Tuesday, April 2, 2019

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்


நல்லவர்கள் உடலில் இருந்து ஒளி வீசுமாம்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. உடலில் இருந்து எப்படி ஒளி வீசும் என்று கேட்கலாம்.

அந்தக் காலத்தில் பிரதீபன் என்று ஒரு மஹா ராஜா இருந்தார். அவர் உடலில் இருந்து தீப ஒளி வீசுமாம்.

இராமன் கானகம் செல்கிறான். மேலே சட்டை இல்லை. வெயில் கொளுத்துகிறது.

கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமன் மேல் வெயில் படுகிறதே. அவனுக்கு சுடுமே என்று கம்பன் பதறுகிறான்.


"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,"

சூரியனின் ஒளி, தன்னுடைய மேனியின் ஒளியில் மங்கும்படி இராமன் நடந்து சென்றானாம்.



வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


எங்கே சூர்ப்பனகை பார்க்கிறாள்.

"இந்த சூரியனுக்கு கண்ணு இல்லையா என்ன? இராமனின் உடலில் இருந்து வெளி வரும் ஒளியைப் பார்த்து விட்டால், அவன் நாணத்தில் எங்காவது சென்று மறைந்து கொள்ளுவான். இது வரை பார்க்கவில்லை போலும்...எனவே தான் வெட்கம் இல்லாமல் இப்படி சுத்தித் திரிகிறான் "

என்கிறாள்


பாடல்


வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக் 
காணலனே கொலோ கதிரின் நாயகன் 
சேண் எலாம் புல் ஒளி செலுத்திச் சிந்தையின் 
நாணலன் மீமிசை நடக்கின்றான் 'என்றாள் .

பொருள்

வாள் நிலா = ஒளி வீசும் நிலா

முறுவலான் = (அது போன்ற ) புன்னகை உடைய

வயங்கு சோதியைக் = ஒளி வழங்கும் இராமனை

காணலனே கொலோ = பார்க்கவில்லையோ

கதிரின் நாயகன்  = அந்தக் கதிரின் நாயகன் (சூரியன்)

சேண் = தூர இடங்களுக்கு

எலாம் = எல்லாம்

புல் ஒளி செலுத்திச் =  சிறிய  ஒளியை செலுத்தி

சிந்தையின் = உள்ளத்தில்

நாணலன் = வெட்கமில்லாதவன்

மீமிசை நடக்கின்றான் ' = உலகெலாம் சுத்தித் திரிகிறான்

என்றாள் . = என்றாள் சூர்ப்பனகை

சேண் என்றால் தூரம். தொலை தூரம் 


சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.



உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு 
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு 
ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி. 




" சேண்விளங்கு இயற்கை வாள்மதி " இதுவும் திருமுருகாற்றுப்படை தான்.


 சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
 அகலா மீனின் அவிர்வன இமைப்ப
 தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
 மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ..." - - - - 


ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மேல் இத்தனை இலயிப்பு.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_2.html


Monday, April 1, 2019

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின்

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின் 


மனப் பயிற்சி பற்றி முன்பு ஒரு முறை சிந்தித்தோம். உடற் பயிற்சி செய்து உடலை உறுதி செய்வது போல, மனப் பயிற்சி செய்து மனதை உறுதி செய்ய வேண்டும்.

மனிதன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? மனம் வேலை செய்பவன் என்று அர்த்தம். மனம் வேலை செய்யாவிட்டால் அவன் மனிதனே அல்ல.

ஆறு மாதக் குழந்தையை நாம் "அது தூங்கிருச்சு, அதுக்கு பசிச்சிருச்சு போல " என்று சொல்லுகிறோம்.

ஏன் ?

குழந்தை உயர்திணை தானே? பின் ஏன் குழந்தையை ஆடு மாடு போல அது, இது என்கிறோம் ?

ஏன் என்றால் குழந்தைக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

மனம் வேலை செய்தால் தான் மனிதன்.

அந்தக் குழந்தையே ஒரு இரண்டு வயதான பின், "அவன் வெளியே எங்காவது விளையாட போயிருப்பான்" என்று சொல்லுவோம்.

அதுவாக இருந்தது அவனாக மாறிவிட்டது. காரணம் மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

மனம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அந்த அளவுக்கு உயர்வு வரும்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர்த்தம்
உள்ளத்து அணையது உயர்வு

என்பார் வள்ளுவப் பெருந்தகை

வாழ்வில் உயர வேண்டுமா? மனம், உயர வேண்டும்.

மனம் உயர வேண்டும் என்றால், மனதிற்கு பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி தான் இலக்கியங்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

புல் பார்த்து இருக்கிறீர்களா? தெருவோரம், பூங்காவில் என்று எல்லா இடத்திலும் முளைத்து இருக்கும். அந்த புல்லை பற்றி உங்களால் என்ன கற்பனை பண்ண முடியும்?

அது ஒரு பயிற்சி. முயன்று பாருங்கள்.

புல்லிடம் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது? உயரம், வலிமை, அழகு, சுவையான காய் அல்லது பழம், அழகான மலர் என்று ஏதாவது இருக்கிறதா? ஒன்றும் இல்லை.  பின் எதை வைத்து அதை சிறப்பாக எண்ணுவது?

கம்பன் சிந்திக்கிறான்.

காதலன் கை பட்டால், காதலிக்கு உடல் சிலிர்க்கும். புல்லரிக்கும். உடலில் உள்ள முடி எல்லாம் சிலிர்த்து எழுந்து நிற்கும் அல்லவா.

அது போல

இந்த பூமகள் என்ற பெண்ணுக்கு இராமன் அடி தீண்டியவுடன் உடல் சிலிர்த்ததாம். அவள் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்து நின்றதாம். அந்த உரோமங்கள் தான் இந்த புற்கள் என்கிறார்.

பாடல்


'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் , 
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் 
பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள்


உடுத்த நீர் ஆடையள் = See through dress. கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ள இந்த பூமகள்.

உருவச் செவ்வியள் = அழகிய உருவம் கொண்டவள்

பிடித் தரு நடையினள் = பெண் யானை போன்ற நடையினை கொண்டவள்

பெண்மை நன்று; = பெண்மைக்கு உண்டான குணங்கள் எல்லாம் நன்றாக
கொண்டவள்

இவன் = இராமன்

அடித்தலம் = திருவடி

தீண்டலின் = தீண்டப் பெற்றதால்

அவனிக்கு = இந்த பூமிக்கு

அம்மயிர் = அந்த மயிர்

பொடித்தன போலும், = சிலிர்த்தன போலும்

இப்புல்என்று = இந்த புற்கள் எல்லாம் என்று

உன்னுவாள் = எண்ணுவாள்


அழகிய பெண். பெண்ணுக்கு உரிய குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றவள். கடல் என்ற  ஆடை உடுத்தவள்.

கற்பனை செய்து பாருங்கள்.

காற்றில் பெண்ணின் ஆடை சலசலப்பது போல, கடலின் அலைகள். பூமகளின் ஆடை காற்றில் அலைவது போல இருக்கிறது.

ஆண் கை பட்டால் எல்லா பெண்களுக்குமா உடல் சிலிர்க்கும்?  பெண்மை குணம்  நிரம்பி இருக்க வேண்டும். அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற குணங்கள்  இருக்க வேண்டும். இந்த பூமகளுக்கு இவை எல்லாம் நிரம்பி இருக்கிறது. எனவே, அவள் உடல் சிலிர்த்தது.

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அறிவு செல்ல முடியாத இடங்களுக்கு கற்பனை உங்களை இட்டுச் செல்லும்.

அறிவினால் இறைவனை அடைய முடியாது என்பது நம் முன்னவர்களின் கணிப்பு.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க "

என்பார் மணிவாசகர் (திருவாசகம்). அங்கே சித்தம் செல்லாது.

" உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" 

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார். (பெரிய புராணம்)

அவனை அறிந்து கொண்டு ஓத முடியாது.

பின், எப்படித்தான் இறைவனை கண்டு கொள்வது என்றால், மனம் விரிய வேண்டும். அறிவு செல்லாத இடங்களுக்கு அது செல்லும்.


அறிவு மெல்லமாகத்தான் செல்லும். கற்பனை உங்களை கண நேரத்தில் எங்கும் கொண்டு  சேர்க்கும்.

அறிவினால் முன்னோக்கித்தான் போக முடியும்.

கற்பனை உங்களை மூன்று காலத்துக்கும் கொண்டு செல்லும். இராமனும் சூர்பனகையும் இருந்த காலம் எது என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும், இந்தப் பாடல்கள் உங்களை அங்கு கொண்டு செல்லும்.

உங்கள் மனதை விரிவாக்க வேண்டுமா?

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களைப் படியுங்கள். மனம் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post.html


Sunday, March 31, 2019

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம் 



IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் சில பல மாதங்கள் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ளவார்கள். IIT போன்ற நிறுவனங்களில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல.  இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்வதும் அவ்வளவு எளிதல்ல. அவற்றில் சேர்வதற்கும் நுழைவு தேர்வு உண்டு. வருகிற எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று IIT ல் சேர முடியும்.

இப்போது என்ன ஆகிறது என்றால், அந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்.

அதில் சேர்ந்து பயிற்சி பெற்று, இந்த பயிற்சி நிறுவனங்களில் நுழைந்து, அங்கு மீண்டும் IIT க்கு பயிற்சி பெற்று, IIT ல் சேர வேண்டும்.

சரி, அதுக்கும், இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் ? IIT எங்கே இருக்கிறது, இராமாயணம் எங்கே இருக்கிறது ?

இராமன் தவம் செய்ய கானகம் வந்தான்.

தவம் செய்யவா வந்தான் ?

ஆம். அப்படித்தான் கைகேயி சொல்லி அனுப்பினாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ 
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு 
பூழி வெங்கானம் நல்கி புண்ணியத் துறைகள் ஆடி 
ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்

என்றாள்

"பரதன் நாட்டை ஆளட்டும். நீ காட்டில் போய் தவம் செய்"

என்று சொல்லித்தான் அனுப்பினாள்.

எனவே இராமன் தவம் செய்ய காட்டுக்கு வந்திருக்கிறான்.

சூர்ப்பனகை பார்க்கிறாள். எல்லோரும் தவம் செய்து அதன் பலன்களைப் பெறுவார்கள். ஆனால், இந்த இராமன் தவம் செய்ய, இந்த தவம் , என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.

இராமன் தவம் செய்கிறான் என்றால் அது தவத்திற்கே பெருமையாம்.

நாம் எல்லாம் தவம் செய்தால் அது நமக்குப் பெருமை. இராமன் தவம் செய்தால் அதனால் தவத்துக்கு பெருமை.

இராமன் தவம் செய்ய வேண்டுமே என்று அந்த தவம் முன்பு தவம் செய்ததாம்.

பாடல்


எவன் செய, இனிய இவ்
    அழகை எய்தினோன்,
அவம் செயத் திரு உடம்பு
    அலச நோற்கின்றான்?
நவம் செயத் தகைய இந்
    நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த
    தவன் என்? ‘என்கின்றாள்.

பொருள்

எவன் செய = எதைப் பெறுவதற்காக

இனிய = இனிமையான

இவ் அழகை எய்தினோன், = இந்த அழகை அடைந்தவன்

அவம் செயத்  = துன்பப் பட்டு

திரு உடம்பு = அவனுடைய இந்த உயர்ந்த உடம்பு

அலச நோற்கின்றான்? = நோகும்படி தவம் மேற்கொள்கிறான்

நவம் செயத் தகைய  = புதுமையை உண்டாக்கக் கூடிய

இந் நளின நாட்டத்தான் = இந்த நளினமான கண்களை உடைய இராமன்

தவம் செயத் = தவம் செய்ய

தவன் செய்த = தவம் செய்த

தவன் என்? ‘என்கின்றாள். =தவம் என்ன என்கிறாள்

இவன் தவம் செய்ய, அந்த தவம் என்ன தவம் செய்ததோ என்கிறாள்.

நீங்க எங்க வீட்டுக்கு வர இந்த வீடு என்ன புண்ணியம் பண்ணியதோ என்று சொல்லுவதைப் போல.

IIT ல் சேர கோச்சிங் சென்டர். கோச்சிங் சென்டரில் சேர ஒரு டுடோரியல் சென்ட்ரல் மாதிரி.

தவம் செய்ய தவம் செய்த தவம் .

கம்பனின் கவித் திறமைக்கு ஒரு உரைகல்.

மேலும்,

நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால், நம்மால் அந்த வேலை பெருமை அடைய வேண்டும். அந்த அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இராமன் உயர்த்திக் கொண்டான்.

இராமாயணம் படிப்பது கம்பனின் கவிதத்திறமையை இரசிக்க மட்டும் அல்ல, அதில் உள்ள கதையை படிப்பதற்கு மட்டும் அல்ல, அதில் உள்ள பாடங்களையும்  படித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்ய வேண்டும். நம்மால் அந்த காரியத்துக்கு பெருமை வந்து சேர வேண்டும்.

அணு ஆராய்ச்சி செய்தாலும் சரி, தெரு பெருகினாலும் சரி....மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.



மார்ட்டின் லூதர் கிங் சொல்லுவார்

If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”





Saturday, March 30, 2019

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன்

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன் 


மனிதன் எதையும் வெல்ல முடியும் காமத்தைத் தவிர. காமம் ஞானிகளையும் ரிஷிகளையும் முனிவர்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சாம்ராஜ்யங்களை சாம்பல் மேடாக்கியிருக்கிறது.

எல்லாம் துறந்த துறவிகளும் காமத்தின் பிடியில் இருந்து வெளி வரமுடியாமல் தவித்து இருக்கிறார்கள். பெண்ணை ஏசி, தூற்றி, அவள் உடம்பை கொச்சைப் படுத்தி பாடி தீர்த்து இருக்கிறார்கள்.

மாணிக்க வாசகர், எவ்வளவு பெரிய ஞானி....இறைவனை அடைய இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்தேன் என்று ஒரு பட்டியல் தருகிறார்.



ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

அனைத்துக்கும் ஒரு வரி சொன்ன அவர், பெண்ணிடம் இருந்து பிழைத்தேன், காமத்தில் இருந்து பிழைத்தேன் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே...

கரும்குழல்
செவ்வாய்
வெள்நகைக்
கார்மயில்
ஒருங்கிய சாயல்
நெருங்கி
உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து
கதிர்ந்து
முன் பணைத்து
எய்த்து
இடைவருந்த
எழுந்து
புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா
 இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

என அடுக்குகிறார்.

பெண்ணின் மார்பகம் அவரை அப்படி அலைக்கழிக்கிறது.

காமம் தேவேந்திரனை விடவில்லை. வால்மீகியை விடவில்லை - வியாசரை விடவில்லை. சந்திரனை விடவில்லை.

அந்த காமத்தை வென்ற ஒருவன் சிவன்.

சிவ பெருமான் யோகத்தில் இருக்கிறார். அந்த யோகத்தை கலைக்க வேண்டும். தேவர்கள் மன்மதனை அனுப்புகிறார்கள். நடுங்கிக் கொண்டு போகிறான் மன்மதன். சிவன் மேல் மலர் அம்பை தொடுக்கிறான்.

கண் விழித்த சிவன் காமவயப் படவில்லை. மன்மதனை எரித்து விட்டான்.

காமத்தை வென்றவன் சிவன்.

பின், ரதி அழுது, பார்வதி இரங்கி, மன்மதன் உயிர் பெறுகிறான் ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான் என்ற ஒரு நிபந்தனையோடு.

சூர்ப்பனகை, இராமனை பார்க்கிறாள்.

"ஒருவேளை அந்த மன்மதன், தவம் செய்து, சாப விமோச்சனம் பெற்று, எல்லோரும் காணும் படி ஆகி விட்டானோ. அந்த மன்மதன் தான் இவன் போலும்" என்று ராமனை கண்டு வியக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால் 
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான் 
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப் 
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .


பொருள்


'கற்றை அம் சடையவன் = கற்றை முடியை கொண்ட சிவன்

கண்ணில் காய்தலால்  = நெற்றிக் கண்ணால் எரித்ததால்

இற்றவன் , = இறந்தவன் (மன்மதன்)

அன்றுதொட்டு = அன்று முதல்

இன்றுகாறும் = இன்று வரை

தான் = அவன்

நல் தவம் இயற்றி  = நல்ல தவம் புரிந்து

அவ் அநங்கன் = அந்த மன்மதன்

நல் உருப் பெற்றனன் ஆம் '= நல்ல வடிவத்தை பெற்றான்

எனப் பெயர்த்தும் எண்ணுவாள்  = என்று மீண்டும் எண்ணுவாள்


கம்பன் கோடி காட்டுகிறான்.

காமத்தை வென்றவன் சிவன்.

காமத்தில் தடுமாறி நிற்கிறாள் சூர்ப்பனகை.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_30.html

Friday, March 29, 2019

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா 



பாடல்

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா


பொருள்

மண்ணும் தணல் ஆற = மீண்டும் மீண்டும் நாம் பிறந்து, பின் இறந்து கொண்டிருந்தால், நம் உடலை மீண்டும் மீண்டும் எரிப்பார்கள். அப்படி மாறி மாறி எரித்துக் கொண்டிருந்தால், இந்த மணல் (சுடுகாட்டு மணல் ) சூடாகவே இருக்கும் அல்லவா? அந்த மணல் கொஞ்சம் தணல் ஆறவும். சூடு ஆறி குளிரவும்

வானும் புகை ஆற = உடலை எரிக்கும் போது எவ்வளவு புகை வரும். நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து எரித்து எரித்து இந்த வானமே புகை மண்டி கிடக்கிறது. அந்த புகை ஆறவும்

எண்ணரிய தாயும் இளைப்பாறப் = பிள்ளையைப் பெறுவது என்றால் எவ்வளவு சிரமம் ஒரு தாய்க்கு. எத்தனை தாய்மார்கள் நம்மை மறுபடி மறுபடி பெறுவதற்கு சிரமப் படுவார்கள். அவர்கள் கொஞ்சம் இளைப்பாறவும். 


பண்ணுமயன் = பண்ணும் + அயன் . நம்மை மீண்டும் மீண்டும் படைக்கும் ப்ரம்மா 

கையாறவும் = நம் தலை எழுத்தை எழுதி எழுதி அவனுக்கும் கை வலிக்காதா? அவன் கை ஆறவும் 

அடியேன் கால் ஆறவும் = பிறந்தது முதல் ஆட்டம், ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடம், வேலை, வெட்டி என்று அலைந்து திரிகிறோம். கால் தான் வலிக்காதா நமக்கு. ஒரு பிறவி என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவி, எவ்வளவு நடப்பது ? கால் தான் வலிக்காதா ? என் கால் இளைப்பாறவும் 


காண்பார் = இவை எல்லாம் இளைப்பாறும்படி காண்பாய் 

ஐயா = ஐயா 

திருவை யாறா = திருவையாறா, திருவையாற்றில் உள்ள சிவனே 

பட்டினத்தாருக்கு தமிழ் வந்து விழுகிறது. 

ஐந்து ஆறுகள் சேரும் இடம், திரு + ஐந்து + ஆறு. திருவையாறு. 

அந்த ஆற்றினை, ஆறுதல் என்ற இளைப்பாறுதல் என்ற வார்த்தையோடு சேர்க்கும் இலாகவம் பட்டினத்தாருக்கு இருக்கிறது. 

அது போகட்டும். 

நமக்கு நேற்று நடந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. போன வாரம் நடந்தது அதை விட கொஞ்சம் குறைவாக நினைவு இருக்கிறது. போன மாதம், போன வருடம் ?

நாள் ஆக , ஆக நினைவு குறைந்து கொண்டே போகிறது. 

போன ஜென்மம் நினைவு இருக்கிறதா ? இல்லவே இல்லை. 

ஞானிகளுக்கு அது நினைவு இருக்கிறது. 

பட்டினத்தார் சொல்கிறார் எத்தனை பிறப்பு, எத்தனை தாய்மார் என்று. 

மாணிக்க வாசகர் சொல்லுகிறார் 

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் 
மெய்யே உன் பொன்னடிக்கு கண்டு இன்று வீடு உற்றேன் "

என்று சிவபுராணத்தில்.

புல்லாகி, பூடாகி, புழுவாய் , பறவையாய், பாம்பாய் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அத்தனை பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார். 

இளைத்து யார் ? இந்த உடம்பு அல்ல. இந்த ஆன்மா. மறுபடி மறுபடி பிறந்து இளைக்கிறது.

எளிய தமிழில் ஆழ்ந்த அர்த்தம்.

இது உங்கள் சொத்து. உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. வெட்டிக் கொண்டு போனாலும் சரி. கட்டிக் கொண்டு போனாலும் சரி. விட்டு விட்டுப் போய் விடாதீர்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_15.html

இராமாயணம் - யாரோ இவன் ?

இராமாயணம் - யாரோ இவன் ?


சில பேருக்கு எதைச் சொன்னாலும் குதர்க்கமான அர்த்தம் தான் தோன்றும்.  நல்ல புத்தகத்தை கொடுத்தால், "இதை எடைக்கு போட்டால் என்ன விலை வரும் " என்று சிந்திப்பார்கள்.

"தீயவரோடு சேராதே" என்று சொன்னால், "அப்ப தீயவர்கள் எப்படித்தான் திருந்துவார்கள். நாம் தான் பழகி அவர்களை திருத்த வேண்டும் " என்று வாதம் செய்வார்கள்.

என்ன செய்வது. அவர்கள் அறிவின் ஆழம் அவ்வளவுதான் என்று விட்டு விட வேண்டும்.

இராமனை நேரில் காண்கிறாள் சூர்ப்பனகை. அவன் பரம்பொருள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

"மன்மதனுக்கு உருவம் கிடையாது. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள். சிவனுக்கு மூன்று கண்கள். திருமாலுக்கு நான்கு தோள்கள். இவனைப் பார்த்தால் அப்படி யாரும் போலத் தெரியவில்லையே. இவன் யாராக இருக்கும்" என்று அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

பாடல்


'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ; 
இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்கு 
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள் 
உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் .


பொருள்


'சிந்தையின் = மனதில்

உறைபவற்கு = இருப்பவருக்கு (எல்லோர் மனத்திலும் காதலும் காமமும் உண்டு. அதற்கு காரணமான மன்மதன்)

உருவம் தீர்ந்ததால் ;  = உருவம் இல்லாததால்

இந்திரற்கு = இந்திரனுக்கு

ஆயிரம் நயனம்  = ஆயிரம் கண்கள்

ஈசற்கு  = சிவனுக்கு

முந்திய மலர்க்கண் ஓர் மூன்று = மூன்று மலர் போன்ற கண்கள்

நான்கு தோள்  = நான்கு தோள்கள்

உந்தியின் = நாபிக் கமலத்தில் இருந்து

உலகு  = இந்த உலகை

அளித்தாற்கு ' = அளித்தவனுக்கு

என்று உன்னுவாள் . = என்று நினைப்பாள்

உருவம் தாண்டி மேலே செல்லத் தெரியவில்லை. புறத் தோற்றமே முடிவானது என்று முடிவு  செய்து விட்டாள்.

கவிதை தெரியும், கவிஞனின் உள்ளம் தெரியாது.

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “


என்பான் பாரதி.

மனைவி தெரியும், அவள் உள்ளம் தெரியாது.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரம்"

என்பார் மணிவாசகர். பொருள் அறிந்து அல்ல, பொருள் உணர்ந்து.

புறத் தோற்றங்களைத் தாண்டி மேலே செல்ல வேண்டும்.



Thursday, March 28, 2019

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்


கடவுள் யார் என்றே தெரியாது. இருந்தும் கடவுளை "தேடுகிறேன்", என்று சொல்லுகிறார்கள். தெரியாத ஒன்றை எப்படி தேட முடியும்? கடவுளை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் யார், எப்படி இருப்பான் என்று தெரியாது, எங்கே இருப்பான் என்று தெரியாது. ஆனால், அவனை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நாளையே கடவுள் நேரில் வந்து "வா போகலாம் " என்றால் எத்தனை பேர் கிளம்புவார்கள். முதலில், வந்திருப்பது கடவுளா என்ற சந்தேகம் வரும். நம் வீட்டில் உள்ள படத்தில் இருப்பது போல இல்லை என்றால், வந்த ஆளை கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஒரு வேளை அதே போல் இருந்தால், யாரேனும் அப்படி வேஷம் போட்டு வந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் வரும்.

சரி, கடவுள் நம்மிடம் சொல்ல வில்லை. சும்மா, நம் பக்கத்தில் வந்து நிற்கிறார். பஸ்ஸில் நம் கூட பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்குத் தெரியுமா அவர் தான் கடவுள் என்று ?

தெரியவே தெரியாது.

சூர்ப்பனகை, இராமனை கண்டாள். அவன் கடவுள் என்று அறியவில்லை. அனுமன் அறிந்தான். குகன் உணர்ந்தான். சூர்ப்பனகை அறியவும் இல்லத்தில். உணரவும் இல்லை.

கம்பன் ரொம்பவும் மெனெக்கெட்டு சொல்லுகிறான்.

"அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் சென்று அரக்கர்கள் எங்களை பாடாய் படுத்துகிறார்கள் என்று முறையிட்ட அந்த விஷ்ணுவை சூர்ப்பனகை கண்டாள் " என்று.

ஆனால், இராமன் அவளுக்கு கடவுளாகத் தெரியவில்லை. மானிடனாகத் தெரிந்தான். அவன் உடம்பு தான் அவளுக்குத் தெரிந்தது.

என்ன செய்ய ? அவள் அறிவின் ஆழம் அவ்வளவுதான்.

பாடல்

எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் 


பொருள்

எண் தகும் = எண்ணத் தகுந்த, பூஜிக்கத் தகுந்த

இமையவர் = கண் இமைக்காதவர்கள் (தேவர்கள்)

,'அரக்கர்  எங்கள் மேல் = அரக்கர்கள் எங்கள் மேல்

விண்டனர் = சண்டை செய்து எங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்

, விலக்குதி  = அதில் இருந்து எங்களை விலக்கி அருள் புரிவாய்

'என்ன  = என்று

 மேலை நாள் = முன்பொரு நாள்

அண்டசத்து =  பாம்பணை மேல் (முட்டையில் இருந்து வந்த பாம்பு)

அருந்துயில் = அரிய துயில்

துறந்த = விட்டு விட்ட

 ஐயனைக் = ஐயனை (விஷ்ணுவை)

கண்டனள்  = கண்டாள்

 தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்  = தன்னுடைய உறவினர்களுக்கு முடிவை தேடித் தரும்  சூர்ப்பனகை

கடவுள் அருகில் இருந்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

குளத்தில் தாமரை இருக்கும். அதில் தேன் இருக்கும். அந்தக் குளத்தில் இருக்கும் தவளைக்கு தேன் பற்றி ஒன்றும் தெரியாது.

எங்கேயோ உள்ள காட்டில் இருந்து வந்த வண்டு அந்த தேனை சுவைக்கும்.

கடவுளோ, அறிவோ, அறிவுள்ளவர்களோ அருகில் இருந்தாலும் அரக்கர்களுக்கு அது தெரியாது.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 

(விவேக சிந்தாமணி)


அப்படி தெரியாமல் இருப்பவர்கள் அரக்கர்கள். நம்மில் எத்தனை அரக்கர்களோ...?

சூர்பனகைக்கு, இராமன் அருகில் இருந்தும் அவன் பரம்பொருள் என்று தெரியவில்லை. 

காரணம், காமம். 

காமம் அவள் கண்ணை மறைத்தது. 

இராவணனுக்குத் தெரியவில்லை. ஆணவம் அவன் கண்ணை மறைத்தது. 

வீடனுக்குத் தெரிந்தது. அது ஞானம். 

காமத்தையும், கோபத்தையும், அறிவீனத்தையும் வைத்துக் கொண்டு தேடினால், இறைவனே நேரில் வந்தாலும் தெரியாது என்று கம்பன் சொல்லித் தருகிறான்.

கண்ணைக் கட்டிக் கொண்டா தேடுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_28.html