Saturday, November 16, 2019

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன்

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன் 


ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.

இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்

"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.

பாடல்


ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.



பொருள்


ஆய்ந்து = ஆராய்ச்சி செய்து

ஏற  = ஏற்புடையதாக

உணர் = உணர்ந்து கொள்வாய்

ஐய!- = ஜனகனே

அயற்கேயும் = பிரம்மாவுக்கும் (அயன் - பிரமன்)

அறிவு அரிய = அறிந்து கொள்ள முடியாத

காய்ந்து ஏவினன் = எரித்து ஏவினான்

உலகு அனைத்தும் = உலகம் அனைத்தையும்

கடலோடும் = கடலோடும்

மலையோடும் = மலையோடும்

தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் = அனைத்தையும் தீய்த்து சுட்டு பொசுக்கும்

படைக் கலங்கள் = படை கலங்கள்

செய் தவத்தால் = அவை, செய்த தவத்தால்

ஈந்தேனும் = ஈந்த (தந்த) நானும்

மனம் உட்க. =மனம் நடுங்க

இவற்கு = இராமனுக்கு

ஏவல் செய்குனவால். =ஏவல் செய்கின்றன


அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான்.

ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.

அப்படி படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_16.html

Friday, November 15, 2019

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள் 


இங்கே யாரும் தனித்து ஆணும் இல்லை, தனித்து பெண்ணும் இல்லை.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஒரு ஆணும் (தந்தை) பெண்ணும் (தாய்) கலந்த கலப்பில் தான் நாம் எல்லாம் பிறக்கிறோம். தாயின் குணம் கொஞ்சம், தந்தையின் குணம் கொஞ்சம் இரண்டும் கலந்த கலவை நாம். நமக்குள்ளே ஆணும் உண்டு , பெண்ணும் உண்டு.

என்ன, புற உலகம், ஆணிடம் உள்ள பெண் குணத்தையும்  , பெண்ணிடம் உள்ள ஆண் குணத்தையும் மழுங்க அடித்து விடுகிறது. ஒரு சிறு பையன் அழுதால் , "சீ, என்னடா, பொம்பள புள்ளை மாதிரி அழுது கொண்டு" என்று அழுவது பெண்ணின் குணம், ஆண் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறது இந்த சமுதாயம். "என்ன ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி திங்கு திங்கு னு நடக்குற...மெல்ல நட " என்று பெண்ணுக்குச் சொல்லப் படுகிறது.

அபிராமியை ஒரு பெண்ணாகவே பார்த்த பட்டர், அவளுக்குள்ளும் இருக்கும் ஆணை காண்கிறார்.

ஆணும் பெண்ணும் கலந்த அர்த்த நாரியாக கண்டு அதிசயப் படுகிறார்.

பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நாள் கழித்து அவள் வீட்டுக்குப் போகும் பெற்றோர் அதிசயப் படுவார்கள் "நம்ம வீட்டுல அப்படி இருந்த பெண்ணா, இங்க இப்படி பொறுப்பா இருக்கிறாள், வீட்டை நிர்வாகம் பண்ணுகிறாள், கணவனை , பிள்ளைகளை, வீட்டை, வெளி உலகை, அலுவலகத்தை எப்படி நிர்வாகம் பண்ணுகிறாள் " என்று வியப்பார்கள்.

பெண் அதியசமானவள் தான்.

உலகத்தையெல்லாம் தன் காம வலையில் வீழ்த்துபவன் மன்மதன். அவனை கண்ணால் எரித்தவர் சிவ பெருமான். அப்படி காமத்தை வென்ற சிவனை மயக்கி அவன் உடலில் ஒரு பாகமான அபிராமியே, நீ அதிசயமானவள் என்கிறார்.

பாடல்

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே



பொருள்

அதிசயம் ஆன வடிவுடையாள்  = அதிசயமான வடிவம் உடையவள்

அரவிந்தம் எல்லாம் = மலர்கள் எல்லாம்

துதிசய ஆனன = துதிசெய்யும்

சுந்தரவல்லி = அழகிய வல்லிக் கொடி போன்றவள்

துணை இரதி = இரதி தேவியின்

பதி = கணவன் (மன்மதன் )

சயமானது = அவன் இது வரை  பெற்ற வெற்றிகள் எல்லாம்

அபசயமாக = தோல்வி அடையும்படி

முன் = முன்பு

பார்த்தவர்தம் = நெற்றிக்கண்ணால் பார்த்தவர், எரித்தவர்

மதி = அவருடைய புத்தியை , மனதை

சயமாக அன்றோ = வெற்றி பெற்று அல்லவா

வாம பாகத்தை = இடப் பாகத்தை

வவ்வியதே = அடைந்ததே


அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் ஆயிரம் மின்னல் ஒன்றாக இறங்கியது போன்ற ஒரு சிலிர்ப்பு. அவளை தூரத்தில் பார்த்தாலே அவனுக்குள் ஆனந்த கங்கை கரை புரண்டு ஓடும்.

அவனுடைய  கனவும், நினைவும் அவளாகவே இருந்தாள்.

காலம் செய்த கோலம், அவர்கள் பிரிந்து போனார்கள். கால நீரோட்டம் அவர்களை  வேறு வேறு திசையில் கொண்டு சென்றது.

என்றேனும் அவளை காணலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள், கணவனுடன் அவள் வந்தாள்.

அவள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோஷம்.

எப்படி அவள் இன்னொருவருக்கு மனைவியானாள் ?

அவர்களை ஒன்றாகப் பார்ப்பது அவனுக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது.

நான் பார்த்த பெண்ணா இவள்? அந்த சின்னப் பெண்ணா இவள் என்று அதிசயமாக பார்க்கிறான்.

அதிசயமான வடிவு உடையாள்....

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_78.html

திருக்குறள் - பிச்சை எடுப்பதும் ஒரு பெருமைதான்

திருக்குறள் - பிச்சை எடுப்பதும்  ஒரு பெருமைதான் 


என்னது? பிச்சை எடுப்பது ஒரு பெருமையா? ஒருத்தரிடம் போய், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பதில் என்ன பெருமை இருக்க முடியும்?  அது ஒருவனின் இயலாமையை அல்லவா காட்டுகிறது?

உண்மைதான்.

ஆனால், யாரிடம் சென்று யோசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

"மறைத்து வைக்காமல், நம் தேவை அறிந்து, நமக்கு உதவி செய்வது அவரின் கடமை என்று நினைத்து, நாம் கேட்காமலேயே உதவி செய்பவரிடம் சென்று உதவி கேட்டு நிற்பதும் ஒரு பெருமையான விஷயம்தான்" என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.


பொருள்

கரப்பிலா = கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள். கரப்பிலா என்றால் மறைத்து வைக்காமல்.

நெஞ்சின்  = மனம் உடையவர்கள்

கடன்அறிவார் = தங்களுடைய கடமையை அறிந்தவர்கள்

முன்நின்று = அவர்கள் முன் சென்று நின்று

இரப்பும் = யாசிப்பதும்

ஓர் = ஒரு

ஏர் உடைத்து. = அழகு, பெருமை உடையது


கடன் அறிவார் என்றால் நமக்கு உதவுவது அவர்கள் கடன் என்று அறிந்தவர்கள்.  யார் அப்படி இருப்பார்கள்? மிக நெருங்கிய நண்பர், நமக்கு மிக மிக வேண்டியவர்கள் இருக்கலாம். அல்லது நாம் யாருக்கோ முன்பு பெரிய உதவி செய்து இருக்க வேண்டும்.  நமக்கு இப்போது உதவி செய்வதை தங்கள் கடன் என்று  அவர்கள் நினைக்கலாம்.  அப்படி உதவி செய்து வையுங்கள்.

"உங்கப்பா அந்தக் காலத்தில எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்காருப்பா...உனக்கு செய்யாமல்  வேற யாருக்கு செய்யப் போகிறேன் "  என்று மற்றவர்கள் நம் பிள்ளைகளை பார்த்து சொல்லும் அளவுக்கு   உதவி செய்து வைத்திருக்க வேண்டும்.

"முன் நின்று" என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது, நாம் உதவி என்று கேட்க  வேண்டாம். முன் சென்று நின்றாலே போதும். அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  உதவி செய்வார்கள்.

அப்படிப் பட்டவர்கள் முன் சென்று உதவி கேட்டு நிற்பதே ஒரு பெருமை என்கிறார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்படி நீங்கள் யாருக்காவது கடன் பட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உதவி செய்வது  உங்கள் கடன் என்று நீங்கள் யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நினைத்துப் பாருங்கள்.

உதவி பெற்றிருந்தால், அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டிய போது திரும்பிச் செய்ய வேண்டும்.

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள். ஒப்புரவு என்றால் சமுதாயத்தோடு  ஒன்றி வாழ்தல்.

இன்னும் 9 குறள் இருக்கிறது அந்த அதிகாரத்தில். படித்துப் பாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_15.html


Thursday, November 14, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும் 



ஒரு ஊரில் பெரிய பஞ்சம். மழையே இல்லை. பூமி வறண்டு விட்டது. மக்கள் தவித்துப் போனார்கள். அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை, என்ன செய்வது என்று முறையிட்டார்கள். அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்" என்று கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து விட்டார்.

ஒரு வாரம் யாகம் நடந்தது. கடைசி நாள் யாகம். யாகம் முடிந்தவுடன், மழை "சோ' என்று பெய்தது. மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். அந்த துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள், அவரைப் புகழ்ந்து  பேசினார்கள்.

அப்போது அவர் சொன்னார் , "இந்த மழை என்னாலோ , இந்த யாகத்தாலோ, உங்களாலோ வரவில்லை. அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே அந்த சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது " என்றார்.

அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள்...ஒருவர் கூட குடை கொண்டு வரவில்லை, துறவியும் சேர்த்து.

அவ்வளவு நம்பிக்கை.

கடவுளை நம்பும் எவ்வளவு பேர், தாங்கள் சுவர்க்கம் போவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள்? ஸ்வர்கமோ, இறைவன் திருவடியோ ஏதோ ஒன்று. அங்கே செல்வதாக எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது?

நம்மாழ்வார் சொல்கிறார்

"இனிமேல் நரகம் என்பதே இருக்காது.  யார் நரகத்துக்கு போவார்கள். திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.

அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இனிமேல் மரணம் இல்லை, நரகம் இல்லை,கலியால் துன்பம் இல்லை என்று.

எத்தனை பேர் இதை நம்புகிறார்கள் ?

கடவுளிடம் ஒருதரம் சொன்னால் போதாதா? எனக்கு சுவர்க்கம் குடு, துன்பம் தராதே, இன்பம் தா, என்னை நல் வழியில் நடத்து என்று. தினம் தினம் போய் சொல்ல வேண்டுமா ? ஒரு தரம் கூட எதற்கு சொல்ல வேண்டும். அவருக்குத் தெரியாதா?

கடவுளுக்குத் தெரியாது என்று நம்மவர்கள் நம்புகிறார்கள்.

பாடல்


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்


பொருள்


பொலிக பொலிக பொலிக = சிறந்து விளங்குக

போயிற்று  = போயிற்று, நீங்கிற்று

வல்லுயிர்ச் சாபம்,  = இந்த உயிர்களை பிடித்த சாபம்

நலியும் நரகமும் = நரகம் நலிந்து போகும். யாரும் இல்லாவிட்டால், நரகத்தை இழுத்து மூட வேண்டியது தானே.


நைந்த = சோர்ந்து போன

நமனுக்கிங் கி = நமனுக்கு இங்கு

யாதொன்று மில்லை, = ஒரு வேலையும் இல்லை

கலியும் கெடும்  = கலி (சனி) புருஷனும் கெடுவான்

கண்டு கொள்மின் = கண்டு கொள்ளுங்கள்

கடல்வண்ணன் = கடல் போன்ற வண்ணத்தை உடையவன்

பூதங்கள் மண்மேல், = உயிர்கள் வாழும் இந்த மண் மேல்

மலியப் புகுந் = அவனே வந்து புகுந்து

திசை பாடி = இசை பாடி

யாடி = ஆடி

யுழிதரக் கண்டோம் = நடமாடக் கண்டோம்



மரண பயம் இல்லை. கலி பயம் இல்லை. நரக பயம் இல்லை.

கவலையை விடுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_14.html

Wednesday, November 13, 2019

திருவாசகம் - வாரா வழி அருளி

திருவாசகம் - வாரா வழி அருளி 


வழி என்றால் எங்கோ போவதற்கோ அல்லது எங்கிருந்தோ வருவதற்கோதான் இருக்க வேண்டும் அல்லவா.

இறைவன் "வாரா வழி"யை அருளுவானாம்.

அது என்ன வாரா வழி?

இறந்து, பின் இங்கு திரும்பவும் வாரா வழி.

இறைவன் இருக்கிறானா? அவனை எப்படி அடைவது என்று ஆதி நாள் தொட்டு மனிதன் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறான்.

மணிவாசகர் சொல்கிறார். "நீ போய் தேடினால் கிடைக்க மாட்டான். தேடுவதை முதலில் நிறுத்து" என்கிறார்.

எப்படித் தேடுவது? எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தால் அல்லவா அதைத் தேடி கண்டு பிடிக்க முடியும். இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. சினிமாவிலும், படத்திலும், சிலையிலும் இருப்பது போல இறைவன் இருப்பானா?

உலகத்தில் உள்ள எல்லோரும் தேடினார்கள். யாரும் அவனை காண முடியவில்லை.

ஆனால், "நமக்கு எளியன்" என்கிறார் மணிவாசகர். நமக்கு என்றால் அன்பர்களுக்கு.  அறிவு கொண்டு தேடாமல், அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு  அவன் எளியன் என்கிறார்.

அவனே வந்து, என் உள்ளம் புகுந்து, வாரா வழி அருளி, என்னை பைத்தியமாகி, தீராத இன்பத்தைத் தந்தான் என்கிறார்.

அவர் அப்படி உருகி உருகி பாடிய பாடல், இதோ.

பாடல்


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

பாரார் = பாரில் உள்ளவர்கள்

விசும்புள்ளார் = வானத்தில் உள்ளவர்கள்

பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்

புறத்தார் = இவை அன்றி மற்ற உலகில் உள்ளவர்கள்

ஆராலுங் = யாராலும்

காண்டற் கரியான்  = காண்பதற்கு அரியவன்

எமக்கெளிய பேராளன் = எமக்கு எளிய பேராளன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறைபவன்

பிச்சேற்றி = பித்து ஏற்றி

வாரா வழியருளி  = மீண்டும் வந்து பிறக்காத வழியை அருளி

வந்தென்  = வந்து என்

உளம்புகுந்த = உள்ளத்தில் புகுந்த

ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்

அலைகடல்வாய் மீன்விசிறும் = அலைக்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்  (திருவிளையாடல்)

பேராசை  வாரியனைப் = பெரிய அன்பு கொண்டவனை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை சொல்லி பாடுவோம்


இறைவனை வெளியே  காண முடியாது.

"ஆராலுங் காண்டற் கரியான்"

ஏன், காண முடியாது?

வெளியே இருந்தால் அல்லவா காண்பதற்கு ? அவன் உள்ளே இருக்கிறான். எல்லோரும் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.


"வந்தென் உளம்புகுந்த"

அவன் வந்து உள்ளத்தில் புகுந்து கொள்கிறான்.

விளக்கிருக்க தீ தேடுவதை விட்டு விடவேண்டும்.

தேடல் நின்றால், தேடியது கிடைக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_13.html

Tuesday, November 12, 2019

திருவாசகம் - அறைகூவி வீடருளும்

திருவாசகம் - அறைகூவி வீடருளும்


மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

கதையோடு நின்று விடக் கூடாது.

சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும். அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள்.

கதை சொல்ல வந்த கருத்து என்ன?

திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன்.

ப்ரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால்,  நிறைய   புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது  என்று சொல்ல வந்த கதை அது.

யார் பெரியவர் , யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம்  என்று நினைக்கக் கூடாது.

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.

"இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் " என்பது பிரபந்தம்.

பல பட்டங்கள் பெற்றால் இறைவனை  அறிந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாடல்


செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் அறைகூவி வீடருளும்
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணண் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.


பொருள்


செங்கண் = சிவந்த கண்களை உடைய

நெடுமாலும்= திருமாலும்

சென்றிடந்துங் = சென்று, தோண்டி

காண்பரிய = காண்பதற்கு அரிய

பொங்கு = மலரும்

மலர்ப்பாதம் = மலர் போன்ற பாதம்

பூதலத்தே = இந்த பூவுலகில்

போந்தருளி = போய் அருளி

எங்கள் = எங்கள்

பிறப்பறுத்திட் = பிறப்பு அறுத்து

என் தரமும் = என் தரமும்

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

தெங்கு= தென்னை மரங்கள்

திரள் = திரண்டு இருக்கும்

சோலைத் = சோலைகள் சூழ்ந்த

தென்னன் = தென்னன்

பெருந்துறையான் = பெருந்துறையான்

அங்கணண் = அழகிய கண்களை உடைய

அந்தணனாய் = அந்தணனாய்

அறைகூவி = கூப்பிட்டு

வீடருளும் = வீடு பேற்றை அருளும்

அங்கருணை = அந்த கருணையை

வார்கழலே = வீர திருவடிகளை

பாடுதுங்காண் = பாடுதுங்காண்

அம்மானாய். = அம்மானாய்

வீடு பேறு அடைவது என்பது கடினமான ஒன்றா ? அதை அடைய என்னென்னவோ செய்ய வேண்டும்  என்று சொல்கிறார்கள்.

ஆனால், மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த கத்தரிக்காய், முருங்கை காய் விற்பது போல  இறைவன் "அறை கூவி" வீடு பேற்றை அருளுவானாம்.


"அறைகூவி வீடருளும்"

இந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை, ஊர் பேரைச் சொல்லி அழைப்பது போல,  "வீடு பேறு , வீடு பேறு போக விரும்புவர்கள் வாருங்கள் " என்று   இறைவன் கூவி கூவி அழைப்பானாம்.

நாம் தான் கேட்க மறுக்கிறோம்.

பேருந்து நிலையத்தில் எல்லா ஊருக்கும் போக வண்டிகள் இருக்கும். யாருக்கு எந்த ஊர் வேண்டுமோ, அதில் ஏறிப் போகலாம்.

வீடு பேறு அடையும் வண்டிக்கு நடத்துனர் இறைவன். கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.  யார் போகிறார்கள் அங்கே. அப்புறம் போய் கொள்ளலாம் என்று  வேறு வேறு வண்டியில் ஏறி பணம், செல்வம், புகழ், அதிகாரம், பதவி என்ற ஊர்களுக்குப் போகும் வண்டியில்  பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

வண்டியை நிறுத்தி, சரியான வண்டியில் ஏறுங்கள்.

நம்மை எல்லாம் அந்த வண்டியில் ஏற்றுவானா?  ஏற்றுவான் என்கிறார்.

"எந்தரமும் ஆட்கொண்டு" 

என்னுடைய தகுதி அறிந்தும் என்னை ஆட்கொண்டான் என்கிறான்.

யாராலும் காண முடியாத அவன், நமக்காக இங்கு வந்து, அறை கூவி அழைத்துக் கொண்டிருக்கிறான்.

திரு அம்மானை என்ற பகுதியில் இது போல இனிமையான பாடல்கள் 20 இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_12.html

Monday, November 11, 2019

திருக்குறள் - மறப்பும், நினைப்பும்

திருக்குறள் - மறப்பும், நினைப்பும் 


அறம் பற்றி அவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதிய வள்ளுவர், காதல் பற்றியும் அந்த அளவுக்கு எழுதி இருப்பதை பார்க்கும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

அவர்கள் காதலர்கள்.

அடிக்கடி அவளை அவன் வந்து சந்தித்து விட்டுப் போகிறான். இது இப்படி கொஞ்ச நாள் நடக்கிறது.

ஒரு நாள்,  அவளுடைய தோழி, அவனிடம் கேட்டே விட்டாள், "என்ன இப்படி வந்து போய்கிட்டு இருந்தா எப்படி. ஊருக்கு போன பின் எங்களை மறந்து விடுவாயா" என்று.

அதற்கு அவன் பதில் சொல்கிறான்

"உங்களை நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்" என்று.

தோழி பதறிப் போனாள். "என்னது நினைத்துக் கூட பார்க்க மாட்டியா" என்று.

அவன் சிரித்துக் கொண்டே சொல்கிறான் "மறந்தால் அல்லவா நினைக்க. நான் அவளை மறப்பதே இல்லை. பின் எப்படி நினைப்பது" என்று.

பாடல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

பொருள்


உள்ளுவன் = நினைப்பேன்

மன் = அசைச் சொல்

யான் = நான்

மறப்பின் = மறந்தால்

மறப்பறியேன் = மறத்தல் என்பதை அறியேன்

ஒள் அமர் = ஒளி பொருந்திய

கண்ணாள் = கண்களை உடையவள்

குணம் = குணம்

நினைப்பது, மறப்பது என்று ஏதோ சொல் விளையாட்டில் போய் இருந்தால் வள்ளுவருக்கு என்ன பெருமை.

மனைவியை, அல்லது காதலியை நினைப்பது என்றால் எதை நினைப்பது?

அவளுடைய அழகை, அவளின் கூந்தலை, அழகான சிரிப்பை, முத்துப் போன்ற  பற்களை, இவற்றையா?

இல்லை இல்லை....

"ஒள் அமர் கண்ணாள் குணம்"

அவளுடைய குணத்தை எப்படி மறப்பேன் என்கிறான் காதலன்.

அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற பெண்ணின் குணங்களை நான் எப்படி மறப்பேன்  என்கிறான்.

உடல் அழகு மறைந்து விடும்.  ஓரிரண்டு பிள்ளைகள் பிறந்து, வயதானால் உடல் அழகு மாறும். 

குணம் என்றும் அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப் போனால்,  அது மெருகு ஏறும்.

இந்த பெண்களின் குணம் என்று சொல்லப்படுவதில் அச்சம் புரிகிறது, நாணம் புரிகிறது.

அது என்ன மடம் , பயிர்ப்பு?

மடம் என்றால் மடமை இல்லை. தெரிந்தாலும், தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இருத்தல்.

'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை'

என்பார்கள்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது.  பெரும்பாலான பெண்கள் அப்படி இருப்பது இல்லை. தங்களுக்குத் தெரிந்ததை தைரியமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். அப்படி என்றால், அவர்கள் பெண்மை குணம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா?

முல்லைக்கு தேர் கொடுத்தான் ஒரு மன்னன்.

மயிலுக்கு போர்வை கொடுத்தான் ஒரு மன்னன்.

தன் சதையையே அறுத்துக் கொடுத்தான் ஒரு மன்னன்.

ஒரு மன்னனுக்குத் தெரியாதா? கொடி, கொழு கொம்பு இல்லாமல் வாடினால் ஒரு  குச்சியை ஊன்றி வைத்தால் போதாதா? இல்லை, அதை தூக்கி ஒரு மரத்தின் மேல் படர விட்டால் போதாதா?  தேரையா கொடுக்க வேண்டும்?

அதற்கு கொடைமடம் என்று பெயர்.

மனதில் அன்பு அளவுக்கு அதிகமாக இருந்தால், என்ன செய்கிறோம் என்று  தெரியாது.

மற்றவர்களின் துன்பம் மட்டுமே தெரியும். சிந்திப்பது எல்லாம் இல்லை. மனதில்  பட்டதை , அறிவை கொண்டு சிந்திக்காமல் செய்து விடுவது.

கழுகுக்கு வேண்டுமானால் ஒரு கிலோ மாமிசம் வாங்கித் தரலாமே. அதற்கெல்லாம் நேரம் இல்லை. தன் தொடையை அறுத்துக் கொடுத்தான்.

அது மடமை தான். அதற்குப் பெயர் கொடைமடம்.

பெண்களும் அப்படித்தான். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு துன்பம் என்றால்,  தாங்க மாட்டார்கள். எதையோ, சிந்திக்காமல் செய்து விடுவார்கள். சரியா தப்பா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

அன்பின் மிகுதியால் வரும் மடமை. கொடைமடம் போல.

ஆண்கள் அப்படி அல்ல. ஆயிரம் யோசிப்பார்கள்.

அன்புக்காக எதையும் செய்வார்கள். காதலன் கேட்டான் என்பதற்காக, தங்களையே  கொடுத்து விட்டு, பின்னால் கையை பிசைந்து கொண்டிருக்கும் பெண்கள்  எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த நேரத்தில், இவ்வளவு அன்பாக இருக்கிறானே, இவ்வளவு ஆசையாக கேட்கிறானே என்று  கொடுத்து விடுகிறார்கள்.

அது மடமை என்றால் மடமை தான். முல்லைக்கு தேர் கொடுத்ததைப் போல.

பயிர்ப்பு என்றால், பிற ஆடவர்கள் தங்களை கூர்ந்து பார்க்கும் போதோ, தொடும் போதோ உண்டாகும் ஒரு வித அருவெறுப்பு என்று சொல்லலாம்.

பயிர்ப்பு என்ற சொல், தொல்காப்பியத்தில் இல்லை. பின்னால் வந்து சேர்ந்து கொண்டது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பெண்ணின் குணங்களே மனதில் தங்கி நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

பட்டுப் புடவை, தங்க நகை, facial , லிப் stick , மனதில் நின்றது என்று சொல்லவில்லை.

அவளுடைய நிறம், உயரம், உடல் வண்ணம் இவை எல்லாம் மனதில் நின்றது என்று சொல்லவிலை.

குணம்.  அது மட்டும்தான் நினைவில் நின்றது என்கிறார்.

சரியா இருக்குமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_64.html