Saturday, February 22, 2020

ஆத்திச்சூடி - அழகு

ஆத்திச்சூடி - அழகு 

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம். போகும் போது மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசு வாங்கிக் கொண்டு போகிறோம். அந்த பரிசுப் பொருளை அப்படியேவா கொடுக்கிறோம்? அதை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, அழகான காகிதத்தில் சுத்தி, அதற்கு மேல் ஒரு வண்ணை ரிப்பன் வைத்து கட்டி, ஒரு சிறு கார்டில் நம் பேரை எழுதித்தானே தருகிறோம். 

எப்படியும், அதை எல்லாம் கிழித்து குப்பையில் போடப் போகிறார்கள். பின் எதற்கு வேலை மெனக்கெட்டு இவ்வளவு வேலை?

இரவு, வேலை எல்லாம் முடிந்து படுக்கப் போகிறோம். படுக்கை அழகாக விரித்து, தலையணை எல்லாம் ஒழுங்காக வைத்து, அறை சுத்தமாக இருந்தால், மனதுக்கு ஒரு சுகம் இருக்கும் இல்லையா. அதை விட்டு விட்டு, கசங்கிய படுக்கை விரிப்பு, அழுக்கான தலையணை உறை, படுக்கை மேல் ஓரிரண்டு புத்தகங்கள், ஒரு உணவு உண்ட தட்டு என்று இருந்தால் படுக்க மனம் வருமா?

அலுவலகத்தில் ஒரு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் தயார். அதை அப்படியே அனுப்புவதை விட, அதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை எல்லாம் சரி பார்த்து, எழுத்தின் அளவு (font size), எழுத்தின் தன்மை (font ), alignment , எல்லாம் சரி பார்த்து, பத்தி (paragraph ) பிரித்தது சரி தானா, பக்க இலக்கம் போட்டு இருக்கிறோமா (page number ) என்று பார்த்து பின் அனுப்பினால், படிக்கவே ஒரு சுகம் இருக்கும் அல்லவா?

பரீட்சை எழுதினாலும் அப்படி அழகாக எழுத வேண்டும். 

எதைச் செய்தாலும், அதில் ஒரு அழகு இருக்க வேண்டும். 

ஏதோ செய்து விட்டோம் என்று இருக்கக் கூடாது. 

வீடு பெறுக்கினாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். 


“If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”


― Martin Luther King Jr.


என்று மார்ட்டின் லூதர் கிங் கூறுவார். 

ஒரு கடிதம் எழுதுவது, ஒரு காப்பி போடுவது, உணவு பரிமாறுவது, குளித்து தலை வாரி உடை உடுத்துவது என்று எதிலும் ஒரு அழகு உணர்ச்சி வேண்டும். 

கசங்கிய ஆடையை உடுத்திக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?

சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒளவை ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் 

" அழகு அலாதன செய்யேல்"

என்று. 

அழகு இல்லாத ஒன்றை செய்யக் கூடாது. 

அதாவது, எதையும் அழகாகச் செய்ய வேண்டும், இல்லை என்றால் செய்யக் கூடாது. 

எந்த காரியம் செய்து முடித்தாலும், அது அழகாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால், அதற்கு அழகு கூட்டுங்கள். 

Tom Peters என்ற மேலாண்மை (மேனேஜ்மென்ட்) குரு சொல்லுவார்,

"No work is completed until you get an 'Wow' effect" 

என்று. 

எதையும் அழகாகச் செய்து படியுங்கள். 

(ஒண்ணாப்புல படிச்சது, இந்த ஆத்திச் சூடி)


1 comment:

  1. எந்த காரியத்திலும் அது பரிமளிக்க ஒரு நேர்த்தி வேண்டும் .
    அழகாக சொன்னீர்கள்.

    ReplyDelete