Tuesday, December 24, 2019

கம்ப இராமாயணம் - எரியே அவனைச் சுடல்

கம்ப இராமாயணம் - எரியே அவனைச் சுடல் 


"எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்" என்றாள் சீதை.

சொன்னால் போதுமா? அவளுக்கு அப்படி ஒரு வலிமை இருந்ததா அல்லது சும்மா சொல்கிறாளா?

அப்படி வலிமையோடு அவள் ஏதாவது செய்து காண்பித்து இருக்கிறாளா?

அனுமன், இலங்கைக்கு வந்து பிராட்டியைக் கண்ட பின், அங்கிருந்த மரம் செடி கொடிகள் எல்லாம் உடைத்து எறிகிறான். பிறவிக் குணம் யாரை விட்டது?

அரக்கர்கள், அனுமனை பிடித்துக் கொண்டு போய் இராவணன் முன் நிறுத்துகிறார்கள். இராவணனுக்கும், அனுமனுக்கும் நீண்ட பேச்சு வார்த்தை நிகழ்கிறது. அருமையான பல கருத்துக்களைக் கொண்ட பேச்சு வார்த்தை அது. அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.

கடைசியில், அனுமனின் வாலுக்கு தீ வைத்து அவனை விரட்டி விடும்படி இராவணன் கூறுகிறான்.

அதைக் கேள்விப் பட்ட சீதை வருந்துகிறாள். ஐயோ, அனுமனுக்கு அது துன்பம் தருமே என்று அஞ்சி, தீக் கடவுளை கூப்பிட்டு, "நான் கற்புள்ளவள் என்றால், தீயே, அவனைச் சுடாதே" என்று அக்கினி கடவுளுக்கு கட்டளை இடுகிறாள். தீக் கடவுளும் அவள் பேச்சுக்கு அடி பணிகிறான். அரக்கர்கள் இட்ட தீ, அனுமனுக்கு குளிர்ந்தது.

பாடல்


‘தாயே அனைய கருணையான்
    துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர்
    நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
    நிற்கே தரெியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன்,
    எரியே அவனைச் சுடல் ‘என்றாள


பொருள்


‘தாயே அனைய = தாயைப் போன்ற

கருணையான் = கருணை கொண்டவன் (இராமன்)

துணையை = (அவனுடைய) துணையை (அனுமனை)

யாதும் = எந்த ஒரு

தகவு இல்லா = சிறப்பும் இல்லாத

நாயே அனைய = நாயைப் போன்ற

வல் அரக்கர் = கொடிய அரக்கர்கள்

நலியக் கண்டால் = துன்புறுத்துவதைக் கண்டால்

நல்காயோ? = உதவி செய்ய மாட்டாயா ?

நீயே உலகுக்கு ஒரு சான்று; = இந்த உலகில் நடக்கும் அனைத்திற்கும் நீயே ஒரு சாட்சி


நிற்கே தெரியும் = உனக்கே தெரியும்

கற்பினால் தூயேன் என்னில் = நான் கற்பினால் தூயவள் என்றால்

தொழுகின்றேன், = (உன்னை) வணகுகிறேன்

எரியே = தீயே

அவனைச் சுடல் ‘என்றாள = அவனை சுடாதே என்றாள்


முக்கிய செய்தி என்ன என்றால், நீ ஒழுக்கத்தோடு இருந்தால், இயற்கை உனக்கு கட்டுப்படும்.  தீயை குளிர வைக்கலாம். உதிக்கும் சூரியனை நிறுத்தி வைக்கலாம், காலத்தை நிறுத்தலாம் (மார்க்கண்டேயர்).

ஒழுக்கம், அறம் ...இதுதான் வாழ்க்கை என்று நம்பியது நம் இலக்கியங்கள்.

எதை எதையோ நம்புகிறோம்.

நல்லதை , உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_24.html

Sunday, December 22, 2019

கம்ப இராமாயணம் - என் சொல்லினால் சுடுவேன்

கம்ப இராமாயணம் - என் சொல்லினால் சுடுவேன்


சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு துன்பம் செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.


பாடல்

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள்


அல்லல் = துன்பம் (செய்யும்)

மாக்கள் = விலங்குகளைப்  போன்ற அரக்கர்கள் வாழும்

இலங்கை அது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல

எல்லை நீத்த =எல்லை இல்லாத

உலகங்கள் யாவும்  = இந்த உலகங்கள் அனைத்தையும்

என் சொல்லினால் சுடுவேன்; = என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படிச் செய்தால்

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று கருதி அந்த எண்ணத்தை கை விட்டேன் என்கிறாள்.

தெரிந்த பாடல் தான்.  பல முறை, பல இடங்களில் படித்த,கேட்ட பாடல்தான்.

இதில் புதிதாக என்ன செய்தி இருக்கிறது?

வீட்டில் கணவன் சில விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அது  மற்ற வேலையின் காரணமாக இருக்கலாம், அல்லது சோம்பேறித்தனமாக இருக்கலாம்.  பெரும்பாலான வீடுகளில் என்ன நடக்கிறது என்றால், மனைவி வேறு யாரிடமோ  சொல்லி காரியத்தை செய்து கொள்ள முயல்கிறாள். அப்படி செய்து கொள்ள முயலும் போது, ஏன் அவள் கணவன்  செய்யவில்லை என்ற கேள்வி வரும் அல்லவா ? அதற்கு, தன் கணவனை பற்றி  அவளே வெளிப்படையாக சொல்ல நேர்கிறது. "அவருக்கு  இதில் எல்லாம் சாமர்த்தியம் போதாது. நீங்க இதில் கெட்டிக்காரர்,  " என்று கணவனின் பலவீனத்தை  வெளிப்படையாக  மனைவி இன்னொருவரிடம் சொல்லும் போது பல சிக்கல்கள்  ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது, இன்றைய பெண் விடுதலை பற்றி பேசுபவர்கள், கணவனைப் பற்றி, வீட்டுக்கு வருபவர்களிடம் பேசும் போது, "அவருக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது" என்று பேசுகிறார்கள். அதில் ஏதோ தங்களுக்கு பெரிய பெருமை இருப்பது போல.  சில வீடுகளில் மரியாதை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் "அதுக்கு ஒண்ணும் தெரியாது" என்று.

தான் பெரியவள் என்று காட்டிக் கொள்ள, கணவனை மட்டம் தட்டுவது, அல்லது அவனை  சிறுமைப் படுத்தும் போக்கு பல இடங்களில் காணப் படுகிறது. "நீ இல்லாவிட்டால் என்ன...என்னால் சாதிக்க முடியாதா...செய்து காட்டுகிறேன்  பார்" என்று பெண்கள் கோதாவில் இறங்குகிறார்கள்.

செய்தும் காண்பிக்கிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது.  என்ன சிக்கல் என்றால்,  "நான் இல்லாவிட்டாலும் அவள் தன்னைத் தானே கவனித்து கொள்வாள் " என்று கணவன் நினைக்கத் தலைப்படுவான். அது மட்டும் அல்ல, "நான் அவளுக்கு தேவை இல்லை, என் துணை அவளுக்குத் தேவை இல்லை " என்று அவன் நினைக்கும் போது, சரி,  என்  துணை யாருக்குத் தேவைப் படுகிறதோ அங்கு நான் போகிறேன் என்று  நினைக்கிறான்.

காரியத்தை செய்து விட்டு, காதலை இழக்கிறார்கள்.

சீதைக்கு முடியாத காரியம் அல்ல.

இராமன்,  படை திரட்டி, பாலம் கட்டி, பல நாள் போர் செய்து தான் இராவணனை வென்றான்.  சீதை சொல்கிறாள், "அதெல்லாம் தேவை இல்லை, ஒரே சொல்லால் இந்த உலகம் அனைத்தையும் எரிப்பேன்" என்கிறாள். அவளுடைய ஆற்றல் அளவு கடந்தது.

ஆனாலும், அனுமன் என்ற இன்னொரு ஆடவன் மூலம் அவள் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கவில்லை.   தானும் தனித்து நின்று காரியம் செய்து கொள்ளவும்  நினைக்கவில்லை.  அப்படிச் செய்தால் ஒரு வேளை தனக்குப் பெருமை வரலாம் , ஆனால் உலகம் இராமனை இகழும். கட்டிய மனைவியை காப்பாற்றத் தெரியாத   இவன் எல்லாம் ஒரு ஆண் மகனா என்று  உலகம் இராமனை இகழும்.

இராமன் வந்து சிறை மீட்க வேண்டும் என்று சீதை தன் ஆற்றலை சுருக்கிக் கொண்டு, பிற ஆடவர் உதவியும் பெறாமல், துன்பத்தைத் தாங்கிக் கொண்டு  இருந்தாள்.

தாம்பத்தியத்தின் இரகசியம் இது.

குடும்பம் என்பது யார் பெரியவர் என்பதை நிர்ணயம் செய்யும் குஸ்தி மைதானம் அல்ல.

யாருக்கு கோப்பை கிடைக்கிறது பார்க்கலாம் என்று களம் இறங்குவது அல்ல, குடும்ப வாழ்க்கை.

இன்றைய பெண் விடுதலையாளர்கள் நினைக்கக் கூடும், "சீதை செய்தது சரி அல்ல.  அவள் பாட்டுக்கு சண்டை போட்டு, இராவணனை கொன்று போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும், அல்லது அனுமனின் தோளில் ஏறி வந்திருக்க வேண்டும் ..இது என்ன பத்தாம் பசலித்தனம்" என்று.


அது சரிதானா என்பதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

கம்பன் காட்டிய சீதை அப்படி செய்யவில்லை.

பாடம் படித்துக் கொள்வது நம் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_22.html



Friday, December 20, 2019

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்


இராவணன் இறந்து கிடக்கிறான்.  அவனை அருகில் சென்று பார்க்கிறான் இராமன். அவன் முதுகில் புண் இருக்கிறது. "அட சீ இவன் போரில் புறமுதுகு கண்டவனா " என்று இராமன் இகழ்ந்து நோக்குகிறான்.

அப்போது அங்கு வந்த வீடணன் சொல்வான். "இராவணன் முதுகில் உள்ள தழும்புகள், அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி இராவணன் ஒரு போதும் புறமுதுகு கண்டவன் அல்ல" என்று விளக்குகிறான்.

அவன் மேலும் சொல்லுவான்,

"இராமா, ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீரியனும், வாலியும் முன்பு இராவணனை ரொம்ப முயற்சி செய்து வென்றார்கள். இராவணன் தோற்றதற்கு காரணம் அவன் வீரம் இன்மை அன்று. இராவணன் பெற்ற சாபங்கள் அவனை தோல்வி அடைய வைத்தன. இப்போதும், தாயினும் தொழத் தக்க சீதை மேல் வைத்த காதல் என்ற நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத் தனத்தால் அவன் விழவில்லை " என்று.

பாடல்



'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ  நுவலற்பாலார்?


பொருள்


'ஆயிரம் தோளினாலும் = ஆயிரம் தோள்களைக் கொண்ட கார்த்த வீரியனும்

 வாலியும் = வாலியும்

அரிதின் = அரிதாக

ஐய! = இராமா

மேயின வென்றி = பெற்ற வெற்றிகள்

 விண்ணோர்  = தேவர்கள்

சாபத்தின் விளைந்த = சாபத்தால் விளைந்தவை

மெய்ம்மை; = உண்மை என்ன என்றால்

தாயினும் தொழத் தக்காள்மேல் = தாயை விட தொழுது வணங்கத் தக்க சீதை மேல்

தங்கிய காதல் = தங்கிய காதல்

தன்மை = தன்மை

நோயும் = நோயும்

நின் முனிவும் அல்லால் = உன் கோபமும் அல்லாது

வெல்வரோ = வெல்ல முடியுமா (இராவணனை)

 நுவலற்பாலார்? = யார் சொல்ல முடியும்

எவ்வளவு வீரம் இருந்தாலும், அறம் நீங்கி வாழ்ந்தால் , அந்த அறமே அழிக்கும்  என்பது நீதி.

நம் இலக்கியங்கள் அறம் அறம் என்று ஓலமிடுகின்றன.

இலக்கியங்களை படிப்பதன் நோக்கம் அவை கூறும் அறங்களை கடை பிடித்து வாழ.

இலக்கியங்கள் நம்மை நல் வழிப் படுத்த வேண்டும்.

இல்லை என்றால் அவை இலக்கியங்கள் அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_20.html

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7


நூற்கள் மூன்று வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவது "முதல் நூல்".

முதல் நூல் என்றால் என்ன?

அதற்கு விடை காண்பதற்கு முன்னால், எதற்காக பொதுவாக நூல் எழுதுகிறார்கள் என்று யோசிப்போம்.

தன் அறிவை காட்டிக் கொள்ள, பணம் சம்பாதிக்க, புகழ் அடைய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆசிரியன் நூலை எழுதுகிறான் என்றால் அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவன் படித்த புத்தகங்கள், அவனைப் பாதித்த நிகழ்வுகள் இவற்றால் உந்தப்பட்டு ஒரு நூலை எழுதுகிறான்.

இவை எதனாலும் பாதிக்கப் படாமல், தான் செய்த வினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அதன் பின் தோன்றிய தெள்ளிய அறிவில் இருந்து எழுதுவது முதல் நூல் எனப்படும்.


பாடல்

அவற்றுள் ,வினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும்


பொருள்


அவற்றுள் , = அந்த மூன்று வகையான நூல்களுள்

வினையி னீங்கி = தான் செய்த வினைகளில் இருந்து நீங்கி, விடுபட்டு

விளங்கிய வறிவின் = விளங்கிய அறிவின்

முனைவன் = முயற்சி உடையவன்

கண்டது முதனூ லாகும் = கண்டது முதல் நூலாகும்

நாம்    விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாம் செய்த வினைகள் நம்மை பற்றி தொடரும்.

அந்த வினைப் பயன்களில் இருந்து விடுபடுவது என்பது எளிய காரியம் அல்ல.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்பார் மணிவாசகப் பெருந்தகை.

வினை ஓய்ந்த பின் பிறக்கும் நூல், முதல் நூல்.

இதற்கு இலக்கணம் செய்த பெரியவர்கள்  சொல்லுகிறார்கள், முதல் நூல் என்பது  இறைவன் , உயிர்களுக்கு அளித்த நூல் என்று.

இறைவனுக்கு ஒப்பானவர்கள் எழுதிய நூல் என்று கொள்ளலாம்.

எனவே தான்,  திருக்குறள் செய்த வள்ளுவரை "தெய்வப் புலவர்" என்கிறார்.

பெரிய புராணம் செய்த சேக்கிழார் பெருமானை "தெய்வச் சேக்கிழார்" என்கிறோம்.

அந்தக் கால நூல்களை பார்த்தால் , அதில் "தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச் செய்த " என்று போட்டிருக்கும்.

அவர்களின் அருள் அந்த நூல் மூலம் வெளிப்பட்டது.

நீங்களும் நானும் எழுதினால் என்ன போடலாம் ?

"...பொருளிச் செய்த " என்று வேண்டுமானால் போடலாம்.

மற்றவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று யார் நூல் எழுதுகிறார்கள்?

திருக்குறள், கீதை, பெரிய புராணம், தேவாரம், பிரபந்தம் போன்றவை முதல் நூல்கள்.

அவை வெளிப்பட்ட நூல்கள்.  எந்த ஒரு காரணம் பற்றியும் வந்தவை அல்ல.

நாம் செய்த புண்ணியம், நம் தாய் மொழியில் பல முதல் நூல்கள் உள்ளன.

இது வரை படிக்க நேரம் இல்லாவிட்டாலும், இனியாவது நேரம் ஒதுக்கிப் படிக்க முயல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2019/12/6_20.html


Thursday, December 19, 2019

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

விவேக சிந்தாமணி -  மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்


நாம் எப்படிப்பட்ட ஆள் ? நம் அறிவின் வீச்சு என்ன? ஆழம் என்ன? நம் திறமை என்ன ? நம் ஆளுமை (personality ) என்ன ?

இதெல்லாம் நாம் எப்படி அறிந்து கொள்கிறோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.

சொல்பவர் யார் என்று பார்க வேண்டும். நம்மை விட அறிவில் தாழ்ந்தவன் நம்மை அதி புத்திசாலி என்றுதான் சொல்லுவான். அவன் சொன்னதால், அது சரி என்று ஆகி விடுமா?

ஒரு காட்டில் ஒரு கழுதை இருந்தது. அது இரவு நேரங்களில் பெரிய குரலில் கனைக்கும். அதே காட்டில் ஒரு பேய் வசித்து வந்தது. அதற்கும் பொழுது போக வேண்டாமா? அப்பப்ப இந்த கழுதை கத்துவதை கேட்க வரும். அப்படி வந்த ஒரு நாளில், அந்த பேய் சொன்னது "கழுதையே , உன் குரல் தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...நீ நன்றாகக் பாடுகிறாய் " என்றது. அதைக் கேட்ட கழுதைக்கு ஒரு மகிழ்ச்சி. நம்மை விட சிறந்த பாடகர் இந்த வையகத்தில் கிடையாது என்று எண்ணி மகிழ்ந்தது.

கழுதைக்கு பேய் கொடுத்த பட்டம் போல, நமக்கும் பலர் பட்டம் தரலாம், புகழ்ந்து சொல்லலாம்...அதை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு  பெருமை  கொள்ளக் கூடாது.  உண்மையிலேயே நம்மைவிட உயர்ந்தவர்கள் நம்மை பாராட்டும் படி வாழ வேண்டும்.

பாடல்



கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

பொருள்


கழுதை = கழுதை

கா எனக் கண்டு = "கா" என்று கத்திய பாடியதைக் கண்டு

நின்றாடிய அலகை = நின்று ஆடிய பேய்

தொழுது = அந்தக் கழுதியை வணங்கி

மீண்டும் = மீண்டும்

அக்கழுதையைத் துதித்திட = அந்தக் கழுதையை போற்றிட

அதுதான் = அந்தக் கழுதையும்

பழுதிலா = குற்றமில்லாத

 நமக்கு = நமக்கு

ஆர் நிகர் மெனப் = யார் நிகர் ஆவார்கள் என்று

 பகர்தல் = சொல்லுவது

முழுது மூடரை  = முழு மூடரை

மூடர் கொண்டாடிய முறைபோல் = இன்னொரு மடையன் பெருமையாக சொன்னது போல

"என் மகனைப் போல உண்டா ?"

"என் மகள் பெரிய திறமைசாலி "

"என் கணவர் சகலகலா வல்லவர் "

"என் மனைவி பேரழகி "

இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு திரியக் கூடாது. அவை எல்லாம் அன்பினால் சொல்லப்படுபவை, பலன் கருதி சொல்லப் படுபவை.

பெரியோரின் பாராட்டுதான் முக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_19.html


Wednesday, December 18, 2019

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6



ஒரு உணவு விடுதிக்குப் போகிறோம். அது சைவ விடுதியா, அசைவ விடுதியா, வடநாட்டு உணவகமா/தென் நாட்டு உணவகமா/ சைனீஸ் உணவகமா என்று தெரிந்தால், அங்கே என்ன கிடைக்கும் என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஒன்றும் தெரியாமல் உள்ளே போய்விட்டு, "ஐயோ, இது அந்த மாதிரி உணவகமா? " என்று திரும்பி வருவதை தவிர்க்கலாம்.

அது போல,

பலவிதமான நூல்கள் உள்ளன. பாடப் புத்தகம், நாவல், தின, வார, மாத இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழி, அறிவியல், புவியியல், கணிதம், விளையாட்டு, மதம் என்று அனைத்து துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன.

இந்த நூல்களை எப்படி வகைப் படுத்துவது ? ஒரு நூல் எந்த வகை நூல் என்று அறிந்து கொண்டால், அதன் தன்மை நமக்கு புரிபடும்.

நூலின் வகை தெரிந்தால், அதில் என்ன இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம் அல்லது மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்கிறது நன்னூல்.

அவையாவன, "மூல நூல், வழி நூல், சார்பு நூல்" என்பதாகும்


பாடல்

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . (சூத்திரம் 5)


பொருள்


முதல் = முதல் நூல்

வழி = வழி நூல்

சார் = சார்பு நூல்

பென  = என்று

நூன்மூன் றாகும்  = நூல்கள் மூன்று வகைப்படும்

சரி. அது என்ன முதல், வழி, சார்பு ?

மேலும் பார்க்க இருக்கிறோம்.


(என் குறிப்பு - தமிழ் இலக்கணம் மிக சுவையானது. ஒரு இலக்கியம் படிப்பது போல  படிக்கலாம். இருந்தும், பலருக்கு இது சலிப்பைத் தரலாம். உங்கள் எண்ணம்  என்ன என்று comment பகுதியில் பகிர்ந்து கொண்டால் மேலும் எழுதுவது பற்றி முடிவு எடுக்க  எளிதாக இருக்கும். நன்றி)

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/6.html





Tuesday, December 17, 2019

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?


இது ஒரு ஆச்சரியமான விடயம் தான். இவ்வளவு சுயநலம், பொறாமை, போட்டி, கோபம், வன்மம், பழி வாங்கும் உணர்ச்சிகள், சாதி, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் ஏன் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறது ?  எது இந்த உலகை கட்டிக் காக்கிறது?

இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு  பதில் தருகிறார் வள்ளுவப் பேராசான்.

உலகில் தீயவை எவ்வளவு மலிந்தாலும், சில பண்புடையவர்கள் இருப்பதால், அவர்களை நோக்கி இந்த உலகம் இருப்பதால், அது இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிறார்.

பாடல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்


பொருள்


பண்புடையார்ப்  = நல்ல பண்பு உள்ளவர்கள்

பட்டுண்டு = அமைந்து உள்ளது

உலகம் = இந்த உலகம்

அதுஇன்றேல் = அது இல்லாவிட்டால்

மண்புக்கு = மண்ணுக்குள் புகுந்து

மாய்வது = மாய்ந்து போவது

மன் = நிலைத்து நிற்கும் உயிர்கள்

ஒரு சமுதாயத்தில் எவ்வளவு அயோக்கியர்கள் இருந்தாலும், இந்த உலகம்  அந்த அயோக்கியர்களை விடுத்து நல்லவர்களையே   நோக்கி இருப்பதால் அது இன்னும்  அழியாமல் இருக்கிறது.


ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழில் அதிபரோ எவ்வளவோ அக்கிரமங்கள் செய்து பணம், புகழ், அதிகாரம் சேர்த்தாலும், மக்கள் அவர்களை தங்கள் முன்னோடிகளாகக் கொள்வது இல்லை.

பணம், செல்வாக்கு, அதிகாரம் இல்லாவிட்டாலும், நல்லவர்களையே போற்றுகிறது. அவர்களையே தங்கள் வழி காட்டுதலாகக் கொள்கிறது.

உதாரணம்,

இராவணன் எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவன் தான். பக்தன், வீரன், செல்வந்தன், எல்லாம் தான். இராமன் படாத பாடு பட்டான். காடு மேடு எல்லாம்  மனைவியை பறி கொடுத்து அலைந்தான்.

யாராவது, "நான் இராவணனைப் போல வாழ ஆசைப்படுகிறேன்" என்று சொல்வார்களா?  இராமனை உலகம் போற்றுகிறது. அதனால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

இரண்டாவது, வள்ளுவர் பண்புடையார் பற்றித் தான் கூறுகிறார். அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறவில்லை. அறிவை எளிதாக பெற்று விடலாம். பண்பு என்பது கடினமான விடயம்.

மனித மனம் தீயவை நோக்கி எளிதில் செல்லக் கூடியது. அதை மாற்றி நல் வழியில் செலுத்துவது என்பது கடினமான காரியம். எனவே தான் பண்புடையாரை உயர்த்திச் சொல்கிறார் வள்ளுவர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லவர்கள், பெரியவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் மிகக் குறைந்த பேரே இருக்கிறார்கள், இருந்தார்கள்.  அவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கலாம். அதை பெரிது படுத்தி, அவர்களின் மேன்மையை குறைத்து விட்டால், பின் வருங்கால சந்ததிக்கு யாரை உதாரணமாக கை காட்ட முடியும்?

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்தது ....

பாரதியார் சின்ன வயதில் போதை மருந்து உண்டார் ....

இராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் ...

என்று பெரியவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர்களின் மேன்மையை குறைத்தோம் என்றால்,  பின் அடுத்த சந்ததிக்கு யாரை  உதாரணம் காட்டப் போகிறோம்?

அவர்களை போல பண்பு உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.   அவர்களையும் விட்டு விட்டால், பின் வேறு வழி இல்லை.


வாலியைக் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று பட்டி மன்றம்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று விவாதம்.

ஒருவரை உயர்த்துகிறேன் என்று மற்றவரை தாழ்த்தி சொல்லுவது. பெரியவர்களின் வாழ்க்கையை  குறைத்து மதிப்பிடுவது....இவை எல்லாம் அறிவுக்கு வேண்டுமானால்  நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு நல்லது அல்ல.


எனவே, நல்ல நூல்களை, நல்லவர்களை குறை சொல்வதை விடுத்து அவற்றில் இருந்து  நாம் நல்லவற்றை கண்டு அதை கடை பிடிக்க முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_17.html