இராமாயணம் - தூயவர் துணி திறன் நன்று தூயதே
வீடணனை சேர்க்கக் கூடாது என்று சுக்ரீவன் உட்பட எல்லோரும் கூறி விட்டார்கள். இராமன் அனுமனின் எண்ணத்தை கேட்க்கிறான். அனுமனுக்கோ மற்றவர்கள் சொன்ன கருத்தில் உடன் பாடில்லை. இருந்தாலும் அதை எவ்வளவு இனிமையாக, நாசுக்காக சொல்கிறான்.....
அனுமன் கூறுகிறான்
எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லோரும் தூயவர்கள். அவர்கள் துணிந்து தங்கள் கருத்துகளை கூறினார்கள். அவைகள் நல்ல கருத்துகளே. இருந்தாலும், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இவன் (வீடணன்) தீயவன் என்று நான் கருதவில்லை. மேலும் சில கருத்துகளை கூற விரும்புகிறேன்
பாடல்
தூயவர் துணி திறன் நன்று தூயதே;
ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.
பொருள்
தூயவர் = தூயவர்கள் (சுக்ரீவன் முதலானோர்)
துணி = துணிந்து
திறன் = திறமையுடன்
நன்று = நல்லதையே சொல்லி இருக்கிறார்கள்
தூயதே = தூய்மையானதே அவர்கள் சொன்னது ;
ஆயினும், = ஆனாலும்
ஒரு பொருள் = ஒரு பொருள். அதாவது அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு பொருளை
உரைப்பென் = நான் சொல்லுவேன்
ஆழியாய்! = சக்கரப் படை கொண்டவனே
"தீயன்" என்று = தீயவன் என்று
இவனை = இந்த வீடணனை
யான் = நான் (அனுமன்)
அயிர்த்தல் செய்கிலேன் = சந்தேகம் செய்ய மாட்டேன்
மேயின சில பொருள் = அதற்கான சில காரணங்களை
விளம்ப வேண்டுமால் = சொல்ல வேண்டும்
மற்றவர்களின் கருத்து தனக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் அதை சொன்னவர்களை அனுமன் அவமதிக்கவோ, அவர்களை தரக் குறைவாகவோ பேசவில்லை.
அவர்கள் தூயவர்கள், நல்லவர்கள், திறமையானவர்கள், நல்ல கருத்தையே கூறி இருக்கிறார்கள் என்று ஆரம்பிக்கிறான்.
பேச்சு ஒரு கலை என்றால் அந்த கலையை அனுமனிடம் கற்றுக் கொள்ளலாம்.