Friday, February 21, 2020

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம்

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம் 


அறிவு எப்படி வளர்கிறது? அல்லது அறிவை எப்படி வளர்ப்பது?

பல வழிகள் இருந்தாலும், மூன்றை முக்கியமானதாகச் சொல்கிறார்கள்.

காட்சி பிரமாணம் - நேரில் பார்த்து அறிந்து கொள்வது.

அனுமான பிரமாணம் - யூகித்து அறிந்து கொள்வது.  காலையில் சாலை ஈரமாக இருக்கிறது என்றால், இரவு மழை பெய்திருக்கிறது என்று யூகித்து அறிந்து கொள்வது. மலையில் புகை தெரிந்தால், அங்கே நெருப்பு இருக்கிறது என்று யூகித்து அறிவது.

மூன்றாவது, ஆகம பிரமாணம். பெரியவர்கள் சொல்லிப்  போனதை, எழுதி வைத்துப் போனதை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது.

இதில் இரண்டாவது கூறிய அனுமான பிரமாணம் வளர்வதற்கு கற்பனை மிக மிக அவசியம். காணாத ஒன்றை மனதால் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த கற்பனையை எப்படி வளர்த்துக் கொள்வது? எங்காவது சொல்லித் தருகிறார்களா? அல்லது, ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்றால் இல்லை.

இலக்கியங்கள் தான் நம் கற்பனையை வளர்க்க உதவும். இலக்கியத்தைத் தவிர வேறு வழி இல்லை.

சினிமா, நாடகம், கவிதை, கதை, போன்றவற்றில் இருந்து தான் நாம் நம் கற்பனையை  வளர்த்துக் கொள்கிறோம்.

ஆழ்ந்து, இரசித்து படிக்கும் போது, நம் கற்பனை விரியும். மனம் விரியும்.

கண்டதை கொண்டு காணாததை அறியும் பழக்கம் வந்து விட்டால், யார் அறிவார்  ஒரு நாள் கண்ட உலகைக் கொண்டு காணாத இறைவனைக் கூட  அறிய முடியுமோ என்னவோ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.



அசோக வனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அவளை சுற்றி பல அரக்கியர் காவல் இருக்கிறார்கள். அவர்கள் தோற்றம் எப்படி இருக்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.


பொருள்


வயிற்றிடைவாயினர்;  = வயிற்றின் நடுவில் வாய் இருக்குமாம். வாயில போட்டு, மென்று, தின்று அது வயிற்றுக்குப் போக கொஞ்சம் நேரம் பிடிக்கும். வாய், வயிற்றியிலேயே இருந்தால், வாயில் போட்டவுடன் உடனே வயிற்றுக்கு போய் விடும் அல்லவா.

(கரு உற்றிருக்கும் பெண்ணை வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என்பார்கள்.  காரணம்,  அவளுடைய வயிற்றில் பிள்ளையின் வாய் இருக்கிறது என்பதால்).

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி தோண்டி புதைத்து வைத்தது போன்ற விழியினை உடையவர்கள்

கொடிய நோக்கினர்; = பார்வை கொடுமையாக இருக்கும்

எயிற்றினுக்கு = பற்களுக்கு

இடை இடை = இடை இடையே

யானை, யாளி, பேய், = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்

வெம் பிலன் என, = பெரிய குகை (பில ன் என்றால் குகை) [போன்ற

தொட்ட வாயினர். =  பெரிய வாயை உடையவர்கள்

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா ?

இரண்டு பல்லுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் ஒரு யானை படுத்து தூங்கும் என்றால்   எவ்வளவு பெரிய இடைவெளி இருக்க வேண்டும். இடை வெளி அவ்வளவு என்றால், பற்கள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். பற்கள் அவ்வளவு பெரிது என்றால், முகம் எவ்வளவு பெரிதாக இருக்கும். அப்படி என்றால் உடம்பு எப்படி இருக்கும்?

கற்பனை செய்ய முடிகிறதா?

யானை நிற்கும் என்று என்று சொல்லவில்லை. நிம்மதியா படுத்து தூங்குமாம். ஒரு தொந்தரவும், நெருக்கடியும் இல்லாமல் , சுகமாக யானை தூங்க வேண்டும் என்றால்  பார்த்துக் கொள்ளுங்கள்.

யானை மட்டும் அல்ல, யாளி என்ற விலங்கும் , பேய்கள் கூட தூங்குமாம்.

அழகான இராமன், சீதை மட்டும் அல்ல, அகோரமான அரக்கியரைக் கூட  கம்பன்  வேலை மெனக்கெட்டு வர்ணனை செய்கிறான்.

இரசித்துப் படிக்க வேண்டும்.

கற்பனை விரிய வேண்டும்.

நிறைய இலக்கியம் படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_21.html

1 comment:

  1. இப்பேர்ப்பட்ட பயங்கரத்தை நாலே வரிகளில் கண் முன் நிறுத்திவிட்டாரே! அபாரம்!

    ReplyDelete