Friday, September 8, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன் 


ஏதோ ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்கிறோம். கடைக்காரர் ஒரு விலை சொல்கிறார். அது அதிகம் போலத் தெரிகிறது. நாலு கடையில் விசாரித்து, எங்கே மலிவாக இருக்கிறதோ அங்கே வாங்குகிறோம். 


ஏன்?


அதிக விலை கொடுத்து வாங்கினால் என்ன?


அது முட்டாள்தனம் அல்லவா. எதற்காக ஒரே பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்?  அது அறிவான செயல் அல்லவே?


ஒரு வேலை செய்கிறோம் என்றால் அதனால் அதிக பட்ச பலன் என்ன என்று அறிந்து அதைச் செய்ய வேண்டும். அது தானே புத்திசாலித்தனம்.


நாம் செய்யும் வேலைக்கு ஒரு நிறுவனத்தில் மாதம் ஒரு தொகை சம்பளமாக கொடுக்கிறார்கள். அதே வேலைக்கு இன்னொரு இடத்தில் மூன்று மடங்கு சம்பளம் தருகிறார்கள் என்றால் அந்த புது இடத்துக்கு போவதுதானே புத்திசாலித்தனம்?


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


உன்னிடம் செல்வம் இருக்கிறது. அதை நீ உனக்காகவும், உன் குடும்பத்துக்கும் செல்வழிக்கிறாய். மீதம் உள்ளதை சேமித்து வைகிறாய்.


அந்த செல்வத்தின் உச்ச பட்ச பயன்பாடு அதுதானா? அதை விட சிறப்பாக அந்த செல்வத்தை பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால் அது என்ன?


பாடல் 


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_8.html


(pl click the above link to continue reading)



ஊருணி - ஊர் உண்ணுகின்ற 


நீர் = நீர், குளம் 


நிறைந் தற்றே = நிறைந்தது போல 


உலகவாம் = உலகு + அவாம்  = உலக நடை, உலக வழக்கு 


பேரறி வாளன் திரு = பெரிய அறிவுடையவன் இடம் இருக்கும் செல்வம் 


ஊர் குடிக்க பயன்படும் குளம் நிறைந்து இருந்தால் அது எப்படி எல்லோருடைய தாகத்தையும் போக்கி நலம் தருமோ, அது போல, பெரிய அறிவுடையவனிடம் அமைந்த செல்வம்.


செல்வத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று இங்கே எங்கே வந்தது?


குளம் நிறைந்தது போல ஊர் பெரியவரிடம் நிறைந்த செல்வம், அரசனிடம் நிறைந்த செல்வம், சான்றோரிடம் நிறைந்த செல்வம் என்று சொல்லி இருக்கலாம். மாறாக, பேரறிவாளனிடம் அமைந்த திரு என்று ஏன் சொல்ல வேண்டும். 


மற்றவர்களிடம் செல்வம் சேரும். ஆனால், அது ஊருக்கு பயன்படாது. சிலர், சொந்த பிள்ளைகளுக்கே தர மாட்டேன் என்கிறார்கள், உடன் பிறப்பு, பெற்றோருக்கு தர மாட்டேன் என்கிறார்கள். அண்ணன் தம்பிகள் நீதி மன்ற வாசலை மிதிக்கிறார்கள். 


நான் இப்படி சிந்தித்துப் பார்க்கிறேன்.


அறிவில்லாதவன் - தன் செல்வத்தை தனக்கு கூட செலவழிக்க மாட்டான். எதிர் காலத்துக்கு வேண்டும் என்று பயந்து பயந்து சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் துன்பப் படுவான். 


அறிவுள்ளவன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும் செலவழிப்பான். 


பேரறிவாளன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் செலவழிப்பான். 


இதை சற்று வேறு விதமாகவும் யோசிக்கலாம்.


அறிவு இல்லாதவன், தன் செல்வத்தால் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேட மாட்டான். 


அறிவு உள்ளவன், இம்மைக்கு நன்மை தேடுவான். செல்வத்தை குடும்பத்தோடு அனுபவிப்பான்.


பேரறிவு உள்ளவன், செல்வத்தின் மூலம் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேடுவான். ஊருக்கு கொடுப்பது புண்ணியம். அது மறுபிறப்பிலும் தொடரும். 


நாம் செய்யும் நன்மை தீமைகள், பாவ புண்ணியமாக மாறி மறு பிறவியில் இன்ப துன்பமாக வந்து சேரும். 


வள்ளுவர் அப்படி நினைத்து சொன்னாரா என்று தெரியாது. 


இப்படி சிந்திக்க இடம் இருக்கிறது.


சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளி விடலாம். 




 

1 comment: