Tuesday, February 18, 2020

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வேம்

வில்லி பாரதம் - இரு திறத்தேமும்  சென்று மாள்வேம்


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். அந்த குணங்களை நாம் பெரும்பாலான சமயங்களில் கடை பிடிப்போம். அது அல்ல சாமர்த்தியம். அந்த நல்ல பண்புகளுக்கு ஒரு சோதனை நேரும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான் கேள்வி.

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது நம் கொள்ககையாக இருக்கலாம். நமக்கு என்று ஒரு அவசரம் வரும் போது நாம் இலஞ்சம் கொடுக்காமல் இருப்போமா என்பது தான் கேள்வி.

பிள்ளைக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் வேண்டும். போதுமான மதிப்பெண்கள் இல்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும். கொடுப்போமா, மாட்டோமா?

பொறுமை நல்லது. கோபம் கெட்டது. நமக்கு இது தெரியும். இருந்தும், நமக்கு தீங்கு செய்தவர்கள் மேல் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்போமா? மனது அளவிலாவது அவர்களுக்கு தீங்கு வர வேண்டும் என்று நினைக்க மாட்டோமா?

தர்மன்.

இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஒரு கதா பாத்திரம்.

சூதில் தோற்று, மனைவியை, அரச சபையில் துகில் உரிந்தவனை, தன்னையும் தன்   தம்பிகளையும் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியவன் மேல் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா?

சொல்லியபடி நாட்டை தர மறுக்கிறான் துரியோதனன்.

பஞ்ச பாண்டவர்களிடம் , கண்ணன் கேட்கிறான், "நான் தூது போகிறேன். துரியோதனனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்" என்று.

தர்மன் சொல்கிறான்

"காட்டிலே மூங்கில் காடுகள் இருக்கும். அதில் உள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பிடித்துக் கொள்ளும். அப்படி பிடித்த தீ, அந்த இரண்டு மூங்கில்களை மட்டும் அல்ல, அந்த காட்டையே எரித்து அழித்து விடும். அது போல, எங்களுக்குள் யுத்தம் வந்தால், இரண்டு பக்கத்து மக்களும் அழிவோம். எனவே சண்டை வேண்டாம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வழி தேடு"  என்று.

பாடல்

வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர்
                                வரைக்காடென்னச்,
செயிரமரில் வெகுளிபொரச் சேரவிருதிறத்தேமுஞ்
                            சென்றுமாள்வேம்,
கயிரவமுந்தாமரையுங் கமழ்பழனக்குரு நாட்டிற்கலந்துவாழ,
வுயிரனையாய் சந்துபடவுரைத்தருளென்றானறத்தினுருவம்
                                 போல்வான்.

பொருள்


வயிரமெனுங் = வயிரம் போன்று

கடு நெருப்பை = கொடிய நெருப்பை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கினுயர் = வளர்கின் உயர் = வளர்த்தால் உயர்ந்த

வரைக் = மலை போல் பெரிய

காடென்னச் = காடு போல

செயிரமரில் = வரும் போரில்

வெகுளிபொரச் = கோபம் போங்க

சேர = ஒன்றாக

விருதிறத்தேமுஞ் = இரு திறத்தில் உள்ளவர்களும்

சென்று மாள்வேம், = சென்று இறப்போம்

கயிரவமும் = ஆம்பல் மலர்களும்

தாமரையுங்  = தாமரை மலர்களும்

கமழ் = மலர்ந்து  மணம் வீசும்

பழனக் = பழைய,

குரு நாட்டிற் = குரு நாட்டில்

கலந்துவாழ, = நாங்கள் எல்லோரும் கலந்து வாழ

வுயிரனையாய்  = எங்கள் உயிர் போன்றவனே

சந்துபட = சமாதானத்துடன் வாழ

வுரைத்தருளென்றான = உரைத்து அருள் என்றான்

அறத்தினுருவம் = அறத்தின் உருவம்

போல்வான். = போன்றவன்

எங்களுக்குள் சண்டை வந்தால் நாங்கள் மட்டும் அல்ல, எங்களை சேர்ந்தவர்களும் அழிவார்கள். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப் பிடித்தால், அந்த மரங்கள் மட்டும் அல்ல, அவை சேர்ந்த காடும் அழியும். அது போல.

இரவில் மலர்வது ஆம்பல்.

பகலில் மலர்வது தாமரை.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட மலர்கள் ஒன்றாக இருக்கும் நாட்டில், மனிதர்களாகிய  நாங்கள் ஒன்றாக இருக்க முடியாதா. எனவே, நாங்கள் ஒன்றாக வாழ வழி பார் என்றான்.

கௌரவர்கள் செய்தது சின்ன கொடுமை அல்ல. எங்களுடைய கோபத்தால், எத்தனையோ பேர்  அழிந்து போவார்கள். அவர்கள் பக்கம் மட்டும் அல்ல, எங்கள் பக்கத்திலும்  அழிவு இருக்கும். எனவே, போர் வேண்டாம் என்கிறான்.

கோபம் யார் மேல் வருகிறதோ, அது அவர்களை அழிக்கிறதோ இல்லையோ, கோபம் கொண்டவர்களை  கட்டாயம் அழிக்கும்.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் எமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. யாரிடம் இருக்கிறதோ, அவர்களைக் கொல்லும்.

இன்று உலக அரங்கில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. நாடுகள் ஒன்றோடு ஒன்று   மோதிக் கொண்டு இருக்கின்றன.

சமாதானம் என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.

பாரதம் போன்ற நீதி நூல்கள் நம் சிந்தனையை பக்குவப் படுத்த உதவும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_18.html

1 comment:

  1. அல்ப விஷயத்திற்கு எல்லாம் கோபித்து கொள்ளுகிற நமக்கு, தருமர் ஒரு role model. கோபத்தை வென்ற சுய நலமில்லாத அபூர்வமான மனிதர்.பல கோடிகளில் ஒருவராக இருக்கக்கூடும். மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். .

    ReplyDelete