக் கூடாது. கூடுவதும் குறைவதும் செல்வத்தின் இயல்பு.

நீர் மேல் எழுத்து உடல்.

கடற் கரையில் எழுதி வைத்தால் எந்த அலை அந்த எழுத்தை அழிக்கும் என்று  தெரியாது.  அது போலத்தான் இந்த உடலும். எந்த நேரமும் மறைந்து விடும். மரணம் என்ற  அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. எந்த அலை நம்மை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரியாது.

சரி,  இளமையும்,செல்வமும், உடலும் நிலை இல்லாதது.

 புரிகிறது. அதனால் என்ன ? அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.

நமது பெரும்பாலான கவலைகளுக்கு , துன்பங்களுக்குக் காரணம் நம் ஆணவம்.

எப்படி ?

நான் , எனது என்ற எண்ணங்கள் தான் ஆணவத்திற்கு காரணம்.

நான் பெரிய ஆள், படித்தவன்/ள் , அழகானவள் / ன் , பணக்காரன், செல்வாக்கு  உடையவன் , அதிகாரம் உடையவன் என்று நினைத்து நமது ஆணவத்தை வளர்த்துக்  கொள்கிறோம்.

என் வீடு, என்  கார்,என் வேலை, என் மனைவி, என் பிள்ளை என்று நமக்கு உரியவற்றினால் நமக்கு ஆணவம் வருகிறது.

இப்படி ஆணவம் வருவதால் அவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் , மேலும் பெருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.  நம்மை விட மற்றவன் அதிகம்  பெற்று விடுவானோ , அவன் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள்,  அவன் பிள்ளை என் பிள்ளையை நன்றாகக் படிக்கிறான்  என்ற பொறாமை வருகிறது. இருக்கிற செல்வம் , இளமை போய் விடுமோ   என்ற பயம் வருகிறது.

இப்படி ஆசை, பொறாமை, பயம் என்று பலப் பல துன்பங்களுக்கு காரணமாய் இருப்பது  இந்த ஆணவம்.

ஆணவத்திற்கு காரணம் நான் , எனது என்ற எண்ணம்.

 நான் எனது என்ற எண்ணத்திற்கு காரணம் இளமையும், செல்வமும், இந்த உடலும்.

இவை நிரந்தரமானவை என்று நினைத்தால் ஆணவம் போகும்.

ஆணவம் மறைந்தால் துன்பம்  விலகும்.

"எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்பார் அருணகிரி.

துன்பம் நீங்கினால் , இன்பம் தான். 

4 comments:

  1. Fantastic & quick introduction to Shri Kumara Guru Desikar's composition titled " Needhi Neri Vilakkam ".
    Millennial's young people may get benefitted by your choice of Padhigams & commentary.
    TiruChendur Lord Murugan bless you in yourendeavours.
    Thanks.
    Regards
    Kasturi G

    ReplyDelete
  2. Sir, In the last but forth sentence there is an error. It should be "Evai nirandhanamanavai alla yendru ninaithaal
    aanavam pogum"

    ReplyDelete
  3. superrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  4. மிக அழகாக தெளிவாக எளிமையாக விளக்கி விட்டீர்கள்

    ReplyDelete