Thursday, February 27, 2020

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?


சீதை, காப்பியத்தின் கதாநாயகி. திருமகளின் அம்சம். கற்பின் கனலி. இராமனின் மனைவி.


இராவணன், வலிமையானவன், பெரிய சிவ பக்தன், அறிவுள்ளவன், திறமை உள்ளவன்.

தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் சீதையை வேண்டுகிறான்.

காப்பியம் எழுதிய கம்பனுக்கு இது ஒரு சிக்கலான இடம்.

எல்லை தாண்டி விடக் கூடாது. விரசம் தலை தூக்கக் கூடாது. அதே சமயம் அவர்களுக்குள் நடந்த உரையாடலை சுவையாகவும் சொல்ல வேண்டும்.

தகாத உறவுக்கு இராவணன் அழைக்கிறான். அழைப்பவனும் ஏதோ சாதரணமானவன் அல்ல. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" கொண்டவன்.

யோசித்துப் பாருங்கள். எத்தனயோ படங்கள் வந்து இருக்கின்றன. ஒரு படத்திலாவது, வில்லனும், கதாநாயகியும் பேசிய பேச்சு மனதில் நின்று இருக்கிறதா?

வில்லன் முரட்டுத் தனமாய் பேசுவான், கதாநாயகி கீச்சுக் குரலில் கத்துவாள்.

இராவணனும், சீதையும் பேசிய பேச்சை கம்பன் காட்டுகிறான் பாருங்கள்.

கத்தி மேல் நடப்பது போன்ற இடம்.

பாடல்

அவ் இடத்துஅருக எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்துஎனக்கு இன் அருள் ஈவது ?
நொவ் இடைக்குயிலே ! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தைஅமிழ்து என வேண்டுவான்.

பொருள்


அவ் இடத்து = அந்த இடத்துக்கு (அசோக வனத்துக்கு)

அருக எய்தி = நெருங்கி வந்து

அரக்கன்தான் = இராவணன்

'எவ் இடத்து = எந்த இடத்தில்

எனக்கு இன் அருள் ஈவது ? = எனக்கு அருள் புரிவாய்

நொவ் இடைக்குயிலே ! = நோகும் இடை கொண்ட குயிலே

 நுவல்க' = சொல்வாய்

என்றனன், = என்றான்

வெவ் விடத்தை = வெம்மையான விஷத்தை

அமிழ்து என வேண்டுவான். = அமிழ்து என்று நினைத்து அதை வேண்டுவான்

அவள் அன்பை, அருள் என்று சொல்கிறான். ஆண்டவனிடம் பக்தன் அருள் வேண்டுவது போல. இராவணனைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆள். அவள் காலடியில் நாய் குட்டி போல கிடக்கிறான்.  எவ்வளவு கண்ணியமாக, மரியாதையுடன், பணிவோடு கேட்கிறான்.

மாற்றான் மனைவியை, நஞ்சு என்று நினைத்து ஒதுக்க வேண்டும். ஆனால், அவனோ, அதை அமுதம் என்று நினைத்து விரும்புகிறான்.


இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன. நேரம் இருப்பின், அவற்றையும் பார்ப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_27.html



No comments:

Post a Comment