Friday, February 28, 2020

ஆத்திச் சூடி - உயர்வது எப்படி

ஆத்திச் சூடி  - உயர்வது எப்படி 


நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அது மட்டும் தெரிஞ்சிட்டா போதும். வேற என்ன வேண்டும்.

ஆனால், அந்த பட்டியல் பெரிசா இருக்குமோ?

கடின உழைப்பு, நேர்மை, நீதி, நாணயம், பெரிய மனிதர்கள் தொடர்பு, கொஞ்சம் மூலதனம் என்று நீண்டு கொண்டே போகுமோ?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒளவையார் ஒரு எளிய வழி சொல்கிறார்.

நாம் உயராமல் இருக்கக் காரணம் நம்மிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. நம்மிடம் நிறைய கெட்ட குணங்கள் இருப்பதுதான் காரணம் என்று.

யோசித்துப் பார்ப்போம்.

ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வீணாக செலவழிக்கிறோம்?

டிவி, whatsapp , facebook , youtube , தொலைபேசியில் அரட்டை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன்  பயனற்ற உரையாடல், வீடியோ கேம்ஸ், குப்பையான நாவல்கள், வார இதழ்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் அரட்டை, நண்பர்களோடு ஊர் சுற்றுவது ....இப்படி ஒரு நாளில் பொழுதை எவ்வளவு வீணாகக் கழிக்கிறோம்?

அது ஒரு பக்கம் இருக்க

காப்பி, டீ, புகை பிடித்தல், மது, அளவுக்கு அதிகாக உண்பது, இனிப்பு, எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, நொறுக்குத் தீனி, என்று   எத்தனை தீய உணவு பழக்கங்கள் இருக்கிறதோ அத்தைனயும் நம்மிடம் இருக்கிறது.

காலையில எந்திரிச்சவுடன் ஒரு காப்பி உள்ள போனாத்தான் வேலை நடக்கும் னு பெருமையா வேறு சொல்லிக் கொள்வது.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அளவுக்கு அதிகமான தூக்கம், சோம்பேறித்தனம், செய்ய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது (procrastination ), முடிவு எடுக்காமல் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவது போன்ற தீய பழக்கங்கள் இன்னொரு பக்கம்.

அதை இன்னொரு பக்கம் வையுங்கள்.

பொறாமை, கோள் சொல்வது,  வதந்திகளை பரப்புவது (யோசிக்காமல், சரி பார்க்காமல்  whatsapp செய்திகளை அப்படியே மனம் போன போக்கில் மற்றவர்களுக்கு  அனுப்புவது. இதில் "forwarded as received" னு ஒரு disclaimer வேற,  கோபம் கொள்வது, மற்றவர்கள் சொல்வதை , செய்வதை சகித்துக் கொள்ளாமல் இருப்பது,  நான் சொல்வதே சரி என்று முரண்டு பிடிப்பது,  சிண்டு முடிவது, போட்டுக் கொடுப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, குடும்பத்தை பிரிப்பது ....

இப்படி கொஞ்சம்  தீய பழக்கங்கள்.


பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவை எல்லாம் விட்டு விட்டால் எப்படி இருக்கும்?

இந்த தீய பழக்கம் எதுவுமே இல்லாமல் இருந்தால் நாம் எப்படி இருப்போம்?

நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது  இந்த தீய பழக்கங்கள் தான்.

தீய பழக்கம் என்றால் ஏதோ திருடுவது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது  என்பது மட்டும் அல்ல.

நமக்கு நாமே தீங்கு செய்துகொள்வதும் தீய பழக்கம் தானே.

வீணாக பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பதும் தீய பழக்கம் தானே.

இவற்றை எல்லாம் களைந்து விட்டால் நாம் எவ்வளவு சிறந்தவர்களாக இருப்போம்  என்று எண்ணிப்பார்ப்போம்.

இதைத்தான் கிழவி இரண்டே வார்த்தையில்  சொல்லிவிட்டுப் போனாள்

"கீழ்மை யகற்று"

இதெல்லாம் கீழ்மையானதோ, அவற்றை அகற்று.

கீழானது எல்லாம் நம்மை விட்டு விட்டு போய் விட்டால், நாம் தானாகவே உயர்ந்து விடுவோம்.

கீழான குணங்களை வைத்துக் கொண்டு, எவ்வளவு தான் முயன்றாலும், முன்னேற முடியாது.

களை எடுத்தால்தான் பயிர் வளரும்.

களை இருக்கும் போது எவ்வளவு நீர் ஊற்றி, உரம் போட்டாலும், பயிர் நன்றாக வளராது.

அட்டாங்க யோகத்தில் முதல் அங்கம் "இயமம்" எனப்படுவது.

இயமம் என்றால் "தீய பழக்கங்களை, கீழான பழக்கங்களை விட்டு விடுவது".

நாளுக்கு நாலு பாக்கெட் புகை பிடித்துக் கொண்டு நான் பிராணாயாமம் செய்கிறேன் என்றால் அதில்  ஏதாவது பலன் இருக்குமா?

ஒரு பட்டியல் போடுங்கள்.

உங்களிடம் உள்ள தீய, கீழான பழக்கங்கள் என்னென்ன என்று.

ஒவ்வொன்றாக விட்டு விட முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கீழான பழக்கம் உங்களை விட்டு போகும் போதும், எவ்வளவு சுகமாக இருக்கிறது  என்று பாருங்கள்.

கீழ்மை அகற்று.

வாழ்வில் உயர இதை விட சுருக்கமா எப்படி சொல்ல முடியும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_28.html

1 comment:

  1. இரண்டு வார்த்தைகள் தான்.அற்புதமான விளக்கம்!

    ReplyDelete