Tuesday, December 31, 2019

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?


நீங்கள் இது வரை படித்த புத்தகங்களின் பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இனி படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கும் பட்டியலையும் தயார் செய்து கொள்ளுங்கள். புத்தகங்கள் என்றால் படிக்கும் எல்லாமே இதில் அடங்கும். ஆடியோ புத்தகங்கள், ப்ளாகுக்குகள், மின் வடிவில் உள்ள புத்தகங்கள் எல்லாம் இதில் அடங்கும்.

எதற்காக ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும். எந்த புத்தகம் என்றாலும் சரி. அதைப் படிப்பதற்கு ஒரு நோக்கம் வேண்டும் அல்லவா?


பொழுது போக்க என்று படிக்கலாம்.

தேர்வு எழுதப் படிக்கலாம்.

என்னதான் இருக்குனு தெரிந்து கொள்ள படிக்கலாம்.

நம்மவர்கள் நான்கே நான்கு நோக்கம் தான் ஒரு புத்தகத்தின் பயன் என்கிறார்கள்.

அதாவது, அறம் , பொருள், இன்பம், வீடு பேறு இந்த நான்கை அடையத்தான் புத்தகம் எழுத வேண்டும் என்று சட்டம் வைத்தார்கள்.

இதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக புத்தகம் எழுதக் கூடாது.

தான் பணம் சம்பாதிக்க, தனக்கு புகழ் வேண்டி, வேறு யாரையாவது துதி செய்ய, அரசியல் செல்வாக்கு பெற என்று புத்தகம் எழுதக் கூடாது. அப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கவும் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் என்றால் அறத்தை போதிக்க வேண்டும். அற வழியில் பொருள் ஈட்ட சொல்லித்தர வேண்டும். அப்படி ஈட்டிய பொருளை அற வழியில் இன்பம்  துய்க்க வழி செய்ய வேண்டும்.   பின் அந்த இன்பத்தையும் கடந்து வீடு பேறு அடைய  வழி செய்ய வேண்டும்.

பாடல்

அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே. (சூத்திரம் 10)


பொருள்


அறம் = அறம்

பொருள் = பொருள்

இன்பம் = இன்பம்

வீடடைதல் = வீடு அடைதல்

நூற் பயனே = நூலின் பயன் ஆகும்

ஒரு நூலைப் படித்தால் இந்த பயன்கள் விழைய வேண்டும்.

அப்படிப்பட்ட நூல்களை, (ப்ளாகுகளை, மின் நூலகங்களை, ஒலி நூல்களை) கண்டு பிடித்துப் படியுங்கள்.

கண்டவற்றையும் படித்து நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்காதீர்கள்.

பலன் இல்லாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது.  வாசிப்பதின் பலன் இந்த அறம் , பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு என்பதாகும்.

எதையும் வாசிக்கத் தொடங்குமுன் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_31.html

Monday, December 30, 2019

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு



பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

அற்றால்  என்ற ஒரு வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றும் அது என்ன சொல்ல வருகிறது என்றும் முந்தைய  பிளாகில் பார்த்தோம். 

"பெற்றான்" என்றால் என்ன?

யார் பெற்றான்? எதற்கு பெற்றான் ? என்ற கேள்வி வரும் அல்லவா?


முன்பு  உண்ட உணவு செரித்து விட்டதா இல்லையா என்று அறிந்து பின் அளவு அறிந்து உண்டால்  அது உடம்பைப் பெற்றவன் நீண்ட நாள் வாழும் வழி செய்யும் என்று பார்த்தோம்.

உடம்பைப் பெற்றவன் என்றால் அது உடம்பை குறிப்பது அல்ல என்று தெரிகிறது அல்லவா?  

பெறுவது என்றால் அதற்கு இரண்டு பேர் வேண்டும். ஒருவர் கொடுக்க வேண்டும், மற்றவர் பெற்றுக் கொள்ள வேண்டும் 

உடம்பை கொடுத்தது யார்? அந்தக் கேள்வியை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  

பெற்றது யார்?  நான் பெற்றேன் என்றால், நான் வேறு, இந்த உடம்பு வேறு என்று தெரிகிறது அல்லவா?  நான் ஒரு பரிசை பெற்றேன் என்றால், நான் வேறு அந்தப் பரிசுப் பொருள்  வேறு என்று அறியலாம் அல்லவா.

இந்த உடம்பைப் பெற்றவன் யாரோ, அவன் நெடிது உய்க்கும் வழி என்கிறார்.

இப்போதைக்கு, உடம்பைப் பெற்றவன் ஆத்மா, உயிர், ஏதோ ஒரு சக்தி என்று வைத்துக் கொள்வோம்.  அந்த உயிர் இந்த உடம்பை பெற்றுக் கொண்டது. அது  நெடிது உய்க்கும் வழி என்று சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன?

இந்த உடம்பை வைத்துக் கொண்டு அந்த உயிர் ஏதோ செய்கிறது..."நெடிது உய்கிறது "

அப்படினா என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_30.html

Saturday, December 28, 2019

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது 


நமக்கு சிறுவயது முதலே சொல்லப் பட்டது என்ன என்றால், "சரியா வேளா வேளைக்கு சாப்பிடணும். இல்லனா வயித்துல அல்சர் வரும்"

அது சரியான ஒன்றா என்று சிந்திப்போம்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் காடுகளில் வாழ்ந்து வந்த போது, மூன்று வேளை உணவு என்பது எப்போதோ கிடைக்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கும். காட்டில் சென்று வேட்டையாடி, அதைக் கொண்டு வந்து, சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள். தினமும் மூன்று வேளை உணவு என்பது முடியவே முடியாத ஒன்று. அவர்களுக்கு எல்லாம் அல்சர் வந்ததா?

இன்றும் கூட, எவ்வளவோ ஏழைகள், பிச்சைக்காரர்கள் மூன்று வேளை உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அல்சர் முதலான நோய் வந்து விட்டதா? இல்லையே.

மற்றவர்களை விடுங்கள். நாமே, ஏதோ வேலை மும்மரத்தில் இருந்தால், நேரம் போனதே தெரியாது. சில நாட்கள் சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருந்திருப்போம். என்ன ஆயிற்று? ஒன்றும் ஆகாது.

காட்டில் உள்ள விலங்குகளைப் பாருங்கள். அவை தினம் மூன்று வேளை உணவு உண்கின்றனவா? அவற்றிற்கு எல்லாம் அல்சர் வருகிறதா? இல்லையே.

நம் உடம்பு, உணவு கிடைக்கும் போது அதை பக்குவமான வழியில் சேமித்து வைத்துக் கொள்ளும். பின் தேவைப் படும் போது சேமிப்பில் இருந்து எடுத்துக் கொள்ளும்.

மூன்று வேளை உணவு என்பது மனித வரலாற்றில் இந்த கடைசி 500 ஆண்டுகளில்  வந்த ஒன்று. அதற்கு முன் எல்லாம் நாள் கணக்கில் உணவு இல்லாமல் நம் முன்னோர்கள் அலைந்து இருக்கிறார்கள். எதிரிகள் சுத்தி வளைத்துக் கொண்டால், வெள்ளம் வந்து சூழ்ந்து கொண்டால், நெருப்பு, கொடிய விலங்குகள் என்று இவற்றில் இருந்து பாதுக்கத்துக் கொள்ள மறைந்து இருக்க வேண்டி இருந்திருக்கும். அப்போது எல்லாம் மூன்று வேளை உணவு ஏது?

கொழுப்பு என்று சொல்கிறோமே, அது நமது உடம்பு சேமித்து வைத்த சக்தி.

நாம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நம் உடம்பு, அந்த சேமித்து வைத்த கொழுப்பில் இருந்து  தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்ளும். எடை குறையும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் ஒரு முறை உணவு உண்கிறோம். அது உள்ளே சென்று, செரிமானம் ஆகி,  உணவில் உள்ள சக்தியை உடம்பு எடுத்துக் கொண்டு, தேவைக்கு அதிகமானதை  சேமித்து வைக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில்  நாம் மேலும் உணவு உட்கொள்கிறோம்.

முன்பு உண்ட உணவு சீரணம் ஆகி முடியவில்லை. அதற்குள் மேலும் உணவை ப் போடுகிறோம். உடம்பு என்ன செய்யும்? முன்பு உண்ட உணவு அறை குறையாக  சீரணம் செய்யாமல் இருப்பதை அப்படியே விட்டு விட்டு, புதிதாக  வரும் உணவை கவனிக்கப் போய் விடும். சரி, இரண்டாவது உணவை  சீரணம் செய்து கொண்டு இருக்கும் போது, மூன்றாவது உணவு.

இப்படி தள்ளிக் கொண்டே இருந்தால்,  நம் உடலில் நடக்கும் செயல் பாடுகள் பழுதாகும் தானே?


அறுவடை முடிந்த பின்னால், அடுத்த விதை விதைத்தால் என்ன ஆகும்?

இன்று மேற்கிந்திய நாடுகளில் intermittent fasting என்று புதிதாகச் சொல்கிறார்கள். நம் அய்யன் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டு சொல்லி விட்டுப் போய் இருக்கிறான்.

பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

முதலில் உண்ட உணவு நன்கு சீரணம் ஆகி, உடம்பில் முழுவதுமாக  சேர்ந்த பின்,  அடுத்த உணவை உண்ண வேண்டும். அதுவும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அப்படிச் செய்தால், அது நீண்ட நாள் வாழ வழி செய்யும்.

வேளா வேளைக்கு சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே  சாப்பிட வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து விட்டு, அடடா, மணி ஒண்ணு ஆச்சே,  என்று சாப்பிடக் கூடாது.

ஆனால் என்ன? பசிக்க வில்லை என்றால் எதற்கு சாப்பிட வேண்டும்.

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரிகளில் இப்படி உணவு இடைவேளை என்று விடுகிறார்கள். அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி நம் உடம்பை பழக்கி விட்டோம். அது இயற்கைக்கு மாறானது.

பசித்துத் தான் சாப்பிட வேண்டும்.

வள்ளுவர் வேலை மெனக்கெட்டு 7 வார்த்தைகள் கொண்டு குறள் செய்கிறார்.

கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் .

பசித்துப் புசி 


என்று.

வருகிற புத்தாண்டில் இருந்து பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு ஆரோக்கியமாக இருப்பீர்கள் தெரியுமா?

அது மட்டும் அல்ல, இந்த குறளுக்கு ஒரு பத்து பதினைந்து பாகத்தில் உரை எழுதலாம்.  இந்த ஏழு வார்த்தையில் அவ்வளவு அர்த்தச் செரிமானம் இருக்கிறது.  அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதைப் பற்றி சிந்தியுங்கள். பசித்தால் ஒழிய சாப்பிடுவதில்லை என்று முடிவு எடுங்கள். முதலில் ஒரு சில நாள் கொஞ்சம் கடினமாக இருக்கும். போகப் போக உங்கள் உடல் பழகி விடும். ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம்.

அதற்குப் பின் உங்கள் உடம்பு உங்களுக்கு நன்றி சொல்லும்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_28.html

Friday, December 27, 2019

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும்

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும் 


சொல் அல்லது பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டுமாம் ? கேட்பவர்களை கட்டிப் போட வேண்டும். கேட்காதவர்கள் கூட, அடடா , கேட்க விட்டுப் போய் விட்டதே என்று கேட்க விரும்பும் படி இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

பொருள்

கேட்டார்ப் = கேட்டவர்களை

பிணிக்கும் = கட்டிப் போடும்

தகையவாய்க் = தன்மை உள்ளதாய்

கேளாரும் = கேட்காதவர்களும்

வேட்ப = ஆசைப் படும்படி

மொழிவதாம் = சொல்லுவதாம்

சொல் = நல்ல சொல் அல்லது பேச்சு

இதற்கு பலவிதங்களில் பெரியவர்கள் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். என் அறிவு அவ்வளவு தூரம் எல்லாம் போகாது.

நம் அன்றாட வாழ்க்கையில் இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். மேலும், இந்த குறள் எப்படி நம் இனிய வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது என்று சிந்திப்போம்.


வீட்டில் நாம் அன்றாடம் கேட்கும் பேச்சு என்ன ....


'என்ன சொன்னாலும் இந்த பிள்ளைகள் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்...அவங்க நல்லதுக்குத்தானே சொல்கிறோம்...கேட்டால் என்ன "

"அவரு நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு. அவங்க அம்மா சொன்னா கேப்பாரு "

"அவளுக்கு என்ன தான் வேணும் என்றே தெரியல...எதைச் சொன்னாலும் இடக்கு மடக்கா பேசுறா...அவளோட வர வர பேசவே முடியல "

இப்படி எங்க பார்த்தாலும் சொன்னால் கேட்பதில்லை என்ற அங்கலாய்ப்பு நிறைந்து இருக்கிறது.

பிள்ளகைள் சொன்ன மாதிரி கேட்டு, கணவன்/மனைவி ஒருவரை ஒருவர் மற்றவர் சொல்வதை கேட்டு புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை எப்படி இனிமையாக இருக்கும்?

அது ஏன் நிகழ மாட்டேன் என்கிறது.

தவறு அடுத்தவரிடம் இல்லை. நம்மிடம் இருக்கிறது.

பேசத் தெரியவில்லை.

பேசத் தெரியாமல் பேசி, இருப்பதை மேலும் குழப்பம் ஆக்கி விடுகிறோம்.

கணவனோ மனைவியோ ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒன்று சொல்லப் போகிறார்கள். அது மற்றவருக்கு பிடிக்காது என்று தெரியும். சொன்னால் கேட்க மாட்டார்கள் என்றும் புரியும். அப்படி இருந்தால் கூட, "சரி என்னதான்  சொல்றா/ங்க னு கேப்போமே " என்று விரும்பும்படி பேச வேண்டுமாம்.

பேச்சு என்பது கலை. மேடைப் பேச்சு மட்டும் அல்ல. வீட்டில் பேசுவதும் கலைதான்.

கணவன்/மனைவி/மாமியார்/பிள்ளைகள்/மாமனார்/உறவினர்/நண்பர்கள்/அதிகாரிகள்/ கீழே வேலை செய்பவர்கள்/அண்டை/அயல் என்று எங்கும் பேச வேண்டி இருக்கிறது. நாம் பேசுவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவிட்டால் கூட, அவர்கள் நம் பேச்சை கேட்க விரும்பும் படி பேச வேண்டும்.

நன்றாக பேசத் தெரிந்து விட்டால், நம் வாழ்கை மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்வும் இனிமையாக இருக்கும்.

சரி. புரியுது. ஆனால், எப்படி நன்றாக பேசுவது? இனிமையாக எப்படி பேசுவது?

நல்ல பேச்சின் குணங்கள் என்ன என்ன? நம் எதிரி கூட நம் பேச்சை விரும்ப வேண்டும் என்றால் எப்படி பேச வேண்டும்?

 அது பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? அல்லது நம் இலக்கியங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_27.html



Thursday, December 26, 2019

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்


கம்ப இராமாயணம் முடியும் இடம் வந்து விட்டது. போர் முடிந்து, இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மனைவி மண்டோதரி போர்க் களம் வந்து, இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி ஆகி விட்டது. கம்பனின் எழுத்தாணி சோர்ந்து போயிருக்கும் என்று நாம் நினைப்போம்.

பத்தாயிரம் பாடல் எழுதுவது என்றால் சாதாரணமா? இப்போது மாதிரி அல்ல, எழுதி பார்த்து சரி இல்லை என்றால் காகிதத்தை கசக்கி குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பக்கத்தில் எழுதத் தொடங்கலாம். அல்லது, கணனி என்றால் எடிட் பண்ணிக் கொள்ளலாம்.

கம்பன் எழுதிய காலத்தில் ஓலைச் சுவடிதான் இருந்திருக்கும். ஒரு சோர்வும், சலிப்பும், ஆயாசமும் வந்திருக்கலாம் அல்லவா?

அது தான் இல்லை.

முதல் பாடல் எழுதிய அதே கற்பனை வளம், எழுத்து வன்மை, உணர்ச்சிகளை படம் பிடிக்கும் துல்லியம்...கொஞ்சம் கூட குறையாமல் எழுதுகிறான் கம்பன்.

சாத்தியமா? சிந்தித்துப் பாருங்கள்.

இராவணன் இறந்து கிடக்கிறான்.  இராமன், அவனை கொன்று விட்டான். இராமன் எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும், மண்டோதரிக்கு இராமனை பாராட்ட மனம் வரவில்லை. தன் கணவனை கொன்றவனை பாராட்ட எந்த மனைவிக்குத்தான் மனம் வரும். இருந்தும், அப்பேற்பட்ட இராவணனை ஒருவன் கொல்கிறான் என்றால், அவன் சாதாரண ஆளாகவும் இருக்க முடியாது.

அவள் சொல்கிறாள்


"இராவணனை கொன்றது இராமனின் அம்பு மட்டும் அல்ல. சீதையின் அழகும், அவளின் கற்பும். இராவணன் அவள் மேல் கொண்ட காதலும். சூர்ப்பனகையின் இழந்த மூக்கும், தசரதன் கொடுத்த வரமும் , இந்திரன் முதலிய தேவர்கள் செய்த தவமும், இராவணனை கொன்றது "

என்கிறாள்.

நம்மால் மறுக்க முடியுமா? கற்பனை வளம் செறிந்த அந்தப் பாடல்

பாடல்



'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!


பொருள்



காந்தையருக்கு = பெண்களுக்கு

அணி அனைய  = அணிகலன் போன்ற

சானகியார் பேர் அழகும் = ஜானகியின் பேர் அழகும்

அவர்தம் கற்பும் = அவளுடைய கற்பும்

ஏந்து புயத்து = வீங்கிய தோள்களை உடைய

இராவணனார் காதலும் = இராவணனின் காதலும்

அச் சூர்ப்பணகை = அந்த சூர்ப்பனகை

இழந்த மூக்கும், = இழந்த மூக்கும்

வேந்தர் பிரான் = அரசர்களுக்கு எல்லாம் தலைவர் ஆன

தயரதனார் = தசரதன்

பணியதனால் = பணித்ததால்

வெங் கானில் விரதம் பூண்டு = கொடிய கானகத்தில் விரதம் மேற்கொண்டு

போந்ததுவும் = இராமன் போனதுவும்

கடைமுறையே = கடைசியாக

புரந்தரனார் = இந்திரன்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! = செய்த பெரிய தவமும் ஒன்றாக வந்தது

கவிதையின் அழகு ஒரு புறம்.

மண்டோதரியின் சோகம் ஒரு புறம்.

அதெலாம் ஒரு புறம் இருக்கட்டும்.

பாடலின் அடி நாதம் புரிகிறதா?


இராவணனின் அழிவு வர வேண்டும் என்று இயற்கை எப்படி காய் நகர்த்தி இருக்கிறது என்று புரிகிறதா?


தசரன், வேட்டைக்கு போன போது ஒரு அந்தணச் சிறுவனை தவறுதலாக கொன்று விடுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர் "நாங்கள் புத்திர சோகத்தில்  உயிர் விடுவதைப் போல நீயும் சாவாய்" என்று சாபம் தருகிறார்கள்.

அதற்கு முன்னால் தயரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் தந்திருக்கிறான்.

இராமன் கூனியை வில்லால் அடிக்கிறான்.

கூனி தூண்ட, கைகேயி வரம் வேண்ட, தயரதன் இராமனை காட்டுக்கு அனுப்புகிறான்.

சூர்ப்பனகை, இராமன் மேல் ஆசைப் படுகிறாள். மூக்கு அறுபடுகிறாள். சீதை பற்றி   இராவணனுக்கு மோகம் வரும் படி பேசுகிறாள். இராவணன் சீதையை சிறை எடுக்கிறான்.

இராமன் இராவணனைக் கொல்கிறான்.

இராவணனை கொல்ல வேண்டும் என்றால் இராமன் கானகம் வந்தான்?

இதெல்லாம் என்றோ முடிவு செய்யப் பட்டுவிட்டது.நாடகம் அரங்கேறியது.

வாழ்வில், நம்மை மீறி காரியங்கள் நடக்கும் போது , இது இப்போது நடக்கிறது என்று   நினைக்கக் கூடாது. ஏதோ நாம் வேறு மாதிரி சிந்தித்து இருந்தால் , சூழ்நிலை வேறு மாதிரி நடந்திருக்கும் , நாம் தவறு செய்து விட்டோம், அல்லது மனைவி/கணவன்/மாமியார்/உடன் பிறப்புகள் தவறு செய்து விட்டார்கள்   என்று எண்ணக் கூடாது.

இப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறது. அப்படித்தான் நடக்கும்.

சிந்திக்க வேண்டிய விடயம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_26.html

Wednesday, December 25, 2019

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.

காக்கை கரவா கரைந்துண்ணும் என்பார் வள்ளுவர்.

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பார் மணிவாசகர். இறைவன் படைத்து, காத்து, கரந்து விளையாடுகிறான்.




ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)


சிலர் படிப்பார்கள். நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை பிறருக்கு சொல்ல மாட்டார்கள். எங்கே தெரிந்து கொண்டால் அவனும் நம்மை மாதிரி ஆகி விடுவானோ, நம் பெருமை குறைந்து விடுமோ என்ற பயம்.


நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது. யார் எப்படிப்  போனால் என்ன, நாம் நல்லா இருக்க வேண்டும்  என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கலாம்.


தான் கற்ற மந்திரத்தை உலகில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ள கோவில் கோபுரத்தில் மேல் ஏறி சொன்னார் இராமானுஜர். அவருக்கு அந்த உபதேசத்தை சொன்னவர்கள் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது  (மறைத்து வை) என்று  சொல்லித்தான் அனுப்பினார்கள். இராமானுஜரின்  தாயுள்ளம், எல்லோரும் உய்ய வேண்டும் என்று தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எல்லோருக்கும் சொன்னார்.


அப்படி அல்லாமல், தனக்கு மட்டும் என்று அறிவை வைத்துக் கொள்ளும் அறிவுக் கருமிகளின்  வீட்டு வாசலில் சென்று நிற்கும் படி என்னை வைத்து விடாதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.



பாடல்

கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

படிக்க கொஞ்சம் கடினம் தான். சீர் பிரிப்போம்.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசாயுத குஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

பொருள்


கரவாகிய  = மறைத்து வைக்கக் கூடிய

கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்

கடை சென்று  = வாசலில் சென்று

இரவா வகை  = கை  ஏந்தும் படி செய்யாமல்

மெய்ப்பொருள் ஈகுவையோ = உண்மையான பொருளை தருவாயாக

 குரவா = தலைவா. குரவன் என்றால் தலைவன்

குமரா = குமரா

குலிசாயுத =குலிசாயுதம் என்ற ஆயுதத்தை கையில் கொண்டவனே

குஞ்சரவா  = குஞ்சரவா

சிவயோக  = சிவ யோகத்தில் நிற்பவனே

தயாபரனே! = தயை நிறைந்தவனே

கல்வியை கற்றால் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு விளக்கமும் தரலாம்...மறைத்து வைக்கக் கூடிய கல்வி.

கல்வி, உண்மையை நம்மிடம் இருந்து மறைத்து விடும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்"  என்றார் மணிவாசகர்.

கல்விக்குள் போகக் கூடாது. போனால், அதைத் தாண்டி போக வேண்டும். எல்லை கடக்க வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின் 

என்பார் வள்ளுவப்  பேராசான்.

அறிவு இறைவனிடம் இட்டுச் செல்ல வேண்டும்.

எங்கே இட்டுச் செல்கிறது?  ஆணவத்திடம் தான் இட்டுச் செல்கிறது.

படியுங்கள். படித்ததை மற்றவர்களுக்கும் தாருங்கள். படித்தத்தின் பலன் என்ன என்று சிந்தியுங்கள்.  பயன் என் கொல் என்று வள்ளுவர் கேட்கிறார்.


interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_25.html

Tuesday, December 24, 2019

கம்ப இராமாயணம் - அளவற்ற ஆற்றல் பெற

கம்ப இராமாயணம் - அளவற்ற ஆற்றல் பெற 


நமக்கு வேண்டியவற்றை அடைய நமக்கு ஆற்றலும், திறமையும் வேண்டும். நம் ஆசையோ அளவு இல்லாதது. அவ்வளவு  ஆற்றலுக்கு எங்கே போவது?

கம்ப இராமாயணம் வழி சொல்கிறது. நேரடியாக அல்ல. சற்று மறைமுகமாக. நாம் தான் தேடி அதை கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.

இராமாயணத்தில் மிகுந்த பலம் வாய்ந்த பாத்திரம் என்றால் அது வாலிதான்.

கதாநாயகன் இராமன் மிகுந்த பலசாலி. அவனுக்கு எதிரே நிற்கும் இராவணன் இராமனுக்கு இணையான பலசாலி. வாலியோ, இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி அங்கதனின் தொட்டிலில் தொங்க விடுவானாம்.  அது மட்டும் அல்ல, வாலியின் எதிரில் நின்று போரிடாமல், இராமனே மறைந்து நின்று தான் போரிட்டான். இராமன் எய்த பாணம், வாலியின் நெஞ்சை தாக்கி உள்ளே செல்ல முயல்கிறது.  வாலி அதைத் தடுத்து, வெளியே இழுக்கிறான். இராம பாணத்தை தடுக்கும் அளவுக்குவாலியிடம் பேராற்றல் இருந்தது.

அவனுக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?


நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சில நல்ல குணங்கள் இருக்கும். சில கெட்ட குணங்களும் இருக்கும். நல்லதே மட்டும் உள்ளவர்களும் இல்லை. அனைத்துமே கெட்ட குணங்கள் என்றும் எவரும் இல்லை.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்ல குணங்கள் என்ன என்று கண்டு பிடித்து அவற்றை நாம் அடைய முயற்சி செய்து, அடையவும் செய்தால், நம்மைப் போல பல சாலி யாரும் கிடையாது.


வாலி, தன்னை எதிர்க்கும் எதிரியிடம் இருந்து அவர்களின் "நல்ல" குணத்தில், பாதியை அவன் பெற்றுக் கொள்ளும் வரத்தை பெற்று இருந்தான். அவனை யாரும் வெல்லவே முடியாது. யார் எதிரில் நின்றாலும், அவர்களின் பலத்தில் பாதி வாலியிடம் போய் விடும் என்றால் அவர்கள் எப்படி வாலியை வெல்ல முடியும்?

அப்படி, ஒவ்வொருவரின் பலத்திலும் பாதி அவனை சென்று அடைந்ததால் அவன் மிகப் பெரிய பலம் பெற்று விளங்கினான்.

பாடல்

'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;



பொருள்


'கிட்டுவார் = எதிரில் வருபவர்கள்

பொரக் கிடைக்கின் = போருக்கு என்று வந்தால்

அன்னவர் = அவர்களின்

பட்ட நல் வலம் = பெற்ற நல்ல பலத்தில்

பாகம் எய்துவான்; = பாதியை வாலி அடைவான்

எட்டு = எட்டு

மாதிரத்து = பெரிய திசைகளிலும்

இறுதி = முடிவில்

நாளும் உற்று, = தினமும் சென்று

அட்ட மூர்த்தி = சிவனின்

தாள் பணியும் ஆற்றலான்; = திருவடி தொழும் ஆற்றல் பெற்றவன்


அவனிடம் இரண்டு குணங்கள் இருந்தன.

ஒன்று, மற்றவர்களின் நல்ல குணங்களின் பாதியை பெற்றுக் கொள்வான்.

இரண்டாவது,  அவ்வளவு வலிமை பெற்ற பின்னும், அவனுள் ஒரு அடக்கம் இருந்தது. தினமும், இறைவனைத் தொழுதான்.

எனவே, ஆற்றல் பெற வேண்டும் என்றால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பார்த்து  படித்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் வரம் இல்லை. எனவே அவர்களின் நல்ல குணங்கள் தானே நம்மை அடையாது. அதனால் என்ன?  தானே வராவிட்டால், நாம் முயற்சி செய்து அடையலாம் தானே.

Inspiration and motivation என்று சொல்லுவார்கள்.  நம்மைவிட அறிவில், குணத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்து  அவர்களின் அந்த குணங்களை நாம் அடைய நாளும் முயல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், தலைக்கு இரண்டு நல்ல குணம் என்று பத்து பேரை எடுத்துக் கொண்டால், நம்மிடம் 20 நல்ல குணங்கள் வந்து விடும். அவர்கள் எல்லாம் இரண்டு நல்ல குணத்தோடு இருப்பார்கள். நாம் 20 நல்ல குணத்தை பெற்றவர்களாக இருப்போம்.

வாலி வதை சரியா தவறா என்பதை விட்டு விட்டு, நம்மை உயர்த்திக் கொள்ள  அங்கே என்ன பாடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_75.html