Friday, August 17, 2018

திருக்குறள் - தவம் என்றால் என்ன?

திருக்குறள் - தவம் என்றால் என்ன?


தவம் என்றால் என்ன ? ஏதோ காட்டில் போய், மரத்தடியில், புற்று மேலே வளர, சோறு தண்ணி இல்லாமல், கடவுளை நோக்கி வணங்குவதா தவம் ?

இல்லை.

இலக்கியங்கள் எதையும் மிகைப் படுத்தியே சொல்லும். அப்போதுதான் அது படிக்க சுவையாக இருக்கும். ஒருவன் கொஞ்சம் பலமானவனாக இருந்தால், அவனை "ஆயிரம் யானை பலம் கொண்டவன் " என்று வர்ணிப்பது இலக்கியத்தின் வழி.

ஆயிரம் யானை பலம் என்றால் சராசரியை விட கொஞ்சம் அதிக பலம் கொண்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அது போல, காட்டில் சென்று , சோறு தண்ணி இல்லாமல், ஆயிரம் ஆண்டுகள் இறைவனை நோக்கி வழிபடுவது தவம் என்று சொன்னால், பசி தூக்கம் பார்க்காமல் வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது என்று அர்த்தம்.

நான் சொல்லவில்லை. வள்ளுவப் பேராசான் சொல்கிறார்.


பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

பொருள்

உற்ற = வந்துவிட்ட

நோய் = துன்பம்

நோன்றல் = ஏற்றுக் கொள்ளுதல்

உயிர்க்கு = மற்ற உயிர்களுக்கு

உறுகண் = துன்பம்

செய்யாமை = செய்யமால் இருத்தல்

அற்றே = அதுவே

தவத்திற்கு உரு = தவத்தின் வடிவம்


வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுவதும், மற்ற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதுவே  தவத்தின் வடிவம்.

நோய் என்றால் துன்பம்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம்.

சற்றே சிந்திப்போம்.

நமக்கு ஒரு துன்பம் வந்து விட்டால் நாம் என்ன செய்வோம்?

முதலில், துன்பம் தாங்காமல் புலம்புவோம். ஐயோ, எனக்கு இப்படி ஆகி விட்டதே, ஏன்தான் எனக்கு மட்டும் இப்படி வருகிறதோ என்று புலம்பித் தள்ளுவோம்.

அடுத்தது, இந்த துன்பத்திற்கு யார் காரணம் என்று யோசிப்போம். யாரையாவது  பலி கடாவாக்கி அவர்களை திட்டி தீர்ப்போம்.

மூன்றாவது, நமக்கு இந்த துன்பம் வரக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு துன்பம்  வரவேண்டும் என்று விரும்புவோம்.

ஒண்ணும் இல்லை, மனைவி ஒரு நாள் காப்பியில் சர்க்கரை கொஞ்சம் கூட குறைய  போட்டு விட்டால்...அந்தத் துன்பத்தை நம்மால் சகிக்க முடிகிறதா ? அவளை திட்டி தீர்க்க வேண்டியது. அவளை ஏச வேண்டியது. அவள் மனம் நோகும்படி  ஏதாவது சொல்ல வேண்டியது.

சாலையில் போகும் போது, டிராபிக் சிக்னலில் கொஞ்ச நேரம் நிற்க வேண்டி வந்தால், நொந்து கொள்வது, யாரையாவது திட்ட வேண்டியது.

சாலை குண்டும் குழியுமாக இருந்தால் பொறுமை அத்து யார் யாரையெல்லாமோ திட்டுவோம்.

இப்படி, நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளாமல், தவிக்கிறோம்.

அதே சமயம், நமது துன்பத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க நினைக்கிறோம்.  அப்படியே இல்லாவிட்டாலும், நமது இன்பத்துக்காக மற்றவர்களை துன்பப் படுத்த நினைக்கிறோம்.

இது வெளி உலகில் நடப்பது. வீட்டில், "இந்த குடும்பத்துக்காக நான் எவ்வளவு உழைக்கிறேன். உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறேன். எனக்கு ஒரு மரியாதை இருக்கா இந்த வீட்டில்" என்று அலுத்துக் கொள்கிறோம்.

துன்பம் என்று வந்து விட்டால், அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

வீட்டுக்கு உழைப்பது, நாம் பணி புரியும் நிறுவனத்துக்கு உழைப்பது, இந்த சமுதாயத்துக்கு உழைப்பது எல்லாம் கொஞ்சம் துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுத்துக் கொண்டு உழைப்பதுதான் தவம்.

அதே சமயம், இன்னொரு உயிருக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. உடலாலோ,மனதாலோ  மற்ற உயிரை துன்புறுத்தக் கூடாது.

அனைத்து உயிர்களிடமும் அன்போடு, மென்மையாக, கருணையுடன் பழக வேண்டும்.

யார் மனமும் புண் படும்படி பேசக் கூடாது.

நாம் வலியை பொறுத்துக் கொள்ள பொறுத்துக் கொள்ள , நம் வலிமை கூடும். மிகப் பெரிய வலிமையுடன், மற்றவர்கள் பால் அன்பாக நடந்தால் நம் மதிப்பு, மரியாதையும், செல்வாக்கும் உயரும்.

தவத்தால் வரும் பலன் அது.

நாளை முதல், கொஞ்சம் பசி, கொஞ்சம் காய்ச்சல், கொஞ்சம் தலைவலி , கொஞ்சம் உடல் வலி, கொஞ்சம் மன வலி இவற்றை பொறுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பலன் இன்றி உழைப்பது துன்பம் தான். எதுக்கு கிடந்து இவ்வளவு கஷ்டப் பட வேண்டும் என்ற சலிப்பு வரத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

எல்லோரிடமும் அன்பாக, இனிமையாக பேசுங்கள்.

நீங்களும் ஒரு தவம் செய்பவர்தான்.

தவம் செய்வதன் பலன் உங்களுக்கும் கட்டாயம் கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post.html








1 comment:

  1. அருமையாக எழுதி உள்ளீர்கள்.இன்னும் என்னை மாற்றி கொள்ள முயற்ச்சி செய்கிறேன். மிக்க நன்றி!

    ReplyDelete