Monday, February 10, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்

வில்லி பாரதம் -  சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்


அம்பையை பீஷ்மர் சிறை எடுத்தார். அம்பையோ, தான் சாளுவ மன்னனை விரும்பவதாகச் சொன்னாள். 'சரி, நீ அவனையே மணந்து கொள் ' என்று பீஷ்மரும் அம்பையை சாளுவனிடம் அனுப்பி வைத்தார். மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவளை திருப்பி அனுப்பிவிட்டான்.

போக வழி இல்லாமல் தவித்த அவள், தன்னுடைய தந்தையிடமே வந்து சேர்ந்தாள். நடந்ததை எல்லாம் கூறினாள். தன் மகள் நிலை கண்டு வருந்தி, காசி மன்னனும், பீஷ்மருக்கு ஒரு தூது அனுப்பினான்.


பாடல்


தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்த னின்னலுரை
                                           தந்ததும்,
கோதை யாலுறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன்
                                         மறுத்ததும்,
பேதை கூறமன நொந்தி ரங்கியவன் மிக்க நண்பினொடு
                                        பின்னையும்,
தூதை யேவிமண முற்றி ரந்தனன்வி சும்பு லாவுநதி
                                         சுதனையே.

பொருள்

தாதை  = தந்தை

தாளினில் = கால்களில்

விழுந்து = விழுந்து

சந்தனுவின் = சந்தனு மகாராஜாவின்

மைந்த னின் = மைந்தனின் (பீஷ்மர்)

இன்னலுரை = துன்பம் தரும் செய்தி

தந்ததும் = தந்ததும்

கோதை யால் = பூ மாலையால்

உறவு கொண்டு = மணந்து கொள்ள இருந்த

கைதரல் = கை பற்றி

குறித்த = தான் மனதில் நினைத்த

கோமகன் = மன்னன் (சாளுவன் மன்னன்)

மறுத்ததும், = தன்னை மணந்து கொள்ள மறுத்ததுவும்

பேதை கூற = மகள் கூற

மன நொந்து = மனம் வாடி

இ ரங்கியவன் = இரக்கப்பட்டு அவன்

மிக்க நண்பினொடு = மிகுந்த நட்போடும்

பின்னையும், = மேலும்

தூதை யேவி = தூதை அனுப்பி

மண முற்றி ரந்தனன் = மணம் செய்து கொள்ளும் படி வேண்டினான்

விசும்பு லாவு = ஆகாயத்தில் உலவும்

நதி = கங்கை

சுதனையே. = மகனையே

கங்கா தேவியின் மகனான பீஷ்மரிடம் தன் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி  வேண்டினான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

தூக்கிச் சென்ற பீஷ்மர் வேண்டாம் என்று சாளுவனிடம் போனாள், மகள்.

சாளுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

கையை பிசைந்து கொண்டு நிற்கும் மகள். அவளின் மன நிலை எப்படி இருக்கும்.

தன் மகளின் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று வருந்தும் தந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?

பீஷ்மரை எதிர்க்கவும் முடியாது. சாளுவன் கூறுவதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. பெண் ஆசைப்பட்டதிலும் தவறு இல்லை.

பாரதம் பூராவும் இது போன்ற உணர்ச்சி மிகுந்த இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனித மனத்தின் சலனங்களை, ஆசா பாசங்களை, சிக்கல்களை  படம் பிடித்து காட்டுவதில் பாரதம், இராமாயணத்தை விட ஒரு படி  மேலே நிற்கிறது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கதை எப்படி மேலே நகர்கிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_10.html

Sunday, February 9, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - நின் மெய் தொடேன்

வில்லி பாரதம்  - சிகண்டி - நின் மெய் தொடேன் 


"நான் சாளுவனை மனதால் விரும்புகிறேன்" என்று சொன்ன அம்பையை, "சரி நீ அவனிடமே போ" என்று சொல்லி அனுப்பினார் பீஷ்மர்.

அம்பையும் சந்தோஷமாக சாளுவனிடம் சென்றாள். தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனிடம் வேண்டினாள்.

அதற்கு அவனோ "மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ அவனுக்கு உரியவள். உன்னை நான் தொட மாட்டேன். நீ பீஷ்மரிடமே போ " என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள்.


பாடல்

சென்றவம்பையைத் தீமதிச்சாலுவன்
வென்றுதெவ்வர் கவர்ந்தநின்மெய்தொடேன்
என்றிகப்ப விவனுழைமீளவும்
மன்றல்வேண்டினண் மன்றலங்கோதையாள்.


பொருள்


சென்றவம்பையைத் = சென்ற அம்பையை

தீ மதிச் சாலுவன் = தீய மதி கொண்ட சாளுவன்

வென்று = என்னை வென்று

தெவ்வர் = என் எதிரி

கவர்ந்த = கவர்ந்து சென்ற

நின் மெய் தொடேன் = உன் உடலை நான் தொட மாட்டேன்

என்றிகப்ப = என்று இகழ்ந்து திருப்பி அனுப்ப

விவனுழை = இவன் (பீஷமர்) வீட்டுக்கு

மீளவும் = மீண்டும்

மன்றல் வேண்டினள் = மணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள்

மன்றலங்கோதையாள். = மணமுள்ள மாலை அணிந்த அந்தப் பெண்



சாளுவன் செய்ததும் சரி என்றே படுகிறது. தன்னை தோற்கடித்து, தூக்கிச் சென்ற பெண்ணை எந்த மன்னன் மணம் செய்து கொள்வான்?


நான் சாளுவனை காதலிக்கிறேன், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்  என்று சொல்லி விட்டு, இப்போது திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறினால் பீஷ்மர் எவ்வாறு ஏற்பார்?

அம்பை யோசித்து இருக்க வேண்டும்.

இப்போது இரண்டும் கெட்டானாக அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்று  நடுவில்  கிடந்து அல்லாடுகிறாள்.

இனி, அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?

ஒரு நிகழ்ச்சியில் எதிர்காலமே கேள்வி குறியாகிப் போனது.

எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

பிறந்த வீட்டுக்கும் போக முடியாது. பீஷ்மரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். சாளுவனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான். மற்ற அரசர்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவள் செய்த தவறுதான் என்ன?

அவளுக்கு கோபம் வருகிறது. தன் நிலை குறித்து சுய பச்சாதாபம் வருகிறது.   இந்த ஆண்கள் தன் வாழ்வில் இப்படி விளையாடுகிறார்களே என்று ஆங்காரம் வருகிறது.

ஒரு பெண் பொங்கினால் என்ன செய்வாள் என்று பாரதம் காட்டுகிறது.

ஒரு முக்கியத்துவமும் இல்லாத அம்பை, பாரதக் கதையை புரட்டிப் போடுகிறாள். தனி ஒரு பெண்ணாக நின்று.

அர்ஜுனனும், கண்ணனும் சாதிக்க முடியாத ஒன்றை இந்தப் பெண் சாதித்துக் காட்டுகிறாள்.

பெண்ணின் கோபம் எது வரை போகும் என்று பாரதம் காட்டுகிறது.

பார்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_9.html

Friday, February 7, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று


காசி இராஜனின் மூன்று மகள்களை, பீஷ்மர் சிறை எடுத்து சென்றார் என்று பார்த்தோம்.

போகிற வழியில், சாளுவ தேசத்து அரசன் பீஷ்மரை தடுத்து போர் செய்தான்.

பீஷ்மர் அவனை வென்று, பெண்களை கொண்டு சென்றார்.

அரண்மனை சென்ற பின், அம்பை என்ற பெண் பீஷ்மரிடம் "நான் என் மனதை சாளுவ அரசனிடம் கொடுத்து விட்டேன். நான் அவனை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

பீஷ்மரும், அவளுடைய காதலை மதித்து, "விருப்பமில்லா பெண்ணை, பலவந்தமாக மணப்பது எமக்கு வழக்கம் அல்ல. எனவே, நீ உன் மனம் விரும்பிய சாளுவ மன்னனையே சென்று மணந்து கொள்" என்று கூறி அனுப்பி வைத்ததார்.

பாடல்

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.

பொருள்

சமரின் = போரில்

முந்திய = முன்னால் வந்த

சாலுவன் = சாளுவன்

மேல் மனம் = மேல் என் மனம்

அமர நின்றது = சென்று நின்றது

அறிந்துழி = அறிந்த போது

அம்பையை = அம்பை என்ற இளம் பெண்ணை நோக்கி

'எமர்களுக்கு = எங்களுக்கு

இஃது = இது

இயற்கை அன்று' = இயல்பானது அல்ல

என்னவே = எனவே

அமர் அழிந்த = போரில் தோற்ற

அவனுழைப் = அவனிடம் (சாளுவனிடம்)

போக்கினான். = அனுப்பினான்



சுயம்வரம் நடப்பதும், அதில் பெண்களை கொண்டு செல்வதும், மற்ற அரசர்கள் அதை  மறித்து போர் செய்வதும், வீரத்தை நிலை நாட்டி பெண்ணை திருமணம்  செய்து கொள்ள நினைப்பதும் வழக்கமான ஒன்று தான்.

இது வரை நடந்தது எதுவும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

பின் எங்கு தவறு நடந்தது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_7.html

Thursday, February 6, 2020

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


6 விதமான கடமைகளை முந்தைய இரண்டு குறள்களில் பார்த்தோம்.

அடுத்த குறளில் அடுத்த ஐந்து கடமைகளைப் பற்றிச் சொல்கிறார்.

அவை என்ன

பாடல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பொருள்

தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்

தெய்வம் = தெய்வம்

விருந்து = விருந்தினர்

ஒக்கல் =  சுற்றத்தார்

தான் = தான்

என்று ஆங்கு = என்று அங்கே

ஐம்புலத்தாறு = ஐந்து வகையிலும்

ஓம்பல் தலை = காப்பது தலையாய கடமை

தென் புலத்தார் என்றால் பித்ரு தேவதைகள்.

அவர்கள் யார் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு  சிந்தனை முன்னோட்டம்.

சில நாள் நமக்கு காரணம் இல்லாமல் மனம் சந்தோஷமாக இருக்கும். சில நாள், நாம் எதிர் பாராத ஏதோ ஒரு நன்மை நடக்கும். லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழலாம்.  கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த ஒன்று  கிடைத்து விடலாம். ரொம்ப நாள் மனதை அரித்துக் கொண்டிருந்த  ஒன்று சட்டென்று விலகி மனதுக்கு இதம் தரலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்து மதம் ஒரு காரணம் சொல்கிறது. நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்.

பித்தரு தேவதைகள் என்று சில தேவதைகள் இருக்கின்றன. இவர்களின் வேலை, முன்னோருக்கு நாம் செய்யும் சிரார்த்தம் போன்ற பூஜைகளின் பலனை  நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பது. நம் முன்னோர் எங்கு இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ நமக்குத் தெரியாது.  அந்த ஆத்மா  ஏதோ நாட்டில், ஏதோ ஒரு பிறவி எடுத்து இருக்கும். உடல் வேறு ஆனால், ஆன்மா ஒன்றுதான். நாம் செய்யும் புண்ணிய பலன்களை அந்த  ஆன்மாவுக்கு  இப்போதுள்ள புதிய உடலில் இந்த பித்ரு தேவதைகள் கொண்டு சேர்ப்பார்கள்  என்பது நம்பிக்கை.

இன்று உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத நன்மை நடக்கிறது என்றால்,  உங்கள் வாரிசு   யாரோ, உங்களுக்காக தர்ப்பணம் செய்து இருக்கிறான் என்று பொருள். அவன் செய்த புண்ணிய பலன் உங்களுக்கு எதிர்பாராத நன்மையாக வந்து சேர்ந்து இருக்கிறது.

நூலிழையில் வண்டியில் அடிபடுவதில் இருந்து தப்பி இருப்பீர்கள்.

எதிர்பாராத பதவி உயர்வு, பட்டம், பணம், சொத்து, என்று ஏதோ நன்மை வந்து சேர்ந்து இருக்கும்.

இது நம்பிக்கை.

இந்த பிதிருக்கள் தென் திசையில் இருப்பார்கள் என்பது மற்றுமொரு நம்பிக்கை.

இல்வாழ்வான், தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.

அடுத்தது, "தெய்வம்".

குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டும்.

பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள்.

அடுத்தது "விருந்தினர்".

விருந்து இரண்டு வகைப்படும் என்கிறார் பரிமேல் அழகர்.  அறிந்து வருவது, அறியாமல் வருவது.  முன்ன பின்னை தெரியாமல், புதிதாக வருபவரும் விருந்தினர் எனப்படுவர். 

அடுத்தது, "சுற்றம்". அது பற்றி ரொம்ப சொல்ல வேண்டாம்.

கடைசியில் ஒரு பெரிய வெடி குண்டைப் போடுகிறார் வள்ளுவர்

"தான்"

நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னார் என்று இருக்கின்ற  செல்வத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு, நம்மை கவனிக்காமல் இருந்து விடக் கூடாது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பல வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் நலம் பேணுவது கிடையாது. கேட்டால், உடற் பயிற்சி செய்ய, யோகா கிளாஸ் செல்ல எல்லாம் எங்க நேரம்  இருக்கிறது? காலையில் எழுத்தால் படுக்கிற வரைக்கும் நேரம் சரியா இருக்கு  என்று உடலை காத்துக் கொள்வது இல்லை.

ஆண்களும் அப்படித்தான்.  அரக்க பரக்க ஓடுகிறார்கள். வேலை நிமித்தம் சதா சர்வ காலமும் உழைக்கிறார்கள்.  உடலை பேணுவது இல்லை.

உடலை மட்டும் அல்ல, அறிவையும்  வளர்ப்பது கிடையாது.

தன்னை தான் காத்துக் கொள்வதும் இல் வாழ்வான் கடமையுள் ஒன்று என்கிறார் வள்ளுவர்.

இந்த பதினொரு கடமைகளை செய்யத் தயார் என்றால், திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் என்பதை ஏதோ ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும்  அந்தரங்க விஷயம் என்று நம் சமுதாயம் நினைக்கவில்லை.

அதை ஒரு சமுதாய கடமையாகப் பார்த்தது.

எந்த அளவுக்கு நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் !


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_6.html

Wednesday, February 5, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?


முந்தைய குறளில், "இயல்புடைய மூவருக்கு நல்லாற்றின் நின்ற துணை" என்று  பார்த்தோம்.

 வள்ளுவர் அடுத்த மூன்று கடமைகள் பற்றி சொல்லுகிறார்.

பாடல்


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பொருள்

துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும்

துவ்வா தவர்க்கும் = துவ்வாதவர்க்கும்

இறந்தார்க்கும் = இறந்தார்க்கும்

இல்வாழ்வான் = இல்வாழ்வான்

என்பான் துணை = என்பவன் துணையாக நிற்க வேண்டும்.

போன குறளில் துறவிகள் பற்றி சொல்லி விட்டாரே, மீண்டும் ஒரு முறை ஏன் துறந்தாரைப் பற்றி சொல்ல வேண்டும் ?

இங்கே துறந்தார் என்பது, காக்கப் பட வேண்டியவர்களால் காக்காமல் விடப் பட்டவர்கள் என்பதாகும். "களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்"  பரிமேல் அழகர்.

கலைக்கண் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். அதற்கு அர்த்தம், "அன்பு காட்டுதல், அரவணைத்தல்" என்று பொருள்.

"ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே" என்பது பிரபந்தம். உன்னைத் தவிர என்னிடம் அன்பு செய்ய யார் உள்ளார்கள் என்று உருகுகிறது பிரபந்தம்.


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே


ஒரு வீட்டில், பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல் விட்டு விட்டால்,  இல் வாழ்வான் அவர்களை காக்க வேண்டும். காரிலோ விமானத்திலோ செல்லும் போது பெற்றோர் விபத்தில் இறந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பிள்ளைகள் அனாதைகள் ஆகி விடலாம். யாரோ ஒரு இல் வாழ்வான் அந்தப் பிள்ளைகளை தத்து எடுத்து காக்க வேண்டும். அது அவன் கடமை.

"துவ்வாதார்" என்றால்  ஏழைகள். விதி வசத்தால் ஏழையாகிப் போனவர்களை இல் வாழ்வான் காக்க வேண்டும்.

இறந்தார்....இறந்தவர்களை எப்படி காக்க முடியும்? தன் வீட்டிற்கோ, அல்லது தெருவிற்கோ வந்து அனாதையாக இறந்தவனை இல் வாழ்வான் நல்லடக்கம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய நீர் கடன்களை செய்ய வேண்டும்.

ஜடாயு என்ற பறவைக்கு இராமர் நீர் கடன் செய்தார். இராமர் நீர் கடன் செய்யாவிட்டால் யாரும் ஏன் செய்யவில்லை என்று கேட்கப் போவதில்லை.

அனாதை பிணமாக விட்டு விடக் கூடாது.

மிகப் பெரிய சமுதாய சிந்தனை இது.

ஒரு சமூகம், அதில் உள்ள நலிந்தவர்களை கை தூக்கி விட வேண்டும் என்று  விதி செய்து வைத்தார்கள் நம்மவர்கள்.

இன்று கம்யுனிசம், சோசியலிசம், என்றெல்லாம் பொது உடமை பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும். நம் சமுதாயம், தனி உடமையை ஆதரித்தது அதே சமயம், தனி மனிதனுக்கு கடமைகளை விதித்தது.

உன் பணத்தை வைத்துக் கொண்டு நீ மட்டும் அனுபவிக்காதே. துன்பப் படுபவர்களுக்கு உதவி செய். அதற்கு நீ தயார் என்றால், திருமணம் செய்து கொள். இல்லை என்றால், தனி மனிதனாகவே இருந்து விட்டுப் போ, என்றது நம் சமுதாயம்.


நம் தெருவில் வந்து இறந்தவனுக்கு நீர் கடன் செய்ய வேண்டும், நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு ஒரு குறள் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு சமுதாய அக்கறை இருந்திருக்க வேண்டும்.

எந்த அளவுக்கு தனிமனிதனை சமுதாயத்தோடு இணைத்திருக்கிறார்கள் என்று  சிந்திக்க சிந்திக்க வியப்பாக இருக்கிறது அல்லவா ?



சித்தாப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள் அவர்கள் பெற்றோரை காக்கவில்லை என்றால், நீ அவர்களை காப்பாற்று. சோறும் நீரும் கொடு என்று சட்டம் வகுத்தது.  யார் கண்டது, நாளை உன் பிள்ளை உன்னை காப்பாற்றாமல் கை விடலாம். எங்கு போய் நிற்பாய்?  ஒரு சமுதாய முன்னோடியாக திகழ் என்று விதி செய்தது நம் நாகரீகம்.

கல்யாணம் செய்து கொள்வது ஏதோ இன்பமாக பொழுது போக்க என்று நினைத்ததுக் கொள்ளக் கூடாது. மிக மிக பொறுப்பு வாய்ந்த செயல் அது.

இன்னும் வருகிறது.

6 கடமைகள் சொல்லியாகி விட்டது. இன்னும் ஐந்து இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_5.html

Tuesday, February 4, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?


திருமணம் செய்வது  என்னவோ உடல் இன்பத்துக்கும், சம்பாதிக்க ஒருவர், சமைக்க ஒருவர் என்று வைத்துக் கொண்டு நாட்களை ஓட்டவோ அல்ல.  திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பதினோரு கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால் திருமணம் செய்து கொள் என்கிறார் வள்ளுவர்.

அதில் முதல் மூன்று கடமை பற்றி முதல் குறளில் கூறுகிறார்.

பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் = இல்லத்தில் இருந்து வாழ்வான்

என்பான் = எனப்படுபவன்

இயல்பு உடைய = இயற்கையான

மூவர்க்கும் = மூன்று பேருக்கும்

நல்லாற்றின் = நல்ல வழியில்

நின்ற துணை. = துணை நிற்பான்

யார் அந்த மூன்று பேர்? அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? ஏன் உதவி செய்ய வேண்டும் ? நான் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு எதற்கு உதவி செய்டய வேண்டும்?

இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழும் அல்லவா? எப்படி விடை காண்பது?  குறளில் அவ்வளவுதான் இருக்கிறது.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரை இருக்கிறதே, அற்புதம். அந்த உரை இல்லாமல், நம்மால் இந்த குறளை புரிந்து கொள்ளவே முடியாது.

அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யார் அந்த மூன்று பேர்?

தமிழர்கள் வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள்.

பிரம்மச்சரியம்
இல்லறம்
வானப்ரஸ்தம்
துறவறம்

என்ற நாலு நிலைகள்.

இதில் இரண்டாவது நிலை இலவாழ்க்கை. இல்வாழ்வான் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

புரிகிறதா யார் அந்த மூவர் என்று?

பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவன், துறவறம் மேற்கொண்டவன். இந்த மூன்று பேருக்கும் இலவாழ்வான் உதவி செய்ய வேண்டும்.


பிரமச்சாரி என்பவன் திருமணம் முடிப்பதற்கு முந்தைய நிலையில் உள்ளவன். படித்துக் கொண்டு இருப்பவன்.

வானப்ரஸ்தம் என்பது, இல்லற வாழ்வில் இருந்து ஓய்வு பெரும் காலம். குடும்பப் பொறுப்பை மகன்/மகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவைப் படும் போது உதவி செய்து கொண்டு, தினசரி வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது. துறவறம் என்பது வீடு வாசலை துறந்து, கானகம் செல்வது.

மூணு பேர் தெரியுது...அது என்ன இயல்புடைய மூவர்?

அப்படினா, இயற்கையாக அந்த நிலைகளில் உள்ளவர்.

அதாவது, படிக்கும் வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவன். நான் 60 வயது வரையிலும்  கல்யாணம் பண்ணாமல் இருப்பேன் என்று ஒருவன் இருந்தால், அவன்  இயல்பான பிரமச்சாரி அல்ல. அவனுக்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.  அதே போல், கல்யாணம் முடிந்த ஓரிரு வருடங்களில் ஒருவன்  துறவியாகப் போகிறேன் என்று கிளம்பினால் அவன் இயல்பான துறவி  அல்ல. அவர்களைப் போன்றவர்களை விட்டு விட்டு, இயற்கையாக  அந்தந்த  நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி இயல்புடைய மூவர் யார் என்று தெரிகிறது.


இந்த "நல்லாற்றின்" நின்ற துணை என்று சொல்கிறாரே,  அதுக்கு என்ன அர்த்தம்?

ஆறு என்றால் வழி. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள்.

நல்லாற்றின் என்றால், நல்ல வழியில் நிற்க துணை புரிய வேண்டும் என்கிறார்.

அதாவது, ஒரு பிரமச்சாரி வந்து, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் உணவு தாருங்கள்  என்று கேட்டால், இல்லறத்தில் இருப்பவன் தர வேண்டும். மாறாக,  எனக்கு தண்ணி அடிக்க வேண்டும் போல இருக்கு, கொஞ்சம் பணம் தந்தாள் தாருங்கள் என்று கேட்டால் தர வேண்டாம்.  அது நல்ல வழி அல்ல.

நல்ல வழி என்றால் அவர்கள் அற வழியில் செல்ல உதவ வேண்டும். தவறான வழியில் செல்ல அல்ல. அவரவர்களுக்கு உரிய அற வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள அப்பா/அம்மா/மாமனார்/மாமியார் - வனப்ரஸ்தம் அடைந்தவர்கள்  அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, உடை போன்றவை அளிக்க வேண்டும்.  எனக்கு 4 மணி நேரம் டிவி சீரியல் பார்க்க வேண்டும் என்று   கேட்டால், அதற்கு உதவி செய்ய வேண்டியது  இல்லை. அது நல்லாற்றில் வராது.

சரி, யாரோ ஒரு ஏழை மாணவன் வந்து உதவி  கேட்டான், கொஞ்சம் பணம் கொடுத்தோம்...அவ்வளவுதானே என்றால் இல்லை.

அவன் நல்ல வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும் என்றால், அவன் தவறான வழியில் போவதை கண்டித்து தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

வீட்டில் வயதில் மூத்தவர்கள் தவறான ஒன்றை செய்வார்கள் என்றால் அதை கண்டித்து நிறுத்தும் அதிகாரம் உதவி செய்யும் இல் வாழ்வானுக்கு உண்டு.

துறவி ஒருவன் பணம் மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு அவற்றை தவறான வழியில் செலவழிப்பான் என்றால், அதை தடுக்கும் கடமையும் இல் வாழ்வானுக்கு உண்டு.  ஏதோ பணம் கொடுத்தோம், அதற்கப்புறம் எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விடச்சொல்லவில்லை.

சரி, எவ்வளவு உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது வரை முறை இருக்கிறதா?

இருக்கிறது. அவர்கள் நோக்கம் நிறைவேற உதவி செய்ய வேண்டும். படிக்க உதவி கேட்டால், படித்து முடிக்க உதவி செய்ய வேண்டும்.


இது முதல் மூன்று கடமை.

மீதியும் வருகிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_4.html

Sunday, February 2, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே 


ஞானம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையின் தரிசனமா? ஏதோ பள்ளி, கல்லூரியில் கொஞ்ச நாள் படித்தோம். அப்புறம் கொஞ்சம் புத்தகங்கள் வாசித்து இருப்போம். நம் மொத்த ஞானமும் அதில் இருந்து வந்ததுதான். அனுபவ ஞானம் என்பது மெல்லமாக வருவது. ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது. அதை பெரிதாக கொள்ள முடியாது. நாம் பெற்ற ஞானம் மிக மிக சிறியது. அதை வைத்துக் கொண்டு நாம் ஏதோ பெரிய ஞானி போல் நினைத்துக் கொள்கிறோம்.

அந்த சொற்ப ஞானத்தை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல் பேசுகிறோம், செய்கிறோம். நம்மை விட கொஞ்சம் குறைவாக தெரிந்தவர்களை ஏளனம் செய்கிறோம்.

சரி, நம் ஒழுக்க முறைகளாவது சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் சரி இல்லை. நம் தேவைக்கு ஏற்ப ஒழுக்க முறைகளை மாற்றிக் கொள்கிறோம். கேட்டால் "வாழ்க்கையோடு அனுசரித்துப் போக வேண்டும் " என்று எல்லாவற்றையும் நம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்கிறோம்.

அகத் தூய்மைதான் இல்லை. புறத் தூய்மையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அழுக்கான உடம்பு. வியர்வை சுரந்து கொண்டே இருக்கும் உடல்.

இந்தப் பிறவி மேல் என்ன ஆசை? பொய்யான ஞானம், பொல்லாத ஒழுக்க முறை, அழுக்கான உடம்பு. மீண்டும் பிறந்தாலும் இது தான் கிடைக்கப் போகிறது. இதில் இருந்து விடு பெற முடியாதா?

நம்மாழ்வார் வருந்துகிறார். இந்தப் பிறவியால் என்ன பயன்? இனியும் இது தொடராமல் இருக்க அருள் செய்வாய் என்று பெருமாளை வேண்டுகிறார்.

பாடல்


பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே. (2478)

பொருள்

பொய்ண்ணின்ற = பொய் நின்ற. பொய் நிறைந்த

ஞானமும்  = ஞானமும்

பொல்லா வொழுக்கும் = பொல்லாத ஒழுக்கமும்

அழுக்குடம்பும், = அழுக்கு உடம்பும்

இந்நின்ற = இப்படி இருக்கும்

நீர்மை  = இயல்பு

இனியா முறாமை = இனி அமையாமை உறாமை, இனி அமையாமல்

உயிரளிப்பான் = உயிர்களை அளிப்பவன்

எந்நின்ற யோனியு மாய்ப் = பல பிறப்புகளை கொண்டு

பிறந் தா (ய்) = அவதாரம் செய்தாய்

யிமை யோர்தலைவா = இமையோர் தலைவா, தேவர்களின் தலைவனே

மெய்நின்று கேட்டரு ளாய் = என்னுடைய உண்மையான (விண்ணப்பத்தை) கேட்டு அருளாய்

அடியேன் = அடியேன்

செய்யும் = செய்யும்

விண்ணப்பமே. = விண்ணப்பமே


இது தான் உண்மையான விண்ணப்பம். எனக்கு பணம் கொடு, என் பிள்ளைக்கு நல்ல வேலை வாங்கி கொடு என்பதெல்லாம் எந்த விண்ணப்பத்தில் சேரும்   நாம் யோசித்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post.html