Monday, June 17, 2019

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த 


இயற்கையை போற்றிய பின், ஊர் சிறப்பு சொல்லிய பின், இளங்கோ அடுத்து என்ன சொல்லப் போகிறார்.

நாம் நினைப்போம், அரசனைப் பற்றி, அவன் ஆட்சி பற்றி, அங்குள்ள மக்கள் நலம் பற்றி சொல்லப் போகிறார் என்று.

இளங்கோ அடிகள் அதையெல்லாம் விட்டு விடுகிறார்.

கதாநாயகனை கூட அறிமுகப் படுத்தவில்லை. நேரே கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

என்னைக் கேட்டால், இது ஒரு பெரும் புரட்சி. பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

கதாநாயகியை வர்ணிப்பது என்றால் ரொம்ப மெனக்கெட வேண்டும். மிகச் சிறப்பான உவமைகளை தேட வேண்டும்.

இளங்கோ அடிகள் கண்ணகியை அறிமுகப் படுத்தும் விதமும் மிகப் புரட்சிகரமானது.

நமக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சினிமாவில், சிலை வடிவில் கண்ணகியை பெரிய ஒரு பெண்மணியாக நாம் பார்த்து இருக்கிறோம். கிட்டத்தட்ட ஆறடி உயரம், தலை விரி கோலம், கையில் ஒரு சிலம்பு, நிமிர்ந்த ஒரு கோப பார்வை..இதுதான் நமக்கு கண்ணகி என்றால் நினைவுக்கு வரும்.

ஏதோ கண்ணகி பிறக்கும் போதே அப்படியே பிறந்த மாதிரி.

நீங்கள் சிலப்பதிகாரத்தை இரசிக்க வேண்டும் என்றால், கண்ணகியின் அந்த பிம்பத்தை அழித்து விடுங்கள்.

இளங்கோ காட்டும் கண்ணகி மிக இனிமையானவள். மென்மையானவள். சாந்தமானவள். பயந்த சுபாவம் உடையவள். கடைசியில் கோபம் கொண்டாள் . அதற்காக அவள் எந்நேரமும் அப்படியே இருந்தாள் என்று நினைப்பது தவறு.

இளங்கோ எப்படி அறிமுகப் படுத்துகிறார் தெரியுமா ?

"அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். ரொம்ப அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி "

என்று அவளை அறிமுகப் படுத்துகிறார்.

பாடல்


மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்; 
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

பொருள்

மாக வான் = கரிய வானம்

நிகர் = போல

வண் கை = சக்தி வாய்ந்த கை

மாநாய்கன் = மாநாய்கன் என்ற

குலக் = குலத்தில்  பிறந்த

கொம்பர் =  கொம்பு

ஈகை = தானம் செய்வதில்

வான் கொடி அன்னாள் = வானத்தில் தோன்றும் வானவில் போன்றவள்

ஈர்-ஆறு ஆண்டு அகவையாள் = இரண்டு ஆறு, அதாவது பன்னிரண்டு வயதுடையவள்

அவளும்-தான் = அவளும் தான்

போதில் = தாமரை மலரில்

ஆர் = இருக்கும்

திருவினாள் = இலக்குமி போன்றவள்

புகழ் உடை வடிவு என்றும் = புகழ் உடைய வடிவத்தை உடையவள்

தீது இலா = தீமை இல்லாத

வடமீனின்  = அருந்ததி நட்சத்திரம் (மீன் = விண்மீன்)

திறம் இவள் திறம் என்றும் = போன்ற கற்பு இவளுடைய கற்பு என்றும்

மாதரார் = பெண்கள்

தொழுது ஏத்த = தொழுது போற்றும் படி

வயங்கிய =விளங்கிய

பெரும் குணத்துக்  = சிறந்த குணங்களை கொண்டவள்

காதலாள் = அன்பு நிறைந்தவள்

பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ. = பெயர் கண்ணகி என்று சொல்லுவார்கள்



மாக வான் = கரிய வானம்

பிரபந்தத்தில் ஒரு பாசுரம்.

"ஓ  மேகங்களே, உங்களுக்கு எப்படி அந்த நாராயணின் நிறம் வந்தது? சரி தான்,  கடலில் சென்று நீரை கொண்டு வந்து மழையாக பெய்து உயிர்களை எல்லாம்  காப்பாற்றுகிறீர்கள் அல்லவா, அந்த நாராயணனைப் போல, அதனால் தான்  உங்களுக்கும் அவன் நிறம் வந்திருக்கிறது போலும் "

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? (2509, நான்காம் திருமொழி)


"குலக் கொம்பர்; "

குலத்தில் பிறந்த கொம்பு. கொடி பற்றி வளர உதவும் கொம்பு போல, குலம் தழைக்க வந்த கொம்பு.

கொம்பு இல்லாத கொடி போல தவித்தேன் என்பார் மணிவாசகர்.

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.


(நீத்தல் விண்ணப்பம்)

கண்ணகிக்கு 12 வயது.

பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்.

அழகானவள்.

கற்புடையவள்.

இதெல்லாம் சரி.  வேறு என்ன சிறப்பு என்றால், வான் மழை போல அவளே தானம்  செய்வாளாம்.

இன்றும் கூட, சம்பாதிக்கும் பெண்கள் கூட, யாருக்கும் ஏதாவது தானம் , உதவி செய்வதானால் கூட , கணவனை, பெற்றோரை கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள், பெரும்பாலும்.

கண்ணகி, வேண்டியவர்களுக்கு, அவளே தானம் செய்தாள் என்ற அவள் இளகிய மனதை  காட்டுகிறார் இளங்கோ.

உலகிலேயே கடினமான விஷயம் ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாராட்டுவதுதான்.

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இதெல்லாம் நீங்களே இட்டு கட்டிச் சொல்வது. நான் எல்லாம் எத்தனை பெண்களை பாராட்டுகிறேன் தெரியுமா " என்று சில பெண்மணிகள் கோபிக்கலாம்.

சரி. பாராட்டுகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

வணங்குவீர்களா? ஒரு பெண்ணின் திறமையை, அவளின் அழகை, அவளின் நல்ல குணங்களை கண்டு  தலை மேல் கை வைத்து வணங்குவீர்களா? முடியுமா ?

கண்ணகியின் சிறந்த குண நலன்களை கண்டு பெண்கள் வணங்கினார்கள், போற்றினார்கள் என்கிறார் அடிகளார்.

"மாதரார் தொழுது ஏத்த"

சின்ன பொண்ணு.  12 வயசு. முடியுமா ?

இறைவனை விட்டு விட்டு , இயற்கையை வாழ்த்தி, முதல் சிக்ஸர் அடித்தார்.

வயக்காட்டில் மீன் விளையாட்டும், வறுமையே இல்லை என்று எல்லோரும் எப்போதும் சொல்லும்  ஊர் சிறப்பை விட்டு விட்டு, "பதி எழு அறியா பழங்குடி " என்று இரண்டாவது சிக்ஸர் அடித்தார்.

கதாநாயகனை விட்டு விட்டு, முதலாவதாக கதாநாயகியை அறிமுகப் படுத்தி  மூன்றாவது சிக்ஸர்.

படிக்க படிக்க மேலும் ஆர்வத்தை தூண்டும் காப்பியம்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_17.html


Sunday, June 16, 2019

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி 


இயற்கையை போற்றிய பின், இளங்கோ கதை தொடங்கும் புகார் நகரின் சிறப்பைப் பற்றி கூற வருகிறார்.

ஒரு நாடு சிறந்த நாடு என்பதை எதை வைத்து வரையறுக்கலாம்?

வள்ளுவர், சிறந்த நாடு எது என்று 10 குறள் எழுதி இருக்கிறார்.  அதில் ஒன்று

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு.

பெரிய பசியும், தீரா பிணியும், பகைமையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்று கூறுகிறார்.


அயோத்தியின் சிறப்பைப் பற்றி கூற வந்த கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

இப்படி ஒரு நாட்டின் சிறப்பை பல விதங்களில் வர்ணிக்கலாம்.

எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் படி இளங்கோ அடிகள் புகார் நகரை வர்ணிக்கிறார்.

அவர் வர்ணிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இதை வாசிக்கும் பலர், சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொந்த  மாநிலத்தை விட்டு வேறு இடத்தில் வசிக்கலாம் .

ஏன், உங்கள் சொந்த இடத்தை விட்டு விட்டு வந்தீர்கள்?

நல்ல வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம்,  வாழ்க்கைத் தரம், அமைதியான சூழ்நிலை, குறைந்த வருமான வரி,  குழந்தைகளின் மேல் படிப்பு, இனிய தட்பவெப்பம்,  என்று பல காரணம்  சொல்லலாம்.

இவை எல்லாம் இல்லாததால் தானே பிறந்து வளர்ந்து மண்ணை விட்டு வெளியேறினீர்கள். இவை அனைத்தும் சொந்த ஊரிலேயே இருந்திருந்தால் , நீங்கள் அங்கேயே  இருந்திருப்பீர்கள் அல்லவா? அப்படி இல்லாத ஊர் நல்ல ஊர் இல்லைதானே.

"என் ஊரைப் போல வருமா ?" என்று வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் போய் இருந்து  கொண்டு பேசுவது ஒரு ஏமாற்று வேலைதானே. நல்ல ஊர் என்றால் அதை ஏன் விட்டு விட்டு, அந்த அளவுக்கு நல்லா இல்லாத ஊருக்குப் போக வேண்டும்?

இளங்கோ அடிகள் சொல்கிறார்

"பதி எழு அறியா பழங்குடி" என்று.

அந்த ஊரில் (பூம்புகாரில்) உள்ள மக்கள் அந்த ஊரை விட்டு வெளியே போனதே கிடையாதாம்.   இப்ப மட்டும் அல்ல, காலம் காலமாக அங்கேயே இருக்கிறார்களாம்.

ஏன் என்றால்,  அந்த ஊரில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எதற்கு இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் ?

இப்போது சொல்லுங்கள், இதை விட ஒரு ஊரை சிறப்பாக வர்ணிக்க முடியுமா?


பாடல்

ஆங்கு, 
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், 
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் 
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,


பொருள்


ஆங்கு,  = அங்கே

பொதியில் ஆயினும் = பொதிய மலை ஆயினும்

இமயம் ஆயினும், = இமய மலை ஆயினும்

பதி  = இருக்கின்ற இடம்.  (பதி  என்றால் இடம். உயர்ந்த இடம், திருப்பதி)

எழு = எழுதல், எழுந்து வெளியே எங்கும் போவது

அறியாப் = அறியாத

பழங் குடி = பழைய குடி மக்கள்

கெழீஇய = நட்புடன்

பொது அறு = பொதுமை இல்லாத

சிறப்பின் = சிறப்பின். அந்த நாட்டுக்கு என்று சில சிறப்புகள் உண்டு.  பொதுவாக உள்ள சிறப்புகள் இல்லை, speical

புகாரே ஆயினும், = புகார் நகரே ஆயினும்

நடுக்கு இன்றி = நடுக்கம் இன்றி

நிலைஇய = நிலைத்து நிற்கும்

என்பது அல்லதை = என்பது தவிர வேறு எதையும்

ஒடுக்கம் கூறார் = அவற்றிற்கு முடிவு உண்டு என்று

உயர்ந்தோர் = உயர்ந்தவர்கள்

உண்மையின் = உண்மையின்

முடித்த கேள்வி = அனைத்து கேள்விகளுக்கும் விடையை

முழுது உணர்ந்தோரே. = முழுவதும் உணர்ந்தவர்கள்

அதனால், = அதனால்

நாக நீள் நகரொடு = நாகர் உலகுடனும்

நாக நாடு-அதனொடு = சுவர்க்கம் என்ற அதனுடனும்

போகம் = போகம்

நீள் புகழ் மன்னும் = நீண்ட புகழ் நிலைத்து நிற்கும்

புகார்-நகர் அது-தன்னில், = புகார் நகரத்தில்

எப்படி இருக்கு ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_16.html

Saturday, June 15, 2019

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை?

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை? 


மிகவும் கடினமான செயல் என்றால் எதைச் சொல்வோம் ?

பளு தூக்குவது, மலை ஏறுவது, கடினமான பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது, பிள்ளை பெறுவது, என்று நமக்குத் தெரிந்த கடினமான வேலைகளை சொல்லுவோம்.

இதெல்லாம் பெரிய கடினமான வேலை இல்லை என்று வள்ளுவர் சொல்கிறார்.

உலகிலேயே மிகவும் கடினமான வேலை, முட்டாள்களின் செயலை பொறுத்துக் கொல்வதுதான் என்கிறார்.

யோசித்துப் பாருங்கள்....

அரைகுறையாக படித்து விட்டு, எல்லாம் படித்த மேதாவி போல் உளறும் முட்டாள்கள் சொல்வதை கேட்பது எவ்வளவு கடினமான செயல் என்று.

அரசியல்வாதிகளின் பிதற்றல், டிவி யில் நிபுணர்கள் போல வந்து எல்லா சப்ஜெக்ட்க்கும் ஒரு ஒப்பீனியன் தருவது, அரை வேக்காட்டு நண்பர்களின் மேதாவிலாசம், என்று இவற்றை பொறுத்துக் கொள்வது எவ்வளவு கடினமான செயல்.

அது போல, உள்ளத்துக்குள்ளேயே பெரிய இல்லாமை எது தெரியுமா ?

அறிவு இல்லாமை, புகழ் இல்லாமை,  பிள்ளை இல்லாமை, உறவுகள் இல்லாமை ..என்று நாம் நினைப்போம்.

அது எல்லாம் இல்லாமை தான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆனால் அது எல்லாவற்றையும் விட பெரிய இல்லாமை, எது தெரியுமா ?


ஐயோ, கையில் காசு இல்லையே. இப்போ ஏதாவது விருந்தினர் வந்து விட்டால் என்ன செய்வது என்று  ஒருவன் பதறுவானேயானால், அது தான் பெரிய இல்லாமை என்கிறார்.

விருந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது நம் தமிழ் பாரம்பரியம்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்

இன்மையுள் இன்மை = இல்லாமையை பெரிய இல்லாமை

விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் போதல்

வன்மையுள் = கடினமானவற்றுள்

வன்மை = கடினமானது

மடவார்ப் பொறை = மடையர்களை பொறுத்துக் கொள்வது


எத்தனை மடையர்கள், எவ்வளவு பொறுமை வேண்டி இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_22.html

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம்  - மங்கல வாழ்த்து 


சொற்களுக்கு வலிமை உண்டு என்று நம் முன்னவர்கள் நம்பினார்கள்.

தமிழில் மங்கல சொற்கள், அமங்கல சொற்கள் என்று உண்டு.

எப்போதும் அமங்கல சொற்களை தவிர்த்து மங்கல சொற்களையே பயன்படுத்த வேண்டும். அமங்கல சொற்களை சொல்லுவதை விடுங்கள், அது காதில் கூட விழக் கூடாது என்று தான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கெட்டி மேளம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் அதற்குத்தான். யாராவது, அக்கம் பக்கத்தில் ஏதாவது சொல்லுவார்கள். அது பூஜை செய்யும் போது நம் காதில் விழும். மனம் அந்த சொல்லைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னேயே போய் விடும். அதைத் தவிர்க்கத்தான், மணி அடிப்பது.

கோவிலிலும், பூஜை நடக்கும் போது பெரிய மணியை அடிப்பார்கள். காண்டா மணி என்று அதற்குப் பெயர்.

கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.

கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி நூலை தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.

சிக்கல் என்ன என்றால், எந்தக் கடவுளை வாழ்த்தினார் என்று ஆராய புறப்பட்டுவிடும் ஒரு கும்பல்.  அந்தக் கடவுள் அவர்கள் வணங்கும் கடவுள் இல்லை என்றால், அந்த நூலையே புறக்கணித்து விடுவார்கள்.

அது சைவ நூல், அது வைணவ நூல் என்று பேதம் காணத் தொடங்கி விடுவார்கள்.

திருவள்ளுவர் "ஆதி பகவன்", "வாலறிவன்" , "எண் குணத்தான் " என்று சொன்னார்.  அது எல்லாம் சமண சமயக் கடவுள். எனவே திருவள்ளுவர் ஒரு சமணர் என்று  முத்திரை குத்தி விட்டார்கள்.

திருவள்ளுவருக்கே அந்தக் கதி.

இளங்கோ அடிகள், மரபில் இருந்து சற்றே விலகுகிறார் .

காலத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல, அதிரடியாக  முதல் பாடலிலேயே புரட்சியை ஆரம்பிக்கிறார்.

கடவுளை விட்டு விட்டு, இயற்கையை வாழ்த்துகிறார்.

நிலவை, சூரியனை, மழையை, கதை தொடங்கும் நிலத்தை போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொது தானே. என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே?

பாடல்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

பொருள்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! = நிலவை போற்றுவோம், நிலவை போற்றுவோம்

கொங்கு = தேன் ("கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ..." பாடல் ஞாபகம் வருகிறதா?)

அலர் = நிறைந்த

தார்ச் = மாலை

சென்னி = தலை

குளிர் = குளிர்ந்த

வெண்குடை போன்று, = வெண் கொற்ற குடை போல

இவ் அம் கண் உலகு அளித்தலான். = இந்த உலகை பாதுகாத்தலால்



ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- = சூரியனை போற்றுவோம், சூரியனை போற்றுவோம்

காவிரி நாடன் = காவிரி நாடன், சோழன்

திகிரிபோல் = ஆணைச் சக்கரம் போல

பொன்  கோட்டு  = பொன்  மலை

மேரு வலம் திரிதலான். = மேருவை சுற்றி வருவதால்


மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- = சிறந்த மழையை போற்றுவோம், மழையை போற்றுவோம்

நாம = பயத்தை தருகின்ற

நீர் = நீர்

வேலி = வேலி போல (கடல் நீர் உலகிற்கு வேலி போல இருக்கிறது)

உலகிற்கு = உலகிற்கு

அவன் = சோழ மன்னன்

அளி = கொடை , ஈகை

போல் = போல

மேல நின்று = மேலே நின்று

தான் சுரத்தலான் = அது சுரத்தலால்



பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! = பூம்புகாரை போற்றுவோம்

வீங்கு நீர் = நிறைந்த நீர்

வேலி உலகிற்கு = வேலி போல் அமைந்த உலகிற்கு

அவன் குலத்தோடு = சோழன் குலத்தோடு

ஓங்கிப் = உயர்ந்து

பரந்து = விரிந்து

ஒழுகலான். = இருப்பதால்

நிலவும், சூரியனும், மழையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவு, சூரியன், மழை - இது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை, காய்வதில்லை நிலவும் சூரியனும்.

அது போல, அனைத்து குடி மக்களுக்கும் அரசன் நடு நிலையாக இருப்பான், இருக்க வேண்டும்  என்று முதல் பாட்டிலேயே எடுத்து வைக்கிறார் அடிகளார்.


அரசன் சிறந்த கொடையாளனாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வரி விதிப்பதும், போர் செய்வதும் மட்டும் அரசன் கடமை அல்ல. மழை போல பலன் கருதாமல்  உதவ வேண்டும். 

அரசன் இரக்கம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிலவு எப்படி குளிர்ந்து, சுகமாக இருக்கிறதோ அப்படி  இதமாக இருக்க வேண்டும். கொடுங்கோலனாக, மக்களை வாட்டி வதைப்பவனாக இருக்கக் கூடாது. 

அரசாங்கம் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிச்சத்தில், அனைவரும் காணும்படி  , ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும். சூரிய ஒளி எப்படி அனைத்தையும்  மறைக்காமல் காண உதவுகிறதோ அப்படி. 

மங்கல வாழ்த்து முடிந்து, காப்பியத்துக்குள் நுழைவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_15.html

Friday, June 14, 2019

சிலப்பதிகாரம் - இலக்கிய நோக்கம்

சிலப்பதிகாரம் -  இலக்கிய நோக்கம் 


ஒரு நூல் செய்வதானால் அதற்கு என்ன நோக்கம் இருக்க வேண்டும் என்று பவணந்தி முனிவர் நன்னூலில் கூறுகிறார்.

அவர் கூறுவது இருக்கட்டும். நம் இலக்கிய கர்த்தாக்களை கேட்டால் என்ன சொல்லுவார்கள் ?

"என் மனதில் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள"

"பேரும் புகழும் சம்பாதிக்க"

" பணம் சம்பாதிக்க"

"மொழியை வளர்க்க என்னால் ஆன சிறிய பங்களிப்பு"

"சிறுமை கண்டு பொங்க , அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க"

என்று காரணம் கூறுவார்கள்.

அவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எதற்கு புத்தகங்களை வாசிக்கிறோம் ?

பரீட்சையில் தேற, நல்ல மதிப்பெண்கள் வாங்க, நல்ல வேலை கிடைக்க, பொழுது போக, என்னதான் சொல்லி இருக்கு என்று அறிந்து கொள்ள என்று பல காரணங்கள் இருக்கலாம்.

இவை அனைத்துமே காரணங்கள் அல்ல என்கிறார் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே"

ஒரு நூலை எழுதுவதற்கும், அதை படிப்பதற்கும் காரணம் அறம் , பொருள், இன்பம், வீடு இவற்றை அடையவே என்கிறார்.

நீங்கள் எதை வாசிக்கத் தொடங்கினாலும் இந்த நாலில் எது உங்களுக்கு கிடைக்கிறது  என்று அறிந்து கொண்டு வாசிக்க வேண்டும்.

மாத நாவல்கள் , டிவி சீரியல்கள், whatsapp துணுக்குகள் படிக்கும் போது "இன்பம்"  கிடைக்கிறதே...அதுவும் ஒரு பலன் என்றுதானே பவணந்தியார் கூறி இருக்கிறார்.  எனவே, அதில் தவறு என்ன என்று கேட்கலாம்.

அதையே இன்னும் கொஞ்சம் நீட்டிப்போம். கொள்ளை அடித்தால் பொருள் கிடைக்குமே,  அதுவும் ஒரு பலன் என்று தானே நன்னூல் சொல்கிறது? கொள்ளை அடிக்கலாமா ? ஒரு பெண்ணை கெடுப்பது ஒருவனுக்கு இன்பம் தரலாம்,  செய்யலாமா?

அதற்குத்தான் முதலில் அறத்தை வைத்தார்கள்.

அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அதன் படி பொருள் ஈட்ட வேண்டும்,  அதன் படி இன்பம் துய்க்க வேண்டும், அதன் படி வீடு பேற்றை அடைய வேண்டும்.

அறமே அனைத்துக்கும் அடிப்படை.

சிலப்பதிகாரம் மூன்று அறங்களை வலியுறுத்தி  சொல்கிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

"கற்புடைய பெண்ணை தெய்வமும் வணங்கும்"


இந்த மூன்று அறங்களை வைத்து பின்னப் பட்டதுதான் சிலப்பதிகாரம் என்ற  காப்பியம்.

சிலப்பதிகாரத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.  ஒரு இராவணன், ஒரு துரியோதனன் போன்ற  வில்லன்கள் யாரும் கிடையாது. கதாநாயனுக்கு  சண்டை போடும்  வாய்ப்பே இல்லை.

சண்டை போடும் அளவுக்கு அவன் வீரனும் அல்ல.

வீட்டை வெளியே அதிகம் வராத கதாநாயகி

"வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்"

என்பார் இளங்கோ அடிகள்.

கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற வழக்கமான பார்முலாவை உடைத்து எறிந்த  இலக்கியம் சிலப்பதிகாரம்.

நல்லது வெல்லும், தீமை அழியும் என்ற சித்தாந்தத்தையும் உடைத்து எறிகிறது  சிலப்பதிகாரம்.

கோவலன் ஒரு அப்பாவி. மனைவியின் சிலம்பை விற்க வந்தவனை போட்டு தள்ளி விட்டார்கள்.  அவனுக்கென்று யாரும் இல்லை.

ஒரு அனுமன், ஒரு கிருஷ்ணன் என்று யாரும் இல்லை.

அனாதையாக, முன் பின் தெரியாத ஊரில் வெட்டுப் பட்டு சாகிறான்.

இளங்கோவுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை.

தான் சொல்ல வந்த அறத்தை வலியுறுத்துவது மட்டுமே அவருக்கு நோக்கமாக இருந்து இருக்கிறது.

அதை எப்படி செய்கிறார் என்று பார்க்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_14.html

Thursday, June 13, 2019

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம்

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம் 


ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று.

மற்ற காப்பியங்களில் இருந்து மிக மாறுபட்டது சிலப்பதிகாரம்.

இராமாயணமும், பாரதமும் வேற்று மொழியில் எழுதப்பட்டு பின் தமிழில் மடை மாற்றம் செய்யப்பட்டது.

அதில் உள்ள கதா பாத்திரங்கள் நமக்கு அந்நியமானவர்கள். அவர்கள் பெயர், அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நம்மில் இருந்து வேறுபட்டது.

கடவுள்கள் அவதாரங்களாக வந்து காப்பியத்தை வழி நடத்திப் போனார்கள்.

சிலப்பதிகாரத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

நம்ம ஊர் மதுரை, திருச்சி, பூம்புகார் என்று நம்மைச் சுற்றி நிகழ்ந்த கதை. கோவலன், கண்ணகி, மாதவி, என்ற கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராய் உள்ள கதா பாத்திரங்கள்.

பலவீனமான கதாநாயகன். வரம் வாங்கி, போர் செய்து, பெரிய தாதா கிடையாது. பணக்கார வீட்டுப் பையன். விலை மகள் பின் போனவன். சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு வெறும் கையோடு வருகிறான். ஒரு கொல்லன் போட்டுக் கொடுக்க, வெட்டுப் பட்டு சாகிறான்.

பூவாக இருந்த கதாநாயகி, எரிமலையாக வெடிக்கிறாள். ஊரையே எரித்து சாம்பலாக்குறாள்.

இராமாயணத்தில் சீதை, மிகுந்த ஆற்றல் உள்ளவள் தான்.

இந்த உலகை எல்லாம் என் சொல்லால் சுட்டு எரித்து விடுவேன் ஆனால் அது இராமனின்   வில்லாற்றலுக்கு மாசு என்று விட்டு விட்டேன் என்கிறாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆக்கமோ
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்

தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு இருந்து விடுகிறாள்.

அதற்கு முன்னால் , இராமனைக் காணாமல் தூக்கு போட்டு தற்கொலை கூட செய்யத் துணிகிறாள். அவ்வளவு பலவீனமாக காட்டுகிறான் கம்பன் அவளை.

பாரதத்தில், திரௌபதி, துரியோதனன் தொடையில் இருந்து வந்த இரத்தத்தை தடவித் தான் என் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததோடு சரி.  மற்றபடி அரண்மனையில் தங்கி விட்டாள்.

ஆனால், கண்ணகியோ, வெகுண்டு எழுந்து நீதி கேட்டாள் , ஊரை எரித்தாள்.

இன்று feminism , equal rights என்று பேசுபவர்களுக்கு முன்னால் கண்ணகி நிற்கிறாள். போராடினாள்.

மிக மிக சுவையான கதைப் போக்கு, சட்டு சட்டென்று மாறும் கதைப் போக்கு, கதைத் தளம், அடி நாதமாய் ஓடும் கணவன் மனைவி உறவு, அதில் ஏற்படும் சிக்கல்,  அரசியலும் , தனி மனித வாழ்வும் கலந்து நிற்கும் ஒரு வினோத கலவை.

இவற்றிற்கு மேலாக மிக முக்கியமான மூன்று அறங்களை வலியுறுத்தி, அதை சுற்றியே  கதையை நகர்த்தி, முடிவில் அந்த அறங்களின் வலிமையை நிலை நிறுத்திப் போகிறது இந்த காப்பியம்.

அது என்ன மூன்று அறம் ?

மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_13.html

Wednesday, June 12, 2019

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டிய சூர்ப்பனகையின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, இராமன் பர்ணசாலைக்குள் சீதையோடு போய் விட்டான்.

வெளியே நின்ற சூர்ப்பனகை புலம்புகிறாள்.

"நீல மலரோ, மீனோ என்று சொல்லும் படி இருக்கும் சீதை , இலக்குமி போல இருக்கிறாள். அவளைப் பார்த்த இராமனின் கண்கள் என்னையும் பார்க்குமா" என்று ஏங்குகிறாள். காதலில், காமத்தில், அவளின் உயிர் ஓய்கிறது, ஆனாலும் ஆசை ஓயவில்லை என்கிறான் கம்பன்.


பாடல்



‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.


பொருள்


‘காவியோ = நீல மலரோ

கயலோ  = மீனோ

எனும் = என்று எண்ணும்படி இருக்கும்

கண் இணைத் = இரண்டு கண்கள் கொண்ட

தேவியோ = இராமனின் தேவியான சீதையோ

திருமங்கையின் = திருமகளைவிட

செவ்வியாள்; =  சிறந்தவளாக இருக்கிறாள்

பாவியேனையும் = பாவியாகிய என்னையும்

பார்க்கும் கொலோ? ‘எனும் = பார்ப்பானா என்று

ஆவி ஓயினும் = உயிர் ஓய்ந்தாலும்

ஆசையின் ஓய்வு இலாள். = ஆசை ஓய்வு இல்லாதவளான சூர்ப்பனகை

பாட்டு என்னவோ, மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாகத்தான் தெரியும்.

தான் பெரிய ஆள், மன்மதனும், மும்மூர்த்திகளும், தேவர்களும் என்னை அடைய  தவம் கிடக்கிறார்கள் என்று தற்பெருமை பேசிய சூர்ப்பனகை, தான் பெரிய ஆள் இல்லை என்று உணர்கிறாள்.  காதல் என்று வந்து விட்டால், இந்த ஆணவம் போய் விடுகிறது. யாரை காதலிக்கிறோமோ, அவர்களே உலகம் என்று ஆகிப் போகிறது.  நீ இல்லாமல் என் வாழ்வு பூரணமாகாது என்ற நிலைக்கு காதலர்கள் வந்து விடுகிறார்கள்.   நீ  இல்லாமல் எனக்கு சந்தோஷம் இல்லை  என்பது எதை காட்டுகிறது   என்றால், நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நீ இருந்தால் தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்  என்று காதலிப்பவருக்கு  அனைத்து முக்கியத்துவமும் போகிறது. தன்னைத் தானே  தாழ்த்தி, காதலிப்பவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பது காதல்.

தற்பெருமை பேசிய சூர்ப்பனகை "பாவியேனையும் பார்க்கும் கொலோ?" என்று  தன்னை ஒன்றும் இல்லாதவளாக உணரத் தலைப் படுகிறாள்.


எவ்வளவு பெரிய ஆணவக் காரனையும், காதல் நாய் குட்டிப் போல மென்மை படுத்தி விடுகிறது.

தெரியாமலா சொன்னான் பாரதி "ஆதலினால் காதல் செய்வீர்" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அது என்ன "ஆவி ஓயினும் ".

ஆவி எப்படி ஓயும்? ஆவி என்ன ஓடி ஆடி வேலை செய்கிறதா, களைப்பு அடைய?

உடல் ஓயும். நமக்குத் தெரியும்.

உள்ளம் ஓயும். அதுவும் நமக்குத் தெரியும்.

உயிர் ஓயுமா?

ஓயும். அது நமக்குத் தெரிவதில்லை.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் " என்பார் மணிவாசகர். இளைத்தது யார்? உடலா? உள்ளமா ? இல்லை, இந்த உயிர் ஒவ்வொரு பிறவியாக எடுத்து களைத்து, சலித்துப், இளைத்துப் போய் விடுகிறது.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


உயிரும் இளைக்கும்.

பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்

பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!

பிறந்து அலுத்தேன் நான் என்பார் பட்டினத்தார்.  உயிரும்  அலுக்கும்.

உடலையும், உள்ளத்தையும் தாண்டி உயிரைப் பற்றும் காதல்.


புலம்புவது சூர்ப்பனகை.


பக்திப் பாடல்களைப் பார்த்தால் தெரியும், பாடுபவர்கள், "நான் ஒரு பாவி, நான் ஒரு அறிவிலி,  நான் ஒரு முட்டாள், ஆண்டவா என்னை காப்பாற்று" என்று   தன்னைத் தாழ்த்தி இறைவனை போற்றுவார்கள்.

"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு 
தாயிற் சிறந்த தயவான தத்துவனே "

என்பது திருவாசகம்.

"நம்மையும் ஒரு பெருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து" 

என்பதும் மணிவாசகம்.

சூர்ப்பனகை சொல்லுகிறாள், "இந்த பாவியை அவன் பார்ப்பானா"  என்று.

சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_12.html