Thursday, November 21, 2019

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்


அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். எட்ட இருந்து, பார்த்து, இரசித்து , எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அவளிடம் போய்

"ஏங்க , ஏதாவது சொல்லுங்க. பிடிச்சுருக்குனு சொல்லுங்க, இல்லை பிடிக்கலேன்னு சொல்லுங்க...ஏதாச்சும் சொல்லுங்க" என்று சொல்கிறான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சரிங்க, பேச வேண்டாம், ஒரு புன்சிரிப்பு?"

அதற்கும் அவள் ஒன்று செய்யாமல் நிற்கிறாள்.

"சரி போகட்டும், புன்னகை கூட வேண்டாம், ஒரே ஒரு பார்வை பாருங்க...அது போதும்" என்கிறான்.

அவள் மசியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

"என்னங்க நீங்க, நான் கிடந்து தவிக்கிறேன்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க "

அவள் அப்போதும் மெளனமாக இருக்கிறாள்.

"ஏங்க, உங்க மனசு என்ன கல் மனசா ? எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல...பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு...எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா , அந்த பழி உங்க மேல தான் வரும் " என்று கூறுகிறான்.

அந்த அவன் = முருகன்.

அந்த அவள் = வள்ளி.

மேலே சொன்ன dialogue , அப்படியே கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னது.

பாடல்

மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய்  ஆயின்விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.



பொருள்


மொழி ஒன்று புகலாய் ஆயின் = ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தால்

முறுவலும் புரியாய்  ஆயின் = ஒரு புன்னகை கூட புரியவில்லை என்றால்

விழி ஒன்று நோக்காய் ஆயின் = ஒரு கண் ஜாடை கூட காட்டவில்லை என்றால்

விரகம் மிக்கு = விரகம் அதிகமாகி

உழல்  வேன் உய்யும் = துன்பப்படும் நான் தப்பிக்கும்

வழி ஒன்று காட்டாய் ஆயின் = வழி ஒன்றும் காட்டாவிட்டால்

மனமும் சற்று உருகாய் ஆயின் = எனக்காக மனம் உருக்காவிட்டால்

பழி ஒன்று நின்பால் சூழும் = உன் மேல் தான் பழி வரும்

பராமுகம் தவிர்தி என்றான். = எண்னை பார்க்காமல் இருப்பதை விட்டுவிடு என்றான்.

தெய்வீகக் காதல்தான். முருகன் , வள்ளி மேல் கொண்ட காதல். அதை விட பெரிய தெய்வீக  காதல் என்ன இருக்க முடியும்?

அந்த காதலின் பின்னாலும், காமமே தூக்கி நிற்கிறது.

"விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்" என்கிறான் முருகன்.

பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக சொல்கிறார் கச்சியப்பர். "விரகம்" தான்  இந்தப் பாடு படுத்துகிறது என்று.

சரி, அது பக்கம் இருக்கட்டும்.

பக்தர்கள் பலர் இறைவனை வேண்டுவார்கள்..."ஆண்டவா, எனக்கு முக்தி கொடு,  வீடு பேறு கொடு, மோட்சம் கொடு, உன் திருவடி நிழலில் இருக்கும் பேற்றைத் தா " என்று.

"சரி பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். புறப்படு" என்று கூப்பிட்டால் எத்தனை பேர்  போவார்கள்?

மற்றவர்களை விடுங்கள்.

மணிவாசகர் போகவில்லை. இறைவன் வலிய வந்து அழைத்தான். இவர் போகவில்லை.

காரணம், மனம் பக்குவப்  படவில்லை.

பின்னால், அதை நினைத்து நினைந்து, நைந்து நைந்து புலம்பினார். அந்த புலம்பலின் மொத்த  தொகுப்புதான் திருவாசகம்.

இறைவன் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

நமக்கு கேட்பதில்லை.

கேட்டாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிப்பு, அதுகளுக்கு ஒரு கல்யாணம், வயதான பெற்றோர், என்று இவ்வளவையும் விட்டு விட்டு எங்க போறது?

அப்புறம், இந்த இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று புலம்ப வேண்டியது.

முருகன் வலிய வந்து வள்ளியிடம் கேட்கிறான்.

அவளோ,ஒன்றும் பேசாமல் இருக்கிறாள்.

முருகன் சொல்கிறான் "இங்க பாரு...நான் வந்து கூப்பிடுகிறேன்...நீ வரவில்லை என்றால் , பழி உன் மேல் தான் வரும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது ..எனவே என் கூட வா" என்கிறான்.

பக்குவம் இல்லாத ஆன்மா. வந்திருப்பது இறை என்று அறியாமல் விழிக்கிறது.

எங்கோ இருந்த குகனுக்குத் தெரிந்தது , அருகில் இருந்த கூனிக்குத் தெரியவில்லை.

பிள்ளை பிரகாலதனுக்குத் தெரிந்தது, தந்தை இரணியனுக்குத் தெரியவில்லை.

தம்பி வீடணனுக்குத் தெரிந்தது, அண்ணன் இராவணனுக்குத் தெரியவில்லை.

என்ன செய்ய?

பக்குவம் வேண்டுமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_21.html

Monday, November 18, 2019

கந்த புராணம் - பேரினை உரைத்தி

கந்த புராணம் - பேரினை உரைத்தி 


அவளை அன்று தற்செயலாக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய  கடையில் பார்த்தான்.  வீணையின் ஒற்றை தந்தியை சுண்டி விட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு. யார் இவள் ? இவ்வளவு அழகா? சிரிக்கிறாளா இல்லை முகமே அப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்தில போய் பேசலாமா என்று நினைக்கிறான். அதற்குள் அவள் போய் விட்டாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை.

சிறிது நாள் கழித்து, மீண்டும் அவளை ஒரு நூலகத்தில் பார்த்தான். அவள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்குள் ஒரு இனம் புரியாத பரபரப்பு. பேசவும் முடியாது. அவள் இருக்கும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து கொள்கிறான்.

அவள் வாசித்து முடித்து விட்டு செல்கிறாள். அவனும் அவள் பின்னையே போகிறான்.

ஏதாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை. என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தவிக்கிறான். ஏதாவது கேட்டால் , அவள் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்றும் பயம்....

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அணுகி, தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு, அவள் பெயரை கேட்கிறான்.

அவள் பதில் சொல்லாமல் போய் விடுகிறாள்.

அப்புறம் சிறிது நாள் கழித்து, "ஏங்க , பேர் சொல்லாட்டாலும் பரவாயில்ல, நீங்க எந்த ஊருன்னாவது சொல்லுங்க" என்றான். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நாள் சென்றது, "சரிங்க , ஊர் பேர் சொல்லாட்டாலும் பரவாயில்லை, உங்க ஊருக்கு போற வழியையாவது சொல்லுங்க. ஏதாவது சொல்லுங்க "  என்று  அவளை பேச வைக்க பாடாய் படுகிறான். ....

இது ஏதோ நம்ம ஊர் +2 , காலேஜ் படிக்கும் பையன் , பொண்ணுங்க கதை மாதிரி இருக்கா?

இல்லை, இது கந்தபுராண கதை.

நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். பாடலைப் பாருங்கள்.


பாடல்


வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு  உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.


பொருள்

வார் இரும் = வாரி, வகிடு எடுக்கப்பட்ட

கூந்தல் = கூந்தலை கொண்ட

நல்லாய் = நல்ல பெண்ணே

மதி  தளர் வேனுக்கு = புத்தி தடுமாறும் எனக்கு

உன்றன் = உன்னுடைய

பேரினை உரைத்தி = பேர் என்னனு சொல்லு

மற்று  = அல்லாமல்

உன் பேரினை உரையாய் என்னின் = பேரை சொல்லமாட்டியா, சரி, அப்படினா

ஊரினை உரைத்தி = உன் ஊர் பேராவது சொல்லு

ஊரும் உரைத்திட முடியாது என்னில் = அதையும் சொல்ல முடியாது என்றால்

சீரிய = சிறந்த

நின் = உன்னுடைய

சீறுர்க்குச் = சிறப்பான ஊருக்கு

செல்வழி உரைத்தி என்றான். = போகிற வழியாவது சொல்லு  என்றான்

அது சிறந்த ஊருனு இவனுக்கு எப்படித் தெரியும்? ஊர் பேரே தெரியாது. ஆனால், அது சிறந்த ஊர் என்று எப்படித் தெரியும்?

அவள் பிறந்ததனால், அது சிறந்த ஊராகத்தான் இருக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

காதல் இரசம் கொஞ்சும் பாடல்.

இது கந்த புராணத்தில் 10149 ஆவது பாடல்.

எவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. என்னைக்கு அதை எல்லாம் படித்து இன்புறுவது?

whatsapp , youtube , facebook பாக்கவே நேரம் இல்லை...இதில் கந்த புராணத்தை  எங்கே போய்  படிப்பது ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_18.html

Saturday, November 16, 2019

கந்த புராணம் - அயன் படைத்திலன்

கந்த புராணம் - அயன் படைத்திலன் 


ஆயிரம் ஆனாலும், பெண்களுக்கு தங்கள் பிறந்த வீட்டைப் பற்றி குறை கூறினால் பிடிப்பது இல்லை. அதுவும் கட்டிய கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ சொன்னால் இன்னும் பிடிப்பது இல்லை.

அதற்காக, சில சமயம் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?

வள்ளி, தினை புனத்திற்கு காவல் இருக்கிறாள். பயிர்களை, காகம் முதலிய  பறவைகள் வந்து சேதப்படுத்தால் அவைகளை விரட்டி, பயிரை காவல் செய்கிறாள்.

அங்கே முருகன், வயோதிக அந்தணர் வேடத்தில் வருகிறான்.


வந்து, வள்ளியிடம் சொல்கிறான்

" கூர்மையான வாளைப் போன்ற கண்களை உடைய பெண்ணே, கேள். உலகில் உள்ள பெண்கள் எல்லாம் கண்டு கை தொழும் படி இருக்கும் உன்னை, இந்த பயிர்களை பாதுகாக்க வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்களே, அந்த வேடர்களுக்கு, ஆய்ந்து அறியும் அறிவை அந்த பிரம்மன் வைக்கவில்லை போலும் " என்கிறான்.

உங்கப்பா முட்டாள் னு சொன்னா, எதை பொண்ணு பொறுத்துக் கொள்வாள்? அதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் கந்தன் "உங்கப்பாவுக்கு , அந்த பிரம்மன் அறிவை வைக்க மறந்து விட்டான் போல் இருக்கு
 னு. தப்பு உங்க அப்பா மேல இல்ல, அந்த பிரம்மன் மேல்தான் என்று சொல்லுமாப் போல.....


பாடல்


நாந்தகம் அனைய உண்கண் 

நங்கை கேள் ஞாலம்  தன்னில்

ஏந்திழையார் கட்கு எல்லாம் 

இறைவியாய் இருக்கும் நின்னைப் 

பூந்தினை காக்க வைத்துப் போயினார் 

புளினர் ஆனோர்க்கு 

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

அயன் படைத்திலன் கொல் என்றான்.



பொருள்

நாந்தகம் = கூறிய கொடுவாள்

அனைய போன்ற

உண்கண் = பார்ப்பவரை உண்ண க் கூடிய கண்களைகே கொண்ட

 நங்கை கேள் = பெண்ணே !, கேள்

ஞாலம்  தன்னில் = இந்த உலகம் தன்னில்

ஏந்திழையார் கட்கு = பெண்களுக்கு 

எல்லாம் = எல்லாம்

இறைவியாய் இருக்கும்   = தலைவியாய் இருக்கும்

நின்னைப் = உன்னை

பூந்தினை = தினைப்புனம் உள்ள  வயல் காட்டை

காக்க வைத்துப்  = காவல் காக்க  வைத்து  விட்டு

போயினார் = போனார்கள்

புளினர் = வேடர்கள்

ஆனோர்க்கு = அவர்களுக்கு

ஆய்ந்திடும் = ஆராய்ச்சி செய்யும்

உணர்ச்சி ஒன்றும் = ஒரு உணர்ச்சியையும்

அயன் = பிரம்மன்

படைத்திலன் = படைக்கவில்லை

கொல்  = அசைச் சொல்

என்றான். = என்றான் (முருகன்)

கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கொஞ்சுகிறது.

இராமாயணம்,பாரதம் அளவுக்கு  கந்த புராணம் அவ்வளவாக பேசப் படுவது இல்லை.

இருந்தும், அதில் உள்ள பாடல்கள், அவ்வளவு இனிமையானவை.  எளிமையானவை.

வேறென்ன சொல்லப் போகிறேன்? மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_1.html

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன்

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன் 


ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.

இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்

"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.

பாடல்


ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.



பொருள்


ஆய்ந்து = ஆராய்ச்சி செய்து

ஏற  = ஏற்புடையதாக

உணர் = உணர்ந்து கொள்வாய்

ஐய!- = ஜனகனே

அயற்கேயும் = பிரம்மாவுக்கும் (அயன் - பிரமன்)

அறிவு அரிய = அறிந்து கொள்ள முடியாத

காய்ந்து ஏவினன் = எரித்து ஏவினான்

உலகு அனைத்தும் = உலகம் அனைத்தையும்

கடலோடும் = கடலோடும்

மலையோடும் = மலையோடும்

தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் = அனைத்தையும் தீய்த்து சுட்டு பொசுக்கும்

படைக் கலங்கள் = படை கலங்கள்

செய் தவத்தால் = அவை, செய்த தவத்தால்

ஈந்தேனும் = ஈந்த (தந்த) நானும்

மனம் உட்க. =மனம் நடுங்க

இவற்கு = இராமனுக்கு

ஏவல் செய்குனவால். =ஏவல் செய்கின்றன


அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான்.

ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.

அப்படி படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_16.html

Friday, November 15, 2019

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள் 


இங்கே யாரும் தனித்து ஆணும் இல்லை, தனித்து பெண்ணும் இல்லை.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஒரு ஆணும் (தந்தை) பெண்ணும் (தாய்) கலந்த கலப்பில் தான் நாம் எல்லாம் பிறக்கிறோம். தாயின் குணம் கொஞ்சம், தந்தையின் குணம் கொஞ்சம் இரண்டும் கலந்த கலவை நாம். நமக்குள்ளே ஆணும் உண்டு , பெண்ணும் உண்டு.

என்ன, புற உலகம், ஆணிடம் உள்ள பெண் குணத்தையும்  , பெண்ணிடம் உள்ள ஆண் குணத்தையும் மழுங்க அடித்து விடுகிறது. ஒரு சிறு பையன் அழுதால் , "சீ, என்னடா, பொம்பள புள்ளை மாதிரி அழுது கொண்டு" என்று அழுவது பெண்ணின் குணம், ஆண் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறது இந்த சமுதாயம். "என்ன ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி திங்கு திங்கு னு நடக்குற...மெல்ல நட " என்று பெண்ணுக்குச் சொல்லப் படுகிறது.

அபிராமியை ஒரு பெண்ணாகவே பார்த்த பட்டர், அவளுக்குள்ளும் இருக்கும் ஆணை காண்கிறார்.

ஆணும் பெண்ணும் கலந்த அர்த்த நாரியாக கண்டு அதிசயப் படுகிறார்.

பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நாள் கழித்து அவள் வீட்டுக்குப் போகும் பெற்றோர் அதிசயப் படுவார்கள் "நம்ம வீட்டுல அப்படி இருந்த பெண்ணா, இங்க இப்படி பொறுப்பா இருக்கிறாள், வீட்டை நிர்வாகம் பண்ணுகிறாள், கணவனை , பிள்ளைகளை, வீட்டை, வெளி உலகை, அலுவலகத்தை எப்படி நிர்வாகம் பண்ணுகிறாள் " என்று வியப்பார்கள்.

பெண் அதியசமானவள் தான்.

உலகத்தையெல்லாம் தன் காம வலையில் வீழ்த்துபவன் மன்மதன். அவனை கண்ணால் எரித்தவர் சிவ பெருமான். அப்படி காமத்தை வென்ற சிவனை மயக்கி அவன் உடலில் ஒரு பாகமான அபிராமியே, நீ அதிசயமானவள் என்கிறார்.

பாடல்

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே



பொருள்

அதிசயம் ஆன வடிவுடையாள்  = அதிசயமான வடிவம் உடையவள்

அரவிந்தம் எல்லாம் = மலர்கள் எல்லாம்

துதிசய ஆனன = துதிசெய்யும்

சுந்தரவல்லி = அழகிய வல்லிக் கொடி போன்றவள்

துணை இரதி = இரதி தேவியின்

பதி = கணவன் (மன்மதன் )

சயமானது = அவன் இது வரை  பெற்ற வெற்றிகள் எல்லாம்

அபசயமாக = தோல்வி அடையும்படி

முன் = முன்பு

பார்த்தவர்தம் = நெற்றிக்கண்ணால் பார்த்தவர், எரித்தவர்

மதி = அவருடைய புத்தியை , மனதை

சயமாக அன்றோ = வெற்றி பெற்று அல்லவா

வாம பாகத்தை = இடப் பாகத்தை

வவ்வியதே = அடைந்ததே


அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் ஆயிரம் மின்னல் ஒன்றாக இறங்கியது போன்ற ஒரு சிலிர்ப்பு. அவளை தூரத்தில் பார்த்தாலே அவனுக்குள் ஆனந்த கங்கை கரை புரண்டு ஓடும்.

அவனுடைய  கனவும், நினைவும் அவளாகவே இருந்தாள்.

காலம் செய்த கோலம், அவர்கள் பிரிந்து போனார்கள். கால நீரோட்டம் அவர்களை  வேறு வேறு திசையில் கொண்டு சென்றது.

என்றேனும் அவளை காணலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள், கணவனுடன் அவள் வந்தாள்.

அவள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோஷம்.

எப்படி அவள் இன்னொருவருக்கு மனைவியானாள் ?

அவர்களை ஒன்றாகப் பார்ப்பது அவனுக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது.

நான் பார்த்த பெண்ணா இவள்? அந்த சின்னப் பெண்ணா இவள் என்று அதிசயமாக பார்க்கிறான்.

அதிசயமான வடிவு உடையாள்....

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_78.html

திருக்குறள் - பிச்சை எடுப்பதும் ஒரு பெருமைதான்

திருக்குறள் - பிச்சை எடுப்பதும்  ஒரு பெருமைதான் 


என்னது? பிச்சை எடுப்பது ஒரு பெருமையா? ஒருத்தரிடம் போய், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பதில் என்ன பெருமை இருக்க முடியும்?  அது ஒருவனின் இயலாமையை அல்லவா காட்டுகிறது?

உண்மைதான்.

ஆனால், யாரிடம் சென்று யோசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

"மறைத்து வைக்காமல், நம் தேவை அறிந்து, நமக்கு உதவி செய்வது அவரின் கடமை என்று நினைத்து, நாம் கேட்காமலேயே உதவி செய்பவரிடம் சென்று உதவி கேட்டு நிற்பதும் ஒரு பெருமையான விஷயம்தான்" என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.


பொருள்

கரப்பிலா = கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள். கரப்பிலா என்றால் மறைத்து வைக்காமல்.

நெஞ்சின்  = மனம் உடையவர்கள்

கடன்அறிவார் = தங்களுடைய கடமையை அறிந்தவர்கள்

முன்நின்று = அவர்கள் முன் சென்று நின்று

இரப்பும் = யாசிப்பதும்

ஓர் = ஒரு

ஏர் உடைத்து. = அழகு, பெருமை உடையது


கடன் அறிவார் என்றால் நமக்கு உதவுவது அவர்கள் கடன் என்று அறிந்தவர்கள்.  யார் அப்படி இருப்பார்கள்? மிக நெருங்கிய நண்பர், நமக்கு மிக மிக வேண்டியவர்கள் இருக்கலாம். அல்லது நாம் யாருக்கோ முன்பு பெரிய உதவி செய்து இருக்க வேண்டும்.  நமக்கு இப்போது உதவி செய்வதை தங்கள் கடன் என்று  அவர்கள் நினைக்கலாம்.  அப்படி உதவி செய்து வையுங்கள்.

"உங்கப்பா அந்தக் காலத்தில எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்காருப்பா...உனக்கு செய்யாமல்  வேற யாருக்கு செய்யப் போகிறேன் "  என்று மற்றவர்கள் நம் பிள்ளைகளை பார்த்து சொல்லும் அளவுக்கு   உதவி செய்து வைத்திருக்க வேண்டும்.

"முன் நின்று" என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது, நாம் உதவி என்று கேட்க  வேண்டாம். முன் சென்று நின்றாலே போதும். அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  உதவி செய்வார்கள்.

அப்படிப் பட்டவர்கள் முன் சென்று உதவி கேட்டு நிற்பதே ஒரு பெருமை என்கிறார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்படி நீங்கள் யாருக்காவது கடன் பட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உதவி செய்வது  உங்கள் கடன் என்று நீங்கள் யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நினைத்துப் பாருங்கள்.

உதவி பெற்றிருந்தால், அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டிய போது திரும்பிச் செய்ய வேண்டும்.

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள். ஒப்புரவு என்றால் சமுதாயத்தோடு  ஒன்றி வாழ்தல்.

இன்னும் 9 குறள் இருக்கிறது அந்த அதிகாரத்தில். படித்துப் பாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_15.html


Thursday, November 14, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும் 



ஒரு ஊரில் பெரிய பஞ்சம். மழையே இல்லை. பூமி வறண்டு விட்டது. மக்கள் தவித்துப் போனார்கள். அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை, என்ன செய்வது என்று முறையிட்டார்கள். அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்" என்று கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து விட்டார்.

ஒரு வாரம் யாகம் நடந்தது. கடைசி நாள் யாகம். யாகம் முடிந்தவுடன், மழை "சோ' என்று பெய்தது. மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். அந்த துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள், அவரைப் புகழ்ந்து  பேசினார்கள்.

அப்போது அவர் சொன்னார் , "இந்த மழை என்னாலோ , இந்த யாகத்தாலோ, உங்களாலோ வரவில்லை. அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே அந்த சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது " என்றார்.

அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள்...ஒருவர் கூட குடை கொண்டு வரவில்லை, துறவியும் சேர்த்து.

அவ்வளவு நம்பிக்கை.

கடவுளை நம்பும் எவ்வளவு பேர், தாங்கள் சுவர்க்கம் போவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள்? ஸ்வர்கமோ, இறைவன் திருவடியோ ஏதோ ஒன்று. அங்கே செல்வதாக எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது?

நம்மாழ்வார் சொல்கிறார்

"இனிமேல் நரகம் என்பதே இருக்காது.  யார் நரகத்துக்கு போவார்கள். திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.

அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இனிமேல் மரணம் இல்லை, நரகம் இல்லை,கலியால் துன்பம் இல்லை என்று.

எத்தனை பேர் இதை நம்புகிறார்கள் ?

கடவுளிடம் ஒருதரம் சொன்னால் போதாதா? எனக்கு சுவர்க்கம் குடு, துன்பம் தராதே, இன்பம் தா, என்னை நல் வழியில் நடத்து என்று. தினம் தினம் போய் சொல்ல வேண்டுமா ? ஒரு தரம் கூட எதற்கு சொல்ல வேண்டும். அவருக்குத் தெரியாதா?

கடவுளுக்குத் தெரியாது என்று நம்மவர்கள் நம்புகிறார்கள்.

பாடல்


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்


பொருள்


பொலிக பொலிக பொலிக = சிறந்து விளங்குக

போயிற்று  = போயிற்று, நீங்கிற்று

வல்லுயிர்ச் சாபம்,  = இந்த உயிர்களை பிடித்த சாபம்

நலியும் நரகமும் = நரகம் நலிந்து போகும். யாரும் இல்லாவிட்டால், நரகத்தை இழுத்து மூட வேண்டியது தானே.


நைந்த = சோர்ந்து போன

நமனுக்கிங் கி = நமனுக்கு இங்கு

யாதொன்று மில்லை, = ஒரு வேலையும் இல்லை

கலியும் கெடும்  = கலி (சனி) புருஷனும் கெடுவான்

கண்டு கொள்மின் = கண்டு கொள்ளுங்கள்

கடல்வண்ணன் = கடல் போன்ற வண்ணத்தை உடையவன்

பூதங்கள் மண்மேல், = உயிர்கள் வாழும் இந்த மண் மேல்

மலியப் புகுந் = அவனே வந்து புகுந்து

திசை பாடி = இசை பாடி

யாடி = ஆடி

யுழிதரக் கண்டோம் = நடமாடக் கண்டோம்



மரண பயம் இல்லை. கலி பயம் இல்லை. நரக பயம் இல்லை.

கவலையை விடுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_14.html