Thursday, January 31, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - வாயமுதம் பரக்கும்

இராமானுசர் நூற்றந்தாதி  - வாயமுதம் பரக்கும் 



நாம பெரிய சந்நியாசி, துறவி எல்லாம் கிடையாது. அதே சமயம் சமய கோட்பாடுகளை முற்றும் விட்டு விட்டவர்களும் கிடையாது. குடும்ப வாழ்கை கொஞ்சம், ஆன்மீகம் கொஞ்சம், சமயம் கொஞ்சம், உண்மை பற்றிய ஆவல் மற்றும் தேடல் கொஞ்சம் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறோம். 

சமய உண்மைகளை அறிந்து கொள்ள ஆசை உண்டு. அவற்றை கடை பிடிக்கவும் ஆசை உண்டு. ஆனால், கடமைகள் மறு புறம் இழுக்கின்றன. படித்து, அவை சரி என்று அறிந்தாலும், "நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி வைத்து விடுகிறோம். 

உள்ளும் இல்லை, புறமும் இல்லை. வாசல் படியில் இருக்கிறோம்.  இரணியன் கேட்ட வரம் போல - உள்ளும்  இல்லை,புறமும் இல்லை  வாசல்படி தான்  இடம். 

ஆரவமுதனார் சொல்கிறார் , "படியில் உள்ளவர்களே , உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இராமனுஜரின் பெருமையை கூறுகிறார். 

பாடல்  

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே 

பொருள் 

சுரக்கும் = தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் 

திருவும் = செல்வமும் 

உணர்வும் = உண்மையை உணரும் ஞானமும் 

சொலப்புகில் = சொல்லத் தொடங்கினால் 

வாயமுதம் = வாயில் அமுதம் 

பரக்கும் = தோன்றும் 

 இருவினை = இரு வினைகள் 

பற்றவோடும் = பற்றிக் கொள்ள, நாளும் அது துரத்த ஓடும் 

படியிலுள்ளீர் = படியில் உள்ளவர்களே 

உரைக்கின்றனன் = சொல்லுகின்றேன் 

உமக்கு = உங்களுக்கு 

யான்  = நான் 

அறம் சீறும்  = அறத்தை மறுக்கும் 

உறு கலியைத் = பெரிய தொல்லை தரும் கலியை 

துரக்கும் = .விலக்கி விடும் 

பெருமை = பெருமை கொண்டது 

இராமானுசன் = இராமானுசன் 

என்று சொல்லுமினே = என்று சொல்லுங்கள் 


துன்பம் ஏன் வருகிறது ? அறத்தை விட்டு விலகுவதால் துன்பம் வருகிறது. தர்மத்தை  விட்டு விலகினால் துன்பம் வரும். 

"அறம் சீர் உறு கலி"


கலி என்றால் சனியன். 

"இராமானுசன்" என்று சொன்னால் போதும் 

- செல்வம் பெருகும் 
- அறிவு வளரும் 
- துன்பம் தொலைந்து போகும்  


பாடலை வாசித்துப் பாருங்கள். 

நிச்சயம் வாயில் அமுது ஊறும் .

Wednesday, January 30, 2019

திருக்குறள் - சொற் குற்றம்

திருக்குறள் - சொற் குற்றம் 


நாம் பல விதங்களில் குற்றங்கள் புரிகிறோம்.

மனதால், செயலால், சொல்லால் குற்றங்கள் புரிகிறோம்.

வள்ளுவருக்கு இந்த சொல் குற்றத்தை கண்டாலே பிடிப்பது இல்லை. ஏழே வார்த்தைகளில் குறள் கூறிய வள்ளுவருக்கு வள வள என்று பேசுவது பிடிக்காமல் இருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

பொதுவாகவே, நம் பண்பாட்டில், வெட்டிப் பேச்சை யாரும் மதிப்பது இல்லை. ஒருவனின் அறிவுத் திறம் என்பது அவன் எவ்வளவு குறைவாக பேசுகிறான் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

மௌனம் ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

பயனில சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

ஒருவன் நல்லவனா, அறிஞனா, படித்தவனா, நீதிமானா, அறத்தின் பால் பட்டவனா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால் அவன் பயன் இல்லாத ஒன்றை நீட்டி முழக்கி சொல்லுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

ஒண்ணும் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பெரிதாக பேசுவான். சின்ன விஷயத்தை கண்ணு காது மூக்கு வைத்து நீட்டி முழக்கி பேசுவான்.

பாடல்


நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை

சீர் பிரித்த பின்

நயனில்லன் என்பது சொல்லும் பயன் இல்ல
பாரித்து உரைக்கும் உரை


பொருள்

நயனில்லன் = நயம் இல்லாதவன்

என்பது = என்பது

சொல்லும் = அவன் சொல்லுகின்ற

பயன் இல்ல  = பயன் இல்லாத

பாரித்து = விரித்து

உரைக்கும் உரை = சொல்லும் உரையில் இருந்து தெரியும்

பயன் இல்லாத என்றால் என்ன என்பதற்கு பரிமேல் அழகர் மற்றொரு குறளில் உரை சொல்லி இருக்கிறார்.

"தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத " என்று.


பேசுவதற்கு முன், whatsapp பண்ணுவதற்கு முன், மெயில் அனுப்புவதற்கு முன்,  அதனால் நமக்கோ அல்லது யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கோ என்ன பயன்  என்று அறிந்து பின் அதை செய்ய வேண்டும்.

அதே போல் நமக்கு பயன் இல்லாத ஒன்றை நமக்கு ஒருவர் சொல்லுகிறார் அல்லது  அனுப்புகிறார் என்றால் அவரின் அறிவின் ஆழத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். நல்லதா சொல்ல ஒன்றும் இல்லாததால் இந்த மாதிரி வெட்டித் தனமாக எதையோ சொல்லிக் கொண்டு அலைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  அப்படி பட்டவர்களின் பேச்சை, அவர்கள் அனுப்பும் செய்திகளை  படித்தோ, கேட்டோ நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது.

பயன் இல்லாதை சொல்லுவதே தவறு. அதிலும் அதை விரிவாக விவரித்து வேறு சொல்லுவது என்றால் , சகிக்க முடியுமா.

நல்லதை, பயனுள்ளதை சொல்லுங்கள், கேளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இது பயன் உள்ளதா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post_30.html

Thursday, January 17, 2019

108 திவ்ய தேசம் - திரு ஊரகம்

108 திவ்ய தேசம் - திரு ஊரகம் 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம் இவற்றை எல்லாம் படிக்கும் போது, இதில் என்ன இருக்கிறது. கடவுள் பற்றிய வர்ணனை, அவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார், இன்னது செய்வார், என்று கடவுள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாழ்க்கை தத்துவங்கள் இருக்கும். என்னை காப்பாற்று, என்னை உன்னோடு அழைத்துக் கொள் , என்னை மன்னித்துக் கொள் என்ற பிரார்த்தனைகள் இருக்கும்.

இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால், அதில் வேறு ஒன்றும் தேறாது.  அப்படியே தேர்ந்தாலும் , ஏதோ கொஞ்சம் இருக்கலாம்.

எப்படி இந்தப் பாடல்கள், பாசுரங்கள் காலம் கடந்து நிற்கின்றன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களையும் வசீகரிக்கின்றன?  அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.

திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு தாயாகவும், காதல் வயப்பட்ட தன் மகளை பார்த்து பாடுவது போல ஒரு பாசுரம் எழுதி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள், மகளுக்காக உருகும் ஒரு தாயின் மனம் தெரியும்.

ஒரு தந்தை எவ்வளவுதான் பாசத்தை மகள் மேல் கொட்டினாலும், ஒரு தாயின் அளவுக்கு தந்தையால் மகளை நெருங்க முடியாது. ஒரு பெண்ணின் உடல் கூறுகள், உணர்ச்சி கொந்தளிப்புகள், இவற்றை இன்னொரு பெண் தான் அறிந்து கொள்ள முடியும். கூச்சப் படாமல் எளிமையாக பேச முடியும்.

மகளின் உடல் கூறுகளைப் பற்றி ஒரு தந்தை பேசுவது நாகரீமாக இருக்காது.

தாயின் இடத்தில் இருந்து, திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்....மனதை என்னவோ செய்யும் பாடல்....

பாடல்

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பொருள்


கல்லெடுத்துக் = மலையை எடுத்து

கல்மாரி = கல் மழையில் இருந்து

காத்தாய் என்றும் = காப்பாற்றினாய் என்று கூறும் (கூறுகிறாள்)

காமருபூங் = விரும்பும் பூவைப் போன்ற

கச்சியூ ரகத்தாய் = காஞ்சி ஊரகத்தில் உள்ளவனே

என்றும் = என்று கூறும்

வில்லிறுத்து  = வில்லினை அறுத்து

மெல்லியல் தோள் = மென்மையான தோள்களை கொண்ட சீதையை

தோய்ந்தாய் = அடைந்தாய்

என்றும் = என்றும் கூறும்

வெஃகாவில் = திரு வெஃகா என்ற இடத்தில்

துயிலம ர்ந்த = துயில் அமர்ந்த

வேந்தே. = தலைவனே

என்றும், = என்றும் கூறும்

அல்லடர்த்து = இருள் சூழ்ந்த (கொடுமை நிறைந்த)

மல்லரையன் றட் டாய்  = மல்லரை அன்று வென்றாய்

என்றும் = என்றும் கூறும்

மாகீண்ட கை தலத்து என்  = கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அவனை அழித்தாய்

மைந்தா என்றும் = மைந்தனே என்றும் கூறும்

சொல்லெடுத்துத் = சொல் எடுத்துக் கொடுத்து

தங்கிளியைச் = தன்னுடைய கிளியை

சொல்லே என்று = சொல் என்று கூறும்

துணைமுலைமேல் = துணையான இரு முலைகள் மேல்

துளிசோரச் = விழி நீர் வடிய

சோர்க்கின் றாளே = சோர்ந்து போகின்றாளே , என் மகள்.


அவளுக்கு அவன் மேல் காதல். அவனைப் பற்றி யாராவது உயர்வாகச் சொன்னால், அவளுக்கு மகிழ்ச்சி. அதற்காக எல்லோரிடமும் போய் கேட்கவா  முடியும்.

அவன் நினைவு அவளை வாட்டுகிறது.

அந்தப் பெண்ணின் தாய்க்குத் தெரிகிறது.  தன் மகள் காதல் வசப் பட்டு இருக்கிறாள் என்று  தெரிகிறது. மகளைப் பார்த்து, தாயும் உருகுகிறாள்.

மகளுக்கும், தாயிடம் சென்று நேரே சொல்ல வெட்கம். தயக்கம்.

தன்னுடைய கிளியை எடுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொல்லுகிறாள். அந்த கிளியும் திரும்பிச் சொல்லுகிறது. அவள் சிலிர்த்துப் போகிறாள்.

ஆயர் பாடியில், இந்திரனின் ஏவலால் வருணன் கல் மழை பொழிந்தான். அங்கே இருந்த மலையை கையில் எடுத்து குடை போல பிடித்து அந்த மக்களை கண்ணன் காப்பாற்றினான்.

அவன் தூக்கியது மலையை. அவளுக்கு அது சாதாரண கல் போலத் தெரிகிறது.

அவன் திறமைக்கு முன்னால், இது எல்லாம் சாதாரணம் என்பது போல.


"கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்" என்கிறாள்

யாராலும் தூக்கக் கூட முடியாத வில். சீதையின் மெல்லிய தோள்களை சேர விரும்பி, அவ்வளவு பெரிய வில்லை எடுத்து அதை முறித்தான்.


"வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்"

பெண் மென்மையானவள் தான். ஆனால், அந்த மென்மை தான், ஆணுக்கு அவ்வளவு பலத்தைத் தருகிறது.

பாலில் ஒரு துளி தயிரை விட்டு உறைய விடுவார்கள். அதற்கு தோய்தல் என்று பெயர். பாலும் தயிரும் ஒன்று சேர்ந்து முழுவதும் தயாராகி விடும்.

சீதையின் தோள்களோடு இராமன் தோய்ந்தான் என்கிறாள். பிரியாமல் இருந்து , இருவரும் இரண்டற கலந்தார்கள்.

இவள் அவன் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அதைக் கேட்ட கிளியும் அதையே சொல்கிறது.

இது போன்ற பாடல்களை சொல்லி விளக்க முடியாது.

அந்த உணர்ச்சிகளை அப்படியே உள் வாங்கினால், அந்தப் பாடலை உணரலாம்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/108.html

Wednesday, January 16, 2019

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?





பாடல்

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


பொருள்

கீசுகீசு = கீச் கீச்

என்று = என்று

எங்கும் = எல்லா இடத்திலும்

ஆனைச்சாத் தன்  = ஆனை சாத்தன் என்பது ஒரு வகை பறவை. காகம், புறா மாதிரி

கலந்து = தங்களுக்குள் கலந்து

பேசின = பேசிக் கொண்ட

பேச்சரவம் = பேச்சு சத்தம்

கேட்டிலையோ = நீ கேட்கவில்லையா ?

பேய்ப் பெண்ணே = பேய் போன்ற குணம் கொண்ட பெண்ணே

காசும் பிறப்பும் = காசு பிறப்பு போன்ற ஆபரணங்கள்  (பெண்கள் அணியும் ஆபரணம்)

கலகலப்பக் = கல கல என்று

கைபேர்த்து = கை அசைத்து

வாச நறும்குழல் = வாசம் வீசும் கூந்தலைக் கொண்ட

ஆய்ச்சியர் = ஆயர் பாடி பெண்கள்

மத்தினால் = மத்தினால்

ஓசை படுத்த = ஓசை உண்டாக்கும்

தயிரரவம் = தயிர் கடையும் சப்த்தம்

கேட்டிலையோ = கேட்கவில்லையா ?

நாயகப் பெண்பிள்ளாய் = முக்கியமான பெண் பிள்ளையே

நாரா யணன்மூர்த்தி = நாராயண மூர்த்தி

கேசவனைப் = கேசவனைப்

பாடவும் = பாடுவதையும்

நீ கேட்டே கிடத்தியோ = நீ கேட்டுக் கொண்டே படுத்துக் கிடக்கிறாயா ?

தேச முடையாய் = தேமல் உடையவளே

திறவேலோர் எம்பாவாய் = திறப்பாய் என் பாவையே

இது என்ன பாட்டு ? இதுக்கு எதுக்கு பெரிய உரை , வியாக்கியானம் எல்லாம்?

பறவைகள் கூட்டில் கத்துகின்றன. பெண்கள் தயிர் கடைகிறார்கள். பக்த கோடிகள் இறைவன் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த சத்தத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு தூங்குகிறாயா? எழுந்து வா.

இதுதான் பாடல். இதில் என்ன இருக்கிறது தெரிந்து கொள்ள? இதை தெரிந்து நமக்கு  என்ன பயன் ?

ஒன்றும் இல்லாமலா இத்தனை நாள் இந்தப் பாசுரங்கள் நிலைத்து நின்றிருக்கும் ?

நமது சிக்கல் என்ன என்றால் நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்தச் சாவிகள் எந்தப் பூட்டைத் திறக்கும் என்று நமக்குத் தெரியாது. சாவிகளை தூக்கிக் கொண்டு திரிகிறோம்.

இது போல ஆயிரம் பாடல்கள், ஆயிரம் வழி முறைகள் இருக்கின்றன. ஏன் செய்கிறோம்  என்று அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம்.

சரி, பாசுரத்துக்கு வருவோம்.

நம்மைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லது மட்டும் அல்ல, அல்லாததும் நடக்கிறது. நாம் பலவற்றை கேட்பதே இல்லை. அப்படியே கேட்டாலும், நல்லதை விட்டு விட்டு அல்லாதவற்றை கேட்கிறோம். நல்லதை கேட்டாலும், புரிவது இல்லை. புரிந்தாலும், "இதெல்லாம்  நடை முறைக்கு சாத்தியம் இல்லை ..கேக்க நல்லா இருக்கும் , ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்று தெரியாது " என்று தள்ளி வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

முதலில் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய வேண்டும். சூழ்நிலையை அறிந்தால் அல்லவா நம்மை அறிய முடியும்.

பறவைகள் கத்துகின்றன. தயிர் கடையும் சத்தம் கேட்கிறது. நகைகள் ஒன்றோடு ஒன்று உரசும் சப்த்தம் கேட்கிறது.

இதெல்லாம் தேவை இல்லாத சத்தங்கள். டிவி செய்திகள் போல. எங்கோ யாரோ யார் கூடவோ ஏதோ செய்தார்கள் என்றால் அதை ஏன் நேரம் செலவழித்து கேட்க வேண்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள்  உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இது ஒரு வகை சத்தங்கள்.

இன்னொரு புறம், வாட்ஸாப்ப், youtube , instagram , facebook என்று இடைவிடாத சத்தங்கள். அதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சத்தங்களினால்  ஏதாவது ஒரு பலன் உண்டா என்றால் ஒன்றும் இல்லை.

அவற்றையும் தாண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் செய்திகள் இருக்கின்றன. அவற்றை கேட்க வேண்டும்.

ஆண்டாள் கையாளும் சொற்களைப் பாருங்கள்:

- பறவைகள் பேசும் பேச்சு - அரவம் (ஓசை)
- தயிர் கடையும் ஓசை - தயிரரவம்
- கேசவனை பாடவும் - கேசவனை பற்றி சொல்லும் போது அது அரவம் இல்லை, பாடல்.

இவற்றை எல்லாம் கேட்காமல் படுத்து உறங்குகிறாயே "பேய் பெண்ணே" என்கிறாள்.

பேயின் குணம், பிடித்தால் விடாது. பேய் பிடித்தவர்கள் என்று சொல்லுவதை கேட்டு இருப்பீர்கள்.

சிலர் தான் கொண்டதே சரி என்று இருப்பார்கள். அது பேய் குணம். ஆராய வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தது மட்டும்தான் சரி என்று நினைப்பது பேய் குணம்.

மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வா, என் பாவாய் என்று அழைக்கிறாள்  ஆண்டாள்.

தேவை இல்லாததை கேட்பதை நிறுத்த வேண்டும். நம் வாழ்க்கை நல்ல சொற்களினால், இசையால், உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் பேச்சுக்களால்  நிறையட்டும்.

தேவை இல்லாத குப்பைகளை மண்டைக்குள் போட்டு திணிப்பானேன்?

முதலில், மண்டைக்குள் இருக்கும் குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள்.

இனி குப்பை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.

நல்லதை மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்யுங்கள்.

வாழ்வு சிறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post.html





Monday, December 31, 2018

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை



ஆண்டாள், தன்னுடைய தோழிகளை ஒவ்வொருவராக எழுப்பி கண்ணனை காண அழைத்துக் கொண்டு போகிறாள்.

இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது. கோவிலுக்குப் போகிற வழியில் தோழிகளை கூட்டிக் கொண்டு போகிறாள். இது ஒரு பெரிய விஷயமா? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இதைப் படிப்பதால் நமக்கு என்ன பயன். படிக்க எளிமையாக இருக்கிறது. அதைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

ஒன்றும் இல்லாத பாடல்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் எழுதும் பாடல்கள் ஒரு சில மாதங்கள் கூடத் தங்குவது இல்லை.

அப்படி என்றால், இந்தப் பாடல்களில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.


இந்தப் பாடல்களில் இலயிக்க இலயிக்க அது நம்மை எங்கெங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு போவதை நாம் உணர முடியும்.

பாடல்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்

புள்ளும் = பறவைகளும்
சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன
புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 
கோயிலில் = கோவிலில்
வெள்ளை = வெண்மையான 
விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 
பேரரவம் = பெரிய சப்தத்தை 
கேட்டிலையோ = கேட்கவில்லையோபிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 
பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
சகடம் = சக்கரம்
கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )சக்கரம்
கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்
கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பாற்  கடலில்
அரவில் = பாம்பின் மேல்
துயில் = உறங்கிய
அமர்ந்த = இருந்த
வித்தினை = விதையை, மூலத்தை
உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

தூங்குவது யார் ? ஆயர்பாடி பெண்கள் அல்ல. நாம் தான்.

நாம் எங்கே தூங்குகிறோம். விழித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இதோ இதைப் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நாம் எப்படி தூங்குவது ஆகும்?

விழித்து இருந்தால் எல்லாம் தெரியும் அல்லவா? எதையும் தெளிவாக பார்க்க முடியும் அல்லவா? தூங்கும் போது ஒன்றும் தெரியாது. கனவில் வேண்டுமானால் தெரியலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை போல இருக்கும். விழித்துக் கொண்டால் கனவில் கண்டது உண்மை அல்ல என்று தெரிந்து போகும் அல்லவா. விழித்துக் கொள்ளாதவரை கனவுதான் உண்மை என்று நாம் இருப்போம். 

நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

நாம் பெரிய ஆள் என்று, நிறைய படித்தவர்கள் என்று, அழகானவர்கள் என்று, நல்லவர்கள் என்று, நல்லது செய்கிறோம் என்று, இறந்த பின் சுவர்க்கம் போவோம் என்று, பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று, டிவி இல், செய்தித் தாளில் வருவது எல்லாம் உண்மை  என்று ஆயிரம் கனவுகளோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறோம்.

நாம் யார் என்றே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா மற்றவை எல்லாம் தெரிய. 

விழித்துக் கொள்ளச் சொல்வது , தன்னைத் தான் அறிய. self realization 



ஆண்டாள் என்ன சொல்ல வருகிறாள் ?

பறவைகள் கத்துகின்றன......சங்கின் ஒலி கேட்கிறது, முனிவர்களும் யோகிகளும் அரி என்று  ஓதுகிறார்கள்...என்ன அர்த்தம்.

இயற்கையை, இந்த உலகை நாம் அப்படியே நேரடியாக உணர வேண்டும்.

நாம் இந்த உலகை நாம் நேரடியாக அறிவது இல்லை.  அதற்கு ஒரு சாயம் பூசுகிறோம்.

இது இந்தியா, இது பாக்கிஸ்தான்,
இவன் ஹிந்து, இவன் கிருத்துவன்,
இவன் நல்லவன், இவன் கெட்டவன்
இவன் படித்தவன், இவன் படிக்காதவன்
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்
செல்வன், ஏழை


என்று ஆயிரம் பாகுபாடுகளோடு பார்க்கிறோம்.  உலகை இந்த பாகுபாடுகள் இல்லாமால்  பார்க்க முடியுமா ? வேறுபாடு இல்லாத ஒரு உலகை நம்மால் உணர முடியுமா ?

பறவைகளின் ஒலி , சங்கின் சப்தம், முனிவர்களின் வேத கோஷம் அனைத்துக்கும் அடி நாதமாய் விளங்கும் அந்த நாதத்தை அறிய முடியுமா ?

சப்தங்கள் வேறு. நாதம் ஒன்று.

"துயில் அமர்ந்த வித்தினை"

அது என்ன துயில் அமர்வது?

தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே?

தூக்கம் என்றால் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒரே ஒரு வகை தூக்கம் தான்.

தூக்கத்தில் பல வகை உண்டு.

அவை என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_31.html

Saturday, December 29, 2018

திருப்பாவை - தீயினில் தூசாகும்

திருப்பாவை - தீயினில் தூசாகும் 



நாம் பல நல்ல காரியங்களை செய்ய முனையும் போது ஏதோ ஒரு தடங்கல் வந்து சேர்த்திருக்கும். ஏதோ ஒண்ணு தட்டிப் போகும். இது நமக்கு மட்டும் நடப்பது அல்ல.

நாள், கிழமை, முகூர்த்தம் எல்லாம் பார்த்து, வசிட்டன் குறித்த பட்டாபிஷேகமே இராமனுக்கு தட்டிப் போனது என்றால் நம் ஊரு பஞ்சாங்கம், ஜோசியம் எல்லாம் என்ன செய்வது.

முடி சூட்டு தள்ளிப் போனது போகட்டும், இருக்கிற எல்லாவற்றையும் இழந்து, மர உரி உடுத்து, காட்டுக்குப் போனான். நாள் குறிக்கச் சொன்ன தசரதன் மாரடைப்பால் மாண்டு போனான்.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ? இதற்கு என்ன காரணம் ?

ஆண்டாள் கூறுகிறாள் பதில்.

எல்லாம் வினை.

தசரதன் செய்த வினை. யானை என்று நினைத்து ஷ்ரவணன் என்ற அந்தணப் பையனை கொன்றதால் வந்த வினை.

"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்பான் இலக்குவனிடம் இராமன்.

விதி. செய்த வினை.

கோபியர்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை கவர்ந்து அவர்களை சங்கடப் படுத்தியதால், பின்னொரு நாள் ஆற்றில் குளிக்கும் போது தன் கீழ் ஆடை  ஆற்றில் போக தவித்து நின்றான் கண்ணன். அவன் செய்த வினை.

அப்படி ஆற்றில் தவித்து நின்ற கண்ணனுக்கு தன் சேலையில் இருந்து ஒரு முழத்தை கிழித்து கொடுத்து மானம் காப்பாற்றினாள் பாஞ்சாலி. பின்னொரு நாள் அவளுக்கு சபையில் சேலை பறி போகும் போல் இருந்த போது , முழ சேலைக்கு பதிலாக கோடி கோடியாக சேலை கொடுத்தான் கண்ணன். அது அவள் செய்த நல் வினை.


விதி யாரையும் விடாது.

அப்படி என்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா? எல்லாம் விதி விட்ட வழி தானா என்றால், இல்லை. அந்த விதியையும் மாற்றலாம் என்கிறாள் ஆண்டாள்.

செய்த வினை, செய்கின்ற வினை எல்லாம் தீயில் போட்ட தூசு போல இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்கிறாள்.

அதுக்கு என்ன செய்ய வேண்டும் ?

பாடல்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


பொருள்



மாயனை   = மாயங்கள் செய்பவனை

மன்னு வடமதுரை மைந்தனைத்  = என்றும் இருக்கும் வட மதுரையின் மைந்தனை



தூய பெருநீர் யமுனைத் துறைவனை   - தூய்மையான நீரைக் கொண்ட யமுனை ஆற்றின் துறையில் உறைபவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்  - ஆயர் குலத்தில் தோன்றும் அழகிய விளக்கை


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் - தான் பிறந்ததால் தாய்க்கு பெருமை தேடித் தந்தவனை

தூயோமாய்  - தூய்மை உடையவர்களாய்

வந்து நாம் = நாம் வந்து

தூமலர்தூ வித்தொழுது = மலர் தூவி தொழுது

வாயினால் பாடி = வாயினால் பாடி

மனத்தினால் சிந்திக்கப் = மனதில் சிந்திக்க

போய பிழையும் = முன்பு செய்த பாவங்களும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது செய்த பாவங்களும்

தீயினில் தூசாகும் = தீயில் போட்ட துரும்பு போல் ஆகும்

செப்பேலோர் எம்பாவாய். = சொல்லுவாய் என் பாவையே


இறைவனைத் தொழுதால் முன்பு செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் தீயில் போட்ட தூசு போல எரிந்து சாம்பலாகும்.

அட, இது ரொம்ப easy யா இருக்கே. செய்றதெல்லாம் செஞ்சிட்டு, இறைவனை தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போயிருமா ? அப்படினா இன்னும் கொஞ்சம் பாவம் செஞ்சிட்டு ஒண்ணா போய் தொழுதுருவோம்...அப்படின்னு சில பேர் நினைக்கலாம்.

தொழுவதற்கு ஆண்டாள் சில நிபந்தனைகள் வைக்கிறாள்.

முதலில் "தூயோமாய்".

செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி, இனி செய்வது இல்லை என்று உறுதி பூண்டு, மனதில் கூட பாவங்களை நினையாமல் இருக்க வேண்டும். அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அது முதல் நிபந்தனை.

இரண்டாவது, நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கு. சில பல இலட்சங்களை உண்டியலில் போட்டு விட்டால் போதுமா ? ஒரு வைர கிரீடம், ஒரு தங்க சங்கிலி, ஒரு tube light வாங்கிப் போட்டு விட்டால் போதுமா ? பணம் எல்லாம் நடக்காது. இறைவன் எளிமையை விரும்புபவன்.

"ஏழை பங்காளனை பாடேலோர் எம்பாவாய் "

என்பார் மணிவாசகர். ஏழையிடம் பங்கு போட என்ன இருக்கிறது, வறுமையைத் தவிர ?

ஆண்டாள் சொல்கிறார், "தூ மலர் தூவி"

மலர் போதும். பணம் காசு வேண்டாம்.

"வாயினால் பாடி" - வாயால் தான் பாட முடியும். அது என்ன வாயினால் பாடி ?  பொறுங்கள். அடுத்த வரியையும் சேர்த்து பார்த்துவிடலாம்.

"மனதினால் சிந்திக்க"

மனம் + வாக்கு + காயம் என்பார்கள். திரிகரண சுத்தி.

பூ போடுவது - கை - உடல்

பாடுவது = வாய்

சிந்திப்பது = மனம்

மூன்றும் ஒன்றாக செயல் பட வேண்டும்.


கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார். ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றாகி வணங்கினால்

'போய பிழை" = முன்பு செய்த பிழையும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது வந்து நிற்கும் பிழைகளும்

தீயில் தூசாகும்.

ஏன் தீயில் தூசாகும் ? ஏன் நீரில் கரைந்து போகும் என்று சொல்லவில்லை ?

நீரில் கரைந்தாலும் அது நீர் வற்றிய பின் எது கரைந்ததோ அது மீண்டும் தெரியும்.

தீயில் விட்டு பொசுக்கி விட்டால் இருந்த இடம் தெரியாமல் போகும்.

"அவன் தாள் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே "

என்பார் அருணகிரிநாதர்.

தலை எழுத்து மாறும். செய்த வினை அழியும்.

செய்து பாருங்கள். ஆண்டாள் என்ன பொய்யா சொல்லப் போகிறாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_29.html

Wednesday, December 26, 2018

திருப்பாவை - உலகினில் பெய்திடாய்

திருப்பாவை - தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கையா ?



தெய்வ நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கையா ? ஒரு அறிவியல் பார்வை இல்லாதர்வர்கள் தான் தெய்வத்தை நம்புவார்களா ? நம்பிக்கை என்பதே ஒரு சோம்பேறிகளின் இருப்பிடமா? நம்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம் ? சும்மா தலையை தலையை ஆட்டினால் போதும்...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆண்டாள் ஒரே பாசுரத்தில் மிகத் தெளிவான அறிவியல் பார்வையையும் , ஆன்மீகப் பார்வையையும் கொண்டு வருகிறாள். இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்.

பாடல்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்

எளிய பாடல் தான். ஆண்டாளின் அனைத்து பாடல்களும் மிக எளிமையானவைதான்.

ஆழி மழைக்கண்ணா! = ஆழி என்றால் கடல். கடல் போல் மழை நீரைத் தரும் வருண தேவனே.

ஒன்று நீ கைகரவேல் = கரத்தல் என்றால் மறைத்தல். உடையது கரவேல் என்பாள் ஒளவை.  இங்கே, நீ எதையும் மறைக்காதே

ஆழியுள் புக்கு = கடலில் புகுந்து

முகர்ந்துகொ டார்த்தேறி = நீரை மொண்டு கொண்டு, ஆர்த்து ஏறி என்றால் சப்தம் போட்டுக் கொண்டு  மேலே சென்று

ஊழி முதல்வன் = ஊழி காலம் தொட்டு இருக்கும் முதல்வன் (திருமால் )

உருவம்போல் = உருவத்தைப் போல

மெய்கறுத்து = உடல் கருமை வண்ணம் கொண்டு

பாழியந் தோளுடைப் = பாழி என்றால் அகன்ற என்று பொருள். அம் தோள் என்றால் அழகிய தோள்.

பற்பநா பன்கையில் = பத்ம நாபன் கையில். தாமரை மலரை நாபிக் கமலத்தில் கொண்டவன். அவன் கையில் உள்ள

ஆழிபோல் = சக்கரம் போல

மின்னி = மின்னல் அடித்து

வலம்புரிபோல் நின்றதிர்ந்து = வலம்புரி சங்கு போல நின்று அதிரும் படி சப்தம் செய்து

தாழாதே = தாமதம் செய்யாமல்

சார்ங்கம் = இராமனின் வில்

உதைத்த சரமழைபோல் = புறப்பட்ட அம்பு மழை போல

வாழ = வாழ

 உலகினில்  = உலகினில்

பெய்திடாய் = பெய்திடுவாய்

நாங்களும் = நாங்களும்

மார்கழி நீராட = மார்கழியில் நீராட

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! = மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய், என் பாவையே

மழை என்பது ஏதோ அதிசயம் அல்ல. அது நீர் ஆவியாகி , மேலே சென்று, மேகமாகி, கறுத்து , பின் நீராக பொழிவது தான் மழை. இது ஒரு அறிவியல் நோக்கு. பார்வை. நவீன விஞ்ஞானம் இதை கண்டு சொல்வதற்கு பல ஆண்டுகள் முன்பே ஆடல் சொல்லி விட்டாள்.

மழை எப்படி பொழிகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விடை.

நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. அதிலும் ஆண்டாள் குறிப்பாக சொல்கிறாள். "ஏ வருண பகவானே, நீ பாட்டுக்கு ஊருக்குள்ள இருக்கிற கிணறு , குளம் , குட்டை, ஏரி இதில் உள்ள நீரை ஆவியாக்கி கொண்டு போய் மழையாகப் பெய்யாதே . அதில் என்ன பலன். இருக்கிற நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் அதையே மழையாகத் தருவதில்? அதனால, கடல்ல போய் நீரை எடுத்துக் கொண்டு வந்து மழையாகப் பொழி" என்கிறாள்.


சரி, மழை பொழிகிறது. மேகம் எல்லாம் மழை பொழிந்தவுடன் காலியாகி விடும். அப்பறம் என்ன செய்வது ?

ஆண்டாள் வருணனிடம் சொல்கிறாள்..."ஏதோ வந்தோம், பெய்தோம் , போனோம் என்று இருக்கக் கூடாது. நீ எப்படி பெய்ய வேண்டும் தெரியுமா ...இராமனின் அம்பு போல எடுக்க எடுக்க குறையாத அம்பு போல நீ பெய்ய வேண்டும் "

"சார்ங்கம் உதைத்த சரமழைபோல்"

சர மழை போல பெய்ய வேண்டும்.

அதுதான் சாக்கு என்று வருணன் விடாமல் பெய்தால் , ஊரே வெள்ளக் காடாகி விடும் அல்லவா?

அதையும் யோசித்து இரண்டு விஷயம் சொல்கிறாள் ஆண்டாள்

ஒன்று, கருணையோடு பெய்ய வேண்டும். இராமன், நிறம் கறுப்பு. "வருணனே , நீ மழை பொழிந்த பின் உன் மேகங்கள் கறுமை மாறி வெண்மையாகி விடுகின்றன. அப்படி இருக்கக் கூடாது. எப்போதும் இராமன் மாதிரி கறுப்பாக இருக்க வேண்டும்." அப்படி என்றால், எப்போதும் கருணையோடு தேவைப் படும் போதெல்லாம் பெய்ய வேண்டும்.

இராமனின் அம்புகள் பகைவர்கள் மேல் பாய்ந்து அவர்களை கொன்றது.  அது போல  மழை பெய்ய வேண்டுமா என்றால், இல்லை.


"வாழ உலகினில் பெய்திடாய்"

சாவதற்கு இல்லை, வாழ்வதற்கு பெய்வாய் என்கிறாள்.

ஒரு புறம் அறிவியல் சார்ந்த ஒரு நோக்கு.

இன்னொரு புறம்  ஆன்மீகப் பார்வை.

இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள் ஆண்டாள்.

அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று காட்டுகிறாள்.

தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் ஆன்மீகத்தை ஒதுக்கத் தேவை இல்லை.

ஆன்மீகத்தில் உள்ளவர்கள், அறிவியலை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.

இரண்டையும் அரவணைத்துக் கொண்டு போகலாம் என்று காட்டுகிறாள் ஆண்டாள்.

ஒன்றுக்கொன்று முரண் அல்ல. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அறிவியல் பார்வை இருப்பது ஒன்றும் தவறு அல்ல. அதே போல் அறிவியலில் இருப்பவர்களும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதில், அதை அடைவதில் தவறு இல்லை.

அது மட்டும் அல்ல, ஆண்டாளின் பரந்த பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு எல்லாமே இறை வடிவாகத்தான் தெரியும்.

மழையின் ஒவ்வொரு அங்கமும் இறை வடிவாகவே பார்க்கிறாள்.

சக்கரம் போல மின்னி

சங்கு போல ஆர்ப்பரித்து

அம்பு போல பாய்ந்து

என்று எல்லாமே அவன் வடிவாகவே அவளுக்குத் தெரிகிறது.

இயற்கையும், இறைவனும் ஒன்றென காண்கிறாள் ஆண்டாள்.

அறிவியலும் ஆன்மீகமும் இயற்கையின் கூறுகள் தானே.

இறைவன் என்பது ஒரு ஆள் அல்ல. இந்த இயற்கைதான் இறைவன். எங்கும் நிறைந்த இந்த இயற்கை தான் இறைவன்.  மழை ஒரு உதாரணம்.

மின்னல் - ஒளி - கண்ணால் காண்பது.

இடி - ஒலி - காதால் கேட்பது

மழை - குளுமை - உடலால் உணர்வது

மழை மண்ணில் விழும் போது எழும் மண்வாசம் - மூக்கால் உணர்வது

மழை தரும் பயிர்கள் - உணவாகி நாக்குக்கு சுவை தருவது

இப்படி இயற்கை, ஐம்புலன்களுக்கும் அனுபவம் தருவது. அது தான் இயற்கை. அது தான் இறை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப் பாருங்கள். கண் மூடி இரசித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_26.html