Thursday, February 6, 2020

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


6 விதமான கடமைகளை முந்தைய இரண்டு குறள்களில் பார்த்தோம்.

அடுத்த குறளில் அடுத்த ஐந்து கடமைகளைப் பற்றிச் சொல்கிறார்.

அவை என்ன

பாடல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பொருள்

தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்

தெய்வம் = தெய்வம்

விருந்து = விருந்தினர்

ஒக்கல் =  சுற்றத்தார்

தான் = தான்

என்று ஆங்கு = என்று அங்கே

ஐம்புலத்தாறு = ஐந்து வகையிலும்

ஓம்பல் தலை = காப்பது தலையாய கடமை

தென் புலத்தார் என்றால் பித்ரு தேவதைகள்.

அவர்கள் யார் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு  சிந்தனை முன்னோட்டம்.

சில நாள் நமக்கு காரணம் இல்லாமல் மனம் சந்தோஷமாக இருக்கும். சில நாள், நாம் எதிர் பாராத ஏதோ ஒரு நன்மை நடக்கும். லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழலாம்.  கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த ஒன்று  கிடைத்து விடலாம். ரொம்ப நாள் மனதை அரித்துக் கொண்டிருந்த  ஒன்று சட்டென்று விலகி மனதுக்கு இதம் தரலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்து மதம் ஒரு காரணம் சொல்கிறது. நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்.

பித்தரு தேவதைகள் என்று சில தேவதைகள் இருக்கின்றன. இவர்களின் வேலை, முன்னோருக்கு நாம் செய்யும் சிரார்த்தம் போன்ற பூஜைகளின் பலனை  நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பது. நம் முன்னோர் எங்கு இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ நமக்குத் தெரியாது.  அந்த ஆத்மா  ஏதோ நாட்டில், ஏதோ ஒரு பிறவி எடுத்து இருக்கும். உடல் வேறு ஆனால், ஆன்மா ஒன்றுதான். நாம் செய்யும் புண்ணிய பலன்களை அந்த  ஆன்மாவுக்கு  இப்போதுள்ள புதிய உடலில் இந்த பித்ரு தேவதைகள் கொண்டு சேர்ப்பார்கள்  என்பது நம்பிக்கை.

இன்று உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத நன்மை நடக்கிறது என்றால்,  உங்கள் வாரிசு   யாரோ, உங்களுக்காக தர்ப்பணம் செய்து இருக்கிறான் என்று பொருள். அவன் செய்த புண்ணிய பலன் உங்களுக்கு எதிர்பாராத நன்மையாக வந்து சேர்ந்து இருக்கிறது.

நூலிழையில் வண்டியில் அடிபடுவதில் இருந்து தப்பி இருப்பீர்கள்.

எதிர்பாராத பதவி உயர்வு, பட்டம், பணம், சொத்து, என்று ஏதோ நன்மை வந்து சேர்ந்து இருக்கும்.

இது நம்பிக்கை.

இந்த பிதிருக்கள் தென் திசையில் இருப்பார்கள் என்பது மற்றுமொரு நம்பிக்கை.

இல்வாழ்வான், தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.

அடுத்தது, "தெய்வம்".

குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டும்.

பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள்.

அடுத்தது "விருந்தினர்".

விருந்து இரண்டு வகைப்படும் என்கிறார் பரிமேல் அழகர்.  அறிந்து வருவது, அறியாமல் வருவது.  முன்ன பின்னை தெரியாமல், புதிதாக வருபவரும் விருந்தினர் எனப்படுவர். 

அடுத்தது, "சுற்றம்". அது பற்றி ரொம்ப சொல்ல வேண்டாம்.

கடைசியில் ஒரு பெரிய வெடி குண்டைப் போடுகிறார் வள்ளுவர்

"தான்"

நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னார் என்று இருக்கின்ற  செல்வத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு, நம்மை கவனிக்காமல் இருந்து விடக் கூடாது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பல வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் நலம் பேணுவது கிடையாது. கேட்டால், உடற் பயிற்சி செய்ய, யோகா கிளாஸ் செல்ல எல்லாம் எங்க நேரம்  இருக்கிறது? காலையில் எழுத்தால் படுக்கிற வரைக்கும் நேரம் சரியா இருக்கு  என்று உடலை காத்துக் கொள்வது இல்லை.

ஆண்களும் அப்படித்தான்.  அரக்க பரக்க ஓடுகிறார்கள். வேலை நிமித்தம் சதா சர்வ காலமும் உழைக்கிறார்கள்.  உடலை பேணுவது இல்லை.

உடலை மட்டும் அல்ல, அறிவையும்  வளர்ப்பது கிடையாது.

தன்னை தான் காத்துக் கொள்வதும் இல் வாழ்வான் கடமையுள் ஒன்று என்கிறார் வள்ளுவர்.

இந்த பதினொரு கடமைகளை செய்யத் தயார் என்றால், திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் என்பதை ஏதோ ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும்  அந்தரங்க விஷயம் என்று நம் சமுதாயம் நினைக்கவில்லை.

அதை ஒரு சமுதாய கடமையாகப் பார்த்தது.

எந்த அளவுக்கு நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் !


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_6.html

3 comments:

  1. மூன்று குறள்களும் சேர்ந்து நன்றாக இருந்தன. நன்றி.

    ReplyDelete
  2. ஆனால் ஒரு கேள்வி:

    ஓரினச் சேர்க்கையை விரும்புபவர், திருமணம் செய்துகொண்டு இந்தப் பதினோரு கடமைகளையும் ஏன் செய்யக் கூடாது?

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் நன்றி ஐயா
    🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    ReplyDelete