Sunday, August 12, 2018

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?

வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?


வில்லிப் புத்தூர் ஆழ்வாரின் இழையும் தமிழ்.

கர்ணனின் பிறப்பு இரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் வரும்படி கண்ணன் கூறுகிறான். அதற்கு கர்ணன் கூறுவதாக வில்லியாரின் பாடல்கள் அத்தனையும் தேன்.

"கண்ணனா, அன்று கன்று வடிவில் வந்த ஒரு அரக்கனை, அந்த கன்றின் காலைப் பற்றி அருகில் உள்ள விளா மரத்தின் மேல் எரிந்து கொன்றாய். புல்லாங்குழல் ஊதி ஆவினங்களை அழைத்தாய். மலையை தூக்கிப் பிடித்து உன் ஆயர்பாடி மக்களை காத்தாய். உன்னால், இன்று என் பிறப்பின் இரகசியத்தை அறிந்தேன். ஆனால், இப்போது பாண்டவர் பக்கம் போனால், இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்காதா ?  என்கிறான்

பாடல்

கன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின் 
             கணம் அழைத்தும், 
குன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும் 
             செல்வக் கோபாலா! 
'இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்' என்று அன்பு 
             உருகி, எம்பியர்பால் 
சென்றால், என்னை நீ அறியச் செகத்தார் 
             என்றும் சிரியாரோ?

பொருள்

கன்றால் = கன்றுக் குட்டியால்

விளவின் = விளா மரத்தின்

கனி = பழங்களை

உகுத்தும் = உதிர்ந்து விழும்படி செய்தும்

கழையால் = புல்லாங்குழலால்

நிரையின் = பசுக்களின்

கணம் = கூட்டத்தை

அழைத்தும் = அழைத்தும்

குன்றால் = மலைக் குன்றால்

மழையின் =மழையில் இருந்து

குலம் தடுத்தும் = யாதவர் குலத்தை தடுத்து காத்தும்

குலவும் = உலவும்

செல்வக் கோபாலா! = செல்வச் சிறப்புள்ள கோபாலா (கண்ணா)

'இன்றால்,  = இன்று

எனது பிறப்பு உணர்ந்தேன் = எனது பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொண்டேன்

என்று = என்று கூறினான்

அன்பு உருகி = அன்பினால் உருகி

எம்பியர்பால் = என் தம்பிமார்களிடம்

சென்றால் = சென்றால்

என்னை = என்னைப் பார்த்து

நீ அறியச் = நீ பார்க்கும்படி

செகத்தார் = இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோரும்

என்றும் சிரியாரோ? = இன்று மட்டும் அல்ல, என்றென்றும் சிரிக்க மாட்டார்களா ?

இது நேரடியான பொருள்.

வில்லியின் சொல்லுக்குள் இன்னொரு பொருளும் உண்டு.


கன்றால் விளவின் கனி உகுத்தும் = மாயக் கண்ணா, நீ கன்று குட்டியை எறிந்து விளா மரத்தின் கனியை உதிர்த்தாய். நான் கன்றுக் குட்டியும் இல்லை, துரியோதனன் விளா மரமும் இல்லை

கழையால் நிரையின்  கணம் அழைத்தும், = வேணு கோபாலா, உன் குழல் இசைக்கு பசுக் கூட்டம் வரலாம். நான் மயங்க மாட்டேன்.

குன்றால் மழையின் குலம் தடுத்தும் = நீ குன்றை உயர்த்தி சரம் சரமாய் பெய்யும் மழையில் இருந்து உன் யாதவ கூட்டத்தை காப்பாற்றினாய். ஆனால், என் வில்லில் இருந்து சரம் சரமாய் பாயும் அம்பு மழையில் இருந்து பாண்டவ கூட்டத்தை உன்னால் காக்க முடியாது



வில்லி புத்தூராரின் வார்த்தை ஜாலம்.

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_12.html

No comments:

Post a Comment