Tuesday, February 11, 2020

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள்

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள் 


நாம் பல பாடல்களை முதல் சில வரிகளை படித்து இருப்போம். அதுவே முழுப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அல்ல. முழுப் பாடலும் படிக்கும் போது ' அட ! இந்தப் பாடலுக்குப் பின் இவ்வளவு இருக்கிறதா' என்று ஆச்சரியம் வரும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ள பாடல்.

பாடல்

தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

தனித்த்தனியே பொருள் சொல்லத் தேவை இல்லை. மிக எளிதான பாடல்தான்.

இது ஒரு பக்திப் பாடல் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

'நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்று யாரிடம் சவால் விடுகிறான் பாரதி தெரியுமா?

காளியிடம்.

மற்ற மனிதர்களை போல  நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ  என்று காளியிடம் கேள்வி  கேட்க்கிறான் பாரதி.

இந்தப் பாடலின் பிற் பகுதியைப் படித்தால் அது புரியும். அது நாளை வரும்.

வேடிக்கை மனிதர்கள் என்று பாரதி சொல்வது யாரை?

ஒரு வேளை நம்மைத்தானோ?

என்ன செய்தோம் இதுவரை ?

தினம் உணவு உண்டோம்.

"தேடிச் சோறுநிதந் தின்று -"

அந்த சோறு தின்பதற்காக, ஒரு இருப்பது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் படித்தோம். வேலைக்குப் போனோம். சம்பாதித்து உணவு உண்கிறோம். அது தானே முதல். வீடு, கார் எல்லாம் அப்புறம் தானே. சோறு திங்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கிறோம்.

சரி.

அப்புறம் என்ன சாதித்தோம்?

"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -"

பெரிதாக ஏதாவது சிந்திக்கிறோமா?  உலகை மாற்றும் படி, பெரிய கண்டு பிடிப்பு ஏதாவது செய்ய சிந்திக்கிறோமா? Whatsapp , faceboook , என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இந்த வெட்டிக் கதைப் பேசுவதில் போக்குகிறோம்.

சரி நல்லா சாப்பிட்டாச்சு, வாட்சப்பில் foward பண்ணுவதும், வந்த forward களை படிப்பதுமாக   நாள் ஓடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறோம்?

" மனம் வாடித் துன்பமிக உழன்று -"

நிச்சயம் செய்கிறோம். கவலைப் படாத நாள் உண்டா? துன்பம் இல்லாத நாள் உண்டா ? ஒன்றும் இல்லாவிட்டாலும், எதையாவது நினைத்து கவலைப் படுவதே இயல்பாகப் போய் விட்டது. கவலை இல்லாதா நாள் ஒரு நாளே இல்லை என்று ஆகி விட்டது.

சரி, சாப்பாடு, அரட்டை, துன்பம் ஆச்சு. அப்புறம் வேற ஏதாவது செய்கிறோமா?

" பிறர் வாடப் பலசெயல்கள் செய்து "


நாம் கவலைப் பட்டால் போதாது என்று, மற்றவர்களையும் கவலைப் படுத்துகிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களை கவலைப் பட வைக்கிறோம்.


" நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -"

வாழ்க்கை இப்படியே போய் விடுகிறது. நரை கூடி, கிழப் பருவம் வந்து சேர்கிறது.


" கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -"

கூற்றுவன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான் ஒரு நாள்.


" பல வேடிக்கை மனிதரைப் போலே -"

Funny Fellows என்று பாரதி நம்மைச் சொல்வது போலவே இருக்கிறது.

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நானும் அப்படி ஆவேனோ என்று காளியிடம் எதிர்த்துக் கேட்கிறான்.

அதற்கு காளி என்ன சொன்னாள் ?

நாளை பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_11.html

3 comments:

  1. மறுபடியும் suspense!!!

    ReplyDelete
  2. அந்தக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது - அது ஒரு இளமைக் காலம்!

    ReplyDelete