Wednesday, February 5, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?


முந்தைய குறளில், "இயல்புடைய மூவருக்கு நல்லாற்றின் நின்ற துணை" என்று  பார்த்தோம்.

 வள்ளுவர் அடுத்த மூன்று கடமைகள் பற்றி சொல்லுகிறார்.

பாடல்


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பொருள்

துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும்

துவ்வா தவர்க்கும் = துவ்வாதவர்க்கும்

இறந்தார்க்கும் = இறந்தார்க்கும்

இல்வாழ்வான் = இல்வாழ்வான்

என்பான் துணை = என்பவன் துணையாக நிற்க வேண்டும்.

போன குறளில் துறவிகள் பற்றி சொல்லி விட்டாரே, மீண்டும் ஒரு முறை ஏன் துறந்தாரைப் பற்றி சொல்ல வேண்டும் ?

இங்கே துறந்தார் என்பது, காக்கப் பட வேண்டியவர்களால் காக்காமல் விடப் பட்டவர்கள் என்பதாகும். "களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்"  பரிமேல் அழகர்.

கலைக்கண் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். அதற்கு அர்த்தம், "அன்பு காட்டுதல், அரவணைத்தல்" என்று பொருள்.

"ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே" என்பது பிரபந்தம். உன்னைத் தவிர என்னிடம் அன்பு செய்ய யார் உள்ளார்கள் என்று உருகுகிறது பிரபந்தம்.


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே


ஒரு வீட்டில், பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல் விட்டு விட்டால்,  இல் வாழ்வான் அவர்களை காக்க வேண்டும். காரிலோ விமானத்திலோ செல்லும் போது பெற்றோர் விபத்தில் இறந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பிள்ளைகள் அனாதைகள் ஆகி விடலாம். யாரோ ஒரு இல் வாழ்வான் அந்தப் பிள்ளைகளை தத்து எடுத்து காக்க வேண்டும். அது அவன் கடமை.

"துவ்வாதார்" என்றால்  ஏழைகள். விதி வசத்தால் ஏழையாகிப் போனவர்களை இல் வாழ்வான் காக்க வேண்டும்.

இறந்தார்....இறந்தவர்களை எப்படி காக்க முடியும்? தன் வீட்டிற்கோ, அல்லது தெருவிற்கோ வந்து அனாதையாக இறந்தவனை இல் வாழ்வான் நல்லடக்கம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய நீர் கடன்களை செய்ய வேண்டும்.

ஜடாயு என்ற பறவைக்கு இராமர் நீர் கடன் செய்தார். இராமர் நீர் கடன் செய்யாவிட்டால் யாரும் ஏன் செய்யவில்லை என்று கேட்கப் போவதில்லை.

அனாதை பிணமாக விட்டு விடக் கூடாது.

மிகப் பெரிய சமுதாய சிந்தனை இது.

ஒரு சமூகம், அதில் உள்ள நலிந்தவர்களை கை தூக்கி விட வேண்டும் என்று  விதி செய்து வைத்தார்கள் நம்மவர்கள்.

இன்று கம்யுனிசம், சோசியலிசம், என்றெல்லாம் பொது உடமை பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும். நம் சமுதாயம், தனி உடமையை ஆதரித்தது அதே சமயம், தனி மனிதனுக்கு கடமைகளை விதித்தது.

உன் பணத்தை வைத்துக் கொண்டு நீ மட்டும் அனுபவிக்காதே. துன்பப் படுபவர்களுக்கு உதவி செய். அதற்கு நீ தயார் என்றால், திருமணம் செய்து கொள். இல்லை என்றால், தனி மனிதனாகவே இருந்து விட்டுப் போ, என்றது நம் சமுதாயம்.


நம் தெருவில் வந்து இறந்தவனுக்கு நீர் கடன் செய்ய வேண்டும், நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு ஒரு குறள் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு சமுதாய அக்கறை இருந்திருக்க வேண்டும்.

எந்த அளவுக்கு தனிமனிதனை சமுதாயத்தோடு இணைத்திருக்கிறார்கள் என்று  சிந்திக்க சிந்திக்க வியப்பாக இருக்கிறது அல்லவா ?



சித்தாப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள் அவர்கள் பெற்றோரை காக்கவில்லை என்றால், நீ அவர்களை காப்பாற்று. சோறும் நீரும் கொடு என்று சட்டம் வகுத்தது.  யார் கண்டது, நாளை உன் பிள்ளை உன்னை காப்பாற்றாமல் கை விடலாம். எங்கு போய் நிற்பாய்?  ஒரு சமுதாய முன்னோடியாக திகழ் என்று விதி செய்தது நம் நாகரீகம்.

கல்யாணம் செய்து கொள்வது ஏதோ இன்பமாக பொழுது போக்க என்று நினைத்ததுக் கொள்ளக் கூடாது. மிக மிக பொறுப்பு வாய்ந்த செயல் அது.

இன்னும் வருகிறது.

6 கடமைகள் சொல்லியாகி விட்டது. இன்னும் ஐந்து இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_5.html

2 comments:

  1. அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. அற்புதமான கருத்துக்கு அருமையான விளக்கம்! நன்றி.

    ReplyDelete