Tuesday, May 21, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


சில தினங்களுக்கு முன்னால், அறிவுடைய எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்ற குறளின் அர்த்தம் பற்றி சிந்தித்தோம்.

அறிவு என்பது என்ன ? அறிவு எப்படி வருகிறது? அறிவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

அறிவு யாருக்குத்தான் வேண்டாம் ? அறிவில்லாமல் முட்டாளாக இருக்க யாருக்கு விருப்பம் இருக்கும் ?

எனவே அறிவு என்றால் என்ன, அதை எப்படி அடைவது என்பது பற்றி சிந்திப்போம்.

முதலில், கற்பதனால் அறிவு வளரும் என்று பார்த்தோம்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு 

என்று பார்த்தோம்.

தோண்ட தோண்ட நீர் வருவது போல, படிக்க படிக்க அறிவு வளரும்.

சரி,எதைப் படிப்பது ? படித்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே ? ஆளுக்கு ஒரு வழி சொல்கிறார்கள்.

ஆன்மீகம் ஒன்று சொல்கிறது. அறிவியல் இன்னொன்று சொல்கிறது.

எதை எடுத்துக் கொள்வது.

ஆன்மீகத்திலும் எத்தனையோ பிரிவுகள், ஒவ்வொரு பிரிவும் ஒன்றைச் சொல்கிறது.

என் கடவுள் தான் பெரியவர்,  என் வழிதான் ஒரே வழி,  நான் கண்டதே உண்மை, மற்றதெல்லாம் பொய், என் கடவுள் தான் முக்தி தருவார்,  என்று ஆளாளுக்கு  கொடி பிடிக்கிறார்கள்.

அறிவியலோ , நேற்று ஒன்று சொன்னது. இன்று அதை மாற்றிச் சொல்கிறது. நாளை  என்ன சொல்லுமோ, தெரியாது.

நாம் நடுவில் குழம்பிப் போய் நிற்கிறோம்.

சரி, யாரிடமாவது போய் கேட்கலாம் என்றால், யார் உண்மையானவர் என்று தெரியவில்லை.  அப்படியே ஒருவர் நல்லவராக இருந்தாலும், அவருக்கு எல்லாம் தெரியுமா  என்பதும் சந்தேகமே.

என்னதான் செய்வது ?

வள்ளுவர் சொல்லிவைத்து விட்டுப் போய் இருக்கிறார்.

"யார் என்ன சொன்னலாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காம சொன்னதில் உள்ள உண்மை என்ன என்று தெரிந்து கொள்வது அறிவு" என்கிறார்.


பாடல்


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

பொருள்

எப்பொருள் = எந்தப் பொருளை

யார்யார்வாய்க்  = யாரிடம் இருந்து

கேட்பினும்  = கேட்டாலும்

அப்பொருள்  = அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் = உண்மையான பொருளை

காண்பது = காண்பது

அறிவு.  = அறிவு


என்ன இது சரியான கதையா இருக்கே. எங்களுக்கு அறிவு எப்படி வரும் என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் உண்மை எது என்று எங்களையே கண்டு பிடிக்கச் சொன்னால் எப்படி. அது தெரிந்தால் நாங்க ஏன் இப்படி இருக்கோம் ?

ஒரு ஒரு படியாக வருவோம். 

அது என்ன "யார் யார் வாய்"

மனிதர்ளுக்கு முக்குணங்கள் மாறி மாறி வருவது இயல்பு. 

சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் நமக்குள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 

அப்படி மாறி மாறி வரும்போது நண்பர்களும், உறவினர்களும் தவறான ஒன்றை நமக்குச் சொல்லி விடலாம், நம் பகைவர்கள் நமக்கு நல்லதைச் சொல்லிவிடலாம்,  உயர்ந்தவர்கள் வாயில் தாழ்ந்த கருத்துகளும், தாழ்ந்தவர் வாயில் இருந்து உயர்ந்த கருத்துகளும் வரலாம். 

யாரிடம் இருந்து எப்போது எது வரும் என்று தெரியாது. 

எதையும், அது எப்போதும் சரியாக இருக்கும் என்றும் நினைக்கவும் கூடாது.  அது போல, சிலர் சொல்லுவது எப்போதும் தவறாகவே இருக்கும் என்றும் நினைக்கக் கூடாது. 

அது ஆளாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவானாலும்  சொன்னது யார் என்று பார்க்கக் கூடாது. என்ன சொன்னார்கள் என்று பார்க வேண்டும். 

வேதம், கீதை, பைபிள், குரான், தேவாரம், திருவாகம், பிரபந்தம், அறிவியல், கணிதம், என்று யார் எதில் என்ன சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

சிந்திக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள், அதன் அர்த்தம் என்ன, அது சரிதானா என்று உரசிப் பார்க்க வேண்டும். 

கடவுளே நேரில் வந்து சொன்னாலும், அவர் சொன்னதின் மெய் பொருள்  என்ன என்று அரிய வேண்டும். 

"அப்பொருள் மெய் பொருள்" என்றால் என்ன ?

நாம் படிப்பது, கேட்பது எல்லாமே நமக்குத் தெரிந்தவற்றின் மூலமாகத் தான். 

புதிதாக ஒரு கருத்தை படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அது பற்றி ஏற்கனவே  ஒரு அப்பிராயம் இருக்கும். நம் மனதில் உள்ளதோடு புதிய கருத்தை நாம் ஒப்பிட்டுப் பார்போம். நமக்கு வசதியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம்.  இல்லை என்றால் தூக்கி எறிந்து விடுவோம். 

நமக்குத் தெரிந்தவற்றை முதலில் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். 

சொல்லப்படுவது என்ன என்று கேட்க வேண்டும். அதை ஆராய வேண்டும் 

அது உண்மை என்றால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு எதிரானது என்றால், நமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டுமே அல்லாது, புதிய கருத்துகளை விட்டு விடக் கூடாது. 

அது தான் அறிவு வளரும் வழி. 

நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. 

யார் எதைச் சொன்னாலும், ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும்...

அது அறிவு வளர்வதின் முதல் படி.....

அடுத்த படி என்ன தெரியுமா ?

Monday, May 20, 2019

கம்ப இராமாயணம் - திரு இங்கு வருவாள்கொல்லோ?

கம்ப இராமாயணம்  - திரு இங்கு வருவாள்கொல்லோ?


இராமனுக்கும் சூர்பனகைக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , பர்ணசாலையின் உள் இருந்து சீதை வெளியே வந்தாள்.

சீதையை கண்ட சூர்ப்பனகை திகைக்கிறாள்.


"நறுமணம் பொருந்திய கூந்தலை உடைய இந்தப் பெண்ணை இவன் இந்தக் காட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டான். இப்படி ஒரு அழகு உள்ள பெண் இந்த காட்டில் யாரும் இல்லை. தாமரை மலரில் இருந்து, கால் தோய அந்த இலக்குமியே எங்கு வந்தாளோ" என்று உள்ளை திகைத்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


பாடல்

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து 
     இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் 
     யாரும் இல்லை; 
அரவிந்த மலருள் நீங்கி, அடி 
     இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள்கொல்லோ?' என்று அகம் 
     திகைத்து நின்றாள்.


பொருள்


'மரு ஒன்று = நறுமணம் பொருந்திய

கூந்தலாளை = கூந்தல் கொண்ட இந்தப் பெண்ணை

வனத்து = காட்டுக்கு

இவன் = இராமன்

கொண்டு வாரான்; = கொண்டு வந்திருக்க மாட்டான்

உரு = இப்படி ஒரு உருவம் உள்ள பெண்கள்

இங்கு = இந்தக் காட்டில்

இது உடையர் ஆக = இப்படி அழகு உடையவர் ஆக

மற்றையோர்  = வேறு பெண்கள்

யாரும் இல்லை;  =யாரும் இல்லை

அரவிந்த = தாமரை

மலருள்  = மலரில் இருந்து

நீங்கி = நீங்கி

அடி  = திருவடி

இணை = இரண்டும்

படியில் தோய = நிலத்தில் படும்படி

திரு = திருமகள்

இங்கு வருவாள்கொல்லோ?' = இங்கு வந்திருப்பாளோ?

என்று = என்று

அகம்  = மனம், உள்ளம்

திகைத்து நின்றாள். = திகைத்து நின்றாள்

சீதை அப்போதுதான் பர்ண சாலையில் இருந்து வெளியே வருகிறாள். அவள் கூந்தலின்  மணம் சூர்பனகைக்குத் தெரிந்து விடுகிறது.

தாடகையும் அப்படித்தான்.


தாடகையைப் பற்றி கூறும் போது விசுவாமித்திரன் வாயிலாக கம்பன் கூறுவான்,

"எமன் கூட நமது இறுதி நாளில் தான் வந்து நம் உயிரை கொண்டு செல்வான். ஆனால், இவளோ, உயிர்களின் வாடை பட்டாலே போதும், எடுத்து தின்று விடுவாள்" என்கிறான்.

‘சாற்றும் நாள் அற்றது எண்ணித்,
    தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி,
    இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன
    நயப்பது ஓர்
கூற்று உண்டோ? சொலாய்!
    கூற்று உறழ் வேலினாய்!

சிலருக்கு உணவின் வாடை பட்டாலே போதும். பசி வந்து விடும். ஹ்ம்ம்...நல்ல மணம் வருதே...இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று சாப்பிட கிளம்பி விடுவார்கள். அது அரக்க குணம். பசித்தால் அன்றி சாப்பிடக் கூடாது.

இங்கே, சூர்பனகைக்கு சீதையின் கூந்தல் வாசம் வருகிறது.

"இவளை பார்த்தால் நல்ல குலப் பெண் போல இருக்கிறாள். இராமன் எதுக்கு இவளை  காட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கப் போகிறான்" எனவே, இது அவன் மனைவியாக இருக்காது  என்று அவள் நினைக்கிறாள்.

சரி, மனைவி இல்லை என்றால், இங்கே காட்டில் இருக்கும் பெண்ணாக இருக்கும் என்றால், இப்படி ஒரு அழகான பெண் இந்தக் காட்டில் ஏது. எனவே, இவள் இந்தக் காட்டில் திரியும் பெண்ணும் இல்லை.

ஒருவேளை, இராமன் பூஜை சேத பலனாக, அந்த திருமகளே இங்கு வந்திருப்பாளோ என்றால், இவள் கால் தரையில் படுகிறது. எனவே, இவள் திருமகளும் இல்லை.

யார் இவள் என்று திகைக்கிறாள்.

பெண் என்றால், பார்த்தவுடன் ஒரு நல்ல மதிப்பு மனதில் வர வேண்டும்.

சீதையின் அழகை கம்பன் வர்ணித்த மாதிரி இன்னொரு கதாநாயகியை வேறு எந்த இலக்கிய  கர்த்தாவும் வர்ணித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

வர்ணனையின் உச்சம் தொடுவான் கம்பன், சீதையை வர்ணிக்கும் போது.

அது பற்றி தனியாக கொஞ்சம் சிந்திப்போம், பின்னொரு நாளில்.


சற்று இந்த சூழ்நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தனியான காடு.

சீதை ஒரு புறம். சூர்ப்பனகை மறுபுறம். நடுவில் இராமன்.

சூர்பனகையும், சீதையும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக சந்திக்கும் இடம்.

அந்த இடத்தில் கம்பன் நிறுத்துகிறான்.

அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் ?


Saturday, May 18, 2019

திருக்குறள் - எல்லாம் உடையார்

திருக்குறள் - எல்லாம் உடையார் 


பாடல்

‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்’’

பொருள்

‘அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்

எல்லாம் உடையார் = எல்லாம் உடையவர்கள்

அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

என்னுடைய ரேனும்  = எவ்வளவுதான் இருந்தாலும்

இலர் = ஒன்றும் இல்லதாவர்களே

இது பொதுவாக சொல்லும் பொருள்.

திருக்குறளை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கும் சொல்லலாம். முதுகலை படித்து முடித்து, முனைவர் (doctorate ) படிப்பு படிப்பவர்களுக்கும் சொல்லலாம். எளிமைக்கு எளிமை. ஆழத்துக்கு ஆழம்.

சரி, இதில் என்ன ஆழம் இருக்கிறது.

"அறிவுடையார்" ... கல்வி உடையார், கற்றவர் என்று சொல்லவில்லை. அறிவு உடையார்  என்று சொல்கிறார். கல்வி வேறு, அறிவு வேறு.  அறிவுடைமைக்கும் கல்விக்கும்  இரு வேறு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

அறிவு என்பது நமக்குள் இருப்பது. அதை வெளியே கொண்டு வருவது கல்வி.

அது என்ன உள்ளே இருப்பது, வெளியே வருவது ?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் வள்ளுவர்.

ஆற்றில் நீர் வற்றிய காலங்களில் மக்கள் ஆற்றுப் படுகையை தோண்டுவார்கள். அதில் நீர் ஊற்றெடுத்து வரும்.  அதற்கு மணற்கேணி என்று பெயர். நீர் உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால்  நீர் வரும்.

அது போல, அறிவு உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால் அது வெளியே வரும்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’

எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் வரும் மணற்கேணியில் இருந்து. அது போல எவ்வளவு கற்கின்றோமோ அவ்வளவு அறிவு வளரும்.

சிலருக்கு லேசாக தோண்டினாலே நீர் வந்து விடும். சிலருக்கு பல அடி ஆழம் தோண்ட வேண்டும்.

சரி, அறிவு புரிகிறது.

அறிவு இருந்தால் எல்லாம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ அறிவாளிகள்  ஏழையாக இல்லையா? படிக்காத தற்குறிகள் செல்வத்தில்  திளைக்கவில்லையா ?

நாம் ஏழ்மை என்று சொல்லுவது பொன் , பொருள்  இல்லாமல் இருப்பதை. ஒருவனிடம்  நிறைய காசு இருந்தால்  அவனிடம் எல்லாம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

செல்வம் நிலையாதது.

ஒரு அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அது மட்டும் அல்ல , அதனால் சிக்கல்களே அதிகம்.

மேலும், இந்த பொருளும், பொன்னும் நாம் இறந்த பின் நம் கூட வருமா ?

வராது.

அறிவு மட்டும் வருமா ?

வரும் என்கிறார் வள்ளுவர்.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழ் பிறவிக்கும் வரும் என்கிறார்.

அப்படி என்றால், நம் வாழ்நாளை இதில் செலவிட வேண்டும் ?

பொன்னும் பொருளும் சேகரிப்பதிலா? அல்லது அறிவை சேகரிப்பதிலா ?

"என்னுடையரேனும் இலர்"

என்ன இருந்தாலும், ஒன்றும் இல்லாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள் அறிவு இல்லாதவர்கள் என்கிறார்.

அறிவில்லாதவனிடம் நிறைய செல்வம் இருந்தாலும், அவனுக்கு அதை அனுபவிக்கத் தெரியாது.

பிற்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைப்பான். பிற்காலம் வரும் முன்னே  இறந்தும் போவான். அந்த செல்வம் அவனிடம் இருந்து என்ன பலன்.  செல்வம் இல்லாதவன் எப்படி ஒன்றையும் அனுபவிக்காமல் இறப்பானோ , அதே போல  இவனும் இருக்கிற பணத்தை எல்லாம் shares, stocks, gold, mutual fund, real estate  என்று வாங்கிப் போட்டுவிட்டு, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்து போவான்.

நிறைய பணம் இருக்கும், கண்டதையும் சாப்பிடுவது, சர்க்கரை வியாதி வந்து விடும்.  அரசி சோற்றை நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று சொல்லிவிடுவார்  வைத்தியர். பணம் இருந்து என்ன பலன்? ஒரு பிச்சைக்காரனுக்கு  கிடைக்கும் இன்பம் கூட இவனுக்கு கிடைக்காது.

செல்வம் நிறைய இருக்கிறதே என்று மது, புகை பிடிப்பது என்று கெட்ட வழக்கங்களை  மேற்கொள்ளுவான். இதய நோய் , காச நோய் , கான்சர் என்று   அவதிப் படுவான்.

என்ன இருந்து என்ன செய்ய ?

அறிவு இல்லை என்றால், மனைவி மக்களோடு பிரச்சனை வரும். குடும்ப உறவுகள் சிக்கலாகும். அது ஒரு சுகமா ?

தீயவர் சகவாசம் வரும். அது மேலும் பல தீமையில் கொண்டு போய் விடும்.

அறிவில்லாதவன் பல செல்வங்களை சேர்த்தாலும், நம்மை விட அவன் அதிகம் சேர்த்து விட்டானே என்று மற்றவர்களைப் பார்த்து  பொறாமை படுவான். அந்த பொறாமை, அவனை, அவனது செல்வங்களை நிம்மதியாக அனுபவிக்க விடாது.


அறிவு இல்லை என்றால், மற்றவை எல்லாம் இருந்தும் ஒன்றுக்கும் பயன் படாது.

கேக்க நல்லாத்தான் இருக்கு.

சரி, இந்த அறிவை எப்படி பெறுவது?

அதற்கு ஏதாவது வழி சொல்லி இருக்கிறார்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_60.html

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி



இராமயணத்தில் சில சொற் தொடர்கள் மிக அருமையாக அமைந்து மீண்டும் மீண்டும் நினைத்து இன்புறத் தக்கதாக இருக்கும். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" போன்ற சொற் தொடர்கள்.

தன்னை மணந்து கொள்ளும்படி இராமனை எத்தனையோ வழிகளில் வாதம் செய்து அவனை ஒத்துக் கொள்ளும்படி செய்ய முயற்சி செய்தாள் சூர்ப்பனகை. இராமன் மசியவில்லை. சூர்பனகையைப் பார்த்து ஏளனம் செய்கிறான். முதலில் "உன் அண்ணன் வந்து தந்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று சொல்லிவிட்டு பின் அவளைப் பார்த்து ஏளனம் செய்கிறான்.

அந்த சமயத்தில் சீதை பரணசாலையில் இருந்து வெளியே வருகிறாள்.

என்ன வெளியே சத்தம், யாரிடம் இராமன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்க்க வந்திருக்கலாம்.

சீதையின் அழகைக் கண்ட சூற்பனைகை வியக்கிறாள்.

சூர்ப்பனகையின் கூற்றுக்கு முன், கம்பன் முந்திக் கொண்டு அவன் பங்குக்கு சீதையின் வருகையை அறிவிக்கிறான்.

"காமத் தீ உடலில் உள்ள தசை எல்லாம் சுட, பெரிய வாயை உடைய, உணர்வு இல்லாத சூர்ப்பனகை கண்டாள். எதைக் கண்டாள் ? வானத்தில் உள்ள சுடர் வெள்ளம் போல் வந்ததைக் கண்டாள். அரக்கர் குலத்தை அழிக்க வந்த கற்பின் கனலியை கண்டாள் "

என்கிறான் கம்பன்.


பாடல்

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு
     இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து
     இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும்
     விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக்
     கண்ணின் கண்டாள்.


பொருள்

ஊன் சுட = சதைகள் சுட. காமத்தால் உடல் சுடுகிறது.

உணங்கு = திறந்த

பேழ் = பெரிய

வாய் = வாயை உடைய

உணர்வு இலி = உணர்வு இல்லாதவள்

உருவில் = உருவத்தில்

நாறும் = மணம் வீசும். அந்தக் காலத்தில் நாறும் என்றால் மணம் வீசும் என்று பொருள். நாளடைவில் அது மாறிவிட்டது.

வான் = வானத்தில் உள்ள

சுடர்ச் = சுடர் விடும்

சோதி  = சோதி

வெள்ளம் வந்து = வெள்ளம் போல் வந்து

இடை வயங்க = ஒளி வீசும்

நோக்கி = நோக்கி

மீன் = விண்மீன்கள்

சுடர் = சந்திரன்

விண்ணும் மண்ணும் = வானும் மண்ணும்

விரிந்த = விரிந்த

போர் அரக்கர் = போர் செய்யும் அரக்கர்கள்

என்னும் = என்ற

கான் = கானகம்

சுட முளைத்த = எரிக்க பிறந்த

கற்பின் கனலியைக் = கற்பின் கனலியை

கண்ணின் கண்டாள். = கண்ணின் கண்டாள்

அரக்கர் குலத்தை எரிக்க பிறந்த கற்பின் கனலி என்கிறான் கம்பன்.


சூர்பனகையை குறிப்பிடும்போது "உணர்விலி " என்கிறான்.

இந்த வார்த்தையை பற்றி நிறைய நேரம் சிந்தித்தேன்.

உணர்வு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இராமன் மேல் அவ்வளவு காதல் என்ற உணர்வு இருந்ததே?  காம உணர்வு உடல் எல்லாம் சுட்டது என்றானே கம்பன். பின் எப்படி உணர்விலி ?


உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருப்பதைத்தான் கம்பன் உணர்விலி என்கிறான்.

இராமனை மணக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? பார்த்த முதல் நாளே, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" என்று  ஆரம்பிக்கிறாள்.

ஒரு வரைமுறை  இல்லாமல் அவள் உணர்ச்சிகள் தறி கெட்டு ஓடுகின்றன.

எனவே, அவளை உணர்விலி என்கிறான் கம்பன்.

சிந்திப்போம். நம் உணர்வுகளை நாம் சரியாக வெளிப்படுத்துகிறோமா?

மென்மையாக, இனிமையாக, பிறர் மனம் புண்படாமல், நேரம் காலம் அறிந்து வெளிப்படுத்துகிறோமா ?

அல்லது, சூர்ப்பனகை மாதிரி மனதில் தோன்றிய உணர்ச்சிகளை வந்த நேரத்தில் அப்படியே போட்டு  உடைக்கிறோமா?


சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_18.html

Thursday, May 16, 2019

கம்ப இராமாயணம் வாள் எயிறு இலங்க நக்கான்

கம்ப இராமாயணம்  வாள் எயிறு இலங்க நக்கான் 



உன்னுடைய சகோதரர்கள் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று இராமன் சூர்பனகையிடம் சொன்னான் என்று நேற்று பார்த்தோம்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள் "நாம் காதர்வ முறைப் படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பின் என் சகோதரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல, நீ சொன்ன படி கேட்டு நடப்பார்கள் " என்று மேலும் பலவும் கூறுகிறாள்.

அதைக் கேட்டு இராமன் ஒரு ஏளன சிரிப்பு சிரிக்கிறான்

"அரக்கர் அருளையும் பெற்றேன். உன்னால் பெரும் செல்வத்தையும் பெற்றேன். உன்னை அடைந்ததால் வரும் இன்பங்களையும் பெற்றேன். இதனால் நான் பெற்ற இன்பங்கள் ஒன்றா இரண்டா? அயோத்தி விட்டு வந்த பின், நான் செய்த தவத்தால் இவை எல்லாம் எனக்குக்  கிடைத்தன " என்று சொல்லி விட்டு, பற்கள் தெரியும் படி சிரித்தான்

பாடல்


''நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் 
     நலம் பெற்றேன்; நின்னோடு 
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் 
     பெற்றேன்; ஒன்றோ, 
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் 
     தவம் பயந்தது?' என்னா, 
வரி சிலை வடித்த தோளான் வாள் 
     எயிறு இலங்க நக்கான்.

பொருள்


''நிருதர்தம் = அரக்கர்களின்

அருளும் பெற்றேன் = அருளைப் பெற்றேன்

நின் = உன்

நலம் பெற்றேன் = நலம் பெற்றேன்

நின்னோடு = உன்னோடு

ஒருவ = நீங்காத

அருஞ் செல்வத்து = அரிய செல்வத்தை

யாண்டும் = எப்போதும்

உறையவும் பெற்றேன் = என்னுடன் இருக்கவும் பெற்றேன்

ஒன்றோ,  = இது மட்டுமா

திரு நகர் = அயோத்தி

 தீர்ந்த பின்னர் = விட்டு வந்த பின்

செய் தவம் பயந்தது?' என்னா, = நான் செய்த தவங்கள் என்ன

வரி சிலை வடித்த தோளான் = வில்லை பிடித்த வடிவான தோள்களை உடைய இராமன்

வாள் எயிறு இலங்க நக்கான். = ஒளி பொருதிய பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தான்


கிண்டலின் உச்சம்.

சூர்பனகையை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம்.

அவளை பார்த்து கிண்டல் செய்வது சரியா ?

அந்த நேரத்தில் பர்ண சாலையில் இருந்து சீதை வெளியே வருகிறாள்.

என்ன நடந்திருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_16.html

Wednesday, May 15, 2019

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன்

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன் 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள்.

இராமன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். அவன் மறுத்துச் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் சூர்ப்பனகை சரியான பதில் தருகிறாள்.

இறுதியில் இராமன் சொல்கிறான்

"உனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஒருவனோ உலகாளும் இராவணன். இன்னொருவனோ செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த இரண்டு பேரில் ஒருவர் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் வேறு இடம் பார்"

என்கிறான்.

இது இராம பக்தர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இராமன் எப்படி இப்படிச் சொல்லலாம்? ஒருவேளை இராவணன் வந்து , "இந்தா என் தங்கையை ஏற்றுக் கொள்" என்று சொன்னால், இராமன் ஏற்றுக் கொள்வானா? அவன் சொன்ன சொல் தவறாதவனாயிற்றே ? இராவணனோ, குபேரனோ ஏன் சூர்பனகையை இராமனுக்கு கட்டி வைக்க மாட்டார்கள். சக்கரவர்த்தி திருமகன். நல்லவன்.

பாடல்

ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு 
     தலைவன், ஊங்கில் 
ஒருவனோ குபேரன், நின்னோடு 
     உடன்பிறந்தவர்கள்; அன்னார் 
தருவரேல், கொள்வென்; அன்றேல், 
     தமியை வேறு இடத்துச் சார; 
வெருவுவென்;-நங்கை!' என்றான்;மீட்டு 
     அவள் இனைய சொன்னாள்:

பொருள்


ஒருவனோ = உன் அண்ணன்களில் ஒருவனோ

உலகம் மூன்றிற்கு = மூன்று உலகிற்கும்

ஓங்கு ஒரு தலைவன், = சிறந்த ஒரு தலைவன்

ஊங்கில் = உன்னிப்பாக கவனித்தால்

ஒருவனோ  = மற்றொருவனோ

குபேரன் = குபேரன்

நின்னோடு = உன்னோடு

உடன்பிறந்தவர்கள் = உடன் பிறந்தவர்கள்

அன்னார்  = அவர்கள்

தருவரேல் = உன்னை எனக்குத் தந்தால்

கொள்வென் = ஏற்றுக் கொள்வேன்

அன்றேல்,  = இல்லை என்றால்

தமியை = பெண்ணே

வேறு இடத்துச் = வேறு இடத்தில்

சார;  = சேர

வெருவுவென் = நான் அஞ்சுவேன்

நங்கை!' = நல்ல பெண்ணே

என்றான்; = என்றான்

மீட்டு = மீண்டும்

அவள் = சூர்ப்பனகை

இனைய சொன்னாள்:= இதைச் சொன்னாள்


"நீயாக தனியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் என்னால் அது முடியாது. உன் அண்ணன்கள் வந்து உன்னை தாரை வார்த்துக் கொடுத்தால்  ஏற்றுக் கொள்வேன் "

என்று வெளிப்படையாக சொல்கிறான். 

அப்படி சொன்னது சரியா ?

இராமனுக்கு அபப்டி ஒரு எண்ணம் இருந்ததா ?

இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முறைப்படி பெண் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன்  என்கிறான். அவள், அரக்கி என்று தெரிந்த பின்னும். 

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தியாலும் தொடேன் என்ற செவ்வரம்" கொஞ்சம் பழுது படும். இருந்தாலும், தவறு ஒன்றும் இல்லை. இராமனின் தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவிகளை கொண்டவன். இராமன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. 

அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால், இராமன் அப்படி சொல்லி இருக்கலாமா?

கேள்வியை இராம பக்தர்களிடம் விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_15.html


Tuesday, May 14, 2019

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள். இராமனோ, "நீயோ அரக்க கணம். நான் மானிட கணம். நம்முள் கணப் பொருத்தம் இல்லையே "  என்றான்.

அதற்கு சூர்ப்பனகை, சொல்லுகிறாள் ,

"செய்த பக்தியின் பலனை நான் அறியவில்லை. என் பேதைமை. இராவணன் தங்கை என்று நான் சொன்னது பிழை. பாம்பணையில் துயிலும் குற்றம் அற்றவனைப் போல உள்ளவனே, தேவர்களை தொழுது என் பழி கொண்ட அந்தப் பிறவியை நான் நீக்கி விட்டேன்"


பாடல்

'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் 
     பயத்தை ஓராது, 
"இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் 
     பாலது' என்னா, 
'அரா-அணை அமலன் அன்னாய்! 
     அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் 
பராவினின் நீங்கினேன், அப் 
     பழிபடு பிறவி' என்றாள்.

பொருள்



'பராவ  = பரவுதல், சொல்லுதல், இங்கு துதித்தல் என்ற பொருளில் வந்தது

அருஞ் = அரிய

சிரத்தை = சிரத்தையோடு

ஆரும் பத்தியின் = செய்யும் பக்தியின்


பயத்தை ஓராது,  = பலனை நினைக்காமல்

"இராவணன் தங்கை" என்றது = "இராவணனின் தங்கை" என்று நான் கூறியது

ஏழைமைப் பாலது' என்னா,  = என்னுடைய அறியாமையே ஆகும்

'அரா-அணை  = பாம்பு அணையில்

அமலன் = குற்றம் இல்லாதவனே (மலம் = குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்)

துயிலும் =துயிலும்

அன்னாய்!  = போன்றவனே (திருமால் போன்றவனே)

அறிவித்தேன் முன்னம்; = முன்னாடியே சொன்னேனே

தேவர்ப் = தேவர்களை

பராவினின் = வணங்கி, துதித்து

நீங்கினேன் = நீக்கினேன்

அப் பழிபடு பிறவி' என்றாள். = பழிக்கத்தக்க பிறவி என்றாள்

இராமாயணத்தில், எதிர் பார்க்காத இடத்தில், எதிர் பார்க்காத பாத்திரங்கள் சில சமயம்  மிக உயர்ந்த கருத்துக்களை சொல்வதை நாம் காணலாம்.

கூனி சில அறங்களை சொல்லி இருக்கிறாள்.

இங்கே சூர்ப்பனகை சொல்கிறாள்.

நிறைய பேர் பக்தி செய்வார்கள். அதனால் என்ன பலன்,பயன் என்று அவர்களுக்குத் தெரியாது.  ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், என்று இருப்பார்கள். அதனால் என்ன பலன் என்று கேட்டால் ஒன்றும்  தெரியாது.

பலன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யலாமா ? அப்படி யார் செய்வார்கள்?

அப்படி செய்பவர்கள் அரக்கர்கள். செய்த பக்தியின் பலன் அறியாதவர்கள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்,

"சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது"

சாவி கொடுத்த பொம்மை மாதிரி செய்யாமல், செய்யும் காரியத்தின் பலா பலன்களை அறிந்து செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீ அந்தணர் குலம் , நான் அரச குலம் என்றதற்கு பதில் சொல்லி விட்டாள்

நீ அரக்க குலம் நான் மனித குலம் என்பதற்கும் பதில் சொல்லி விட்டாள்.

அடுத்து இராமன் என்ன செய்யப் போகிறான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_14.html