Sunday, February 9, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - நின் மெய் தொடேன்

வில்லி பாரதம்  - சிகண்டி - நின் மெய் தொடேன் 


"நான் சாளுவனை மனதால் விரும்புகிறேன்" என்று சொன்ன அம்பையை, "சரி நீ அவனிடமே போ" என்று சொல்லி அனுப்பினார் பீஷ்மர்.

அம்பையும் சந்தோஷமாக சாளுவனிடம் சென்றாள். தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனிடம் வேண்டினாள்.

அதற்கு அவனோ "மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ அவனுக்கு உரியவள். உன்னை நான் தொட மாட்டேன். நீ பீஷ்மரிடமே போ " என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள்.


பாடல்

சென்றவம்பையைத் தீமதிச்சாலுவன்
வென்றுதெவ்வர் கவர்ந்தநின்மெய்தொடேன்
என்றிகப்ப விவனுழைமீளவும்
மன்றல்வேண்டினண் மன்றலங்கோதையாள்.


பொருள்


சென்றவம்பையைத் = சென்ற அம்பையை

தீ மதிச் சாலுவன் = தீய மதி கொண்ட சாளுவன்

வென்று = என்னை வென்று

தெவ்வர் = என் எதிரி

கவர்ந்த = கவர்ந்து சென்ற

நின் மெய் தொடேன் = உன் உடலை நான் தொட மாட்டேன்

என்றிகப்ப = என்று இகழ்ந்து திருப்பி அனுப்ப

விவனுழை = இவன் (பீஷமர்) வீட்டுக்கு

மீளவும் = மீண்டும்

மன்றல் வேண்டினள் = மணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள்

மன்றலங்கோதையாள். = மணமுள்ள மாலை அணிந்த அந்தப் பெண்



சாளுவன் செய்ததும் சரி என்றே படுகிறது. தன்னை தோற்கடித்து, தூக்கிச் சென்ற பெண்ணை எந்த மன்னன் மணம் செய்து கொள்வான்?


நான் சாளுவனை காதலிக்கிறேன், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்  என்று சொல்லி விட்டு, இப்போது திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறினால் பீஷ்மர் எவ்வாறு ஏற்பார்?

அம்பை யோசித்து இருக்க வேண்டும்.

இப்போது இரண்டும் கெட்டானாக அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்று  நடுவில்  கிடந்து அல்லாடுகிறாள்.

இனி, அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?

ஒரு நிகழ்ச்சியில் எதிர்காலமே கேள்வி குறியாகிப் போனது.

எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

பிறந்த வீட்டுக்கும் போக முடியாது. பீஷ்மரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். சாளுவனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான். மற்ற அரசர்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவள் செய்த தவறுதான் என்ன?

அவளுக்கு கோபம் வருகிறது. தன் நிலை குறித்து சுய பச்சாதாபம் வருகிறது.   இந்த ஆண்கள் தன் வாழ்வில் இப்படி விளையாடுகிறார்களே என்று ஆங்காரம் வருகிறது.

ஒரு பெண் பொங்கினால் என்ன செய்வாள் என்று பாரதம் காட்டுகிறது.

ஒரு முக்கியத்துவமும் இல்லாத அம்பை, பாரதக் கதையை புரட்டிப் போடுகிறாள். தனி ஒரு பெண்ணாக நின்று.

அர்ஜுனனும், கண்ணனும் சாதிக்க முடியாத ஒன்றை இந்தப் பெண் சாதித்துக் காட்டுகிறாள்.

பெண்ணின் கோபம் எது வரை போகும் என்று பாரதம் காட்டுகிறது.

பார்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_9.html

2 comments:

  1. தொடர் கதை மாதிரி கடைசியில் வாசகர்களை ஒரு suspense ல் நிறுத்தி விடுகிறீர்கள்.

    ReplyDelete
  2. ஏன் பீஷ்மர் தன் இளைய தம்பிக்கு அம்பையை மணம் முடிக்கவில்லை?

    ReplyDelete