Wednesday, August 22, 2018

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?


தினமும் எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறது அறப்பளீச்சுர சதகம்


பாடல்

மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;
  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;
  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,
     நேர்அலர் இடத்தில் வைரம்;

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்; எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


பொருள் 

" மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;"



மாதா பிதா , அதாவது பெற்றோரிடம் உள்ளன்புடன், கனிவுடன் மாறாத  ஒழுக்கத்தோடு  இருக்க வேண்டும்.  இந்தக் கால பிள்ளைகளுக்கு இதைச் சொல்லித் தர வேண்டும்.  சிறு வயது முதல்.  பெற்றோரிடம் அன்பும், கனிவும் , ஒழுக்கமும் இருக்க வேண்டும். 



"  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;"



ஆசிரியருக்கு, ஆச்சாரியருக்கு இனிமையான உபசார வார்த்தைகள் சொல்லி, அவரை வழிபட்டு, அவர் முன் அடக்கமுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும்  பெற்றோர்கள் வாய்க்கும். பெற்றோர் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால், எல்லோருக்கும் குரு அமையாது.  இறைவனே குரு வடிவில் வந்துதான்  அருள் புரிவான் என்கிறார் அருணகிரிநாதர்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

குருவுக்கு -  இனிய உபசார வார்த்தை, வழிபாடு, அடக்கம். 


" காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;"



காது வரை நீண்ட கரிய கண்களை உடைய மனைவிக்கு பள்ளி அறையில் இனிய சொல் வேண்டும்.  அது என்ன மனைவி என்றால் படுக்கை அறையில் மட்டும் தான் நல்ல சொல் வேண்டுமா ? மனைவி என்பவள் அதற்கு மட்டும் தானா  என்று கேட்கலாம். கேட்பார்கள்.

அது அப்படி அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகை பாராட்டினால் மிகவும் பிடிக்கும். மனைவியின் அழகை நண்பர்கள் முன் பாராட்டினால் என்ன நடக்கும். "உன் மூக்கு கிளியோபாட்ரா மூக்கு மாதிரி இருக்கு " என்று நண்பர்கள் மத்தியில் சொன்னால், அவனும் கூடவே "ஆமாம் ஆமாம், அதில் ஒரு சிகப்பு கல் மூக்குத்தி போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் " என்பான். அது மட்டும் அல்ல, நீங்கள் மூக்கை பாராட்டினால், "மூக்கு என்ன சார் மூக்கு, அந்த இடுப்பைப் பாருங்கள் " என்று நம்மோடு சேர்ந்து அவனும் பாராட்டத் தலைப்படுவான். தேவையா?

எனவே, மனைவியை பாராட்டுவது என்றால், தனிமையில் இருக்கும் போது மனம் விட்டு பாராட்ட வேண்டும்


" கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;"




அறிவில் மிகுந்த பெரியோர், முதியவர் போன்றவற்றுக்கு கருணையுடன் , அருளோடு  பொருள் உதவி செய்ய வேண்டும்.

" நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;"


பதவியில் இருப்பவர்களிடம் (அரசன்) பயம் கலந்த விநயத்துடன் இருக்க வேண்டும்.


" நெறியுடைய பேர்க்கு இங்கிதம்; "


நல்வழியில் செல்பவர்களுக்கு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும்.


" நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,"


நேசம் உள்ள உறவினர்களிடம் மனம் மகிழ்ந்து பரிவுடன் இருக்க வேண்டும். 

" நேர்அலர் இடத்தில் வைரம்;"


நேர் அலர் = பகைவர். பகைவர்களிடம் வைரம் போல உறுதியான மனதுடன் எதிர்த்து நிற்க வேண்டும். 


" ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்;"

பழைய மனு நூல் சொல்லும் முறை இது ஆகும். 


No comments:

Post a Comment