Thursday, September 28, 2023

நள வெண்பா - முன்செல் அடி

நள வெண்பா - முன்செல் அடி 


இறைவன் எப்படா, யாருடா நம்மை உதவிக்கு கூப்பிடுவார்கள் என்று காத்து இருப்பானாம். 


கூப்பிட்டவுடன் ஓடிச் சென்று உதவி செய்ய வேண்டுமே என்று. 


கூப்பிட்ட பின், இதோ வருகிறேன் என்று எழுந்து, முகம் கை கால் கழுவி, உடை மாற்றி, வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் ஆபத்து பெரிதாகி துன்பம் அதிகரித்து விடலாம் அல்லவா?  


தீயணைக்கும் படை எந்நேரமும் தயாராக இருப்பது போல, இறைவன் தயாராக இருப்பானாம். 


புகழேந்தி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 


கூப்பிட பின் சென்று உதவி செய்வது என்ன பெரிய காரியம். சாதாரண மனிதர்கள் கூடச் செய்வார்கள். அவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லையா?


கூப்பிடுவதற்கு முன்னே செல்வானாம். 


முதலிலேயே கிளம்பி விடுவான். இன்னாருக்கு, இந்த இடத்தில் உதவி தேவை என்று அங்கே செல்ல ஆரம்பித்து விடுவான். அவர்களுகுக் கூடத் தெரியாது, உதவி தேவைப்படும் என்று. 


ஆபத்து,உதவி என்று கூப்பிட்டவுடன், உடனே அங்கு வந்து நிப்பான். 


முதலை காலைக் கவ்வியபோது, கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அலறியபோது, பெருமாள் அங்கு வந்து அதைக் காப்பாற்றினார். யானை கூப்பிட்டபின் வைகுந்தத்தில் இருந்து கிளம்பினால், என்று வந்து சேர்வது? அதற்குள் முதலை அந்த யானையை கொன்றுவிடாதா?


பாடல் 


 முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்

செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்

புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்

அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_28.html


(pl click the above link to continue reading)


முந்தை = முந்தைய, பழைய 


மறைநூல் =  வேத நூல்களின் 


முடியெனலாம் = முடிவான அர்த்தம் என்று சொல்லலாம் 


 தண் = தண்மையான , குளிர்ச்சியான 


குருகூர்ச் = திருக்குருகூர் என்ற தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச்செய்த 

 

செந்தமிழ் = செந்தமிழ் 


வேத  = வேதமான பிரபந்தத்தின் 


சிரமெனலாம் = தலை என்று கூறலாம் 


 நந்தும் = துன்பத்தில் ஆட்பட்ட, ஆபத்தில் இருந்த 


புழைக்கைக்கும்  = யானைக்கும் (புழை = குழாய், குழாய் போன்ற கையை உடைய) 


நேயப் = அன்பு கொண்ட 


பொதுவர் = ஆயர் குல 


மகளிர்க்கும் = பெண்களுக்கும் 


அழைக்கைக்கு = அழைப்பதற்கு 


 முன் = முன் 


செல் அடி = சென்ற திருவடிகள் 


திருமாலின் திருவடிகளை நான்கு விதமாக சிறப்பிக்கிறார்.


வேதத்தின் முடிவு 

பிரபபந்தத்தின் தலை 

யானைக்கும் 

ஆயர் குல பெண்களுக்கும் அழைப்பதற்கு முன்சென்ற 


திருவடி என்று. 


மறை நூல் = மறைவாக இருக்கும் நூல். மிக நுண்ணிய பொருள் கொண்டது. எளிதில் விளங்காது. பொருள் மறைந்து இருக்கும். எனவே மறை நூல். 


அவ்வளவு உயர்ந்த திருவடி யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் கூப்பிடு முன்னே ஓடிச் சென்றது. 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய் "


என்பார் மணிவாசகர். 


அவ்வளவு பெரிய இறைவன், இவ்வளவு எளிமையாக இருக்கிறான் என்றவாறு. 


இனிமையான அர்த்தம். அழகான பாடல் வடிவம். 


பால் பாயாசம் சாப்பிடும் போது  வாயில் சிக்கும்  நெய்யில் வறுத்த முந்திரி மாதிரி அப்படி ஒரு சுவை. 


 

No comments:

Post a Comment