Saturday, February 29, 2020

திருக்குறள் - வளையல்

திருக்குறள் - வளையல் 


பெண்கள் அணியும் ஆபரணங்களில் வளையலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த மெலிந்த, நீண்ட கைகளில் தவழும் வளையல்கள், அது தரும் மெல்லிய ஓசை...அதுவும் ஒரு சுகம் தான்.

ஆண்களைப் போல பெண்களுக்கு விரல் மட்டும் முன்கை சேரும் இடங்கள் ஆண்களை போல பருமனாக இருக்காது. எனவே, வளையல் எளிதாக கையில் போகும்.

இராமன் வந்து மணவறையில் வந்து அமர்ந்து இருக்கிறான். தோழிகள் சீதையை அழைத்து வருகிறார்கள். சீதைக்கு இராமனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். நேரில் எப்படி பார்க்க முடியும். வெட்கம் ஒரு புறம். எல்லோரும் இருக்கிறார்கள். தலை நிமிர்ந்து பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற அச்சம் மறு புறம்.

யாருக்கும் தெரியாமல், கையில் உள்ள வளையல்களை சரி செய்வது மாதிரி  கொண்டே இராமனை பார்த்து விடுகிறாள் (சைட் அடிப்பது என்று சொல்லலாமா?)

"கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."



எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.

கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்.


பழைய சினிமா பாடல் ஒன்று...இலக்கிய தரம் சற்றும் குறையாத ஒன்று...


சின்னவளை முகம் சிவந்தவளை

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு

என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு

பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்

பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ

இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்

நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்

மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ

அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ

இது கண்ணதாசன் காட்டும் வளையல்.

வள்ளுவர் காட்டும் வளையல் வேறு விதம்.

ஏதோ ஒரு காரணத்தால், தலைவன் தலைவியை விட்டு பிரிய வேண்டிய நிர்பந்தம். 

ஆனால், அவளோ அவன் நினைவாகவே இருக்கிறாள். அவன் பிரிந்த மாதிரியே இல்லை அவளுக்கு.  அவன் கூடவே இருப்பது போலவும், அவளை கொஞ்சுவதும் போலவும், கனவில் அவனுடன் வாழ்கிறாள்.

ஆனால், அவ்வப்போது நிஜமும் புரியாமல் இல்லை. அவனை காணாமல் தவிக்கிறாள். சாப்பிட பிடிக்கவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை.

எப்படா வருவான் என்று ஏங்குகிறாள்.

இப்படி அவனை நினைத்து ஏங்கி ஏங்கி அவள் மெலிந்து போகிறாள். அவள் அணிந்திருந்த  வளையல்கள் கையை விட்டு நழுவி கீழே விழுகின்றன.

"அவன் பிரிந்து போய் விட்டான் என்று அவன் சொல்லாவிட்டாலும், இந்த நெகிழ்ந்து விழும் வளையல்கள் சொல்லி விடுகின்றனவே " என்று அந்த வளையல் மேல் கோவிக்கிறாள்.


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்


துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு பிரிந்து போனதை

தூற்றா =  சொல்லாதா

கொல் = சந்தேகம்

முன்கை = முன்னங் கையில்

இறை = மணிக்கட்டு

இறவா நின்ற = கழல்கின்ற

வளை = வளையல்

ஒரு பக்கம் காதல், பிரிவு, ஏக்கம், தவிப்பு என்று எல்லாம் இருக்கிறது. இதன் அர்த்தம்  இன்னும் ஆழமாக புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் இலக்கணம்  படிக்க வேண்டும்.

இலக்கண அறிவு, இலக்கியத்தின் சுவையை மேலும் கூட்டும்.

தமிழில் உள்ள வினை சொற்களை மூன்றாக பிரிக்கலாம்.

பகுதி + இடை நிலை + விகுதி

அனைத்து வினை (செயல்) சொற்களுக்கும் இது பொருந்தும்.

இதில்

பகுதி என்பது , செயலை குறிக்கும்.

இடை நிலை என்பது காலத்தைக் காட்டும்

விகுதி என்பது பால், மற்றும் ஒருமை பன்மையை குறிக்கும்.

பகுதியையும், விகுதியையும் அப்படியே வைத்துக் கொண்டு, இடை நிலையை மட்டும் மாற்றினால் காலம் மாறிவிடும்.

உதாரணாமாக

வந்தான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
த் = இறந்த கால இடை நிலை (ந் என மாறியது விகாரம்)
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


இதில் உள்ள த் என்ற இடை நிலையை மட்டும் தூக்கிவிட்டு 'வ்'  என்று போட்டால் அது  எதிர்காலமாக மாறி விடும்.

வருவான்

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
வ்  = எதிர் கால இடை நிலை
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


சரியை, சந்தம், விகாரம் என்று சில விஷயங்கள்  இருக்கிறது. ரொம்ப மண்டையை உடைக்க வேண்டாம்.

நிகழ் காலம் காட்டும் இடைநிலை கிறு , கின்று , ஆநின்று

என்ற மூன்று சொற்கள் உள்ளான்.

வருகின்றான் (கின்று)
சாப்பிடுகிறான் (கிறு)


இதில் ஆநின்று என்ற இடை நிலை தற்கால தமிழில் புழக்கத்தில் இல்லை.

அதை விட்டு விட்டோம். காலப் போக்கில் அதன் பயன்பாடு மறைந்து விட்டது.

இப்போது குறளுக்கு வருவோம்.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

இறவா நின்ற வளை

"ஆநின்று" என்ற இடை நிலை நிகழ் காலத்தை குறித்து நின்றது.

என்ன அர்த்தம்.

வளையல் நழுவி கீழே விழுந்து கொண்டே இருக்கிறது. அதை கீழே விழுந்து விடாமல் அவளும்  மேலே இழுத்து விட்டுக் கொண்டே இருக்கிறாள்.

கீழே விழுந்தால் என்னவாம்? எடுத்து அலமாரியில் வைத்து கொள்ளலாம் தானே.

அது அல்ல.

அவன் போட்ட வளையல். கையைப் பிடித்து, மென்மையாக, முகத்தைப் பார்த்துக் கொண்டே, கொஞ்சிக் கொண்டே போட்டு விட்ட வளையல்.  அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. எனவே, அது கையை விட்டு கழன்று கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.

இரண்டாவது, ஒரு வேளை வளையல் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டால், ஊரார்  என்ன சொல்லுவார்கள் "பாவம் இந்த பிள்ளையை இப்படி தவிக்க விட்டு விட்டு  அவன் பாட்டுக்கு வேலை அது இது னு ஊர் சுத்தக் கிளம்பிட்டானே..." என்று அவனை குத்தம் சொல்லுவார்கள். மற்றவர்கள் அவனை  தூற்றுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, தான் மெலிந்தாலும், வளையல் நெகிழ்ந்து கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும் !

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_29.html

Friday, February 28, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2


இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம்

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

இராமனின் குழந்தைப் பருவத்தை மூல நூல் எழுதிய வால் மீகியும் சரி, வழி நூல் எழுதிய கம்பரும் சரி, பாடாமலேயே விட்டு விட்டார்கள். எதை எதையோ விரிவாக எழுதியவர்கள், கதாநாயகனின் இளமை பருவத்தை பாடாமல் விட்டு விட்டார்கள்.

அந்த குறை தீர்க்க ஆழ்வார்களும் , அருணகிரிநாதரும் நிறைய பாடி இருக்கிறார்கள்.

ஒரு தாய், பிள்ளையை பாராட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்ப்பது என்பது பெரிய அதிசயம் அல்ல.

தன்னை ஒரு தாயக நினைத்துக் கொண்டு, கோசாலையாக நினைத்துக் கொண்டு பாடுகிறார்.



பாடல் (இரண்டாம் பகுதி)




எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


எந்தை வருக = என் தந்தை போன்றவனே வருக

ரகு நாயக வருக = ரகு நாயகனே வருக

மைந்த வருக = மைந்தனே வருக

மகனே யினிவருக = மகனே வருக

என் கண் வருக = என் கண்ணே வருக

என தாருயிர் வருக = எனது உயிரே வருக

அபிராம இங்கு வருக = அழகிய இராமா வருக

அரசே வருக = என் இராசா வருக

முலை யுண்க வருக = என்னிடம் பால் அருந்த வா

மலர் சூடிட வருக = பூ சூடிக்கொள்ள வருக

என்று = என்று

பரிவினொடு = பாசத்தோடு

கோசலை புகல = கோசலை அழைக்க

வருமாயன் = வரும் மாயன் அவன்


சிந்தை மகிழு மருகா  = அப்படிப்பட்ட திருமாலின் மனம் மகிழும் மருமகனே

குறவரிள = இளமையான குற மகள்

வஞ்சி = பெண்

மருவு மழகா  = அணைக்கும் அழகா

அமரர் சிறை சிந்த = தேவர்களின் சிறை பொடி பொடியாக

அசுரர் கிளை வேரொடு மடிய = அசுரர் குலம் வேரோடு மடிய

அடுதீரா = போர் செய்யும் தீரனே


திங்க ளரவு = திங்கள், பாம்பு (அரவு = பாம்பு)

நதி சூடிய பரமர் = கங்கை இவற்றை சூடிய சிவன்

தந்த குமர = தந்த குமரனே

அலையே கரைபொருத = (கடல்) அலை கரையோடு மோத

செந்தி னகரி லினிதே  = (திரு) செந்தில் நகரில் இனிதே

மருவிவளர் = சேர்ந்து வளரும்

பெருமாளே. = பெருமாளே

என்ன ஒரு இனிமையான பாடல்.

இப்படி எவ்வளவு இருக்கிறது திருப்புகழில்.


டும்முறு டுப்புறு கேட்க நேரம் இருக்கு. இதை வாசிக்க நேரம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/2.html

ஆத்திச் சூடி - உயர்வது எப்படி

ஆத்திச் சூடி  - உயர்வது எப்படி 


நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அது மட்டும் தெரிஞ்சிட்டா போதும். வேற என்ன வேண்டும்.

ஆனால், அந்த பட்டியல் பெரிசா இருக்குமோ?

கடின உழைப்பு, நேர்மை, நீதி, நாணயம், பெரிய மனிதர்கள் தொடர்பு, கொஞ்சம் மூலதனம் என்று நீண்டு கொண்டே போகுமோ?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒளவையார் ஒரு எளிய வழி சொல்கிறார்.

நாம் உயராமல் இருக்கக் காரணம் நம்மிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. நம்மிடம் நிறைய கெட்ட குணங்கள் இருப்பதுதான் காரணம் என்று.

யோசித்துப் பார்ப்போம்.

ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வீணாக செலவழிக்கிறோம்?

டிவி, whatsapp , facebook , youtube , தொலைபேசியில் அரட்டை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன்  பயனற்ற உரையாடல், வீடியோ கேம்ஸ், குப்பையான நாவல்கள், வார இதழ்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் அரட்டை, நண்பர்களோடு ஊர் சுற்றுவது ....இப்படி ஒரு நாளில் பொழுதை எவ்வளவு வீணாகக் கழிக்கிறோம்?

அது ஒரு பக்கம் இருக்க

காப்பி, டீ, புகை பிடித்தல், மது, அளவுக்கு அதிகாக உண்பது, இனிப்பு, எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, நொறுக்குத் தீனி, என்று   எத்தனை தீய உணவு பழக்கங்கள் இருக்கிறதோ அத்தைனயும் நம்மிடம் இருக்கிறது.

காலையில எந்திரிச்சவுடன் ஒரு காப்பி உள்ள போனாத்தான் வேலை நடக்கும் னு பெருமையா வேறு சொல்லிக் கொள்வது.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அளவுக்கு அதிகமான தூக்கம், சோம்பேறித்தனம், செய்ய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது (procrastination ), முடிவு எடுக்காமல் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவது போன்ற தீய பழக்கங்கள் இன்னொரு பக்கம்.

அதை இன்னொரு பக்கம் வையுங்கள்.

பொறாமை, கோள் சொல்வது,  வதந்திகளை பரப்புவது (யோசிக்காமல், சரி பார்க்காமல்  whatsapp செய்திகளை அப்படியே மனம் போன போக்கில் மற்றவர்களுக்கு  அனுப்புவது. இதில் "forwarded as received" னு ஒரு disclaimer வேற,  கோபம் கொள்வது, மற்றவர்கள் சொல்வதை , செய்வதை சகித்துக் கொள்ளாமல் இருப்பது,  நான் சொல்வதே சரி என்று முரண்டு பிடிப்பது,  சிண்டு முடிவது, போட்டுக் கொடுப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, குடும்பத்தை பிரிப்பது ....

இப்படி கொஞ்சம்  தீய பழக்கங்கள்.


பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவை எல்லாம் விட்டு விட்டால் எப்படி இருக்கும்?

இந்த தீய பழக்கம் எதுவுமே இல்லாமல் இருந்தால் நாம் எப்படி இருப்போம்?

நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது  இந்த தீய பழக்கங்கள் தான்.

தீய பழக்கம் என்றால் ஏதோ திருடுவது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது  என்பது மட்டும் அல்ல.

நமக்கு நாமே தீங்கு செய்துகொள்வதும் தீய பழக்கம் தானே.

வீணாக பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பதும் தீய பழக்கம் தானே.

இவற்றை எல்லாம் களைந்து விட்டால் நாம் எவ்வளவு சிறந்தவர்களாக இருப்போம்  என்று எண்ணிப்பார்ப்போம்.

இதைத்தான் கிழவி இரண்டே வார்த்தையில்  சொல்லிவிட்டுப் போனாள்

"கீழ்மை யகற்று"

இதெல்லாம் கீழ்மையானதோ, அவற்றை அகற்று.

கீழானது எல்லாம் நம்மை விட்டு விட்டு போய் விட்டால், நாம் தானாகவே உயர்ந்து விடுவோம்.

கீழான குணங்களை வைத்துக் கொண்டு, எவ்வளவு தான் முயன்றாலும், முன்னேற முடியாது.

களை எடுத்தால்தான் பயிர் வளரும்.

களை இருக்கும் போது எவ்வளவு நீர் ஊற்றி, உரம் போட்டாலும், பயிர் நன்றாக வளராது.

அட்டாங்க யோகத்தில் முதல் அங்கம் "இயமம்" எனப்படுவது.

இயமம் என்றால் "தீய பழக்கங்களை, கீழான பழக்கங்களை விட்டு விடுவது".

நாளுக்கு நாலு பாக்கெட் புகை பிடித்துக் கொண்டு நான் பிராணாயாமம் செய்கிறேன் என்றால் அதில்  ஏதாவது பலன் இருக்குமா?

ஒரு பட்டியல் போடுங்கள்.

உங்களிடம் உள்ள தீய, கீழான பழக்கங்கள் என்னென்ன என்று.

ஒவ்வொன்றாக விட்டு விட முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கீழான பழக்கம் உங்களை விட்டு போகும் போதும், எவ்வளவு சுகமாக இருக்கிறது  என்று பாருங்கள்.

கீழ்மை அகற்று.

வாழ்வில் உயர இதை விட சுருக்கமா எப்படி சொல்ல முடியும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_28.html

Thursday, February 27, 2020

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?


சீதை, காப்பியத்தின் கதாநாயகி. திருமகளின் அம்சம். கற்பின் கனலி. இராமனின் மனைவி.


இராவணன், வலிமையானவன், பெரிய சிவ பக்தன், அறிவுள்ளவன், திறமை உள்ளவன்.

தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் சீதையை வேண்டுகிறான்.

காப்பியம் எழுதிய கம்பனுக்கு இது ஒரு சிக்கலான இடம்.

எல்லை தாண்டி விடக் கூடாது. விரசம் தலை தூக்கக் கூடாது. அதே சமயம் அவர்களுக்குள் நடந்த உரையாடலை சுவையாகவும் சொல்ல வேண்டும்.

தகாத உறவுக்கு இராவணன் அழைக்கிறான். அழைப்பவனும் ஏதோ சாதரணமானவன் அல்ல. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" கொண்டவன்.

யோசித்துப் பாருங்கள். எத்தனயோ படங்கள் வந்து இருக்கின்றன. ஒரு படத்திலாவது, வில்லனும், கதாநாயகியும் பேசிய பேச்சு மனதில் நின்று இருக்கிறதா?

வில்லன் முரட்டுத் தனமாய் பேசுவான், கதாநாயகி கீச்சுக் குரலில் கத்துவாள்.

இராவணனும், சீதையும் பேசிய பேச்சை கம்பன் காட்டுகிறான் பாருங்கள்.

கத்தி மேல் நடப்பது போன்ற இடம்.

பாடல்

அவ் இடத்துஅருக எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்துஎனக்கு இன் அருள் ஈவது ?
நொவ் இடைக்குயிலே ! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தைஅமிழ்து என வேண்டுவான்.

பொருள்


அவ் இடத்து = அந்த இடத்துக்கு (அசோக வனத்துக்கு)

அருக எய்தி = நெருங்கி வந்து

அரக்கன்தான் = இராவணன்

'எவ் இடத்து = எந்த இடத்தில்

எனக்கு இன் அருள் ஈவது ? = எனக்கு அருள் புரிவாய்

நொவ் இடைக்குயிலே ! = நோகும் இடை கொண்ட குயிலே

 நுவல்க' = சொல்வாய்

என்றனன், = என்றான்

வெவ் விடத்தை = வெம்மையான விஷத்தை

அமிழ்து என வேண்டுவான். = அமிழ்து என்று நினைத்து அதை வேண்டுவான்

அவள் அன்பை, அருள் என்று சொல்கிறான். ஆண்டவனிடம் பக்தன் அருள் வேண்டுவது போல. இராவணனைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆள். அவள் காலடியில் நாய் குட்டி போல கிடக்கிறான்.  எவ்வளவு கண்ணியமாக, மரியாதையுடன், பணிவோடு கேட்கிறான்.

மாற்றான் மனைவியை, நஞ்சு என்று நினைத்து ஒதுக்க வேண்டும். ஆனால், அவனோ, அதை அமுதம் என்று நினைத்து விரும்புகிறான்.


இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன. நேரம் இருப்பின், அவற்றையும் பார்ப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_27.html



Wednesday, February 26, 2020

திருக்குறள் - இல்வாழ்க்கை

திருக்குறள் - இல்வாழ்க்கை 


மீண்டும் திருக்குறளுக்குப் போவோம்.

இல் வாழ்வான் கடமையாக பதினோரு கடமைகளை சொல்லிவிட்டார்.

இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதே நமக்கு வேலையா? இதுக்கு எதுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்?  நமக்கென்று ஒரு இன்பம் கிடையாதா என்று கேள்வி எழலாம்.

வள்ளுவர் சொல்கிறார்.

பாடல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

பொருள்

அன்பும்  = அன்பும்

அறனும்  = அறமும்

உடைத்தாயின் = இருந்தால்

இல்வாழ்க்கை = இல்லற வாழ்க்கை

பண்பும் பயனும் அது = பெற்ற பண்பும் பயனும் அது

இது என்ன ஒண்ணும் புரியலையே. அன்பு, அறன் , பண்பு, பயன் னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போறார்.

சிந்திப்போம்.

பண்பு என்பது குணம். பண்புள்ள மனிதன் என்றால், நல்ல குணம், பழக்க வழக்கம் உள்ள மனிதன் என்று அர்த்தம்.

பண்பு என்பது இயற்கையாக இருக்க வேண்டும். எப்போதும் இருக்க வேண்டும்.

அவர் வெள்ளிக் கிழமை தோறும் உண்மை பேசுவார், செவ்வாய் கிழமை இலஞ்சம் வாங்க மாட்டார்   என்று சொன்னால் அது அவர் பண்பைக் காட்டாது.

உயிரே போனாலும், ஒரு காசு ஒருத்தர் கிட்ட இருந்து இலஞ்சமா வாங்க மாட்டார் என்று சொன்னால், அது அவரின் நேர்மையான பண்பைக் காட்டும்.

அது போல,

இல்லறத்தின் பண்பு எதுவாக இருக்க வேண்டும் என்றால், அன்பு.


இல்லறத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்வதே அந்த இல்லறத்தின்  பண்பாக இருக்க வேண்டும்.

கணவன், மனைவி மேல்.

மனைவி, கணவன் மேல்.

பெற்றோர் பிள்ளைகள் மேல், பிள்ளைகள் பெற்றோர் மேல், சகோதர சகோதரிகள்,  மாமா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா , பேரன், பேத்தி , மருமகன், மருமகள் என்று குடும்பத்தில் ஒருவர் மீது மற்றவர் அன்பு செலுத்துவதே  வேலையாக இருக்க வேண்டும்.


அது ஒரு அன்பான குடும்பம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.  பார்த்தால் தெரிய வேண்டும்.

குடும்பத்தில் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும்,  புகழ் பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.

அன்போடு இருங்கள். அதுதான் குடும்பப் பண்பாக இருக்க வேண்டும்.

அந்த குடும்பம் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை போட்டுத் தள்ளலாமா?  ஊரை அடித்து உலையில் போடலாமா?

இல்லை, குடும்பத்துக்குள் அன்பு இருக்க வேண்டும்.

குடும்பம், வெளி உலகத்தோடு அற வழியில் நிற்க வேண்டும்.

அன்போடு இருப்பதின் பயன் என்ன என்றால், அற வழியில் செல்வது.

ஒரு காரியம் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் வேண்டாமா?

அன்பான இல்லறத்தின் பயன், அறம்.

அறம் என்றால் என்ன என்பதை முந்தைய மூன்று குறள்களில் சுட்டிக் காட்டினார்.

இயல்பான மூவர், தென் புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, துறந்தார், தான்  என்று இவர்களோடு அறவழியில் ஈட்டிய பொருளை பகுத்து உண்டு வாழ்வது  இல் + அறம்  = இல்லறம்.

அன்போடு இருப்பது ,  குடும்பத்தின் பண்பு.

அதன் பயன், அற வழியில் செல்வது.

வீட்டில் அன்பும் இருக்க வேண்டும்,  அறமும் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அது பண்பாகவும், பயனாகவும் இருக்கும்.

இப்படி இல்லறம் நடத்தினால் போதுமா ? அப்புறம் இந்த துறவறம், வீடு பேறு , சொர்க்கம், இறைவன் திருவடி என்றெல்லாம் சொல்கிறார்களே அதை எல்லாம் எப்படி அடைவது?

இதையே செய்து கொண்டிருந்தால், அதை எப்போது அடைவது?

கேள்வி வருமா இல்லையா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_26.html

Tuesday, February 25, 2020

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..


"அம்பது வயசாச்சு...இனிமேல் போட்டு என்னத்த படிச்சு...என்ன செய்ய. இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன வேலைக்கா போகப் போறேன்..." என்று பலர் அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறேன்.

"இப்பவே காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது" என்று வாழ்வின் முடிவை எதிர்பார்த்து வாழ்வில் சோர்ந்து போய் இருக்கும் பலரை பார்க்க முடிகிறது.

ஐம்பது எல்லாம் ஒரு வயசா? அல்லது அறுபது எல்லாம் ஒரு வயசா ?

எந்த வயசும் ஒரு பொருட்டு இல்லை. மனம் தான் முக்கியம்.

மனம் சோர்ந்து விட்டால் உடலும் சோர்ந்து விடும். மனதை துடி துடிப்பாக வைத்து இருக்க வேண்டும்.

புதிது புதிதாக கற்க வேண்டும். புதிய உடற் பயிற்சி செய்யலாம். ஓடலாம், மலை ஏறலாம், நீச்சல் கற்றுக் கொள்ளலாம்...இப்படி உடலை உறுதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

புதிதாக இசை கற்கலாம். பாட்டு, படம் வரைதல், புதிய சமையல் கலை, கணனியில் (computer) எவ்வளவோ இருக்க கற்றுக் கொள்ள.

புதிது புதிதாக எவ்வளவோ வருகிறது. அது பற்றி கற்கலாம். கற்றதை சொல்லித் தரலாம்.

ஊர் சுற்றலாம்.

புது உடைகள் வாங்கி போட்டுப் பார்க்கலாம்.

எப்ப பாத்தாலும் ஒரே உடை. ஒரே மாதிரியான  உணவு, ஒரே மாதிரியான பழக்க வழக்கம், அதே மனிதர்களிடம் உறவு.

மனம் சுருங்கிப் போகாதா ?

ஒரு உற்சாகம் வேண்டாம்? ஒரு துடிதுடிப்பு வேண்டாம்? ஒரு உயிர்ப்பு வேண்டாம் ?


ஒளவை சொல்கிறாள்


"ஊக்கமது கை விடேல்"

எப்போதும் ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் ஆயிரம் நடக்கும். நல்லது நடக்கும். அல்லாததும் நடக்கும். அதற்காக ஊக்கத்தை கை விட்டு, சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடக் கூடாது.

ஒவ்வொரு நாளும், நமக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று நினைத்து துடிப்புடன் வாழ வேண்டும்.

உங்களோடு சேர்ந்து நேற்று இரவு தூங்கப் போன பல பேர் இன்று காலை எழுந்திருக்கவில்லை. அதுவே அவர்களின் கடைசி இரவாக இருந்தது.

நீங்கள் எழுந்து இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய விஷயம்.

எழுந்து என்ன பண்ணப் போகிறீர்கள்?

உற்சாகமாக இருங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

ஒரு துள்ளல். ஒரு வேகம் இருக்கட்டும் உங்கள் செயல்களில்.

அவ்வளவு வயசான கிழவி சொல்கிறாள்

"ஊக்கமது கை விடேல்" என்று.

கற்பதற்கும், செய்வதற்கும் எவ்வளவோ இருக்கிறது.

வாருங்கள் செய்வோம், கற்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_25.html

Monday, February 24, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக

திருப்புகழ் - இரகு நாயக வருக 


ஆண் பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள், பிள்ளை சின்னஞ் சிறுவனாக இருக்கும் போது, அந்த ஆண் பிள்ளைக்கு, பெண் பிள்ளை போல பாவாடை , சட்டை போட்டு, இருக்கிற கொஞ்சம் முடியில் ஜடை பின்னி, பூ வைத்து, கண் மை போட்டு அழகு பார்ப்பார்கள். சில வீடுகளில் அந்தக் கோலத்தில் போட்டோ கூட இருக்கும்.  அதுவும் ஒரு அழகுதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தாய்மை என்பது இயற்கையாக வரக் கூடியது. ஒரு பெண், தன் பிள்ளையை கருவில் சுமக்கிறாள். குழந்தை அவளுடலில் ஒரு பாகமாக இருக்கிறது. பிறந்த பின், தன் உதிரத்தை பாலாகத் தருகிறாள். பிள்ளையோடு ஒரு தாய்க்கு இருக்கும் உறவு என்பது மிக மிக இயற்கையானது.

ஆனால், தந்தைக்கு அப்படி ஒன்றும் கிடையாது. பிரசவம் ஆகி கொஞ்ச நேரம் கழித்துத்தான், தந்தை உள்ளே போவார். மனைவி மயக்கத்தில் கூட இருக்கலாம். பிள்ளையை பார்த்தவுடன் உடனே தந்தை பாசம் பீறிட்டுக் கொண்டு வராது. தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு இயற்கையாக வருவது அல்ல. இந்த சமுதாயம் அதை வலிந்து திணிக்கிறது. தாயக இருப்பது சுலபம். தந்தையாக இருப்பது மிகக் கடினம்.

அதிலும், தந்தை ஒரு தாயாக தன்னை நினைத்து உருகுவது அதனிலும் ரொம்ப கடினம்.

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு வயதுக்கு பின், உடம்பு தளர ஆரம்பிக்கும். என்ன உடற் பயிற்சி செய்தாலும், தொப்பை வரும். முடி நரைக்கும். பல்லு ஒவ்வொன்றாக ஆட்டம் காணும். முதுகு வளையும். உதடு தொங்கிப் போய் விடும். ஊன்று கோல் இல்லமால் நடக்க முடியாது. ஒரு கையில் ஊன்று கோல் வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும், "யார் இந்த கிழம்" என்று பேசத் தலைப்படுவார்கள். பதில் சொல்ல நினைத்தால் கிண் கிண் என்று இருமல்தான் வரும். நாக்கு குழறும். கண் மங்கும். காது கேட்காது.

புதுசு புதுசா நோய் வரும். அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் "பணத்தை இதில் போட்டு வச்சிருக்க...யார் கிட்ட எல்லாம் கடன் வாங்கி வச்சிருக்க " என்று சத்தம் போட்டு கேட்பார்கள்.

மலமும் ஜலமும் அது பாட்டுக்கு போகும். ஒரு கட்டுபாடு இருக்காது.  கட்டிய மனைவி கூட நம்மை பார்த்து அழுவாள். அந்த சமயத்தில் முருகா நீ மயில் மேல் வந்து என்னைக் காக்க வேண்டும் என்று உருகுகிறார் அருணகிரி.


பாடல்



தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


தொந்தி சரிய  = வயிறு சரிந்து முன்னால் விழ

மயிரே வெளிற = முடி நரைக்க

நிரை தந்த மசைய = தந்தம் என்றால் பல். வரிசையான பற்கள் ஆட.

 முதுகே வளைய = முதுகு வளைய

இதழ் தொங்க = உதடு தொங்க

வொருகை தடிமேல் வர  = ஒரு கை தடிமேல் (கைத்தடி) வர


மகளிர்  நகையாடி = பெண்கள் எல்லாம் பார்த்து நகைக்கும் படி


தொண்டு கிழவ னிவனா ரென  = தொண்டு கிழவன் இவன் யார் என


இருமல் = இருமல்

கிண் கி ணெனமுன் = கிண் கிண் என்று இருமல் வர

உரையே குழற = பேச்சு குழற

விழி துஞ்சு குருடு படவே = கண் அடைத்து தெரியாமல் போக


செவிடுபடு  செவியாகி = காது கேட்காமல் போக


வந்த பிணியும் = நோய் வந்து

அதிலே மிடையும் = அதற்காக இடையில்

ஒரு = ஒரு

பண்டி தனும் = மருத்துவனும்

உறு வேதனையும் = படுகின்ற வேதனையும்

மிள மைந்தர் = இளமையான பிள்ளைகள்

உடைமை = சொத்து

கடனே தெனமுடுக = கடன் ஏது என கேள்வி மேல் கேள்வி கேட்க

துயர்மேவி = துக்கம் மேலிட


மங்கை யழுது விழவே = மனைவி அழுது விழ

 யமபடர்கள் = எமனின் தூதர்கள்

நின்று சருவ = நின்று உயிரை கவர

மலமே யொழுக = மலம் ஒழுக

வுயிர் மங்கு பொழுது = உயிர் மங்கும் பொழுது

கடிதே = வேகமாக

மயிலின்மிசை  = மயில் மேல்

வரவேணும் = வர வேண்டும்

-------------- மீதி பொருளை நாளை பார்ப்போமா? --------------------------------------

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html