Sunday, September 24, 2023

திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம்

 திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம் 


ஊருக்கு நடுவே ஒரு நல்ல மா மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோடை காலத்தில் அந்த மரத்தில் மிக சுவையான பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அந்த மரம் யாருக்கும் சொந்தமானது அல்ல. யார் வேண்டுமானாலும் அந்தப் பழத்தை பறித்து சுவைக்கலாம் என்றால் எப்படி இருக்கும்?


எல்லோரும் எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று அந்தப் பழங்களை பறித்து உண்டு இன்புறுவார்கள் அல்லவா? 


அது போல 


ஒப்புரவு அறிந்தவனின் செல்வமும் எல்லோருக்கும் பயன் தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_24.html


(pl click the above link to continue reading)



பயன்மரம் = பயன் தரக்கூடிய மரம் 


உள்ளூர்ப் = ஊரின் உள்ளே 


பழுத்தற்றால் = பழுத்து இருந்தது போல 


 செல்வம் = செல்வமானது 


நயனுடையான் = ஒப்புரவு செய்பவன் 


கண் = இடத்தில் 


படின் = இருக்குமானால் 


இது என்ன குறள்? புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தின் பழங்களை போகிறவன் வருகிறவன் எல்லாம் பறித்துக் கொண்டு போவது போல, ஒப்புரவு செய்பவனின் செல்வம் என்றால் என்ன அர்த்தம். யார் வேண்டுமானாலும் அவன் செல்வத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்கிறாரா வள்ளுவர்? அது சரியா?  கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறையில் இது எப்படி சாத்தியப்படும் என்று நமக்கு சந்தேகம் வரலாம். 


உரை ஆசிரியர்கள் இந்தக் குறளை பெரிதாக உரை செய்யவில்லை. நாமே சிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டா இருக்க முடியும்?


பழ மரம் என்று ஏன் சொன்னார்?  மரம் பழம் தரும். எல்லோரும் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள்.  அப்புறம் என்ன ஆகும்?  அவ்வளவுதானா? இல்லை, அடுத்த வருடம் மீண்டும் அதே அளவு பழங்கள் தோன்றும். கொடுப்பதால் யாரும் குறைந்து விடமாட்டார்கள். இறைக்கும் கிணறு ஊறும் என்பது போல, கொடுக்க கொடுக்க மேலும் வரும். பயப்படாதே என்று வள்ளுவர் சொல்கிறாரோ?


மரத்தில் இருந்து மக்கள் பழத்தைத் தான் எடுப்பார்கள். பழம் தருகிறதே என்று வேரோடு யாரும் பிடுங்கிக் கொண்டு போய் விடுவதில்லை. அல்லது கிளையை வெட்டுவோம், இலையை வெட்டுவோம் என்று ஆரம்பிப்பது இல்லை. பழம் என்பது மரத்தின் அதிகப்படி.  தன் தேவைக்கு போக மீதியைத்தான் அந்த மரம் பழமாக மாற்றி வைக்கிறது. 


மேலும், பழம் தரும் மரம் என்றால் மக்கள் அதை பாதுகாப்பார்கள். யாரும் வெட்டி விடாமல் வேலி போட்டு காவல் செய்வார்கள். அடுத்த வருடமும் பழம் வேண்டுமே என்று மரத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். அதுவே ஊருக்கு நடுவில் ஒரு முள் மரம் அல்லது விஷ மரமாக இருந்தால் என்ன செய்வார்கள்? முதல் காரியமாக அதை வெட்டி விடுவார்கள். எனவே, ஒப்புரவு என்பது ஊருக்கு மட்டும் அல்ல, தனக்கும் நல்லது என்றும் பொருள் கொள்ளலாம். 


மேலும், பழத்தை பறித்துக் கொண்டு செல்பவர்கள், அதை உண்ட பின் அதன் விதையை தூர எறிந்து விடுவார்கள். எங்கோ விழுந்த விதை, அங்கு முளைக்கும். அது போல, ஒருவன் செய்யும் உதவி, பின் வரும் அவன் தலைமுறைக்கும் உதவி செய்யும். 


"அந்த காலத்தில உங்க அப்பா, தாத்தா எல்லாம் எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க.." என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


"உங்க அண்ணன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சு இருக்கார்...உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா" என்று எங்கோ செய்த உதவி, வேறு எங்கோ சென்று பலன் தருவதை நாம் கேட்டு இருக்கிறோம். 


மேலும், வள்ளுவர் பயன் தரும் மரம் என்றுதான் கூறி இருக்கிறார். பழம் தரும் மரம் என்று சொல்லவில்லை. பயன் என்றால் நிழல் தரும் மரமாகக் கூட இருக்கலாம். ஊருக்கு நடுவில்  ஒரு நிழல் மரம் இருந்தால், மக்கள் அதன் நிழலில் இளைப்பாறுவார்கள்.  அதன் கீழே அமர்ந்து உணவு உண்ணலாம், நீர் அருந்தலாம், பின் மீதி உள்ளதை அந்த மரத்தின் அடியில் கொட்டி விட்டுப் போவார்கள். அது மரத்துக்கு உரமாக பயன்படும். இப்படி ஊருக்கு நல்லது செய்வதன் மூலம், மரம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறது. 


குறளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். தோண்டி நாம் தான் எடுக்க வேண்டும். 






1 comment: