Saturday, September 13, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2

 

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2


இதன் முதல் பகுதியை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 



ஜடாயு மாண்ட பின், இராமன் வருந்துகிறான். 

இலக்குவன் சொல்கிறான், 


"தீமை என்று எதுவும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். அதற்கு எதற்கு வருந்த வேண்டும். நடக்க வேண்டியது நடந்தது. இது வருந்தவோ, துக்கப்படவோ வேண்டிய நேரம் அல்ல. அந்த அரக்கர்களை கொன்ற பின் நாம் இந்த துக்கத்தை அனுபவிக்கலாம்"


இப்படித்தான் வாழ்வில் ஒவ்வொரு உணர்சிகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். எந்த சந்தோஷம் வந்தாலும், "இல்லை இல்லை, இது என்ன பெரிய விடயம், நான் அதை அடைந்தால் சந்தோஷாம் அடைவேன் " என்று நினைக்கிறோம். அதை அடைந்த பின், வேறு ஒன்று வந்து நிற்கும். ஒரு நாளும் சந்தோஷமாய் இருப்பதே இல்லை. துக்கமும் அப்படியே.  "இது விதி, நான் ஆண், அழக் கூடாது, நானே தளர்ந்து போனால் பிள்ளைகள் பயந்து விடுவார்கள்" என்று ஏதேதோ சொல்லி துக்கத்தையும் தள்ளிப் போட்டு விடுகிறோம். 

இப்படி ஒவ்வொன்றாக தவிர்த்துக் கொண்டே போனால், வாழ்வில் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். ஆங்கிலத்தில் Emotional Intelligence என்று சொல்லுவார்கள். 


இன்பமோ, துன்பமோ அவ்வவற்றை அவ்வப்போது அனுபவிக்க வேண்டும். அப்புறம், அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. 

பாடல் 


என்றலும், இளைய கோ அவ் இராமனை
     இறைஞ்சி, 'யாண்டும்,
வென்றியாய்! விதியின் தன்மை
     பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி
    அவ் அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்
     துயர் குளிப்பது?' என்றான்.

பொருள் 

என்றலும் = இராமனின் துயரச் சொற்களை கேட்ட பின் 

இளைய கோ = இளவல் இலக்குமன் 

அவ் இராமனை இறைஞ்சி = அந்த இராமனை வணங்கி 

 'யாண்டும், = எப்போதும் 

வென்றியாய்! = வெற்றியை உடையவனே 

விதியின் தன்மை = விதியின் தன்மை(யைத் தவிர) 

பழியல விளைந்தது ஒன்றோ? = பழி அல்லது தீமை என்று ஒன்று உண்டா. இல்லை. எல்லாம் விதியின் செயல் 

நின்று இனி நினைவது என்னே?  = அதையே நீண்ட நேரம் சிந்தித்து நடக்கப் போவது என்ன. 

நெருக்கி = மேல் சென்று 

அவ் அரக்கர் தம்மைக் = அந்த அரக்கர்களை 

கொன்றபின் அன்றோ = கொன்ற பின் அல்லவா 

வெய்ய  கொடுந்  துயர் குளிப்பது?' = மிகக் கொடுமையான துயரை நாம் அனுபவிக்க வேண்டும். 

என்றான் = என்று கூறினான் 

இப்ப துக்கப் படாதே. அரக்கர்ளை கொன்ற பின் ஜடாயு இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கலாம் என்கிறான். 

நடக்கிற காரியமா அது? அப்போது இந்தத் துக்கம் மறந்து விடும். 

சிந்திப்போம். 




Friday, September 12, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது - 1/2

 கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2


துக்கத்தை எப்படி கையாள்வது ?  


எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம். 


துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?  


எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும். 


சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?


அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும். 


நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு. 


இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும். 


அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது. 


ஜடாயு இறந்து போகிறார். 



இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று. 


ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான். 


அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம்.