Thursday, February 20, 2020

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?


சீதையை அசோகவனத்தில் காண்கிறான் அனுமன். தன்னைப் பற்றி கூறுகிறான். தான் இராமனின் தூதன் என்று அறிவிக்கிறான். முதலில் சந்தேகப் பட்டாலும் பின் சீதை உள்ளம் தெளிந்து அனுமனை இராமனின் தூதன் என்று நம்புகிறாள்.

அடுத்து என்ன சொல்லி இருப்பாள்?

தன்னுடைய துன்பத்தை சொல்லி இருக்கலாம். இராவணன் செய்யும் கொடுமைகளை சொல்லி இருக்கலாம். எப்ப வந்து தன்னை சிறை மீட்பார் என்று கேட்டு இருக்கலாம்.

அதெல்லாம் கேட்கவில்லை.

இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

தன்னுடைய துன்பம் அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. கணவன் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

பாடல்


எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி  ஓங்க,
'உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு  கண்ணாள்,
'ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'  என்றாள்.

பொருள்


எய்து அவன் = தூதாக வந்த அவன் (அனுமன்)

உரைத்தலோடும் = சொன்னவுடன்

எழுந்து = எழுந்து

பேர் உவகை ஏற = பெரிய சந்தோஷத்துடன்

வெய்து உற = துன்பம் உற்றதால்

ஒடுங்கும் மேனி  = மெலிந்த உடம்பு

வான் உற விம்மி = வானம் வரை விம்மி

ஓங்க = பெரிதாக ஆக

'உய்தல் வந்துஉற்றதோ ?' = தான் இதில் இருந்து தப்பிக்கும் வழி வந்து விட்டதோ

என்று = என்று

அருவி நீர் ஒழுகு கண்ணாள், = அருவி போல நீர் வழியும் கண்களைக் கொண்ட சீதை


'ஐய ! சொல், = ஐயனே சொல்

ஐயன் மேனி எப்படிக்கு  = இராமனின் மேனி நலம் எப்படி இருக்கிறது

அறிதி ?' = நீ அறிவாயா . அறிந்தால் சொல்

என்றாள் = என்றாள்


தன் சுயநலத்தை விட, தன் கணவனின் நலத்தை நினைக்கிறாள் சீதை. அதுதான் பெண்மையின் உயர்ந்த குணம்.

தன் இரத்தத்தை பாலாகி பிள்ளைக்கு சந்தோஷமாக தருவாள்.

கணவனுக்காக, பிள்ளைகளுக்காக அவள் எதுவும் செய்வாள்.


தான் பசித்து இருந்தாலும், கணவன் மற்றும் பிள்ளைகள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பாள்.

"பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் 
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் "

என்று கண்ணதாசன் பாடுவான்.

பால், பழம் எல்லாம் (யாவும்) கணவனுக்கு தந்து விட்டு, அவன் சாப்பிட்ட பின் அவன் முகம் பார்த்து அவள் பசியாறுவாளாம்.

"பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா" என்றான் பாரதி.

பெண்ணை விட பெரியது என்ன இருக்கிறது என்று கேட்டான் வள்ளுவன்.

"பெண்ணின் பெருந்தக்க யாவுள?" என்பது வள்ளுவம்.


நாம் எவற்றைப் படிக்கிறோமோ, அவற்றால் பாதிக்கப் படுகிறோம்.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, சீதையின் மன நிலை  நமக்குப் புரிகிறது. அது நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சீதை அப்படி கணவன் மேல் உயிராக இருந்தாள்.

அதனால், இராமன் தன் உயிரையும் பொருட்படுத்தாது, இராவணன் மேல் படை எடுத்து அவளை காப்பாற்றினான்.

இன்று இந்த மாதிரி விஷயங்களை நாம் படிக்கிறோம்? நம் பிள்ளைகள் படிக்கிறார்கள்?

ஓரினச் சேர்க்கை. ஒரு பாலாருக்குள் திருமணம்.  பெண் விடுதலை. ஆணுக்கு பெண் சமம்.  நாங்கள் ஏன் எங்கள் நலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

என்பது போன்ற விஷயங்களை படித்துக் கொண்டு இருக்கிறது நம் சமுதாயம்.  அவற்றால் பாதிப்பு கட்டாயம் இருக்கும்.

ஒழுக்கம் என்ற சொல் ஒழுகுதல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததது.

எப்படி ஒழுகும். மேலிருந்து கீழாக ஒழுகும். கீழ் இருந்து மேலாக அல்ல.

நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்து, அவர்களை போல நாம் வாழ முயல்வது ஒழுக்கம்.

இன்று வேலை வெட்டி இல்லாத கும்பல்,  மன வக்கிரம் கொண்டவர்களை பார்த்து,  அவர்கள் சொல்வதும் சரிதானே என்று கீழானவர்களை பார்த்து இந்த சமுதாயம்  பாடம்  படிக்க முயல்கிறது.

அவர்கள் செய்வது சரியா , தவறா என்பதல்ல கேள்வி.

அவர்கள் உயர்ந்தவர்களா? சிறந்தவர்களா ? ஒழுக்கம் உள்ளவர்களா? சமுதாய அக்கறை உள்ளவர்களா? குறிப்பாக உங்களை விட உயர்ந்தவர்களா என்று   பாருங்கள்.

உங்களை விட உயர்ந்தவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து நீங்கள் என்ன படித்து விட முடியும்.

எந்த விஷயத்தைக் கேட்டாலும், சொல்பவர் யார் என்று பாருங்கள்.

வியாசர், கம்பர், வள்ளுவர்,  நாயன்மார், ஆழ்வார் போன்றவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது.

whatsapp ஐ விட்டு வெளியே வாருங்கள்.

இலக்கியங்கள், உயர்ந்தவர்களை இனம் காட்டும்.

நேற்று தர்மரைப் பற்றி சிந்தித்தோம். இன்று சீதை.

உயர்ந்த விஷயங்களை மனதுக்குள் தெளிக்க வேண்டும்.

அவை பின் வளர்ந்து நல்ல பலன் தரும்.

விதைப்பது தானே முளைக்கும்.

நல்லவற்றை விதையுங்கள். நல்லதே விளையும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_20.html

2 comments:

  1. கணவன்-மனைவியின் பாசத்தைக்க காட்டும் அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete