Monday, June 10, 2019

திருக்குறள் - பணத்தை எப்படி செலவழிக்கலாம் ?

திருக்குறள்  - பணத்தை எப்படி செலவழிக்கலாம் ?


நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி எல்லாம் செலவழிக்கலாம்?

நமக்கு வேண்டிய பொருள்கள் வாங்கலாம். பெரிய டிவி, பெரிய கார், ஒரு வீடு, நகை, கொஞ்சம் நிலம், என்று ஏதாவது வாங்கிப் போடலாம்.

பொருள்கள் நிறையவே இருக்கிறது என்றால், அனுபவங்களை வாங்கலாம். அயல்நாடுகளுக்கு ஊர் சுற்றப் போகலாம், வீட்டுக்கு இன்னும் ஒரு வேலை ஆளை வைக்கலாம், புது புது உணவு வகைகளை உண்டு மகிழலாம், இப்படி அனுபவங்களை சேகரிக்கலாம்.

இரண்டும் வேண்டாம் என்றால், பேசாமல் வங்கியிலோ, அல்லது shares, mutual பியூன்ட்ஸ், என்று பிற்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்கலாம்.

அவ்வளவுதானே செய்ய முடியும்.

இவற்றை எல்லாம் விடுத்து, வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார். மிக மிக இன்பம் தரக் கூடிய வழியில் உங்கள் பணத்தை செலவிட ஒரு வழி சொல்கிறார்.

கொஞ்சம் தானம் செய்து பாருங்கள். அதில் வரும் இன்பம் அளப்பரியது என்கிறார் வள்ளுவர்.

தானம் செய்து நமக்கு பழக்கம் இல்லை. எனவே, அதில் உள்ள இன்பம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

"ஆமா, இதெல்லாம் ஒரு அறிவுரையா ? நமக்கே பணம் பத்தவில்லை. இதில் எங்கிருந்து  தானம் செய்வது. தனக்கு மீறியதுதான் தானம் என்று சொல்லுவார்கள். இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும். நடை முறையில் சாத்தியம் இல்லை "

என்று நாம் நினைக்கலாம்.

நம்மிடம் பணம் இல்லை அல்லது போதாது என்று நினைக்கும் நாமே எவ்வளவு  வெட்டி செலவு செய்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு ஒரு புதுத் துணி, அவளின் பிள்ளைகளுக்கு  நோட்டு புத்தகம், வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது பசித்தவர்களுக்கு அன்ன தானம், யாருக்கோ மருத்துவ செலவுக்கு முடிந்த அளவு  நன்கொடை, அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேளை  வயிறார உணவு ....

இப்படி எவ்வளவோ செய்யலாம்.

ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் தானம் செய்தாலே போதும், உலகில் எவ்வளவு  துன்பங்கள் மறைந்து விடும்.

நாம் தானம் செய்வதைப் பார்த்து, நம் பிள்ளைகள் படிக்கும்.

முன்பெல்லாம், வங்கி , stock exchange இதெல்லாம் கிடையாது. பணத்தை பெட்டியில் , குடத்தில் போட்டு புதைத்து வைப்பார்கள். வயதான காலத்தில் நினைவு தவறி விடும். வைத்த இடம் மறந்து போகும்.  சேமித்த பணம் எல்லாம் யாருக்கும் பயன் படாமல் போய் விடும்.

இப்போது தான் நிறைய வசதி வந்து  விட்டதே. நாமினேஷன் வசதி எல்லாம் இருக்கிறதே  என்று  சொல்லலாம்.

ஆனால், பங்கு சந்தையில் போட்ட பணம் நட்டத்தில் முடியலாம். வீட்டில் போட்ட பணம் , சில சமயம் நட்டத்தில் முடியலாம். யார் கண்டது ?

எனவே, இருக்கிற போதே கொஞ்சம் தானம் செய்யுங்கள்.

அதில் மிகப் பெரிய இன்பம் இருக்கிறது.

பாடல்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்


பொருள்

ஈத்துவக்கும் = ஈந்து உவக்கும். கொடுப்பதினால் வரும் சந்தோஷம்.

இன்பம் = இன்பம்

அறியார்கொல்  = அறிய மாட்டார்களா ?

தாம்உடைமை = தங்களுடைய சொத்தை

வைத்து = யாருக்கும் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொண்டு

இழக்கும்  = பின் அவற்றை இழக்கும்

வன்க ணவர் = கொடியவர்கள்

யாருக்கும் தராமல், தானே அனுபவிப்பர்களை கொடியவர்கள் என்கிறார் வள்ளுவர்.

எவ்வளவு கஷ்டப் பட்டு ஏழு வார்த்தையில் வள்ளுவர் சொன்னதை, இரண்டே வார்த்தையில் கிழவி  சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

ஈவது விலக்கேல் 

என்று.

தானம் செய்வதை விட்டு விடாதே என்றாள். விடாமல் செய்து கொண்டே இரு.

அறம் செய்ய விரும்பு 

என்று அதற்கு முன்னால் சொன்னாள். விருப்பம் வந்தால், அதை திருப்பி திருப்பி செய்வோம் அல்லவா.


சரி, தானம் கொடுப்பது என்றால் எவ்வளவு கொடுப்பது? பத்து பைசா பிச்சை காரனுக்கு போட்டால்  போதுமா ? மிஞ்சிப் போன பழைய சாதத்தை வேலைக் காரிக்கு கொடுத்தால் போதுமா ?

எவ்வளவு தானம் செய்ய வேண்டும் என்றும் சொல்லி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

என்னதான் சொல்லவில்லை.

எவ்வளவு தானம் செய்ய வேண்டும் தெரியுமா ?......

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_10.html

Sunday, June 9, 2019

கம்ப இராமாயணம் - நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்

கம்ப இராமாயணம் - நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் 


சூர்பனகையை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு, சீதையுடன் பர்ணசாலைக்குள் போய் விட்டான் இராமன்.

வெளியே நின்ற சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள். கம்பன் பல பாடல்களால் சூர்ப்பனகையின் காமத்தை விவரிக்கிறான்.

சூர்ப்பனகைக்கு இராமன் போனது கூடத் தெரியவில்லை. நேரில் நிற்பது போலவே தெரிகிறது.

அவனிடம் பேசுகிறாள்...அவன் எதிரில் நிற்பதாக நினைத்துக் கொண்டு...


"கண் மையால் மலை செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருப்பவனே, இராமா, என் மனதில் வஞ்சனையும், மாயையும் இருக்கிறது. அவற்றை நீ நீக்கி அருள் புரிவாய்"

என்று வேணுகிறாள். நஞ்சை தெரியாமல் குடித்தவர்கள் எப்படி தவிப்பார்களோ அப்படித் தவிக்கிறாள்.

மிக மிக ஆச்சரியமான பாடல். இது சூர்ப்பனகை சொல்லியது என்று சொல்லாமல், ஏதோ ஒரு பெரிய பக்தர் சொல்லியது என்று நினைத்துப் பார்த்தால், அப்படியே பக்தி இரசம் பொங்கும்.

என் மனதில் உள்ள அழுகை எல்லாம் நீக்கி எனக்கு அருள் புரிவாய், அஞ்சன வன்ணனனே  என்று வேண்டுகிறாள்.

பாடல்

'வஞ்சனைக் கொடு மாயை‘ 
     வளர்க்கும் என் 
நெஞ்சு புக்கு, எனது ஆவத்தை 
     நீக்கு' எனும்; 
'அஞ்சனக் கிரியே! 
     அருளாய்' எனும்; 
நஞ்சு நக்கினர் போல 
     நடுங் குவாள்.

பொருள்

'வஞ்சனைக்  = வஞ்சனை

கொடு மாயை = கொடுமையான மாயை

வளர்க்கும் = இவற்றை வளர்க்கும்

என் = என்னுடைய

நெஞ்சு புக்கு = எனது நெஞ்சில் புகுந்து

எனது ஆவத்தை  = எனக்கு வந்த ஆபத்தை

நீக்கு = நீக்குவாய்

எனும்;  = என்று வேண்டுவாள்

'அஞ்சனக் கிரியே! = அஞ்சனம் என்றால் கண்ணுக்கு இடும் மை. அஞ்சன கிரியே என்றால், மையால் ஆன மலை போன்றவனே என்று அர்த்தம். இராமன் அவ்வளவு கருப்பு.

அருளாய்' எனும்;  = எனக்கு அருள் செய்வாய் என்று வேண்டுவாள்

நஞ்சு நக்கினர் போல = நஞ்சை உண்டவர் போல

நடுங் குவாள். = நடுங்குவாள்


விஷத்தை தெரியாமல் உண்டுவிட்டால் என்ன ஆகும். சாவு நிச்சயம். வெளியே  துப்பி விட வேண்டும். துப்பவும் முடியவில்லை. சரி, உள்ளேயே வைத்து  ஜீரணம் பண்ணி விடலாம் என்றால் அதுவும் முடியாது.

இராமன் மேல் கொண்ட காதலை விடவும் முடியவில்லை. உள்ளே வைத்துக் கொள்ளவும்  முடியவில்லை.

தவிக்கிறாள்.

பலருக்கு, காமம் என்றால் ஏதோ அசிங்கம், அது ஒரு தேவை இல்லாத ஒன்று, உடல் சார்ந்த   ஒரு தேடல், பசி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சூர்ப்பனகை மூலம் கம்பன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுகிறான்.

காமத்தின் உச்சியில் பக்தி பிறக்கிறது.

சூர்ப்பனகை தன் தவறுகளை உணர்கிறாள். தன் மனதில் உள்ள குற்றங்களை  வாய் விட்டு ஒப்புக் கொள்கிறாள்.

இராமனிடம் சரணாகதி அடைகிறாள்.

என் மனதில் உள்ள குற்றங்களை நீக்கி அருள் புரிவாய் என்று வேண்டுகிறாள்.

"அஞ்சன கிரியே அருள் புரிவாய்"

என்று அரற்றுகிறாள்.

காமம் ஒரு படிக்கட்டு. அதில் ஏறி மேலே சென்று விட வேண்டும். படியிலேயே நின்று கொண்டு இருக்கக் கூடாது.

சூர்ப்பனகை செய்த தவறு, அங்கேயே நின்றது.

அடுத்து வரும் சில பாடல்களில் சூர்ப்பனகை காதலாகி கசிந்து, நெகிழ்ந்து உருகுவதை  கம்பன் காட்டுகிறான். படிக்கும் நமக்கே அவள் மேல் ஒரு பரிதாப  எண்ணம் எழும்.

அதையும் படிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_9.html

Friday, June 7, 2019

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள்

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள் 


தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திய சூர்பனகையை பார்த்து அது முடியாது என்று சொல்லி விட்டு இராமன், சீதையுடன் குடிலுக்குள் போய் விட்டான்.

தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை தவிக்கிறாள்.

இராமன் கொஞ்சம் ஆசை வார்த்தைகள் பேசிவிட்டு, பின் அவளை தவிக்க விட்டு போய் விட்டான்.

காமத்தில் தவிக்கிறாள் சூர்ப்பனகை.

தாடகை மேல் இராமன் மேல் விட்ட அம்பு போல, மன்மதன் விட்ட அம்பால் நலிந்து மெலிகிறாள்.

பாடல்


தாடகைக் கொடி யாள் 
     தட மார்பிடை, 
ஆடவர்க்கு அரசன் அயில் 
     அம்பு போல், 
பாடவத் தொழில் மன்மதன் 
     பாய் கணை 
ஓட, உட்கி, உயிர் 
     உளைந்தாள் அரோ!

பொருள்

தாடகைக்  = தாடகை

கொடி யாள்  = என்ற கொடியவன்

தட மார்பிடை,  - பரந்த வலிமையான

ஆடவர்க்கு = ஆடவர்களுக்கு

அரசன் = அரசனான

அயில்  = கூரிய

அம்பு போல்,  = அம்பைப் போல

பாடவத் = வல்லமை

தொழில் = தொழில் செய்யும்

மன்மதன்  = மன்மதன்

பாய் = பாய்ந்த

கணை  = கணையைப் போல

ஓட = ஓடும்படி

 உட்கி = அஞ்சி

 உயிர்  உளைந்தாள் அரோ! = உயிர் வருந்தினாள்


இராமன் , தாடகை மேல் அம்பு எய்தான்.

இங்கே, மன்மதன் அம்பு எய்கிறான். 

இரண்டு ஆடவர்கள், பெண்கள் மேல் அம்பு எய்ததை கம்பன் காட்டுகிறான். 

காமம் படுத்திய பாடு. காப்பியத்தை எங்கெல்லாம் கொண்டு சென்றது என்று நாம் பார்ப்போம். 

Thursday, May 30, 2019

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன்

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன் 


உறவினர்களை பெரும்பாலும் நாம் தேர்ந்து எடுப்பதில்லை. அது அமைந்து விடுகிறது. திருமணம், அது சம்பந்தப்பட்ட உறவுகள் வேண்டுமானால் நாம் தேர்ந்து எடுக்கிறோம் என்று சொல்லலாம். அது தவிர ஏனைய உறவுகள், தானே அமைவதுதான்.

நண்பர்களும் அப்படித்தான். நாம் தேடிப் போய் தேர்ந்து எடுப்பது இல்லை. நம் வாழ்வில் எதிர்படுபவர்களில் , நமக்கு பிடித்தவர்களை நாம் நண்பர்களாகக் கொள்கிறோம். அலுவலகம், வேலை செய்யும் இடம், குடி இருக்கும் இடம் என்று பொதுவாக அனைத்து இடங்களிலும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் நம்மால் முடிவு செய்யப் படுபவை அல்ல. அவை அப்படி நிகழ்ந்து விடுகின்றன.

அப்படி நிகழ்ந்தவைகள், அந்த உறவுகள் நமக்கு நன்மை பயக்கும் என்று எப்படிச்  சொல்வது?

நம் நண்பர்களில், நம் உறவினர்களில் நம்மை விட மிக மிக அதிகம் படித்தவர்கள், அறிந்தவர்கள் எத்தனை பேர்? அப்படி ரொம்ப அறிந்தவர்கள் இருந்தாலும், நாம் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

நமக்குத் தேவை, அரட்டை அடிக்க ஆள், whatsapp போன்றவற்றில் வெட்டிப் பேச்சு பேச, துணுக்குகள் அனுப்ப, கதை பேச, அரசியல் நையாண்டிகள் வாசிக்க , பகிர ஆட்கள்.

சரி, எப்படியோ உறவும், நட்பும் அமைந்து விடுகிறது . அதில் சில நமக்கு நன்மை பயக்காவிட்டாலும் தீமை  பயப்பவை என்று அறிந்தும் அவற்றை விட முடிகிறதா?

இருந்து விட்டுப் போகட்டும். அந்த whatsapp குரூப் இல் இருந்து விலகினால் தப்பா நினைப்பாங்க,  அந்த association மீட்டிங்குக்கு போகாட்டி நல்லா இருக்காது,  என்று தேவை இல்லாத, தீமை பயக்கும் உறவுகளை தூக்கிச் சுமந்து திரிகிறோம்.

அந்த உறவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கணவன், மனைவி, உற்றார், உறவினர், ஆசிரியர், ஆச்சாரியார், என்று எந்த உறவும், தீமை பயப்பதாக இருந்தால்,  அது தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

விடுவது கடினம்.

"கல்யாணம் ஆயிருச்சு, இனிமே என்ன பண்றது...ஒண்ணா வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் " என்று உழலும் எத்தனை உறவுகள் நமக்குத் தெரியும்.

அபிராமி பட்டர் துணிந்து முடிவு எடுக்கிறார்.

"தீய வழியில் செல்லும், நரகத்துக்கு செல்லும் மனித உறவுகளை வெறுத்து, அவற்றில் இருந்து பிரிந்து  வந்து விட்டேன்"

என்கிறார்.

அது மட்டும் அல்ல, "தீயவர் தொடர்பை விட்டது மட்டும் அல்ல, நல்லவர்கள் நட்பை, உறவை தேடி கண்டு பிடித்து ஏற்றுக் கொண்டேன்" என்றும் சொல்கிறார்.

அற்புதமான பாடல்.

சறுக்குப் பலகையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல, கை பிடித்து அழைத்துச் செல்லும் பாடல்

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


பொருள்

அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன்.  எதை அறிந்து கொண்டேன் என்கிறார் ?

எவரும் அறியா மறையை = யாரும் அறியாத ஒரு மறைவான, இரகசியமான பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு.

செறிந்தேன் = நெருங்கி வந்தேன். நெருங்கி எங்கே வந்தார்?

உனது திருவடிக்கே = உன்னுடைய திருவடிக்கே. உன்னுடைய என்றால் யாருடைய என்ற கேள்வி வரும் அல்லவா?

திருவே! = திரு என்றால் சிறப்பு, செல்வம், உயர்வு, மதிப்பு என்று பல பொருள் உண்டு. சிறந்தவளே என்று பொருள் கொள்ளலாம்

வெருவிப் = வெறுத்துப் போய்

பிறிந்தேன் = பிரிந்தேன். பிரிந்து விட்டேன். எதை விட்டு பிரிந்தார்?

நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்

பெருமை எண்ணாத = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = வினைப் பயனால், அதை அறிய மாட்டாத என்னுடைய மனதால்

மறிந்தே = மறித்தல் என்றால் தடுத்தல். மறியல் என்றால் strike. தடுமாறி

விழும் = விழும்

நரகுக்குறவாய = நரகத்துக்கு உறவான

மனிதரையே! = மனிதர்களையே

ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்றால் ?


முதலாவது, "அறிந்தேன்" . அறிய வேண்டும். எது நல்லது, எது கெட்டது , நமக்கு எது நன்மை  பயக்கிறது, எது நமக்கு தீமை பயக்கிறது என்று அறிய வேண்டும்.

இரண்டாவது, "அறிந்து கொண்டு"...அறிந்தால் மட்டும் போதாது. நம்மிடம் உள்ள பெரிய  குறையே அது தான், அறிந்து கொண்ட பின் அதன் படி நடப்பதே இல்லை. சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்காது என்று அறிவோம். இருந்தாலும்  இனிப்பு பண்டங்கள், ஐஸ் கிரீம் என்று ஒன்று விடாமல் சாப்பிடுவோம். நொறுக்குத் தீனி கெடுதல் என்று அறிவோம். உடற் பயிற்சி நல்லது என்று அறிவோம்.  என்ன பலன். அறிந்து கொண்டு, ஒன்றும் செய்வது கிடையாது.

கற்ற பின் நிற்க அதற்கு தக 

என்பார் வள்ளுவப் பேராசான்.

கற்றால் மட்டும் போதாது. கற்பது மிக எளிது. அதன் படி நிற்பது மிகக் கடினம்.

மூன்றாவது "கரும நெஞ்சால்". நாம் நம் நண்பர்களை, நாம் சார்ந்த உறவினர்களை  எவ்வாறு தேர்ந்து எடுக்கிறோம்? இவர் நமக்கு பிடித்தமானவர் என்று எவ்வாறு  முடிவு செய்கிறோம்? நம் மனம் சொல்கிறது. நம் மனதுக்கு எப்படி தெரியும்?  அனுபவ வாசனை. நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்வது இல்லை. ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு, இயந்திர கதியில்  செய்கிறோம். அதை பட்டர் , வினைப் பயன் என்கிறார். நம் அறிவு, உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு எல்லாம் நாம் விரும்பி தேர்ந்து எடுப்பது இல்லை. அவை நம்முள் ஏற்கனவே இருக்கின்றன.

நான்காவது, "நின் அன்பர் பெருமை எண்ணாத". நல்லவர்களின் சிறப்பை அறியாமல். உலகில் எத்தனை நல்லவர்களை, உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும்?

ஐந்தாவது, "வெருவிப் பிரிந்தேன்". தீயவர்களின் உறவை வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். ஐயோ, இவர்களின் உறவை விட்டு விட்டுப் போகிறோமே என்று வருத்தம் அல்ல.  "இவ்வளவு நாளா இவர்களோடு இருந்து  எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டேன் " என்று வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். 


சிந்தியுங்கள்.

தேவை இல்லாத உறவுகளை உதறுங்கள்.

நன்மை தரும் உறவுகளை தேடிக் கண்டு பிடியுங்கள்.

இது யாரும் அறியாத இரகசியம் ("எவரும் அறியா மறை"). பட்டர்  நமக்குச் சொல்லித் தருகிறார்.

வினைப்பயன் இருந்தால் அறிந்து கொண்டு முன்னேறுவோம்.

இல்லை என்றால் , இருக்கவே இருக்கிறது "...இது எல்லாம் சரி தான்...நடை முறைக்கு  ஒத்து வருமா " என்று பெரிய ஞானி போல பேசி விட்டு, whatsapp , youtube , facebook, டிவி ல் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_30.html 

Wednesday, May 29, 2019

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே



தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை, இராமனை வேண்டுகிறாள். அவளோடு சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு, முடிவில் மணக்க முடியாது என்று இராமன் கூறி விடுகிறான். அப்போது அங்கே சீதை வருகிறாள். சீதையின் அழகை உள்ளுக்குள் வியந்தாலும், வெளிக்கு அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள்.

அது மட்டும் அல்ல, தன்னைத்தானே சூர்ப்பனகை புகழ்ந்து கொள்கிறாள்.

"மூவரும் தேவரும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள். நீ என்னடா என்றால் என்னை இகழ்வது மட்டும் அல்ல, இந்த பொறுமை இல்லாத கள்வியான சீதையை விரும்புகிறாய்"

என்று இராமனிடம் கூறுகிறாள்.


பாடல்

பொற்புடை அரக்கி, 'பூவில்,
     புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும்,
     அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை
     நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக்
     கள்வியை நச்சி?' என்றாள்.


பொருள்

பொற்புடை அரக்கி = அழகிய வடிவம் கொண்ட அரக்கி (சூர்ப்பனகை)

'பூவில் = தாமரை மலரில் (வாழும் பிரம்மாவும்)

புனலினில் = நீரில், அதாவது பாற்கடலில் வாழும் திருமாலும்

பொருப்பில் = மலையில், அதாவது கைலை மலையில் வாழும் சிவனும்

 வாழும் = வாழும் மும்மூர்த்திகளும்

அற்புடை = அன்பு உடைய

உள்ளத்தாரும் = உள்ளம் உடையவர்களும்

அனங்கனும்,  = மன்மதனும்

அமரர் மற்றும் = மற்றும் உள்ள தேவர்கள் யாவரும்

எற் பெறத் = என்னைப் பெற

தவம் செய்கின்றார்; = தவம் செய்கிறார்கள்

என்னை  நீ இகழ்வது என்னே = என்னை நீ ஏன் பழிக்கிறாய்

நல் = நல்ல

பொறை  = பொறுமை

நெஞ்சில் இல்லாக்  = மனதில் இல்லாத

கள்வியை  = கள்ளத்தனம் கொண்ட இந்த சீதையை

நச்சி?' = விரும்பி

என்றாள். = என்றாள்

இங்கே முக்கியமாக இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, சீதை மிக மோசமானவள் என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது?  சீதை பொறுமை இல்லாதவள் என்கிறாள் சூர்ப்பனகை. ஆகப் பெரிய  தீய குணம் பொறுமை இல்லாமை என்பது கம்பனின் வாக்கு.

பொறுமை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றால் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும்  நில மகளை போல தம்மை இகழ்பவர்களை பொறுத்துக் கொள்வது ஆகச் சிறந்தது என்கிறார்.

சாப்பிடாமல் விரதம் இருந்து செய்யும் தவத்தை விட, பிறர் சொன்ன கடும் சொற்களை பொறுத்துக் கொள்வது  பெரியது என்கிறார்.

யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருவர் ஏதாவது தவறாக சொல்லி விட்டால், நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. தவறு என்ன தவறு, உண்மையையே சொன்னாலும்,  அது நமக்கு பிடிக்கவில்லை என்றால், கோபம் வருகிறது அல்லவா?

அது மனைவியாக இருக்கட்டும், கணவனாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், வேலை பார்க்கும் இடத்தில் யாரவது  நமக்கு பிடிக்காத ஒன்றைச் சொன்னால் பொறுமையாக கேட்க முடியுமா நம்மால்?

கேட்க வேண்டும். உண்மையோ பொய்யோ. சரியோ தவறோ. பொறுமையை கை விடாமல்  கேட்க வேண்டும். அவர்கள் சொன்னது தவறாகவே இருந்தாலும், அவர்களை பொறுக்கும் (சகிக்கும்) குணம் வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த  குணம் என்கிறார் வள்ளுவர்.

அதையே கம்பனும் தன் காவியத்தில் கொண்டு வந்து சேர்கிறான்.

சூர்ப்பனகை வாயில் இருந்து பெரிய அறத்தை சொல்கிறான் கம்பன்.

அடுத்தது, தற்புகழ்ச்சி.

தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாள் சூர்ப்பனகை.

மூவரும் தேவரும், மன்மதனும் என்னை வேண்டி தவம் கிடக்கிறார்கள் என்கிறாள்.

அளவுக்கு மீறி தன்னை நினைத்துக் கொள்வதும் ஒரு அரக்க குணமே.

பணிவு வேண்டும்.

அடக்கம் வேண்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அடக்கம் என்பது ஒரு சொத்து மாதிரி என்கிறார். நிலம், வீடு, பணம், நகை, வண்டி, வாகனம் போல அடக்கமும் ஒரு சொத்து என்கிறார்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து

என்பார் வள்ளுவப் பேராசான்.

சிந்தித்துப் பாருங்கள்.

உங்களிடம் எவ்வளவு பொறுமை இருக்கிறது. எப்போது பொறுமை தவறுகிறது. ஏன் தவறுகிறது. எப்படி பொறுமையாக இருப்பது என்றும்...

உங்களை நீங்கள் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருந்தால் , அது பற்றியும் சிந்தியுங்கள்.

இராமாயணம் படிப்பது கதை படிப்பது போல அல்ல.

அதில் பொதிந்து கிடக்கும் நல்ல விஷயங்களை நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

வாழ்வு சிறக்க அதுவும் ஒரு வழி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_29.html



Saturday, May 25, 2019

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல் 


இராமனோடு சூர்ப்பணகை பேசிக் கொண்டிருக்கும் போது, சீதை அங்கு வந்தாள். முதலில் அவளைப் பார்த்து வியந்த சூர்ப்பணகை , பின் அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள். சீதையை அரக்கி என்று இராமனிடம் கூறுகிறாள். சீதையை நம்பாதே என்றும் சொல்லி வைக்கிறாள். அவள் சொல்வதைக் கேட்டு சீதை அஞ்சி, இராமன் பின் ஒடுங்கி நின்று கொள்கிறாள்.

விளையாடியது போதும் என்று நினைத்த இராமன், சூர்பனகையை விரட்டுகிறான்.

"கோரை பற்களை கொண்ட அரக்கர்களோடு விளையாடினாலும் தீமையே வரும் என்று உணர்ந்து, மனம் வருந்தும் படியான செய்லகளை செய்யாதே. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு சென்று விடு. என் இளையவன் இலக்குவன் உன்னைப் பார்த்தால் கோபப் படுவான் "

என்று கூறி அவளை விரட்ட முனைகிறான்.

பாடல்

'வளை எயிற்றவர்களோடு வரும் 
     விளையாட்டு என்றாலும், 
விளைவன தீமையே ஆம்' என்பதை 
     உணர்ந்து, வீரன், 
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் 
     நிலை உணருமாகில், 
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி 
     விரைவில்' என்றான்.


பொருள்


'வளை  = வளைந்த

எயிற்றவர்களோடு = பற்களை கொண்டவர்களோடு (அரக்கர்கள்)

வரும் விளையாட்டு என்றாலும் = விளையாட்டு என்றாலும்

விளைவன தீமையே ஆம்'  = அதில் தீமையே விளையும்

என்பதை  = என்பதை

உணர்ந்து, = உணர்ந்த

வீரன் = வீரனாகிய இராமன்

'உளைவன இயற்றல்;  = மனதுக்கு துன்பம் தருபவனவற்றை செய்யாதே

ஒல்லை  = சீக்கிரம்

உன்  நிலை உணருமாகில்,  = உன் நிலையை அறிந்தால் (நீ அரக்கி என்று அறிந்தால்)

இளையவன் முனியும்; = இளையவனான இலக்குவன் கோபம் கொள்வான்

நங்கை!  = நங்கை,

ஏகுதி  விரைவில்' என்றான். = போய்விடு சீக்கிரம் என்று கூறினான்

இராமன் வாக்கு மூலம் தருகிறான். "நான் இதுவரை அவளோடு விளையாடினேன் " என்று.

ஒரு பெண்ணின் காதலோடு, காமத்தோடு விளையாடுவது சரியா ?


அவள் செய்தது தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அவளோடு இப்படி விளையாட்டாக பேசியது மட்டும் சரியா ?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், அர்க்கியோடு (தீயவளோடு) இராமன் விளையாடினான். அது  எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய்  விட்டது.

தீயவர்களின் சகவாசமே கூடாது.

விளையாட்டுக்குக் கூட அவர்களோடு உறவாடக் கூடாது

நாம் ஏதோ   கிண்டல், நையாண்டி என்று நினைத்து பேசி இருப்போம். ஆனால், அவர்கள் மனதில் அதை வைத்து இருந்து, தக்க நேரத்தில் நம்மை பழி தீர்த்து விடுவார்கள்.


கூனி அப்படி செய்தாள் .

சூர்பனகையும் அப்படிச் செய்வாள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

விபரீதம் நிகழவே செய்தது.

"தீயவர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி


இராமன் போ என்று சொல்லிவிட்டான்.

போனாளா? அல்லது வேறு எதுவும் செய்தாளா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_25.html

Thursday, May 23, 2019

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர 


இராமனுக்கும் சூர்பனகைக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , சீதை பர்ணசாலையில் இருந்து வெளியே வந்தாள் என்று பார்த்தோம்.

சீதையின் அழகைக் கண்ட சூர்ப்பனகை திகைத்துப் போய் விட்டாள்.

சீதையின் அழகில் சூர்பனகை வியந்ததை கம்பன் சொல்லிக் கொண்டே போகிறான். அவற்றை எல்லாம் விட்டு விடுவோம்.

கடைசியில், சூர்ப்பனகை சொல்கிறாள்

"இராமா, இவள் (சீதை) மாயா ஜாலங்களில் வல்லவள். வஞ்சனையான அரக்கி. நல்ல மனம் கொண்டவள் இல்லை. எதையும் ஆராய்ந்து செய்பவனே, இந்தப் பெண்ணின் உண்மையான உருவம் இது அல்ல. இவள் மாமிசம் சாப்பிடும் அரக்கி. இவளை விட்டு நீ விலகு"

சூர்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.


பாடல்

வரும் இவள், மாயம் வல்லள்;
    வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தரெிவு இலம்; தேறும் தன்மை,
    சீரியோய்! செயல் இது அன்றால்,
உரு இது மெய்யது அன்றால்;
    ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல்
    விலக்குதி, வீர! என்றாள்.



பொருள் 


வரும் இவள் = இங்கே வந்து நிற்கும் இவள்

மாயம் வல்லள் = மாயா ஜாலங்களில் வல்லவள்

வஞ்சனை அரக்கி = வஞ்ச மனம் கொண்ட அரக்கி

நெஞ்சம்  தெரிவு இலம் = இவள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது

தேறும் தன்மை  சீரியோய்!    -  காரியங்களை தேர்ந்து எடுத்து செய்பவனே

செயல் இது அன்றால் = நீ செய்ய வேண்டிய செயல் என்ன என்றால்
,
உரு இது மெய்யது அன்றால் = இவளின் உருவம் மெய்யானது அல்ல

ஊன் நுகர் வாழ்க்கையாளை = மாமிசம் சாப்பிடும் இவளை

வெருவினென் = இவளை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது

எய்திடாமல் = இவளை அடையாமல்

விலக்குதி, வீர! என்றாள். = அவளை விலக்கிவிடு என்றாள்

இது எப்படி இருக்கு ?

சூர்ப்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.

அது போகட்டும். சூர்ப்பனகை சீதையை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

நமக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன?

தீயவர்கள் (அரக்கர்கள்), தங்களது தீய குணத்தை நம் மேல் ஏத்தி மற்றவர்களிடம் சொல்லுவார்கள்.  சீதையை சூர்ப்பனகை சொன்ன மாதிரி...அவள்  உருவம் மெய்யானது அல்ல (சூர்ப்பனகை மாறு வேடத்தில் வந்து இருக்கிறாள் ), சீதை வஞ்ச மனம் கொண்ட அரக்கி, சீதை புலால் உண்பவள் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறாள்.  தீயவர்களிடம்  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களது தீய குணங்களை நம்மிடம் உள்ள தீய குணங்கள் போல  ஊராரிடம் சொல்லி கதை கட்டி விடுவார்கள்.

இரண்டாவது, சீதைக்கும் சூர்பனகைக்கும் ஒரு பகையும் கிடையாது. இருவரும் முன்ன பின்ன சந்தித்தது கூட இல்லை.  பார்த்த உடனேயே, சீதையைப் பற்றி  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைக்கிறாள். எனவே தான், தீயவர்கள் கண்ணுக்கு படாமல் நீங்குவதே நல்ல நெறி  என்று சொல்லி  வைத்தார்கள். அவர்கள் பார்வையிலேயே படக் கூடாது. "பட்டால் என்ன  ஆகும். இப்படி தீயவர்களை கண்டு பயந்து ஒளிந்து கொண்டே இருக்க முடியுமா ?" என்று விதண்டாவாதம் பண்ணினால் , இராமனுக்கும் சீதைக்கும் என்ன ஆயிற்று   என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கே அந்த கதி என்றால்.....


மூன்றாவது, தீயவர்கள், தங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இங்கே, சூர்ப்பனகை, கணவன் மனைவியை பிரிக்க  வழி தேடுகிறாள். அவளுக்கு இராமன் வேண்டும். எனவே, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க வழி தேடுகிறாள்.

நான்காவது, தீயவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. இராமனுக்கு சீதையைப் பற்றி நன்கு தெரியும். எனவே, அவன் சூர்ப்பனகை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.  இல்லை என்றால் யோசித்துப் பாருங்கள். சந்தேகத்தின் விதை விழுந்து விடும் அல்லவா?

அம்மாவைப் பற்றி மகனிடம், மகனைப் பற்றி அம்மாவிடம்,  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி  குடும்பத்தை பிரித்து, அதை சிதற அடித்த பெண்கள் பற்றி நாம்  நிறைய கேட்டு இருக்கிறோம் அல்லவா?

நண்பர்களை பிரித்து விடுவது, அம்மா மகன், அப்பா மகன் உறவை துண்டித்து விடுவது  என்று எவ்வளவோ நடக்கிறது.

இறுதியாக, தீயவர்கள், எப்போதும் நம்மை தனிமைப் படுத்தி, அவர்களோடு சேர்த்துக் கொள்ளவார்கள்.

யார் நம்மை தனிமை படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் தீயவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கதை படிக்கும் போது, கொஞ்சம் கருத்தையும் படித்துக் கொள்வோம்.